search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுபான்மை மக்களை காங்கிரஸ் ஏமாற்றுகிறது- ஜிகே வாசன் குற்றச்சாட்டு
    X

    சிறுபான்மை மக்களை காங்கிரஸ் ஏமாற்றுகிறது- ஜிகே வாசன் குற்றச்சாட்டு

    சிறுபான்மையின மக்களை ஏமாற்றும் கட்சியாக தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உள்ளது என்று ஜிகே வாசன் குற்றம் சாட்டியுள்ளார். #gkvasan #congress #dmk

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று மாலை நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பொன்.ராதாகிருஷ்ணன் குமரிக்கு செய்த நல்ல திட்டங்களை பட்டியலிட்டு கூறலாம். குமரியில் 50 வருட கால வரலாற்றில் பலர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவரையும் தாண்டி தனது அமைச்சரவையிலே பல திட்டங்களை போராடி கொண்டு வந்தவர் என்பதை மறுத்து விட முடியாது.

    காங்கிரஸ் வேட்பாளராக எச்.வசந்தகுமார் போட்டியிடுகிறார். அவர் சென்னையில் இருக்கும் குமரி மண்ணின் மைந்தர் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் பொன்.ராதாகிருஷ்ணன் தான் உண்மையான மண்ணின் மைந்தர் என்பது மறுக்க முடியாது. காங்கிரஸ் கட்சி எப்போதும் பா.ஜனதாவை மதவாத கட்சி என குறைகூறி வருகிறது. அது முற்றிலும் பொய்யான கருத்து. மேலும் 9 நாடாளுமன்ற தொகுதிகளை தி.மு.க.விடம் பெற்று கொண்ட காங்கிரஸ் கட்சி ஒரு முஸ்லீமையோ அல்லது கிறிஸ்தவரையோ நிறுத்தவில்லை.

    சிறுபான்மையின மக்களை ஏமாற்றும் கட்சியாக தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேரளாவில் போட்டியிடுவதற்கு, முதல் எதிர்ப்பு குரல் எழுப்பியது கம்யூனிஸ்டு கட்சிதான். மக்களை குழப்பும் கட்சியாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது.

    குமரியை முதன்மை மாவட்டமாக மாற்றும் சக்தி பொன்.ராதாகிருஷ்ணனிடம் மட்டும் தான் இருக்கிறது. எனவே அவருக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெற செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக ஜி.கே.வாசன், கருங்கல் பஸ் நிலையம் பகுதியில் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்துக்கு ஏதோ ஒரு மந்திரி மட்டும் தான் கிடைத்திருக்கிறார். இவரால் என்ன முடியும், தனிமரம் தோப்பாகாது என்று நினைத்தவர்கள் பலர். ஆனால், இன்று அப்படி நினைத்தவர்கள் எல்லாம், ஏமாளியாக, கோமாளியாக மாறிவிட்டார்கள் என்பது தான் உண்மை நிலை. அந்த மந்திரியான பொன்.ராதாகிருஷ்ணன் கொஞ்சம் கூட மனம் தளராமல் ஒட்டுமொத்த தமிழக வளர்ச்சிக்காக தன்னுடைய பணியை செய்தவர்.

    தேசத்தின் வளர்ச்சிக்கும், நாட்டின் பாதுகாப்பிற்கும் நீங்கள் கூட்டணி கட்சியான பா.ஜ.க.வுக்கு இங்கு வாக்களிக்க வேண்டும். நாடு அமைதியுடன் சாதி, மத, இனமோதல்கள் இல்லாமல் இருப்பதற்கு காரணம் மத்தியில் பா.ஜ.க. ஆட்சியும், அதனை சார்ந்து இருக்கும் அ.தி.மு.க. ஆட்சியும் காரணம் ஆகும். இதே நிலை தொடர வேண்டும்.

    காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை காலம் போன ஒன்று. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம். எனவே, அதை நம்ப தமிழக மக்களும், இந்திய மக்களும் தயாராக இல்லை. செல்லா நோட்டாக நினைக்கிறார்கள் என்றார். #gkvasan #congress #dmk

    Next Story
    ×