search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயணம் ரத்து"

    மோசமான தட்பவெப்ப நிலையால் பிரியங்கா காந்தியின் இமாசல பிரதேச பயணம் ரத்து செய்யப்பட்டது.
    சிம்லா:

    இமாசல பிரதேச மாநிலத்தில் கடைசி கட்ட பாராளுமன்ற தேர்தல் 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி மாண்டி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆஷ்ரே சர்மாவை ஆதரித்து சுந்தர்நகர் பகுதியில் அக்கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் பிரியங்கா காந்தி தேர்தல் பிரசாரம் செய்ய நேற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இதேபோல் சிம்லா பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சாண்டிலை ஆதரித்து தியோங் என்ற இடத்திலும் பிரியங்கா காந்தி பிரசாரம் செய்ய இருந்தார்.

    ஆனால் மோசமான தட்பவெப்ப நிலையால் தரம்சாலா அருகே உள்ள ககல் விமான நிலையத்தில் பிரியங்கா காந்தியின் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து பிரியங்கா காந்தியின் இமாசல பிரதேச பயணம் நேற்று ரத்து செய்யப்பட்டது.

    இது குறித்து அக்கட்சியின் நிர்வாகிகள் கூறுகையில், தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க முடியாததால் தன்னை காண பொதுக்கூட்டத்துக்கு வந்திருந்த மக்களிடம் பிரியங்கா காந்தி மன்னிப்பு கேட்டுள்ளார். எனினும் அவர் சுந்தர்நகர் பகுதிக்கு மீண்டும் வந்து பிரசாரம் செய்வார் என தெரிவித்தனர்.

    டெல்டா மாவட்டங்களில் இன்று காலை முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பயணம் பாதியில் ரத்து செய்யப்பட்டது. #GajaCyclone #TNCM #Edapapdipalaniswami
    திருச்சி:

    ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட மச்சுவாடி, மாப்பிள்ளையார் குளம் ஆகிய பகுதிகளில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று காலை ஆய்வு பணியில் ஈடுபட்டனர். பின்னர் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினர்.

    இதைத்தொடர்ந்து முதல்வர் , துணை முதல்வர் மற்றும் அதிகாரிகள் ஹெலிகாப்டர் மூலம் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு சென்றனர். பட்டுக்கோட்டை சூரப்பள்ளம் பகுதி அருகே உள்ள மைதானத்தில் முதல்வர் வந்த ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது.


    பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்ற முதல்வர், சூரப்பள்ளம் பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார். இதையடுத்து திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட செல்ல இருந்தார்.

    இந்தநிலையில் டெல்டா மாவட்டங்களில் இன்று காலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டரை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. எனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் புயல் சேத ஆய்வு பணி பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.

    இதையடுத்து முதல்வர் மற்றும் அதிகாரிகள் பட்டுக்கோட்டையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு வந்திறங்கினர். பின்னர் அங்கிருந்து திருச்சி அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றனர். அங்கு சென்றதும் அதிகாரிகளுடன் புயல் நிவாரண பணிகள் குறித்து முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.

    இதையடுத்து இன்று பிற்பகலிலோ அல்லது மாலையோ எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் சென்னை திரும்ப உள்ளார் என கூறப்படுகிறது.

    இதற்கிடையே மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, நாகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேறு ஒரு நாளில் புயல் சேதங்களை ஆய்வு செய்வார் என தெரிவித்துள்ளார்.  #GajaCyclone #TNCM #Edapapdipalaniswami
    திருச்சியில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் ஏசி இயந்திரம் பழுதடைந்ததால் கடைசி நேரத்தில் பயணம் ரத்து செய்யப்பட்டது. #JetAirways #FlightCancelled #TrichyAirport
    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை சிங்கப்பூருக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. விமானத்தில் 115 பயணிகள் அமர்ந்திருந்தனர். புறப்படும் சமயத்தில், விமானத்தின் ஏசி எந்திரம் பழுதடைந்திருப்பதை விமானி கண்டறிந்தார்.



    இதையடுத்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே பயணம் ரத்து செய்யப்பட்டது.  பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். உரிய நேரத்தில் பழுது கண்டறியப்பட்டதால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

    இதேபோல் கடந்த மாதம் மும்பையில் இருந்து ஜெய்ப்பூர் சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானத்தினுள் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக பயணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது. கேபின் காற்றழுத்தம் குறைந்ததால் சுமார் 30 பயணிகளுக்கு மூக்கிலும் காதிலும் ரத்தம் வழிந்தது. இதனால் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே திரும்பி வந்து மும்பையில் தரையிறங்கியது. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. #JetAirways #FlightCancelled #TrichyAirport

    ×