செய்திகள்
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாரணை - முதல்வர்
தூத்துக்குடி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். #SterliteShut #EdappadiPalanisamy
சென்னை:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டது. இதனை அடுத்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு தூத்துக்குடி கலெக்டர் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டர். இதற்கிடையே, சென்னையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்தது. கூட்டம் முடிந்த பின்னர், செய்தியாளர்களை சந்தித்த பழனிசாமி கூறியதாவது:-
மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பசுமை தீர்பாயம் வெளியிட்ட விதிமுறைகளை ஸ்டெர்லைட் நிறுவனம் பின்பற்றவில்லை. இதனை அடுத்து, அனுமதியை புதுப்பிக்க அந்நிறுவனம் அளித்த விண்ணப்பத்தை தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்தது.
ஆலைக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தூத்துக்குடியில் முழு அமைதி நிலவ பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்; போராட்டத்தின்போது காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.