செய்திகள்
ஸ்டாலின் முதல்-அமைச்சரானால் இந்தியாவிற்கே வழிகாட்டுவார்- கி.வீரமணி பேச்சு
தி.மு.க. கூட்டணி பதவிக்காக, தேர்தலுக்காக உருவான கூட்டணியில்லை. கொள்கைக்காக உருவான கூட்டணி என்று கி வீரமணி பேசினார்.
பேராவூரணி:
தஞ்சை மாவட்டம் பேராவூரணி வேதாந்தம் திடலில் பேராவூரணி சட்டசபை தொகுதி தி.மு.க. வேட்பாளர் அசோக்குமாருக்கு ஆதரவாக தி.க. தலைவர் கி.வீரமணி பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தல் பரப்புரை வரலாற்றில் மறக்க முடியாத நாள் இன்று. மிகுந்த எழுச்சியோடு மாநாடு போல் கூடியிருக்கும் இந்த கூட்டத்தை பார்க்கும் போது அசோக்குமாரின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது தெரிகிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி. எந்த கொம்பனாலும் ஆட்சி மாற்றத்தை தடுக்க முடியாது.
திராவிடம் வெல்லும். கொரோனாவிற்கு முககவசம், தடுப்பூசி போட்டுக்கொள்வதை போல தமிழகத்திற்குள் வர துடிக்கும் பா.ஜ.க.விற்கு தடுப்பூசி தமிழக முதல்-அமைச்சராக ஸ்டாலின் வருவதுதான். தி.மு.க. கூட்டணி பதவிக்காக, தேர்தலுக்காக உருவான கூட்டணியில்லை. கொள்கைக்காக உருவான கூட்டணி. பழனிசாமி சொல்கிறார் கொள்கை வேறு, கூட்டணி வேறு.
இதில் தோல்வி பயம் தெரிகிறது. கடைசியாக பணத்தை நம்பியிருக்கிறார்கள். தமிழகம் அடகுவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும். இந்திய ஜனநாயகத்தையே காக்கும் வல்லமை தமிழகத்திற்கு உண்டு.
ஸ்டாலின் முதல்-அமைச்சரானால் இந்தியாவிற்கே வழிகாட்டுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் தி.க. மாவட்ட அமைப்பாளர் சிதம்பரம், முன்னாள் எம்.எல்..ஏ. சிங்காரம், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பாலசுந்தரம், ஒன்றிய கவுன்சிலர் அருள்நம்பி, மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.