செய்திகள்
கைது செய்யப்பட்ட பாஜகவினர்

நெல்லை கண்ணனை கைது செய்யகோரி மெரினாவில் பாஜக போராட்டம்

Published On 2020-01-01 11:19 GMT   |   Update On 2020-01-01 11:19 GMT
பிரதமர் மோடியை அவதூறாகப் பேசிய நெல்லை கண்ணனை கைது செய்யக் கோரி மெரினா கடற்கரையில் பாஜகவினர் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில், நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் மாநாடு நடந்தது. அதில் பங்கேற்று பேசிய நெல்லை கண்ணன், பிரதமர் மோடி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் குறித்து அவதூறு பரப்பியதாக பா.ஜ.க.வினர் போலீசில் புகார் அளித்தனர்.

இதையடுத்து அவர்மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களிலும் பாரதிய ஜனதா கட்சியினர் நெல்லை கண்ணன் மீது புகார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, பா.ஜ.க. பொது செயலாளர் எச்.ராஜா நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது, நெல்லை கண்ணனை கைது செய்யக் கோரி மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி மெரினா கடற்கரையில் பா.ஜ.க.வினர் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. 

போராட்டம் நடத்திய பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், ஹெச்.ராஜா உள்ளிட்ட பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டனர்.
Tags:    

Similar News