search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடக முதல்-மந்திரி எதிர்ப்புக்கு மத்திய அரசு பணியக்கூடாது - அன்புமணி ராமதாஸ்
    X

    கர்நாடக முதல்-மந்திரி எதிர்ப்புக்கு மத்திய அரசு பணியக்கூடாது - அன்புமணி ராமதாஸ்

    கர்நாடகா முதல்-மந்திரி சித்தராமையா எதிர்ப்புக்கு பணிந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை மத்திய அரசு தாமதப்படுத்தக் கூடாது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவிரி நீரில் தமிழகத்திற்குரிய பங்கு 14.74 டி.எம்.சி அளவுக்கு குறைக்கப்பட்டு விட்ட நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அடுத்த 6 வாரங்களில் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது தான் தமிழக விவசாயிகளுக்கு சற்று ஆறுதலாக உள்ளது.

    ஆனால், மேலாண்மை வாரியத்தை அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கப் போவதாக கர்நாடக முதல்- அமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்ற சித்தராமையாவின் இந்த எதிர்ப்பு கண்டிக்கத்தக்கது.

    காவிரி விவகாரத்தில் மேற்பார்வைக் குழு ஏற்கனவே செயல்பட்டு வருவதால், மேலாண்மை வாரியம் அமைக்க தேவையில்லை என்று சித்தராமையா கூறியிருப்பது பிரச்சினையை திசை திருப்பும் செயலாகும்.



    உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஆணையின் 457-ஆவது பக்கத்தின் 403-ஆவது பத்தியில் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்துவதற்கான அமைப்பு 6 வாரங்களில் அமைக்கப்பட வேண்டும்; இதற்காக இனியும் கால நீட்டிப்பு வழங்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வளவுக்குப் பிறகும் மேலாண்மை வாரியம் அமைக்கக் காலக்கெடு விதிக்கப்படவில்லை என்றும், இந்த பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட மாநிலங்களை ஒருங்கிணைத்து தீர்வு காண வேண்டும் என சித்தராமையா கூறிவருவதைப் பார்க்கும் போது அவர் இயல்பாக இல்லை; தேர்தல் காய்ச்சல் பாதித்துள்ளது என்பதை உணர முடிகிறது. இந்த எதிர்ப்புக்கு பணிந்து மேலாண்மை வாரியம் அமைப்பதை மத்திய அரசு தாமதப்படுத்தக் கூடாது.

    கர்நாடகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிக்கை அடுத்த மாதம் வெளியிடப்படவுள்ள நிலையில், அங்குள்ள மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு முட்டுக்கட்டை போட காங்கிரசும், பாரதிய ஜனதாவும் முயலும். உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழககத்திற்கு நீதி பெற்றுத் தருவதை விட கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் அதிகாரத்தை சுவைப்பது தான் அக்கட்சிகளுக்கு அவசரத் தேவையாக இருக்கும்.

    எனவே, இந்த வி‌ஷயத்தில் தமிழகம் இனியும் அலட்சியமாக இருக்கக் கூடாது. மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் தருவதன் மூலமாக மட்டுமே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியும். உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி இது குறித்து தீர்மானம் நிறைவேற்றுவதுடன், அனைத்துக் கட்சித் தலைவர்கள், உழவர் அமைப்புகளின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கும்படி வலியுறுத்த முதல்வர் முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×