செய்திகள்

ஜமுனாமரத்தூர் அருகே விவசாயி கொலையில் 4 பேர் கைது

Published On 2017-08-16 11:50 GMT   |   Update On 2017-08-16 11:50 GMT
ஜமுனாமரத்தூர் அருகே பாதை தகராறு தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் மலை கிராம விவசாயி கீழே தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே ஜமுனாமரத்தூரை அடுத்து கோமுட்டேரி எனும் மலை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பையன் (வயது 60). விவசாயி. இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. அவரது நிலத்துக்கு சென்று வரும் பாதை தொடர்பாக இவருக்கும் உறவினர் சிலருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு மோதலானது. இதில் சின்னப்பையனை அவர்கள் கீழே தள்ளி விட்டனர். பலத்த காயத்துடன் துடித்த அவரை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது வரும் வழியிலேயே சின்னப்பையன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ஜமுனாமரத்தூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் விரைந்து சென்ற போலீசார், சின்னப்பையனை கீழே தள்ளிவிட்டவர்கள் மீது விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த செந்தில், வைத்தியநாதன், உமா, குப்பு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News