தமிழ்நாடு

சிக்கன் ரைஸ் - பகவதி

சிக்கன் ரைஸில் விஷம்- தாத்தாவை தீர்த்துக்கட்டிய பேரன்

Published On 2024-05-03 03:34 GMT   |   Update On 2024-05-03 03:38 GMT
  • சிக்கன் ரைஸ் வாங்கிச் சென்ற அவரது பேரன் பகவதியிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
  • பேரன் பகவதியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

நாமக்கல்:

நாமக்கல் பஸ் நிலையம் எதிரில் ஜீவானந்தம் (வயது 32) என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த ஓட்டலில் கடந்த 30-ந் தேதி எருமப்பட்டி அருகே உள்ள தேவராயபுரத்தை சேர்ந்த தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பகவதி (20) சிக்கன் பிரியாணி சாப்பிட்டு உள்ளார்.

தொடர்ந்து, 7 'சிக்கன் ரைஸ்' பொட்டலம் வாங்கி கொண்டு, வீட்டில் உள்ள தனது தாயார் நதியா (40), தாத்தா சண்முகம் (67) உள்ளிட்ட குடும்பத்தினருக்கு கொடுத்து உள்ளார். இதற்கிடையே 'சிக்கன் ரைஸ்' சாப்பிட்ட நதியா, சண்முகம் ஆகியோருக்கு மட்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, செயற்கை சுவாசம் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தனர்.

முன்னதாக சிகிச்சைக்கு வந்த 2 பேரும் வாயில் நுரை தள்ளியபடி வந்தனர். எனவே அவர்களுக்கு உணவு ஒவ்வாமையால் பிரச்சினை ஏற்பட்டு இருக்க வாய்ப்பு குறைவு எனவும், சாப்பாட்டில் விஷம் கலந்து இருக்க வாய்ப்பு இருக்கலாம் எனவும் மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் தெரிவித்தனர்.

இதற்கிடையே நேற்று முன்தினம் ஓட்டலில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் உமா, சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத்துறையினர் சீல் வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்த கலெக்டர் உமா போலீசாருக்கு உத்தரவிட்டார். அவர்களும் 'சிக்கன் ரைஸ்' உணவு மாதிரியை எடுத்து, சேலம் உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பினர். மேலும் கல்லூரி மாணவர் பகவதி மற்றும் ஓட்டல் உரிமையாளர் ஜீவானந்தம் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதற்கிடையே உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த கூலித்தொழிலாளி சண்முகம் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

அவர் சாப்பிட்ட உணவு மாதிரியை சேகரித்து போலீசார் சேலத்தில் உள்ள பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி இருந்தனர். இதற்கிடையே நேற்று இரவு சிக்கன் ரைசில் பூச்சிக்கொல்லி (விஷம்) கலந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் தொழிலாளி சண்முகம் உணவில் விஷம் கலந்து கொலை செய்யப்பட்டதும் உறுதியானது.

இதற்கிடையே போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பேரன் பகவதிக்கு கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், அதை கண்டித்ததால் சண்முகம் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. எனவே சிக்கன் ரைஸ் வாங்கிச் சென்ற அவரது பேரன் பகவதியிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் தொழிலாளி சண்முகம் உயிரிழந்த விவகாரத்தில் அதிரடி திருப்பமாக சிக்கன் ரைசில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்ததை பேரன் பகவதி ஒப்புக்கொண்டார்.

காதல் விவகாரத்தை குடும்பத்தினர் கண்டித்ததால் சிக்கன் ரைஸில் பூச்சிக்கொல்லியை கலந்து கொடுத்தாக பகவதி ஒப்புக்கொண்டார்.

உடல்நலம் பாதிக்கப்பட்ட தாய் நதியாவுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News