மதுரையில் இரண்டு வீடுகளில் 15 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை
மதுரை:
மதுரை கே.கே. நகர் வித்யா காலனியைச் சேர்ந்தவர் அருணாசலம் (வயது 71). விவசாய கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் மருத்துவ கவுன்சிலுக்காக குடும்பத்தினருடன் அருணாசலம் சென்னை சென்றிருந்தார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து 15 பவுன் நகையை திருடிக்கொண்டு தப்பினர்.
மதுரை கோமதிபுரம் செந்தமிழ் தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 50). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டில் இருந்த டி.வி., 2 கிலோ வெள்ளி பொருட்களை திருடிக்கொண்டு தப்பினர்.
2 கொள்ளை சம்பவங்கள் குறித்து அண்ணா நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை நகரில், குறிப்பாக அண்ணா நகர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதியில் பூட்டியிருந்த வீடுகளில் கொள்ளையடிப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. வாரந்தோறும் இது தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. ஆனால் போலீசார் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.