செய்திகள்

கோயம்பேட்டில் வீடு புகுந்து நகை-பணத்தை திருடிய கொள்ளையன் கைது

Published On 2018-05-04 10:07 GMT   |   Update On 2018-05-04 10:07 GMT
சென்னை கோயம்பேட்டில் வீடு புகுந்து நகை மற்றும் பணத்தை திருடிய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை:

சென்னை ஜார்ஜ் டவுண் கோர்ட்டு அருகே போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். சந்தேகத்தின் பேரில் போலீசார் இருவரையும் நிறுத்தி சோதனை செய்தனர். அவர்களிடம் 15 பவுன் நகையும் ரூ.20 ஆயிரம் ரொக்கப் பணமும் இருந்தது.

இதுபற்றி போலீசார் விசாரித்த போது 2 பேரில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். இன்னொரு வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அவரது பெயர் பவுல்ராஜ் என்பது தெரியவந்தது. பாரிமுனையை சேர்ந்த இவர் தனது நண்பருடன் சேர்ந்து கோயம்பேட்டில் கொள்ளையடித்துவிட்டு தப்பி வந்தது தெரியவந்தது. கோயம்பேடு அய்யப்பன் நகரை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கினார்.

அப்போது பவுல்ராஜ் தனது நண்பருடன் சேர்ந்து வீடு புகுந்து கொள்ளையடித்துள்ளார். பின்னர் இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற போது தான் போலீசில் சிக்கிக் கொண்டனர்.

இதனையடுத்து பிடிபட்ட பவுல்ராஜ் கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. தப்பி ஓடிய பவுல்ராஜின் கூட்டாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News