search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேய்களால் கட்டப்பட்ட கக்கன்மாத் கோவில்"

    • இந்திய நாட்டில் சில மர்மம் நிறைந்த பழங்கால இடங்களும் உண்டு.
    • ஒரே இரவில் பேய்களால் கட்டப்பட்டது.

    இந்தியாவில் ஏராளமான வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் மற்றும் கோவில்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கோவில்களும் ஒரு தனித்துவமான வரலாற்றையும் புராண கதைகளையும் கொண்டிருக்கும்.

    பல புராதன கோவில்களும் கோட்டைகளும் அடங்கிய இந்திய நாட்டில் சில மர்மம் நிறைந்த பழங்கால இடங்களும் உண்டு. அதில் ஒன்று தான் இந்த கக்கன்மாத் சிவன் கோவில். இந்த கோவில் ஒரே இரவில் பேய்களால் கட்டப்பட்டது என்று வரலாற்று கதைகள் கூறுகிறது. அதுவும் சிவ பெருமானே இந்த கோவில் பேய்களால் கட்டப்பட வேண்டும் என்று கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

    மத்திய பிரதேசத்தின் குவாலியர் நகரத்தில் இருந்து கிட்டத்தட்ட 65 கிமீ தொலைவில் உள்ள சிஹோனியாவில் அமைந்துள்ளது இந்த கக்கன்மாத் கோவில். சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில்களில் இதுவும் ஒன்றாகும். இது பேய்களால் கட்டப்பட்ட கோவில் என்று பலர் கூறுகின்றனர். அதுவும் ஒரே இரவில் பேய்களால் கட்டப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

    தரையில் இருந்து சுமார் 115 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கோவில் புனிதம் என்பதை விட, மர்மமான கோவில் என்று தான் உள்ளூர்வாசிகளால் கூறப்படுகிறது.

    பொதுவாக கோவில் என்றால் கற்களை ஒன்றோடு ஒன்று அடுக்கி சிமெண்ட் பூசி கட்டப்பட்டு இருக்கும். ஆனால் இந்த கோவில் சுண்ணாம்பு, சிமெண்ட் மற்றும் கலவை எதுவும் இல்லாமல், வெறும் கற்களை கொண்டே கட்டப்பட்டுள்ளது. இதுவும் பலருக்கு மர்மமாக தோன்றுகிறது.

    புராண கதைகளின்படி, இக்கோவில் கட்டுவதற்கு சிவபெருமான் பேய்களுக்கு ஆணையிட்டாராம். அதுவும் அடுத்த நாள் காலை விடிவதற்குள் தனக்கு ஒரு கோவில் கட்டவேண்டும் என்று கூறினாராம். பேய்களால் கற்களை கொண்டு அடுக்கி இந்த கோவில் கட்டப்பட்டது என்றும், கோவில் கட்டுமானம் முடிவதற்குள் விடிந்ததால் அப்படியே விட்டுவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.

    இன்னும் சிலர் கக்கன்மாத் கோவில் 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்றும், அந்த சமயத்தில் கச்வாஹா வம்சத்தின் கிர்த்தி மன்னன் தனது மனைவிக்காக கட்டப்பட்டதாகவும் நம்புகிறார்கள். மேலும் அவர் ஒரு சிவபெருமானின் பக்தர் என்றும் சுற்றி ஒரு சிவன் கோவில் கூட இல்லாததால், அவர் அதைக் கட்டினார் என்றும் பலரால் நம்பப்படுகிறது.

    இந்த கோவிலை விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததாகவும், அது எப்படி கட்டப்பட்டது என்பதை அறிய முடியவில்லை என்றும் பலர் நம்புகிறார்கள். இங்குள்ள பல சிலைகள் உடைந்த நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கோயில் மத்திய பிரதேசத்தின் அற்புதமான கோவிலாக கருதப்படுகிறது.

    இந்த கோவிலின் மையத்தில் ஒரு பிரமாண்டமான சிவலிங்கம் நிறுவப்பட்டுள்ளது. 120 அடி உயரமுள்ள இந்த கோவிலின் மேல் பகுதியும், கருவறையும் பல நூறு ஆண்டுகளுக்கு பிறகும் பாதுகாப்பாக உள்ளது. இதில் மற்றொரு அம்சம் என்னவென்றால், இந்த கோவிலை சுற்றியுள்ள அனைத்து கோவில்களும் உடைந்திருந்தாலும், கக்கன்மாத் கோவில் இன்றும் பாதுகாப்பாக உள்ளது.

    ×