செய்திகள்

கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் சேவையுடன் சிறப்பாக செயல்படுவார்: சீமான்

Published On 2017-08-05 05:47 GMT   |   Update On 2017-08-05 05:47 GMT
கமல்ஹாசன் கட்சி தொடங்கினாலும் தீவிர அரசியலில் ஈடுபடமாட்டார். தொடர்ந்து சேவை செய்து வருவதோடு, சிறப்பாக செயல்படுவார் என சீமான் கூறியுள்ளார்.
திருச்சி:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பாரதிய ஜனதா ஆட்சியை கண்டு பயந்து இருக்கின்றனர். ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்த போது நான் எதிர்ப்பு தெரிவித்தேன்.

ஆனால் கமல்ஹாசன் அரசியலுக்கு வரும் போது எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஏனென்றால் அவர் ரசிகர் மன்றம் தொடங்கி படிப்படியாக வளர்ந்து வருகிறார். நற்பணி மன்றங்கள் மூலமாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு, புத்தகம், சீருடைகள் வழங்கி சேவை செய்து வருகிறார்.


எனவே கமல்ஹாசன் கட்சி தொடங்கினாலும் தீவிர அரசியலில் ஈடுபடமாட்டார். தொடர்ந்து சேவை செய்து வருவதோடு, சிறப்பாக செயல்படுவார். சின்னத்தை பார்த்து வாக்கு அளிக்காமல், எண்ணத்திற்கு ஏற்ப வாக்களிக்க வேண்டும்.

சென்னையில் அண்ணா, எம்.ஜி.ஆர். போன்றவர்கள் சமாதி இருக்கிறது. அதையெல்லாம் அகற்றாமல் சிவாஜி சிலையை போக்குவரத்தை காரணம் காட்டி அகற்றி இருக்கிறார்கள். சிவாஜி சிலை அகற்றியதை கண்டித்து போராட்டம் நடத்துவோம்.

கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அமைவது நல்லது என சிலர் குறிப்பிட்டு இருக்கிறார்கள். அவர்கள் விவசாயிகள் செத்தாலும் நல்லது என்று குறிப்பிடுபவர்கள். அவர்கள் எவர் மீதும் அக்கறை கொள்ளாதவர்கள்.

தமிழகத்தில் துணை ஜனாதிபதி தேர்தலுக்கு பின் எவ்வித மாற்றமும் நிகழாது. 2019-ம் ஆண்டுக்கு பிறகே தமிழகத்தில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News