நாமக்கல் மாவட்ட கோவில்களில் கொள்ளை கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது
நாமக்கல்:
நாமக்கல் தும்மங்குறிச்சியை அடுத்த அருந்ததியினர் காலனியில் உள்ள ஓங்காளியம்மன் கோவிலில் சமீபத்தில் பூட்டை உடைத்து பணம், நகை திருட்டு போனது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த கோவிலில் நடந்த திருட்டில் ஈடுபட்டதாக நாமக்கல் சின்ன முதலைப் பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவன் தினேஷ் (20) மற்றும் தமிழரசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல நல்லிபாளையம் விநாயகர், பகவதியம்மன் கோவிலில் திருடியதாக சின்னமுதலைப்பட்டியை சேர்ந்த லாரி மெக்கானிக் கார்த்தி (20), தினகரன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில் இவர்கள் 4 பேரும் சேர்ந்து கூட்டாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பரமத்தி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். பகலில் படிப்பு, இரவு திருட்டில் ஈடுபட்ட கல்லூரி மாணவன் கைதான சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.