ஆன்மிகம்

நெல்லை தச்சநல்லூர் சிவன் கோவிலில் தேரோட்டம்

Published On 2017-05-03 06:00 GMT   |   Update On 2017-05-03 06:00 GMT
நெல்லை தச்சநல்லூர் சிவன் கோவிலில் 10 நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நெல்லை தச்சநல்லூர் சிவன் கோவிலில் சுவாமி நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் அருள்பாலிக்கின்றனர். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 24-ந் தேதி தொடங்கியது. 30-ந் தேதி இரவில் சுவாமி, அம்பாள் மற்றும் நடராஜர் சிவப்பு சாத்தி வீதி உலா நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. காலை 7.30 மணிக்கு வருசாபிஷேகம் நடந்தது. பகல் 11.30 மணிக்கு சுவாமி, அம்பாள் தேரில் எழுந்தருளினர். திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் தேர் 4 ரத வீதிகளிலும் வந்து, பகல் 1.30 மணி அளவில் நிலைக்கு வந்தடைந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு சுவாமி, அம்பாள், பஞ்ச மூர்த்திகளுடன் வீதி உலா நடக்கிறது.

ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகன், ஆய்வாளர் முருகன் மற்றும் உலகம்மன் பக்த சேவா குழுவினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News