செய்திகள்
மு.க ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் நாளை சென்னையில் நடைபெற உள்ள கூட்டத்தில், மு.க அழகிரி பேரணியில் கலந்து கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது தெரியவரும். #DMK #MKStalin
சென்னை:
திமுக தலைவராக மு.க ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்ட பின்னர், அவர் தலைமையில் நாளை அக்கட்சி மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணிக்கு நடக்க உள்ளது.
கடந்த 5-ம் தேதி கருணாநிதி சமாதியை நோக்கி பேரணி நடத்திய மு.க அழகிரி, “பேரணியில் பங்கேற்ற 1 1/2 லட்சம் பேர் மீது நடவடிக்கை எடுப்பீர்களா?” என மறைமுகமாக ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், கட்சி நிர்வாகிகள் யாரும் அழகிரி பேரணியில் பங்கேற்றனரா? என்ற விசாரணையையும் ஸ்டாலின் நடத்தியதாக கூறப்பட்டது.
இந்நிலையில், அப்படி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றது தெரிய வரும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து நாளை நடக்க உள்ள கூட்டத்தில் முடிவெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.