போளூர் அருகே ஜவுளி வியாபாரி வீட்டில் 30 பவுன் நகை, ரூ.75 ஆயிரம் திருட்டு
போளூர்:
போளூர் அருகே உள்ள குன்னத்தூரை சேர்ந்தவர் முருகதாஸ் (வயது 44). இவர் போளூரில் ஜவுளிக் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி உமாராணி (40). இவர்களுக்கு 2 மகள்கள் 1 மகன் உள்ளார்.
இந்நிலையில் முருகதாஸ் தனது குடும்பத்துடன் காஞ்சிபுரத்தில் உள்ள அத்திவரதரை தரிசனம் செய்ய நேற்று மாலை புறப்பட்டு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ.75 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டனர்.
இன்று அதிகாலை வீடு திரும்பிய முருகதாஸ் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த நகை, பணம் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து முருகதாஸ் போளூர் போலீஸ் நிலையத்தில புகார் அளித்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். கொள்ளையர்களை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.