பெரியகுளம் அருகே குடும்ப தகராறில் பெண் தற்கொலை
தேனி:
பெரியகுளம் அருகே மேல்மங்கலம் அம்மாபட்டி தெருவைச் சேர்ந்தவர் நாராயணகுமார். இவருக்கும் மதுரை நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த குருநாதன் மகள் கலைவாணி (வயது 28) என்பவருக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 வயதில் மகன் உள்ளார். திருமணத்தின் போது 26 பவுன் நகை மற்றும் சீர் வரிசைகள் கொடுக்கப்பட்டன.
அதன் பின்னர் கூடுதல் நகை கேட்டு நாராயணகுமார் குடும்பத்தினர் கலைவாணியிடம் தகராறு செய்துள்ளனர். இதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் குருநாதன் செல்போனுக்கு வந்த அழைப்பில் கலைவாணி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தேனி அரசு ஆஸ்பத்திரியில் வைத்திருந்த கலைவாணியின் உடலை பார்த்து கதறி அழுதார். மேலும் தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக ஜெயமங்கலம் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
இதேபோல் உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 52). கூலித் தொழிலாளி. கடந்த சில நாட்களாக நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த செல்வம் விஷம் குடித்து மயங்கினார்.
அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.