செய்திகள்

யானைகள் நடமாட்டம்: சுருளி அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பீதி

Published On 2017-09-11 16:36 GMT   |   Update On 2017-09-11 16:37 GMT
சுருளி அருவியில் யானைகள் நடமாட்டம் உள்ளதால் சுற்றுலா பயணிகள் பீதி அடைந்துள்ளனர்.
கம்பம்:

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி சுற்றுலா மற்றும் ஆன்மீக தலமாக விளங்குகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக அருவிக்கு நீர்வரத்து உள்ளது.

இதனால் அதிக அளவு சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். கடந்த 2015-ம் ஆண்டு சுருளி அருவியை மேகமலை வன உயிரின சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. எனவே வானங்கள் அனைத்தும் 1 கி.மீ. தூரத்திற்கு முன்பாகவே நிறுத்தப்பட்டு வருகிறது.

இதனால் சுற்றுலா செல்லும் பயணிகள் வாகனங்களை நிறுத்தி விட்டு அருவிக்கு நடந்து செல்கின்றனர். கடந்த சில நாட்களாக இப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் அருவி பகுதியில் உள்ள குப்பை தொட்டிகளை உடைத்து சேதப்படுத்தின. மரம் ஒன்றையும் பிடுங்கி வீசின. இதனால் சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். இரவு நேரத்தில்தான் யானைகள் நடமாட்டம் இருந்தபோதிலும் சுற்றுலா பயணிகள் வனப்பகுதியில் செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர்.

எனவே வனத்துறையினர் இப்பகுதியில் ரோந்து சென்று யானைகள் வராமல் தடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Tags:    

Similar News