ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது வரம்பு மீறிய செயல்: தமிழிசை சவுந்தரராஜன்
திருச்செந்தூர்:
தமிழக பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தார். அவர் சாமி தரிசனம் செய்து விட்டு சமீபத்தில் இடிந்து விழுந்த கிரிவல பிரகார மண்டபத்தை பார்வையிட்டார்.
பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கிரிவல பிரகார மண்டபம் இடிந்து விழுந்தது வேதனை அளிக்கிறது. பல்வேறு இந்து அமைப்புகள் முன்னதாகவே எச்சரிக்கை செய்தும் அறநிலையத்துறையின் அஜாக்கிரதையால் மண்டபம் இடிந்துள்ளது. அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் கட்டிடங்களை சீரமைக்க ஆர்வம் காட்டவில்லை.
இச்சம்பவத்தை இயற்கை பேரீடராக அறிவித்து இடிபாடுகளில் சிக்கி பலியான பேச்சியம்மாள் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். திருச்செந்தூர் கோவிலை சுற்றி உள்ள பழுதான கட்டிடங்களை உடனே புதுப்பிக்க வேண்டும்.
ஆளுநர் ஆய்வுக்கு தி.மு.க. கருப்புக்கொடி காட்டுவது வரம்பு மீறிய செயலாகும். மு.க.ஸ்டாலின் மனு கொடுத்ததின் அடிப்படையில் கவர்னர் ஆய்வுக்கு செல்கிறார். ஆனால் அதை தி.மு.க.வினர் ஏன் எதிர்க்கிறார்கள் என தெரியவில்லை. தூய்மை இந்தியா திட்டப்பணிகளை கவர்னர் ஆய்வு செய்தது தொடர்பாக தவறான கருத்துக்களை பரப்புவது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.