search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழனி கோவில்"

    • விண்ணப்பதாரர்கள் அவர்களது குடும்பத்தினர் கோவிலுக்கு எதிராக புகாரோ, வழக்கோ பதிந்து இருக்கக் கூடாது.
    • காலி பணியிடங்களுக்கு 80 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    மதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

    திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி கோவிலில் 281 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை அறங்காவலர் குழு கடந்த மார்ச் மாதம் வெளியிட்டுள்ளது.

    இந்தப் பணியிடங்களில் ஆசிரியர்கள், நூலகர் அலுவலக உதவியாளர், சமையலர், கணினி பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர்கள், நாதஸ்வர வித்துவான், தவில் வித்வான், தாள கருவி இசைப்பவர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட 281 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

    இந்த அறிவிப்பாணையில் அரசு உள் இட ஒதுக்கீடு அறிவிப்பு இல்லை. மேலும் இந்த அறிவிப்பில் பல்வேறு விதிமீறல்கள் உள்ளன. எனவே இந்த அறிவிப்பாணையை ரத்து செய்து பொது அறிவிப்பாணையை உரிய விதிமுறைகளை பின்பற்றி புதிய அறிவிப்பாணை வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஸ்ரீமதி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. முடிவில் இந்த வழக்கு பொதுநல வழக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் மனுதாரர் வேலை கேட்டு விண்ணப்பிக்கவில்லை. இந்த அறிவிப்பினால் பாதிக்கப்படவும் இல்லை. ஆகையால் இந்த அறிவிப்பாணைக்கு தடை விதிக்க முடியாது.

    அதே நேரத்தில் விண்ணப்பதாரர்கள் அவர்களது குடும்பத்தினர் கோவிலுக்கு எதிராக புகாரோ, வழக்கோ பதிந்து இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் என்ற நிபந்தனை என்பது அடிப்படை உரிமை மீறலாகும்.

    இந்த நிபந்தனையை அறநிலையத்துறை கமிஷனர் நீக்கி உத்தரவிட வேண்டும். மேலும் இந்த காலி பணியிடங்களுக்கு 80 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே பணி நியமனங்களில் வெளிப்படை தன்மை வேண்டும் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

    • பழனியில் பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்துவதற்காக பக்தர்கள் குவிகின்றனர்.
    • மலைக்கோவிலில் கட்டண தரிசனத்திற்காக காத்திருக்கும் இடத்தில் நிழற்குடை இல்லை.

    பழனி:

    தமிழ்கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். வருடம் முழுவதும் திருவிழா கோலம் பூண்டிருக்கும். பழனியில் பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்துவதற்காக பக்தர்கள் குவிகின்றனர்.

    நேற்று சஷ்டியையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இன்று மாத கார்த்திகை என்பதாலும், விடுமுறை தினம் என்பதாலும் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் குவிந்தனர். இதனால் பஸ்நிலையம், அடிவாரம், கிரிவீதி, மலைக்கோவில், திருஆவினன்குடி, ரோப்கார், மின்இழுவை ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    மலைக்கோவிலில் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பகல்பொழுதில் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பழனிக்கு வரும் பக்தர்கள் வெயிலில் நீண்டநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக மலைக்கோவிலில் கட்டண தரிசனத்திற்காக காத்திருக்கும் இடத்தில் நிழற்குடை இல்லை. இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன் நீண்டநேரம் வெயிலிலேயே காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. சோர்வடையும் பக்தர்கள் கட்டண தரிசனத்திற்கு டிக்கெட் எடுத்தபோதும் இலவச தரிசன வரிசையில் நிழல் இருந்ததால் அந்த வழியாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    எனவே கோடைகாலம் தொடங்கியுள்ளநிலையில் மலைக்கோவிலில் பக்தர்கள் வசதிக்கு நிழற்குடை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த 3 நாட்களாக உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. முதல்நாள் காணிக்கைமூலம் ரூ.2கோடியை 44 லட்சத்து 23ஆயிரத்து 479 வருவாயாக கிடைத்தது.
    • 2-வது நாளாக எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கையில் ரூ.2கோடியே 65 லட்சத்து 57 ஆயிரம் கிடைத்தது.

    பழனி:

    முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி தண்டாயுதபாணிசுவாமி கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த கோவிலில் கடந்த மாதம் 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைதொடர்ந்து தைப்பூச திருவிழா 10 நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது.

    கும்பாபிஷேகத்திற்கு குறிப்பிட்ட அளவு பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது மண்டலபூஜைகள் நடந்து வருகின்றன. இதனால் தினந்தோறும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இவ்வாறு வரும் பக்தர்கள் அலகு குத்தியும், முடிகாணிக்கை செலுத்தியும், காவடி எடுத்தும் பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர்.

    மேலும் கோவில் உண்டியல்களில் பணம், தங்கம், வெள்ளிபொருட்களையும் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

    தைப்பூசதிருவிழா நிறைவடைந்த நிலையில் பழனி முருகன் கோவிலில் கடந்த 20-ந்தேதி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. கோவில் இணைஆணையர் நடராஜன் தலைமையில் துணை ஆணையர் பிரகாஷ் முன்னிலையில் நடந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் அலுவலர்கள், வங்கி அலுவலர்கள், பழனியாண்டவர் கல்லூரி பணியாளர்கள், மாணவ-மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கடந்த 3 நாட்களாக உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. முதல்நாள் காணிக்கைமூலம் ரூ.2கோடியை 44 லட்சத்து 23ஆயிரத்து 479 வருவாயாக கிடைத்தது. 2-வது நாளாக எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கையில் ரூ.2கோடியே 65 லட்சத்து 57 ஆயிரம் கிடைத்தது.

    3-ம் நாளாக நேற்று இரவு 10மணிவரை உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. 3 நாட்கள் உண்டியல் வருவாயாக ரூ.7கோடியே 17 லட்சத்து 42 ஆயிரத்து 126 கிடைத்துள்ளது. தங்கம் ஒருகிலோ 248கிராம், வெள்ளி 48கிலோ 377கிராம் ஆகியவை கிடைத்தது. சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 2529 காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

    பக்தர்கள் காணிக்கையாக தங்கம், வெள்ளியாலான வேல், மயில், திருமாங்கல்யம், காவடி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

    பழனி முருகன் கோவிலில் கடந்த 2019-ம் ஆண்டு தைப்பூச திருவிழா நடைபெற்றது. அதன்பிறகு கடந்த 2 வருடமாக திருவிழா குறிப்பிட்ட அளவு பக்தர்களுடன் மட்டுமே நடந்தது. கடந்த வருடமும் குறைந்த அளவு பக்தர்களே கலந்து கொண்டனர். இந்த வருடம் கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூச திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதன்மூலம் உண்டியல் வருவாய் ரூ.7 கோடிக்குமேல் கிடைத்துள்ளது. பழனி கோவில் உண்டியல் வருவாயில் இதுவரை கிடைத்த அதிக வருவாயாக இது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சண்முக நதி கரையோரம் இருக்கும் வேலை பார்த்தால் பக்தர்களுக்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்படும்.
    • அதிகாரிகள் வேலை இடையூறாக இருப்பதாக கூறி அகற்றியுள்ளனர்.

    பழனி:

    பழனி கோவில் தைப்பூசத்திருவிழாவுக்காக தற்போது பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனைத் தொடர்ந்து வேல் வழிபாட்டுக்குழுவினர் சார்பில் சண்முக நதிக்கரையோரம் பக்தர்கள் வழிபாட்டுக்காக 24 அடி உயர பிரம்மாண்ட வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக தைப்பூசத்திருவிழாவின் போது இந்த வேலை அவர்கள் வைத்து விட்டு திருவிழா நிறைவடைந்ததும் எடுத்துச் சென்று விடுவார்கள்.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் அந்த வேல் முன்பு நின்று செல்பி எடுத்தும், குழு புகைப்படம் எடுத்தும் செல்வார்கள். ஆனால் இந்த வேல் பக்தர்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி பழனி வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறையினர் ஆகியோர் இந்த வேலை அகற்றினர்.

    இதனால் பக்தர்கள் மற்றும் வேலை பிரதிஷ்டை செய்த வேல் வழிபாட்டுக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். பழனி நகரில் அரசியல் கட்சியினர் விளம்பர பேனர்கள் கட்டுப்பாடு இல்லாமல் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து யாரும் புகார் அளித்தாலும் அதனை அகற்ற நடவடிக்கை எடுப்பதில்லை. ஆனால் பழனி பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று அமைத்த வேல் வைப்பதால் எந்தவித இடையூறும் ஏற்படுவதில்லை.

    சண்முக நதி கரையோரம் இருக்கும் வேலை பார்த்தால் பக்தர்களுக்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்படும். ஆனால் அதிகாரிகள் இதனை இடையூறாக இருப்பதாக கூறி அகற்றியுள்ளனர். எனவே மீண்டும் அதே இடத்தில் வேல் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • திருவிழா காலங்களில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
    • தைப்பூசத்திருவிழா வருகிற 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகபெருமானின் 3-ம் படை வீடான பழனியில் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, நவராத்திரி என வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடந்து கொண்டே இருக்கிறது.

    திருவிழா காலங்களில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

    மேலும் வார விடுமுறை நாட்களில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருவதால் கூட்ட நெரிசல் அதிகரித்து வருகிறது. தைப்பூசத்திருவிழா வருகிற 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    தற்போதே மதுரை, தேனி, திருச்சி, திண்டுக்கல், காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வரத் தொடங்கி உள்ளனர். இதனால் நேற்று அடிவாரம், மலைக்கோவில், மின் இழுவை ரெயில் மற்றும் ரோப்கார் நிலையங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    சராசரியாக வருடத்துக்கு 1.20 கோடி பக்தர்கள் பழனி கோவிலுக்கு வருகின்றனர். நீண்ட நேரம் காத்திருக்கும் பக்தர்கள் சோர்வடையாமல் இருக்க கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே காத்திருக்கும் இடங்களில் மின் விசிறி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அர்த்தமண்டபம் அருகில் மட்டும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருந்தது. தற்போது பழனி கோவிலில் கும்பாபிஷேக பணிகள் நடந்து வருகிறது. கும்பாபிஷேகத்தின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். எனவே உட்பிரகாரத்தில் உள்ள தரிசன வரிசை முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. ரூ.24 லட்சம் மதிப்பில் லண்டனில் இருந்து பிரத்தியேகமாக குளிர்விக்கும் எந்திரம் வரவழைக்கப்பட்டு பொருத்தும் பணி தொடங்கியது. இதன் மூலம் கூட்ட நெரிசலிலும் பக்தர்களுக்கு புத்துணர்ச்சியான காற்று கிடைக்கும். இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • தமிழக அரசு சார்பில் பழனி முருகன் கோவில் நவபாஷாண பாதுகாப்புக்குழு அமைக்கப்பட்டிருந்தது.
    • ஓரிரு நாளில் மருந்து சாத்துதல் நிகழ்ச்சிக்கான அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பழனி:

    பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் வருகிற 27ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் கருவறையில் உள்ள மூலவரான நவபாஷாணத்தால் ஆன முருகன் சிலைக்கு மருந்து சாத்துதல் உள்ளிட்ட நிகழச்சிகள் நடைபெறாமல் உள்ளதால் இதுகுறித்து பக்தர்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டு வந்தது.

    ஏற்கனவே தமிழக அரசு சார்பில் பழனி முருகன் கோவில் நவபாஷாண பாதுகாப்புக்குழு அமைக்கப்பட்டிருந்தது. நீதிஅரசர் பொங்கியப்பன் தலைமையில் 11 பேர் கொண்ட குழுவினர் இதில் இடம்பெற்றுள்ளனர். எம்.எல்.ஏ. செந்தில்குமார், ஸ்தபதி உள்பட 11 பேர் கொண்ட குழு ஆலோசனைக்கூட்டம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து கும்பாபிஷேகத்திற்கு இன்னும் 2 வாரங்களே உள்ளதால் நவபாஷாண சிலைக்கு மருந்து சாத்தும் நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக பாதுகாப்புக்குழு நேற்று இரவு ஆய்வு மேற்கொண்டனர். சுமார் 2 மணிநேர ஆய்வுக்கு பிறகு குழுவின் ஆலோசனைக் கூட்டம் மலைக்கோவிலில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஓரிரு நாளில் மருந்து சாத்துதல் நிகழ்ச்சிக்கான அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பக்தர்கள் வருகை அதிகரிப்பால் நேற்று இரவு முதலே பஞ்சாமிர்தம் கிடைக்காத நிலை ஏற்பட்டது.
    • அனைத்து ஸ்டால்களிலும் பஞ்சாமிர்தம் தீர்ந்து விட்டதால் இதனை வாங்க வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலுக்கு தினந்தோறும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். தற்போது விடுமுறை என்பதாலும், சபரிமலை சீசன் என்பதாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    மேலும் வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகமும், 29-ந்தேதி தைப்பூச திருவிழாவிற்கான கொடியேற்றமும் நடைபெற உள்ளது. இதனால் அந்த சமயங்களில் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால் பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரையாகவும், வாகனங்கள் மூலமும் பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

    பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கண்டிப்பாக அங்குள்ள பிரசாதமான பஞ்சாமிர்தத்தை வாங்கிச்செல்வது வழக்கம். இதற்காக மலைக்கோவில் உள்பட பல்வேறு இடங்களில் பிரசாத ஸ்டால்கள் உள்ளன. பக்தர்கள் வருகை அதிகரிப்பால் நேற்று இரவு முதலே பஞ்சாமிர்தம் கிடைக்காத நிலை ஏற்பட்டது.

    அனைத்து ஸ்டால்களிலும் பஞ்சாமிர்தம் தீர்ந்து விட்டதால் இதனை வாங்க வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். ஓரிரு நாட்களில் பஞ்சாமிர்தம் தயாரித்து அனைத்து ஸ்டால்களிலும் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வரும் காலங்களில் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதால் அதற்கு முன்பாக தட்டுப்பாடின்றி பஞ்சாமிர்தம் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வேலவன் விடுதி வளாகத்தில் கோவில் மூலம் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவமனையையும் திறந்து வைத்தனர்.
    • ரோப் கார் கீழ்நிலையத்தில் பக்தர்களின் பயன்பாட்டிற்காக புதிய மின்கல மகிழுந்துகளையும் (பேட்டரிகார்) அமைச்சர்கள் வழங்கினார்கள்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு 16 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடத்திட திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற 27.01.2023 குடமுழுக்கு அன்று நடைபெறவுள்ளது.

    அதனையொட்டி இன்று நடைபெற்ற பந்தக்கால் நடும் விழாவில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு, வேலவன் விடுதி வளாகத்தில் கோவில் மூலம் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவமனையையும் திறந்து வைத்தனர்.

    அதனைத் தொடர்ந்து ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் மலைக்கோவில் ராஜ கோபுர கலசங்களுக்கு தங்க ரேக் ஒட்டும் பணிகள், ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் மலைக் கோவில் நீராழி பத்தி மண்டபத்தினைச் சுற்றிலும் தற்போதுள்ள இரும்பு மற்றும் எவர்சில்வர் கம்பிகளால் ஆன தடுப்புகள் மற்றும் மடக்கு கதவுகளுக்கு பதிலாக கோவில் அமைப்பிற்கேற்றவாறு, பித்தளையிலான தடுப்புகள் மற்றும் மடக்கு கதவுகள் அமைத்தல், ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் நீராழிபத்தி மண்டபத்திற்கும், மகா மண்டபத்திற்கும் இடையில் இரும்பிலான தடுப்பு வேலிகளை அகற்றி பித்தளை கம்பி வேலி அமைத்தல், ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் தங்க விமானத்தை சுற்றியுள்ள இரும்பினால் ஆன பாதுகாப்பு வேலியினை அகற்றி பித்தளையிலான பாதுகாப்பு வேலியினை அமைத்தல் ஆகிய திருப்பணிகளை தொடங்கி வைத்தனர்.

    ரோப் கார் கீழ்நிலையத்தில் பக்தர்களின் பயன்பாட்டிற்காக புதிய மின்கல மகிழுந்துகளையும் (பேட்டரிகார்) அமைச்சர்கள் வழங்கினார்கள்.

    • வியாபாரிகள் அனைவரும் இணை ஆணையர் லட்சுமியை முற்றுகையிட்டனர்.
    • சாலையோர வியாபாரி பூவாயி என்பவரை இணை ஆணையர் தாக்கியதாக கூறப்போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளை சமரசம் செய்ய முயன்றும் கேட்கவில்லை.

    பழனி:

    பழனி கோவிலுக்கு தற்போது சபரிமலை சீசனாக இருப்பதால் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்களுக்கு இடையூறாக அடிவாரம், கிரிவீதி, சன்னதிவீதி உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரக் கடைகள் அதிக அளவில் முளைத்து வருகின்றன.

    அவர்கள் கோவிலுக்கு வரும் பக்தர்களை மிரட்டி பல்வேறு பொருட்களை வாங்க வற்புறுத்துவதாக புகார் எழுந்து வந்தது. இதனையடுத்து அடிவாரம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்து வருகிறது. குறிப்பிட்ட எல்லைக்கு மேல் கடை வைத்திருப்பவர்களை கோவில் நிர்வாகம் சார்பில் அகற்றி அவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

    இன்று காலை ஆக்கிரமிப்பு அகற்றம் நடைபெற்றபோது கோவில் இணை ஆணையர் லட்சுமி பார்வையிட்டார். அவரிடம் ஆக்கிரமிப்பை அகற்ற விடாமல் வியாபாரிகள் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டனர். இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது சாலையோர வியாபாரி பூவாயி என்பவரை இணை ஆணையர் தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதனால் வியாபாரிகள் அனைவரும் இணை ஆணையர் லட்சுமியை முற்றுகையிட்டனர். அவரை போலீசார் பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இணை ஆணையர் தனது அலுவலகத்திற்கு வந்துவிட்ட போதிலும் வியாபாரிகள் அவரை பின்தொடர்ந்து வந்து அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவரிடம் கேட்டபோது தான் யாரையும் தாக்கவில்லை என்று விளக்கம் அளித்தார். இருந்தபோதிலும் பூவாயி என்பவர் கூறுகையில், தனது கழுத்தில் அணிந்திருந்த கயிரை பிடித்து இழுத்து இணை ஆணையர் கன்னத்தில் அறைந்ததாக கூறினார். இதனால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளை சமரசம் செய்ய முயன்றும் கேட்கவில்லை.

    இதனால் கோவில் இணை ஆணையர் அலுவலகத்தில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

    • படிப்பாதை, யானைப்பாதை வழியாகவும், ரோப்கார், மின் இழுவை ரெயில் மூலமாகவும் பக்தர்கள் கூட்டம் அலை மோதி வருகிறது.
    • பக்தர்கள் பசியோடு மலையேறும் போது அவர்களுக்கு களைப்பு தெரியாமல் இருக்க கோவில் நிர்வாகம் சார்பில் சுக்கு காபி இலவசமாக வழங்கப்படுகிறது.

    பழனி:

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தற்போது பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சபரிமலை சீசனாக உள்ளதால் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் அதிகாலையிலேயே வந்து விடுகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாது அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்படும் போது, பழனி முருகனை தரிசனம் செய்து செல்கின்றனர்.

    இதனால் படிப்பாதை, யானைப்பாதை வழியாகவும், ரோப்கார், மின் இழுவை ரெயில் மூலமாகவும் பக்தர்கள் கூட்டம் அலை மோதி வருகிறது. இவ்வாறு வரும் பக்தர்கள் பசியோடு மலையேறும் போது அவர்களுக்கு களைப்பு தெரியாமல் இருக்க கோவில் நிர்வாகம் சார்பில் சுக்கு காபி இலவசமாக வழங்கப்படுகிறது.

    இடும்பன் கோவில் அருகே காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை ஒருவருக்கு 100 மில்லி சுக்கு காபி வீதம் தினமும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளனர். பக்தர்கள் வருகை அதிகரிக்கும் சமயம் கூடுதலாக வழங்கப்படும் என்றும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஐயப்ப பக்தர்கள் மட்டுமின்றி விடுமுறை நாட்களில் வரும் பக்தர்களும் கூடியதால் சுமார் 3 மணிநேரம் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.
    • பழனியில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனியில் வருடம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் இருக்கும். கார்த்திகை மாதம் பிறந்தது முதல் பல்வேறு ஊர்களில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்கள் பழனி கோவிலுக்கு வருகை தந்தவண்ணம் உள்ளனர்.

    இதனால் இன்று காலை முதல் அடிவாரம், மலைக்கோவில், கிரிவீதி உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக ஐயப்ப பக்தர்கள் கூட்டமே அதிகளவில் தென்பட்டது. இவர்கள் மலைக்கோவிலில் நீண்டவரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    ஐயப்ப பக்தர்கள் மட்டுமின்றி விடுமுறை நாட்களில் வரும் பக்தர்களும் கூடியதால் சுமார் 3 மணிநேரம் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. ரோப்கார் நிலையம், மின்இழுவை ரெயில் நிலையம் பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சபரிமலையில் தற்போது பக்தர்கள் வருகை அதிகரித்து வரும் நிலையில் அங்கு தரிசனம் முடித்த பக்தர்கள் பெரும்பாலும் பழனிக்கு வருகின்றனர். இதனால் பழனியில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


    • மூலவர் சன்னதியில் உள்ள நவபாஷான சிலை குறித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு தகவல்கள் வெளியாகின.
    • எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மூலவர் சிலை ஆய்வுக்கு ஸ்தபதி குழுவினர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் 14 ஆண்டுகளுக்கு மேலாக கும்பாபிஷேகம் நடைபெறாததால் விரைந்து இப்பணியை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு இதற்கான பாலாயபணிகள் தொடங்கியது. ஆனால் அதன்பிறகு கொரோனா ஊரடங்கால் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    இதனால் கும்பாபிஷேகத்திற்கான பணிகளும் தொடங்காமல் இருந்தது. இதனைதொடர்ந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையிலான குழுவினர் கோவிலில் ஆய்வு செய்து பழனி முருகன் கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அறிவித்தார். இதனைதொடர்ந்து அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

    இதற்கான கும்பாபிஷேக குழுவும் அமைக்கப்பட்டது. மூலவர் சன்னதியில் உள்ள நவபாஷான சிலை குறித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு தகவல்கள் வெளியாகின. இந்த சிலை அமைத்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதனைதொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது வருகிற ஜனவரி 17-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து மலைக்கோவில் கருவறையில் உள்ள நவபாஷான சிலையை ஆய்வு செய்ய இன்று ஸ்தபதி தட்சிணாமூர்த்தி தலைமையிலான குழுவினர் வந்தனர். சிறப்பு பூஜைகளுக்கு பிறகு உள்ளே சென்ற அவர்கள் நவபாஷான சிலையின் எடை, உயரம் மற்றும் அதன் தன்மை குறித்து ஆய்வு செய்தனர்.

    15 ஆண்டுகளுக்கு பிறகு மூலவர் சிலை ஆய்வு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. ஆனால் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மூலவர் சிலை ஆய்வுக்கு ஸ்தபதி குழுவினர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    ×