search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Polur"

    • இக்குளத்தில் என்றும் நீர் வற்றுவதே இல்லை.
    • சுற்று வட்டாரத்தில் உள்ள முப்பது கிராமத்தாருக்கும் இவரே குல தெய்வம்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர் அருகே கலசபாக்கம் கிராமத்தையட்டி அமைந்துள்ளது எலத்தூர் நட்சத்திர கோவில்.

    இங்கு எழுந்தருளி இருக்கும் முருகன் சுயம்பு மூர்த்தி ஆகும்.

    முருகன் சின்ன லிங்க வடிவில் (ஆவுடையார் இல்லாமல்) அமைந்திருப்பதால் முருகனுக்கு சிவசுப்ரமண்யன் என்று பெயர்.

    இம்முருகன் மிகவும் சக்தி வாய்ந்தவர்.

    சுற்று வட்டாரத்தில் உள்ள முப்பது கிராமத்தாருக்கும் இவரே குல தெய்வம்.

    மலை மேல் வள்ளி தெய்வானையோடு நின்ற கோலத்தில் மிக அழகாக காட்சி தருகிறார்.

    மலை அடிவாரத்தில் பெரிய குளமும், மலை ஏறும் பாதையில் பிள்ளையார், இடும்பன், நவகிரகம் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகளும் உள்ளன.

    இக்குளத்தில் என்றும் நீர் வற்றுவதே இல்லை.

    மலை மேல் சுனை உள்ளது. உடம்பில் மரு உள்ளவர்கள், இச்சுனையில் உப்பு, மிளகு போட்டால் மரு உடனே நீங்கிவிடுகிறது.

    பங்குனி உத்திரம் இங்கு பத்து நாள் உத்ஸவமாக மிகச்சிறப்பாக நடக்கிறது.

    ஏழாம் நாள் தேரோட்டமும் மற்றும் பங்குனி உத்திரத்தின் முதல் நாள் இரவு முருகனுக்கு கல்யாண உத்ஸவமும் வெகு விமர்சையான நடக்கும்.

    வீட்டில் திருமண வயதில் பெண்ணோ, மகனோ உள்ளவர்கள் இம்முருகனுக்கு கல்யாண உத்ஸவத்தன்று ஒரு ஜோடி பருப்பு தேங்காய் (பணையாரம்) பிடித்துக் கொடுத்தால் உடனே நல்ல வரன் அமைவது கண்கூடு.

    மறு நாள் பங்குனி உத்திரத்தன்று முருகன் ஊருக்குள் சென்று அங்கு ஓடும் ஆறில் தீர்த்தவாரி கண்டருளுவார்.

    எலத்தூரில் அமைந்துள்ள பிருஹன்நாயகி சமேத கரகண்டேஸ்வரரே இவரின் தாய் தந்தையாக கருதப்படுகிறார்கள்.

    இச்சிவன் கோவிலும் மிக சிறியதாக இருந்தாலும் மிகவும் சிறப்பான ஸ்தலமாக விளங்குகிறது.

    இவ்வூர்க்காரர்கள், இம்முருகனை குல தெய்வமாக கொண்டவர்கள்.

    அதனால் எந்த ஊரில் இருந்தாலும் பங்குனி உத்திர திருவிழாவிற்கு ஊருக்கு வந்து விடுவார்கள்.

    போளூரில் கள்ளக்காதல் தகராறில் மனைவியை அடித்து கொன்ற கணவன் கைது செய்யப்பட்டார்.

    போளூர்:

    போளூர் பொத்தரையை சேர்ந்தவர் பாண்டுரங்கன் மகன் பச்சையப்பன் (வயது 25). கட்டுமான தொழிலாளி. இவருக்கும், கலசப்பாக்கம் நாயுடுமங்கலம் காரப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த புருஷோத்தமன் மகள் பூஜா என்கிற தரணிக்கும் (21), கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்த நிலையில், பச்சையப்பனுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதுதொடர்பான தகராறில், நேற்று முன்தினம் நள்ளிரவு மனைவி பூஜாவை பச்சையப்பன் அடித்துக் கொன்றார்.

    இதையடுத்து, அவர் தப்பி ஓடிவிட்டார். போளூர் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து பச்சையப்பனை தீவிரமாக தேடினர். நேற்றிரவு அவர் பிடிபட்டார்.

    பச்சையப்பனை கைது செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர். ஆனால், போலீசாரின் விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பு தரவில்லை. வாய்திறக்காமல் அமைதியாக இருந்தார்.

    எனினும், போலீசார் கிடுக்கிப்பிடியாக விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். கொலை செய்யப்பட்ட பூஜாவிற்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால், உதவி கலெக்டர் உமாமகேஸ்வரியும் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

    திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் நகைக்கடைகள் உள்பட 10 இடங்களில் வருமானவரித்துறையினரின் சோதனை 2-வதுநாளாக இன்றும் நீடிக்கிறது. #ITRaid
    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சிந்தாதிரிபேட்டை தெருவில் உள்ள நகைக்கடைகள் மீது வரி ஏய்ப்பு புகார் சென்றது. இதையடுத்து, சென்னையில் இருந்து வருமான வரித்துறை அதிகாரி சுப்பிரமணியன் திருவண்ணாமலைக்கு வந்தார்.

    இவருடைய தலைமையில் வருமானவரித்துறை மற்றும் வணிக வரித்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அடங்கிய 14 பேர் குழுவினர் 6 கார்களில் நேற்று மாலை 3.30 மணியளவில் போளூர் வந்தனர். 2 நகைக்கடைகளில் சோதனை நடத்தினர்.

    வாடிக்கையாளர்களை வெளியே அனுப்பி விட்டு ஊழியர்களை மட்டும் கடைக்குள் வைத்து கொண்டனர். கடைகளின் முன்பக்க கதவை அடைத்து விட்டு சோதனையை தீவிரப்படுத்தினர்.

    நள்ளிரவு வரை நீடித்த சோதனையில் வரி ஏய்ப்பு செய்ததற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. 2 நகைக்கடை ஊழியர்களையும் வீட்டுக்கு அனுப்பாமல் விடிய, விடிய விசாரணை நடத்தினர்.


    சோதனை நடத்தப்பட்ட நகைக்கடைக்கு சொந்தமான ஜவுளிக்கடை எதிரிலேயே உள்ளது. அதிலும் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், நகைக்கடை அதிபர்களின் வீடுகள், கார்டன்கள் என 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

    நேற்று மாலை தொடங்கிய வருமான வரி சோதனை 2-வது நாளாக இன்றுவரை நீடிக்கிறது. கணக்கில் வராத வரவு-செலவு ஆவணங்கள் சிக்கியுள்ளதால், வருமான வரி சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் உரிமையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். #ITRaid
    பைக் மீது வேன் மோதிய விபத்தில் குழந்தை உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள திரும்பட்டை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 29). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சத்யா (28). இவர்களது பெண் குழந்தை துர்கா (4).

    போளூர் காங்கேயனூரில் சத்யாவின் தாய் வீடு உள்ளது. தாய் வீட்டில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. இதில் சத்யா தனது கணவர் மற்றும் குழந்தையுடன் சென்று கலந்து கொண்டார்.

    இன்று காலை சத்யா தனது கணவர், குழந்தையுடன் செங்கம் திரும்பினார். 3 பேரையும் போளூர் பஸ் நிலையத்தில் விடுவதற்காக ஒரே பைக்கில் ஏற்றிக் கொண்டு சத்யாவின் தம்பி பார்த்திபன் (25) அழைத்துச் சென்றார்.

    காங்கேயனூர் கிராமப் பகுதியில் இருந்து மெயின் ரோட்டிற்கு வந்த போது போளூரில் இருந்து செங்கம் நோக்கி அதிவேகத்தில் வந்த டெம்போ வேன் பைக் மீது மோதியது.

    இதில் பைக்கில் சென்ற குழந்தை உள்பட 4 பேரும் தூக்கி வீசப்பட்டு நடுரோட்டில் விழுந்து பலத்த காயமடைந்தனர். பார்த்திபனும், சத்யாவும் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

    குழந்தை துர்காவும், சக்திவேலும் ரத்த வெள்ளத்தில் துடி துடித்தபடி உயிருக்கு போராடினர். அவர்களை பொதுமக்கள் மீட்டு போளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை துர்கா பரிதாப மாக உயிரிழந்தது. சக்திவேல் நிலைமை கவலைக் கிடமாக இருப்பதால் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சாலை விபத்தில் ஒரே குடும்பத்தில் குழந்தை உள்பட 3 பேர் பலியானதால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு மறியல் போராட்டம் செய்தனர்.


    போளூர் டி.எஸ்.பி. சின்ராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, போலீசார் விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தற்போது விபத்து நடந்த இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், நெடுஞ்சாலைத்துறையினர் வேகத்தடை அமைக்க வில்லை.

    இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. உயிரிழப்புகளும் தொடர்கிறது. தற்போது 3 உயிர்கள் பலியாகியுள்ளது. இதற்கு நெடுஞ்சாலைத்துறையினர் தான் காரணம் என்றுக்கூறி போலீசாருடன் பொது வாக்குவாதம் செய்தனர்.

    இதையடுத்து, இன்று மாலைக்குள் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.எஸ்.பி. உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    போளூர் அருகே குழந்தை கடத்துபவர் என கருதி மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    போளூர்:

    போளூர் அருகே குல தெய்வம் கோவிலுக்கு வந்தவர்களை குழந்தை கடத்துபவர்கள் எனக் கருதி கிராம மக்கள் தாக்கியதில் ருக்மணி என்பவர் கொலை செய்யப்பட்டார். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக 62 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதில் 36 பேரை போளூர் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் மேலும் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அத்திமூரை சேர்ந்த மணிகண்டன் (வயது 36), பாபு (54), ரமேஷ் (36), ஏழுமலை (29), தின்டிவனத்தை சேர்ந்த சேகர் (43), தானியார் கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் (34). ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இதுவரை 42 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து கிராம மக்கள் ஊரை விட்டு தலைமறைவாகி உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் பகுந்தனர். களியம், அத்திமூர், பனப்பாம்பட்டு, தின்டிவனம் உள்ளிட்ட 10 கிராமங்களில் பலர் வீட்டை பூட்டி தலைமறைவாகி விட்டனர். இதனால் அந்த கிராமங்கள் 7-வது நாளாக இன்றும் வெறிச்சோடி காணப்பட்டது.

    மேலும் தலைமறைவாக உள்ள 20 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கிராம மக்கள் தாக்கியதில் காயமடைந்த கஜேந்திரன் வேலூர் சி.எம்.சி. மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    அவருக்கு மூளையில் ரத்தம் உறைந்ததால் சிகிச்சை செய்யப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து சுயநினைவு திரும்பாத நிலையில் இருந்து வந்தார். கார் மெக்கானிக் தொழில் செய்து வந்த அவருக்கு 2 மகள் உள்ளனர். ஏழ்மை நிலையில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு மருத்துவ செலவு சமாளிக்க முடியாமல் கண்ணீர் விட்டனர்.

    கஜேந்திரன் மனைவி பத்மாவதி நேற்று முன்தினம் திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமியை சந்தித்து மருத்துவ உதவி கேட்டு மனு கொடுத்தார்.

    இந்நிலையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க சென்னையிலுள்ள மருத்துவ மனை உதவிக்கரம் நீட்டியுள்ளது. எனவே அவர் நேற்று மாலை சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    போளூர் அருகே கார், லோடு ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர்.

    போளூர்:

    வேலூர் பாகாயத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர், காரில் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா சென்று விட்டு நேற்றிரவு ஊர் திரும்பினர். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே எட்டிவாடி கிராமத்தில் உள்ள தனியார் கல்லூரி அருகே இன்று காலை 6 மணியளவில் வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது, குடியாத்தம் சந்தப்பேட்டையில் இருந்து வந்த லோடு ஆட்டோவும், காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் காரும், ஆட்டோவும் நசுங்கி உருகுலைந்தது.

    இந்த கோர விபத்தில் காரில் இருந்த வைஷ்ணவி (வயது 13) என்ற சிறுமி மற்றும் ஆட்டோவில் இருந்த ரவி (52) ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் காரில் இருந்த வெங்கடேசன், லட்சுமி, ராஜ் குமார், நவீன், அனு, துளசி, கருணாஸ், பரத், சீனு, அருண் மற்றும் ஆட்டோ டிரைவர் என 11 பேர் படுகாயமடைந்தனர்.

    களம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    படுகாயமடைந்த 11 பேரும் போளூர் மற்றும் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

    போளூர் அருகே குழந்தை கடத்துபவர் என கருதி மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து 3-வது நாளாக 10 கிராமங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே குழந்தை கடத்துபவர் எனக் கருதி குல தெய்வ கோவிலுக்கு தரிசனத்திற்கு வந்த ருக்மணி அம்மாள் மற்றும் குடும்பத்தினரை ஊர் பொதுமக்கள் தாக்கியதில் ருக்மணி அம்மாள் பரிதாபமாக இறந்தார். 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



    இந்த சம்பவம் தொடர்பாக போளூர் போலீசார் 23 பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய பலரை வீடு, வீடாக சென்று தேடி வருகின்றனர்.

    மேலும் இதுதொடர்பாக தானியார் கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை (வயது 45), ஏரிக்கொல்லைமேடு பகுதியை சேர்ந்த பழனி (45) ஆகிய 2 பேரை கைது செய்தனர். சந்தேகத்தின் பேரில் 42 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையடுத்து கைது செய்யப்பட்ட 25 பேரை நேற்று முன்தினம் இரவு போளூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு தாமோதரன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

    இதில் 13 வயது சிறுவன் கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் மற்றவர்களை வேலூர் ஜெயிலிலும் அடைக்க அவர் உத்தரவிட்டார். இதையடுத்து 24 பேர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து நேற்று முன்தினம் களியம், அத்திமூர், பனப்பாம்பட்டு, தின்டிவனம், கணேசபுரம், தம்புகொட்டான்பாறை, ஜம்பங்கிபுரம், தானியார், காமாட்சிபுரம், இந்திராநகர் ஆகிய 10 கிராமங்களில் பலர் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி உள்ளனர்.

    இரவோடு இரவாக பலர் தங்களது வீடுகளை காலி செய்துள்ளனர். 3-வது நாளாக இன்று கிராமங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின் பேரில் போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சின்னராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்பாபு (போளூர்), ராஜகோபால் (கலசபாக்கம்), சுரேஷ்சண்முகம் (கடலாடி) மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் தயாளன், சுந்தர்ராஜன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்களை கொண்டு தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    அப்பகுதியில் தினமும் அதிகாலை நேரத்தில் பலர் சைக்கிளில் இளநீர் கொண்டு வந்து போளூரில் விற்பனை செய்வது வழக்கம். நேற்று இளநீர் விற்பவர்கள் யாரும் வரவில்லை.

    ஜவ்வாதுமலையில் உள்ள பட்டரைகாடு, நம்மியம்பட்டு உள்பட 364 குக்கிராமங்களில் அவர்கள் பதுங்கி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து அந்த பகுதிகளில் தேடி வருகின்றனர்.  #tamilnews
    ×