செய்திகள்
மீனவர்கள் - கோப்புப்படம்

ஈரானில் சிக்கிய 40 மீனவர்கள் தமிழகம் திரும்பினர்

Published On 2020-07-15 16:22 GMT   |   Update On 2020-07-15 16:22 GMT
ஈரான் நாட்டிற்கு மீன்பிடித் தொழிலுக்காக சென்று சிக்கித் தவித்த 40 தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர்.
சென்னை:

ஊரடங்கால் பல்வேறு வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் 'ஆபரேசன் சமுத்திர சேது' திட்டத்தின் கீழ் தாய் நாட்டுக்கு அழைத்து வரப்படுகின்றனர். அவ்வகையில் ஈரானில் சிக்கித் தவித்த தமிழகம் மற்றும் கேரள மீனவர்கள் 687 பேர் மீட்கப்பட்டனர். 'ஐஎன்எஸ் ஜலஸ்வா' கப்பல் மூலம் ஈரானில் உள்ள பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் இருந்து மீனவர்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட இந்த கப்பல் கடந்த 1ம் தேதி காலை தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது.

மருத்துவப் பரிசோதனை மற்றும் குடியுரிமை சோதனை முடிந்த பிறகு கப்பலில் வந்த அனைவரும் அரசு பேருந்துகளில் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஈரானில் மேலும் 40 தமிழக மீனவர்கள் வெளியேற முடியாத நிலையில் உள்ளனர். கடந்த மாதம் சென்ற கப்பலில் இடம் இல்லாததால் அவர்கள் இந்தியாவிற்கு அழைத்து வரப்படவில்லை.  இந்நிலையில் அவர்கள் 40 பேரையும் விரைவில் அழைத்து வருவதற்கு ஏற்பாடு செய்யும்படி மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பாக வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.



இந்நிலையில் ஈரான் நாட்டிற்கு மீன்பிடித் தொழிலுக்காக சென்று சிக்கித் தவித்த 40 தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர். தமிழக அரசு மேற்கொண்ட தொடர் நடவடிக்கை காரணமாக மீனவர்கள் விமானம் மூலம்  சென்னை வந்தனர்.  பல்வேறு மாவட்ட மீனவர்கள் தனி வாகனம் மூலம் அவரவர்  சொந்து ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Tags:    

Similar News