செய்திகள்
விபத்து

சாயல்குடி அருகே லாரி மோதி மாணவன் பலி

Published On 2019-09-23 09:21 GMT   |   Update On 2019-09-23 12:38 GMT
சாயல்குடி அருகே இன்று காலை சாலையை கடக்க முயன்ற மாணவன் லாரி மோதியதில் பரிதாபமாக இறந்தான்.

சாயல்குடி:

சாயல்குடி அருகே உள்ள வெள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி கிருஷ்ண வேணி. இவர் கன்னி ராஜபுரத்தில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களது மகன் சஷ்வந்த் (வயது 8). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.

வீட்டில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த குப்பையை கொட்டுவதற்காக சஷ்வந்த் இன்று காலை 8 மணி அளவில் அங்குள்ள சாலையை கடக்க முயன்றான்.

அப்போது தூத்துக்குடியில் இருந்து சாயல்குடி நோக்கி வேகமாக வந்த லாரி கண் இமைக்கும் நேரத்தில் சிறுவன் மீது மோதியது. இந்த விபத்தில் சஷ்வந்த் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தான்.

விபத்து பற்றி அறிந்ததும் சாயல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகபாய் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனர்.

அதற்கு அந்த பகுதி மக்களும், அந்த வழியாகச் சென்ற கல்லூரி மாணவர்களும் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

விபத்தில் பலியான மகனின் உடலைப் பார்த்து பேராசிரியை கதறி துடித்தது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

Tags:    

Similar News