செய்திகள்
கோவில் கொள்ளை

ஆரணியில் மீண்டும் ஆஞ்சநேயர் கோவிலில் உண்டியல் பணம் கொள்ளை

Published On 2020-01-25 11:26 GMT   |   Update On 2020-01-25 11:26 GMT
ஆரணியில் மீண்டும் ஆஞ்சநேயர் கோவிலில் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆரணி:

ஆரணி டவுன் தச்சூர் சாலையில் பழமை வாய்ந்த வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

தினமும் கோவிலில் பூஜைகள் நடந்து வருகிறது. நேற்று இரவு பூஜைகள் முடிந்த பின்னர் வழக்கம்போல் கோவிலை பூட்டிவிட்டு சென்றனர்.

மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து கோயில் வளாகத்தில் உள்ள உண்டியலை உடைக்க முயற்சித்துள்ளனர்.

மேலும் கோவில் பூட்டை உடைத்து சாமி சன்னதி முன்பு இருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த சுமார் 15 ஆயிரம் பணத்தை அள்ளிச் சென்று விட்டனர்.

இன்று காலையில் வழக்கம் போல் கோவிலுக்கு வந்த பூசாரி கோவிலில் கொள்ளை நடந்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டார்.

இதுபற்றி ஆரணி டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும் கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

கொள்ளை நடந்த ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் 8 வங்கிகள் உள்ளன. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த கோவிலில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள அம்மன் கோவிலில் பூட்டை உடைத்து 9 பவுன் நகைகள் மற்றும் உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இந்த சாலை எப்போதும் ஆள் நடமாட்டம் உள்ள பிரதான சாலையாகும். இங்கு தொடர்ந்து கொள்ளை நடப்பது பொது மக்களை பீதி அடைய செய்துள்ளது. இந்த சாலையில் உள்ள வங்கிகளில் முன்பு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதன் மூலம் கொள்ளைக் கும்பல் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர். அம்மன் கோவிலில் கொள்ளை நடந்த சில நாட்களுக்குள் ஆஞ்சநேயர் கோவிலில் கொள்ளை போய் உள்ளது.

இந்த சம்பவம் ஆரணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News