செய்திகள்
முக ஸ்டாலின்

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகளை மூடி மறைக்க முயற்சி நடக்கிறது- முக ஸ்டாலின் குற்றச்சாட்டு

Published On 2020-02-07 07:13 GMT   |   Update On 2020-02-07 08:11 GMT
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகளை மூடி மறைக்க முயற்சி நடக்கிறது என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நடந்த ஊழல்கள் குறித்த செய்திகள் தினமும் நாளிதழ்களில் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதனைப் பார்த்து வெட்கித் தலைகுனிய வேண்டிய தமிழக அரசும், அமைச்சர்களும் சிறிதும் நாணமின்றி நடமாடி வருகிறார்கள். குரூப்-4 மற்றும் குரூப்-2ஏ ஆகியவை குறித்த செய்திகளை வெளியிட்டு, ‘தமிழக அரசு நியாயமாக நடவடிக்கை எடுத்து வருகிறது’ என்ற மாயமானதும், பொய்யானதுமான தோற்றத்தை உருவாக்கிட அரும்பாடுபட்டு வருகிறார்கள்.

இந்த ஆட்சியின் தேர்வாணைய ஊழலுக்கு முழு முதல் உதாரணமாகச் சொல்ல வேண்டியது குரூப்-1 தேர்வில் நடந்த முறைகேடு ஆகும். இந்த ஊழலை அப்படியே மறைக்க தமிழக அரசு ஆலாய்ப்பறக்கிறது. ஆளும்கட்சிக்கு சார்பாக ஆட்டம் போட்ட அடாவடி நபர்களைக் காப்பாற்ற நினைக்கிறார்கள் என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்ட விரும்புகிறேன்.

குரூப்-1 தேர்வு 2016ல் நடந்தது. அதில் தேர்வு எழுதிய ஒருவரின் விடைத்தாள், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியானது. இதனைப் பார்த்த தேர்வாளர் சொப்னா என்பவர்,புகார் ஒன்றைத் தாக்கல் செய்தார்.

இந்த விவகாரத்தை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 2017-ம் ஆண்டு முதல் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் தொடர்புடைய டி.என்.பி.எஸ்.சி. ஊழியர்களான சிவசங்கரன், பெருமாள், புகழேந்தி ஆகியோர் கைதானார்கள். விடைத்தாளில் முறைகேடு செய்ததாக ராம்குமார் என்பவரும், குமரேசன் என்பவரும் கைது செய்யப்பட்டார்கள். இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு விசாரிக்கத் தொடங்கிய போது, மலையளவு ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை நான் சொல்லவில்லை. இந்தவழக்கு தொடர்பாக விசாரித்த மத்திய குற்றப்பிரிவு போலீசாரே நீதிமன்றத்தில் அறிக்கையாகத் தாக்கல் செய்துள்ளார்கள்.

இந்த நிலையில் விசாரணை அதிகாரி சுந்தரவதனன் மாற்றப்படுகிறார். புதிதாக உதவி கமி‌ஷனர் சுப்பிரமணிய ராஜூ என்பவர் நியமிக்கப்படுகிறார். இவர் தான் இறுதி அறிக்கையை முன்வைக்கப் போகிறார் என்று தகவல்கள் வருகின்றன.

குரூப்-1 தேர்வில் நடந்த அனைத்து முறைகேடுகளும் விரைவில் வெளிச்சத்துக்கு வர வேண்டும். 2017-ம் ஆண்டு சென்னை மத்தியக் குற்றப்பிரிவு விசாரித்து, சேகரித்த உண்மைகள் அனைத்தும் சென்னை உயர்நீதி மன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். பிரச்சினையில் தொடர்புடைய நிறுவனங்கள், விருப்பு வெறுப்பின்றி நியாயமாகவும் முழுமையாகவும் விசாரிக்கப் பட வேண்டும்.

‘டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்துக்கு உட்பட்டவர்கள் தான்’ என்று பேட்டி தரும் அமைச்சர் ஜெயக்குமார், உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனை பெற்றுத்தர முன்வருவாரா?.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
Tags:    

Similar News