கயத்தாறில் டிரைவர் கொலையில் 2 பேர் கைது
- கொலை தொடர்பாக கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.
- செல்வக்குமார் தனது நண்பரான ரஞ்சித்குமார்(30) மற்றும் 2 வாலிபர்களின் உதவியுடன் மகேஷ்வரனை கயத்தாறு பகுதிக்கு அழைத்து வந்து கொலை செய்தது தெரியவந்தது.
கயத்தாறு:
சிவகாசி அருகே உள்ள மானகசேரி நடுத்தெருவை சேர்ந்தவர் மகேஷ்வரன்(வயது 25). இவர் மீன் லாரியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 23-ந்தேதி நெல்லை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறு அருகே தளவாய்புரம் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.
அதில் சிவகாசி மருதுபாண்டியர் தெருவை சேர்ந்த செல்வக்குமார் என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து மகேஷ்வரனை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். செல்வக்குமார் மீன் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், மகேஷ்வரனுக்கும் பழக்கம் ஏற்பட்டு 2 பேரும் ஒன்றாக மது குடித்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிபோதையில் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மகேஷ்வரனை கொலை செய்ய திட்டம் தீட்டிய செல்வக்குமார் தனது நண்பரான சிவகாசியை சேர்ந்த ரஞ்சித்குமார்(30) மற்றும் 2 வாலிபர்களின் உதவியுடன் மகேஷ்வரனை கயத்தாறு பகுதிக்கு அழைத்து வந்து கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து ரஞ்சித்குமாரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலையில் தலை மறைவாக உள்ள மேலும் 2 வாலிபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.