செய்திகள்

ஆலங்குளம் அருகே சிறுமியிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட தொழிலாளி திடீர் மரணம்

Published On 2018-01-10 16:47 GMT   |   Update On 2018-01-10 16:47 GMT
சிறுமியிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட தொழிலாளியை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். ஜாமீனில் வந்த அவர் திடீரென மரணம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆலங்குளம்:

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள முத்துகிருஷ்ணப்பேரி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது47). இவர் ஆலங்குளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

கடந்த வாரம் சந்திரன் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூரை சேர்ந்த ஒரு சிறுமியை தனியாக அழைத்து சென்று சில்மி‌ஷம் செய்துள்ளார். இதை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்து சந்திரனை பிடித்து தர்ம அடிகொடுத்தனர். ஏராளமானவர்கள் கூடி அவரை அடித்து உதைத்து, போலீசில் ஒப்படைத்தனர்.

ஆலங்குளம் போலீசார் சில்மி‌ஷ வழக்கில் சந்திரனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ஆலங்குளம் மாஜிஸ்திரேட்டு சந்திரனை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இந்த நிலையில் பாளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்திரன் நேற்று ஜாமீனில் வெளியே வந்தார். வந்தவர் தன்னை பலர் தாக்கியதில் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் அதற்குள் வீட்டில் இருந்த சந்திரன் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சந்திரன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சந்திரனின் மகன் சரத் (23) என்பவர் ஆலங்குளம் போலீசில் தனது தந்தை பொதுமக்கள் தாக்கியதில் உள்காயம் ஏற்பட்டு மரணம் அடைந்து விட்டதாக புகார் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து ஆலங்குளம் போலீசார் மர்மச்சாவு என்று வழக்குப்பதிவு செய்து சந்திரன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். பின்பு அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews

Tags:    

Similar News