search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில் டிரைவர்"

    “கூடுதலாக 15 நிமிடம் வேலை பார்த்து விட்டேன்” எனக்கூறி சரக்கு ரெயிலை பாதியில் நிறுத்திய என்ஜின் டிரைவரால் சீர்காழி அருகே 2 மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #VaitheeswaranKoilRailwayStation
    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் ரெயில் நிலையம் அமைந்துள்ளது. நவக்கிரகங்களில் செவ்வாய் பரிகார தலமாக வைத்தீஸ்வரன் கோவில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் ரெயில்களில் வந்து செல்வர். பயணிகள் ரெயில் மட்டும் வைத்தீஸ்வரன்கோவில் ரெயில் நிலையத்தில் தினமும் 2 நிமிடம் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்வது வழக்கம். எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2 மட்டும் தினமும் 2 தடவை நின்று செல்லும்.

    இதேபோல் நெய்வேலியில் இருந்து காரைக்கால் துறைமுகத்துக்கு தினமும் சரக்கு ரெயில்கள் நிலக்கரி ஏற்றி இவ்வழியே அதிகளவில் செல்லும். ஆனால் இந்த ரெயில்கள் எந்த ரெயில் நிலையத்திலும் நின்று செல்லாது.

    இந்நிலையில் நேற்று இரவு 7.30 மணியளவில் நிலக்கரி ஏற்றிக் கொண்டு ஒரு சரக்கு ரெயில் வந்து கொண்டிருந்தது. இதனால் வைத்தீஸ்வரன் கோவில் ரெயில் நிலைய மாஸ்டர் அந்த ரெயில் தடையின்றி செல்ல சிக்னலை மாற்றி விட்டு ரெயில் நிலையத்தை கடந்து செல்ல காத்திருந்தார்.

    ஆனால் அந்த ரெயில் எந்த முன்னறிவிப்புமின்றி வைத்தீஸ்வரன் கோவில் ரெயில் நிலையத்தில் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் ஸ்டேசன் மாஸ்டர் உடனடியாக சரக்கு ரெயிலை இயக்கி வந்த என்ஜின் டிரைவர் முத்துராஜாவிடம் சென்று ‘எதனால் ரெயிலை நிறுத்தினீர்கள்’ என்று கேட்டார்.

    அப்போது அவர் “எனக்கு 12 மணிநேரம் மட்டுமே பணி. ஆனால் கூடுதலாக 15 நிமிடம் ரெயிலை இயக்கி வந்துள்ளேன். இதனால் மேற்கொண்டு என்னால் ரெயிலை இயக்க முடியாது” என்று கூறியதால் ஸ்டேசன் மாஸ்டர் அதிர்ச்சியடைந்தார்.

    இந்த சரக்கு ரெயில் திடீரென நிறுத்தப்பட்டதால் அங்கு புறப்பட தயாராக இருந்த திருப்பதி-காரைக்கால் ரெயிலும் இயக்க தாமதமானது. மேலும் அதிக பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயில் சுமார் 100 மீட்டர் வரை பெட்டிகளுடன் நின்றதால் வைத்தீஸ்வரன்கோவில்-புங்கனூர் ரெயில்வே கேட்டை கடந்தும் பெட்டிகள் நின்றிருந்தது. இதனால் அந்த வழியே கடந்து செல்ல முடியாமல் மினிபஸ்கள், ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.

    இதனால் ஸ்டடேசன் மாஸ்டர் மற்றும் திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகள் சென்று என்ஜின் டிரைவர் முத்துராஜாவிடம் ரெயிலை இயக்கி செல்லுமாறு கேட்டனர். ஆனால் அவர் மறுத்து விட்டார்.

    இதையடுத்து சுமார் 2 மணிநேரம் வரை ரெயில் வைத்தீஸ்வரன் கோவிலில் நிறுத்தப்பட்டது. பின்னர் ‘அருகிலுள்ள மாயவரம் ரெயில் நிலையத்திலாவது தற்சமயம் சரக்கு ரெயிலை கொண்டு சென்று நிறுத்துங்கள்’ என்று ஸ்டேசன் மாஸ்டர் கேட்டுக் கொண்டார்.

    இதையடுத்து சற்று இறங்கி வந்த டிரைவர் 2 மணி நேர தாமதத்துக்குப்பிறகு சரக்கு ரெயிலை அங்கிருந்து இயக்கி சென்றார். இதன் காரணமாக இவ்வழியே செல்ல வேண்டிய மற்ற ரெயில்கள் அருகில் உள்ள மற்ற ரெயில் நிலையங்களில் 2 மணி நேரம் நிறுத்தப்பட்டது. இதனால் ரெயில் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

    அப்போது ரெயில் பயணிகள் ஆவேசத்துடன், ‘இதுபோன்ற ரெயில்வே ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக அக்கறை கூட இல்லாத இவரை போன்ற சிலரால் பல்வேறு பொதுப்பணிகள் பாதிக்கப்படுகிறது’ என்று குற்றம் சாட்டி சென்றனர்.

    இந்த சம்பவத்தால் வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #VaitheeswaranKoilRailwayStation

    மக்களின் வாழ்க்கை பயணத்தை பேரழிவை நோக்கி இயக்கும் திறமையற்ற ரெயில் டிரைவராக மோடி திகழ்கிறார் என்று ராகுல்காந்தி கடுமையாக தாக்கினார். #Modi #RahulGandhi #TrainDriver
    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள நாடாளுமன்ற இல்லத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி பேசும்போது கூறியதாவது:-

    நல்ல நாட்கள் வரும் என்று பா.ஜனதா அரசு அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இதனால் ஆளும் கட்சிக்கு எதிராக மக்களின் கோப அலை வீசுகிறது. மோடி அரசுக்கு எதிராக மாற்றத்தை ஏற்படுத்த நமது எம்.பி.க்கள் கடுமையாக உழைக்கவேண்டும். காங்கிரசையும் அதன் கூட்டணி கட்சிகளையும் மோடி அரசை வீழ்த்தும் மாற்று சக்தியாக நம்மை மக்கள் பார்க்கின்றனர்.



    எனவே மக்களின் பிரச்சினைகளை நாம் புரிந்து கொண்டு வறுமை ஒழிப்பு, வேலையில்லா திண்டாட்டம், நாட்டில் நிலவும் சமத்துவமற்ற நிலை போன்றவற்றுக்கு தீர்வு காணவேண்டும். இதைச் செய்யவேண்டிய மிகப்பெரிய பொறுப்பும், கடமையும் நமக்கு உள்ளது.

    இது ஜனநாயகம் மற்றும் சமூக நீதியை பாதுகாக்கும் சக்திகளுக்கும், சர்வாதிகாரத்துக்கும் இடையே நடைபெறும் மிகப்பெரிய போராட்டம். இதில் நாம் வெற்றி பெற்றாகவேண்டியது மிக அவசியம்.

    வெறுப்பு அரசியல், மக்களிடையே பிளவை ஏற்படுத்துதல், வன்முறை, அரசியல் சாசனத்தை இஷ்டம்போல் வளைக்கும் சக்திகளுக்கு எதிராக நாம் செயல்படுவதை மக்களிடம் உறுதி செய்து, பா.ஜனதாவை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கவேண்டும்.

    ஏனென்றால் மோடியின் ஆட்சியில், ஆட்சி நிர்வாகம் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. மத்திய அரசு திறன் அற்றதாக உள்ளது. ஊழல் உச்சக்கட்டத்தை அடைந்து விட்டது. பொருளாதாரம் படு வீழ்ச்சி கண்டுள்ளது. மக்களை சமூக ரீதியாக பிளவு படுத்துவதும் வேகமாக பரவி வருகிறது.

    நாட்டு மக்கள், இளைஞர்கள், விவசாயிகள், ஏழ்மை உழலும் குடும்பத்தினரிடையே நமது எம்.பி.க்கள் நம்பிக்கையை உருவாக்கவேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் கடன் சுமை காரணமாக மக்களின் வாழ்க்கை நசுக்கப்பட்டு விட்டது. இதற்கு நிவாரணம் கிடைக்கும் விதமாக நாம் செயல்படவேண்டும். மேலும் பெண்களுக்கு பாதுகாப்பும், தலித்துகளுக்கு நீதி கிடைப்பதையும் உறுதி செய்யவேண்டும்.

    நான் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் ஊழலை ஒழிப்பேன் என்று மோடி கூறினார். ஆனால் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ரூ.1.3 லட்சம் கோடி அளவிற்கு மக்களின் பணம் சுருட்டப்பட்டு உள்ளது. கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு பெரும் தொழில் அதிபரை காப்பாற்றுவதற்காக இந்த ஊழலில் மோடி அரசு ஈடுபட்டு இருக்கிறது.

    விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலையில் இருந்து 150 சதவீத லாபம் கிடைக்கச் செய்வோம் என்று மோடி உறுதி அளித்தார். ஆனால் அந்த வாக்குறுதியையும் அவர் நிறைவேற்றவில்லை.

    கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது மோடி, எனக்கு வாக்களியுங்கள் உங்களது சாதாரண வாழ்க்கைப் பயண ரெயிலை, மந்திர ரெயிலாக மாற்றி உங்கள் பயணம் சுகமாகவும், சிறப்பாகவும் அமைய பாடுபடுவேன் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் 4 ஆண்டுகளாகியும் இது நடக்கவில்லை. மாறாக ஒரு சர்வாதிகாரி போல் மாறி பேரழிவை நோக்கி இயக்கும் திறமையற்ற டிரைவராக மோடி திகழ்கிறார்.

    தனது மந்திர ரெயிலில் பயணம் செய்யும் மக்கள் மீது தனக்கு பொறுப்பு இருப்பதை அவர் கொஞ்சமும் உணரவில்லை. எனவே இனியும் மக்களை மோடி முட்டாளாக்க முடியாது. மக்கள் மாற்றத்தை ஏற்படுத்த தயாராகி விட்டார்கள்.

    ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பா.ஜனதாவும் ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டின் ஒவ்வொரு கட்டமைப்பும் குறி வைத்து தாக்கப்படுகிறது. அதை தடுக்கவேண்டும். நாட்டின் கட்டமைப்புகள் அனைத்தும் மக்களின் குரலாக இருக்கவேண்டும். அதற்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Modi #RahulGandhi #TrainDriver #tamilnews 
    ×