செய்திகள்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 455 கன அடியாக அதிகரிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவதும், அதிகரிப்பதுமாக உள்ளது. கடந்த 27-ந்தேதி மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 155 கன அடி தண்ணீர் வந்தது. அதன் பிறகு நீர்வரத்து அதிகரித்து கடந்த 28-ந்தேதி விநாடிக்கு 294 கன அடி தண்ணீரும், நேற்று 306 கன அடி தண்ணீரும் வந்தது. இன்று காலை மேலும் அதிகரித்து விநாடிக்கு 455 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. நீர்வரத்தை விட தண்ணீர் திறப்பு அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
கடந்த 26-ந்தேதி 100.36 அடியாக இருந்த நீர்மட்டம் 27-ந்தேதி 100.28 அடியாகவும், 28-ந்தேதி 100.21 அடியாகவும், 29-ந்தேதி 100.16 அடியாகவும் குறைந்தது. இன்று மேலும் சரிந்து காலை 8 மணி நிலவரப்படி நீர்மட்டம் 100.08 அடியாக உள்ளது.