search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரி"

    • ஜிப்மர் ஆஸ்பத்திரியில் தரமான சிகிச்சை அளிக்கப்படுவதால் தினந்தோறும் நோயாளிகள் இங்கு ஏராளமானோர் வருகிறார்கள்.
    • கருவி பொருத்தப்பட்டதும் தினந்தோறும் கூடுதலாக 100 புற்றுநோயாளிகளுக்கு கதிரியக்க சிகிச்சை அளிக்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் மத்திய அரசின் நிறுவனமான ஜிப்மர் ஆஸ்பத்திரி செயல்படுகிறது. இங்கு புதுச்சேரி மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    ஜிப்மர் ஆஸ்பத்திரியில் தரமான சிகிச்சை அளிக்கப்படுவதால் தினந்தோறும் நோயாளிகள் இங்கு ஏராளமானோர் வருகிறார்கள்.

    இதற்கிடையே புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஜிப்மர் ஆஸ்பத்திரியில் ஏற்கனவே அதிநவீன கதிரியக்க கருவி உள்ளது. ஆனால் நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் அவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிப்பதில் காலதாமதம் இருந்து வருகிறது.

    இதனை கருத்தில் கொண்டு ஜிப்மரில் புற்று நோயாளிகளுக்கு விரைந்து கதிரியக்க சிகிச்சை அளித்திடும் வகையில் ரூ.30 கோடியில் அதிநவீன கருவி வாங்க மத்திய சுகாதாரத்துறையிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.

    இந்த கருவி பொருத்தப்பட்டதும் தினந்தோறும் கூடுதலாக 100 புற்றுநோயாளிகளுக்கு கதிரியக்க சிகிச்சை அளிக்கப்படும். இதற்காக கூடுதல் டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் நியமிக்கவும் மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.

    • புதுவை ஜிப்மரில் நவீன கதிரியக்க சிகிச்சை கருவி அர்ப்பணிப்பு விழா நடந்தது.
    • தனது தாய்மொழியில் வரவேற்பு தெரிவித்த கவர்னருக்கு, ஜனாதிபதி பேசும்போது நன்றி தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மரில் நவீன கதிரியக்க சிகிச்சை கருவி அர்ப்பணிப்பு விழா நடந்தது.

    இந்த விழாவில் கவர்னர் தமிழிசை பேச அழைக்கப்பட்டார். அப்போது கவர்னர் தமிழிசை, அனைவருக்கும் தாய்மொழி என்றால் சிறப்பும், பெருமிதமும் இருக்கும்.

    புதுவைக்கு வந்துள்ள ஜனாதிபதியை அவரின் தாய்மொழியில் வரவேற்கிறேன் எனக்கூறி, பழங்குடியினர் மொழியில் ஜனாதிபதிக்கு வரவேற்பு தெரிவித்தார். தனது தாய்மொழியில் வரவேற்பு தெரிவித்த கவர்னருக்கு, ஜனாதிபதி பேசும்போது நன்றி தெரிவித்தார்.

    • உலகிற்கே ஜனாதிபதி முன்மாதிரியாக விளங்குகிறார்.
    • ஆதி சமூகத்தில் பிறந்து ஆதிக்க சமுதாயத்தில் இந்த பதவியை பெற அவர் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மரில் நடந்த விழாவில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:-

    பிரதமர் மோடியின் பெஸ்ட் புதுவையை பாஸ்ட் புதுவையாக மாற்றி வரும் முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு பாராட்டுகள். ஜிப்மர் நிர்வாக ரூ.17 கோடியில் நவீன கதிரியக்க சிகிச்சை கருவியை நிறுவியது பாராட்டுக்குரியது.

    துறை வேகமாக வளர்ந்து வருகிறது. உலகிற்கே ஜனாதிபதி முன்மாதிரியாக விளங்குகிறார். புதுவை ஆன்மிக மண். நாட்டின் முன்னேற்றம், சுதந்திரத்தில் புதுவைக்கும் பங்கு உண்டு.

    இந்த மண்ணுக்கு சிலர் வரும்போது சரித்திரமாகிறது. அரவிந்தர், பாரதியார் வந்தது சரித்திரமானது.

    அதேபோல ஜனாதிபதியின் வருகை புதுவை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள். பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வது என்ற பாரதியாரின் எழுத்துக்களை உண்மையாக்கும் வகையில் திரவுபதி முர்மு ஜனாதிபதியாகியுள்ளார்.

    ஆதி சமூகத்தில் பிறந்து ஆதிக்க சமுதாயத்தில் இந்த பதவியை பெற அவர் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளார். அவரை கண்டு இந்த உலகம் வியக்கிறது. பெண்மையின் பெருமையை உணர்த்தும் உருவமாக உள்ளார். பிரதமர் மோடி கண்டெடுத்த மாணிக்கம் நம் ஜனாதிபதி.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சர்வதேச யோகா விழா நடத்தி யோகாவை புதுவை ஊக்குவிக்கிறது.
    • சர்வதேச அளவில் புதுவை சமூக முன்னேற்றத்தில் முதலிடத்தில் உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மரில் நடந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியதாவது:-

    புதுவைக்கு வந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் தலைவர்களில் ஒருவரான அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெறும்போது இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது.

    புதுவையில் மணக்குள விநாயகர், திருக்காஞ்சி கோவில்களில் தரிசனம் செய்து கடவுள்களின் ஆசீர்வாதம் பெற திட்டமிட்டுள்ளேன். புதுவையின் ஆன்மிக அம்சங்களில் யோகாவும் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது.

    சர்வதேச யோகா விழா நடத்தி யோகாவை புதுவை ஊக்குவிக்கிறது. புதுவையில் வசித்தவர்கள் சுதந்திர போராட்டத்தின்போது இந்திய மக்களோடு சமமாக செயல்பட்டனர். புதுவை சிறந்த எழுத்தாளர்கள், சுதந்திர போராட்ட வீரர்களின் தாயகமாக திகழ்ந்துள்து. பாரதிதாசன் இங்கு பிறந்தவர்.

    மகாகவி பாரதியார் இங்கே வசித்து சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார். வி.வி.எஸ்.ஐயர் சிறந்த தமிழ் அறிஞர், சுதந்திர போராட்டத்தில் புதுவையில் தங்கி பங்கேற்றார். புதுவையின் அரசியல், சமூகவியல் அசாதாரணமானது.

    புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் என 4 பிராந்தியங்களையும், மொழி வேற்றுமையில் ஒற்றுமை என கலாச்சாரம், பாரம்பரியத்தை முன்னெடுத்துச்செல்கிறது.

    புதுவையின் கட்டிடக்கலை, திருவிழாக்கள், வாழ்க்கை முறை பல்வேறு தாக்கங்களை பிரதிபலிக்கிறது. பிரான்ஸ், இந்தியா இடையிலான நட்புறவின் வாழும் பாலமாக புதுவை விளங்குகிறது.

    சர்வதேச அளவில் புதுவை சமூக முன்னேற்றத்தில் முதலிடத்தில் உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. கல்வியறிவில் புதுவை முதலிடத்தில் உள்ளது பாராட்டுக்குரியது. புதுவைக்கு பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் கல்வி கற்க மேல்படிப்புக்காக வந்து செல்கின்றனர்.

    ஜிப்மர் அப்துல்கலாம் அரங்கில் நாம் உள்ளோம். அவரின் பங்களிப்புகளை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மருத்துவ நோக்கங்களுக்காக பாதுகாப்பு ஆராய்ச்சியை பயன்படுத்தும் முயற்சிகளை மருத்துவ மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • காரில் புறப்பட்டு கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வந்தார்.
    • வில்லியனூரில் 50 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் மருத்துவமனையை காணொளி மூலம் திறந்து வைத்தார்.

    புதுச்சேரி:

    ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக இன்று புதுவை வந்தார்.

    காலை 9.55 மணிக்கு சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு 10.35 மணிக்கு புதுவை லாஸ்பேட்டை விமான நிலையத்தை வந்தடைந்தார். அவரை கவர்னர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வரவேற்றனர்.

    அங்கிருந்து காரில் புறப்பட்டு கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வந்தார். அங்கு ரூ.17 கோடியில் புதிதாக வாங்கப்பட்டுள்ள புற்றுநோய்க்கான நவீன கதிர் வீச்சு சிகிச்சை எந்திரத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். இந்த விழாவிலேயே வில்லியனூரில் 50 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் மருத்துவமனையையும் காணொளி மூலம் திறந்து வைத்தார்.

    இதையடுத்து மதியம் 12.45 மணிக்கு கடற்கரை சாலையில் உள்ள நீதிபதிகள் விருந்தினர் மாளிகைக்கு வந்து மதிய உணவு சாப்பிட்டு தங்கி ஓய்வெடுத்தார்.

    இன்று மாலை 4 மணிக்கு புறப்பட்டு மணக்குள விநாயகர் கோவிலுக்கு சென்று ஜனாதிபதி சாமி தரிசனம் செய்கிறார். மாலை 4.40 மணிக்கு முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்துக்கு சென்று கலைநிகழ்வுகளை பார்க்கிறார்.

    மாலை 5.45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு திருக்காஞ்சி கஞ்கைவராக நதீஸ்வரர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார். 6.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, மீண்டும் விடுதிக்கு வந்து ஓய்வெடுக்கிறார். இரவு 8 மணிக்கு கவர்னர் மாளிகையில் ஜனாதிபதிக்கு பாரம்பரிய இரவு விருந்து அளிக்கப்படுகிறது.

    பின்னர் மீண்டும் விடுதிக்கு திரும்பி ஓய்வெடுக்கும் அவர் நாளை (செவ்வாய்கிழமை) காலை 6 முதல் 6.45 மணி வரை கடற்கரை சாலையில் நடைபயிற்சி மேற்கொள்கிறார். அவர் அமரும் வகையில் கல் மேடைகள் சிவப்பு வர்ணம் பூசப்பட்டுள்ளன.

    ஜனாதிபதி கடற்கரைப் பகுதிக்கு வருவதால் காலை 4 முதல் 7 வரை தினமும் வழக்கமாக நடைபயிற்சி மேற்கொள்வோருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காலை 9.15 முதல் 9.45 மணி வரை புதுவையின் முக்கிய பிரமுகர்களை அவர் சந்திக்கிறார்.

    10.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு அரவிந்தர் ஆசிரமம் சென்று தியானம் செய்கிறார். அங்கிருந்து 11.15 மணிக்கு காரில் ஆரோவில் மாத்ரி மந்திருக்கு சென்று பார்வையிடுகிறார். அங்கேயே மதிய உணவை முடித்துவிட்டு 2.45 முதல் 4 மணி வரை நடைபெறும் ஆரோவில் கண்காட்சி, கருத்தரங்கில் பங்கேற்கிறார்.

    பின்னர் 4 மணிக்கு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு காரில் லாஸ்பேட்டை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து 4.25 மணிக்கு ஹெலிகாப்டரில் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

    ஜனாதிபதி புதுவை வருகையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 750 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் 250 போக்குவரத்து போலீசாரும் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னை ஆவடி, நெய்வேலியில் இருந்து 200 துணை ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் புதுவை விமான நிலையம், ஜிப்மர், ஆசிரமம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×