search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெபமே ஜெயம்"

    • மனந்திரும்பி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று இயேசு விரும்புகிறார்.
    • தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான்

    "மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது" (மத்தேயு 4:17).

    ஒரு காலத்தில் இயற்கையின் அழகை கண்டு ரசித்து வாழ்ந்த மனிதர்கள், இன்று இயற்கையின் அழிவைக் கண்டு கலக்கம் அடைகின்றனர். சிறிது சிறிதாக பூமி தன்நிலை இழந்து மனிதர்கள் வாழத் தகுதியில்லாத சூழ்நிலை வந்து விடுமோ என்ற அச்சம் ஏற்படக்கூடிய காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    எப்படிப்பட்ட சூழ்நிலையில் மனிதர்கள் வாழ்ந்தாலும், நாம் வாழ்வதற்கு தகுதியான இன்னொரு இடம் உண்டு. ஒருநாள் அனைவரும் அங்கு ஒன்றுகூடி வாழ்வோம் என்ற எதிர்பார்ப்பு எல்லா மனிதர்களுக்குள்ளும் உள்ளது. அவ்விடம் பரலோகம், மோட்சம், சொர்க்கம் என பல பெயர்களில் பலராலும் அறியப்படுகிறது.

    பரிசுத்த வேதாகமம் 'பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது' என்று கூறுகிறது. அதாவது பரலோக ராஜ்ஜியம் அருகில் இருக்கிறது அல்லது நமக்கு நெருங்கிய தூரத்தில் உள்ளது. இது குறுகிய காலத்தைக் காட்டுகிறது. எனவே சீக்கிரம் தாமதிக்காமல் மனந்திரும்ப வேண்டும் என்று எச்சரிக்கிறது.

    'நீதிமான்களை அல்ல, பாவிகளையே மனந்திரும்புவதற்கு அழைக்க வந்தேன்' (மத்தேயு 9:13) என்று இயேசு கூறுகிறார்.

    இந்த உலகில் துன்மார்க்கமாக வாழ்கிறவர்களை யாரும் விரும்புவது இல்லை. பொதுவாக எல்லா மனிதர்களுமே நல்லவர்களாக, நற்குணங் களோடு, சமுதாயத்தில் மிகுந்த மதிப்போடு, உயர்ந்த நிலையில் இருப்பவர்களையே விரும்புவர். ஆனால் இயேசு மட்டுமே பாவிகளை தேடி இந்த உலகிற்கு வந்தார். ஏனென்றால் அவர் பாவிகளையும் நேசிக்கிறார்.

    சிலர் தங்கள் வாழ்வில் ஏதாவது ஒரு தேவைக்காக காத்திருந்து அது நிறைவேறாது போகும்போது அந்த விரக்தியினால் ஏற்படும் கவலை, பயம் போன்ற உணர்வுகளோடு வாழ்கின்றனர். சிலர் அதில் இருந்து விடுபட வழி தெரியாமல் தவறான பாதையில் செல்கின்றனர். சிலர் மதுவுக்கும், மாதுக்கும் அடிமையாகி விடுகின்றனர்.

    ஆரம்பத்தில் சிறியதாக தோன்றிய பாவங்கள், பின்னர் அதில் இருந்து விடுபட நினைத்தாலும் முடியாதபடி அவர்களை அடிமைப்படுத்தி விடுகிறது. `பாவத்தில் இருந்து விடுபட்டு வெளியே வர நினைக்கிறேன், என்னால் முடியவில்லை' என்று பலர் கூறுவதை கேட்கலாம். இப்படிப்பட்டவர்கள் மனந்திரும்பி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று இயேசு விரும்புகிறார்.

    பாவிகள் தங்களுடைய பாவத்திலேயே வாழ்வது அவருக்கு விருப்பம் அல்ல. அவர்கள் மனம் திரும்பி வாழ வேண்டும். மனிதன் தன் சுய முயற்சியால் பாவத்தில் இருந்து விடுபட முடியாது. ஆனால் இயேசுவிடம், 'இயேசுவே நான் பாவம் செய்யாமல் வாழ விரும்புகிறேன் எனக்கு உதவி செய்யும்' என்று அவரை அழைத்தால் அவர் நிச்சயமாக உதவி செய்வார்.

    'மனம் திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்'. (எசேக்கியேல் 18:32).

    'தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்' (நீதிமொழிகள் 28:13) என வேதம் கூறுகிறது. ஆனால் யாரிடம் அறிக்கையிட்டு மனந்திரும்ப வேண்டும்?

    'நீர் சர்வ வல்லவரிடத்தில் மனம் திரும்பினால் திரும்ப கட்டப்படுவீர்' (யோபு 22:23) என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது.

    நாம் யாரிடம் நம்முடைய பாவங்களை சொல்லுகிறோம்? யாரிடம் மனந்திரும்புகிறோம்?

    நம்மில் சிலர் பாவத்திற்கு பரிகாரம் என்று புண்ணிய தலங்களுக்கு செல்வதும், தன்னை வருத்திக்கொள்வதும் உண்டு. பாவ பழக்கங்களால் இடிக்கப்பட்டு பழையதாகி போனது போன்ற நிலைமையில்உள்ள ஒருவருடைய வாழ்க்கையை திரும்ப கட்டப்பட வேண்டும் என்றால், சர்வ வல்லவராகிய இயேசு கிறிஸ்துவிடம் தன்னுடைய பாவங்களை அறிக்கை செய்து மனம் திரும்ப வேண்டும்.

    அப்பொழுது அவனுக்கு கர்த்தருடைய கண்களில் இரக்கம் கிடைக்கும். தான் இழந்து போன தொழில், நிலம், செல்வம், சரீர சுகம் போன்ற உலக ஆசீர்வாதங்கள் மட்டுமல்லாது, அவனது ஆத்துமா மரணத்துக்கு நீங்கலாக்கி கர்த்தருடைய இரக்கத்தால் பாதுகாக்கப்படும்.

    நம்முடைய மனம் குற்றமில்லாது இருக்க வேண்டும். 'மனுஷனுடைய இதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபச்சாரங்களும், வேசித்தனங்களும், கொலை பாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்ட தனங்களும், கபடும், காம விகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதுகேடும் புறப்பட்டு வரும். பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனை தீட்டுப்படுத்தும்' (மாற்கு 7:21-22) என்று இயேசு கூறினார்.

    இப்படியான பாவங்கள் நம் இதயத்துக்குள் இருந்து புறப்பட்டு நம்மை தீட்டுபடுத்தாதபடிக்கு நம்மை காத்துக் கொள்ள வேண்டும். கிறிஸ்து இயேசுவில் இருந்த சிந்தையே நம்மிலும் இருக்க வேண்டும் (பிலிப்பியர் 2:5).

    நீங்கள் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். உங்களுடைய துக்கம் சந்தோஷமாக மாறவேண்டும். பரலோக வாழ்க்கையைக் குறித்த உணர்வு வேண்டும் என்பதே கர்த்தருடைய விருப்பம்.

    எனவே நாம் சர்வ வல்லவராகிய நம்முடைய கர்த்தரிடத்தில் மனந்திரும்பி சகல ஆசிர்வாதங்களையும் பெற்றுக்கொள்வோம்.

    • பரலோகத்தையோ கடவுளையோ நேரில் பார்த்தவர்கள் வெகு சிலரே.
    • கடவுளின் தண்டனையாக குஷ்டரோகியாகவே மரித்தார் உசியா.

    மோட்சம் அல்லது பரலோகமென்று குறிக்கப்படும் கடவுளிருக்கும் இடத்தைப் பற்றி வேதத்தில் அநேக குறிப்புகள் இருந்தாலும், பரலோகத்தையோ கடவுளையோ நேரில் பார்த்தவர்கள் வெகு சிலரே. அதில் குறிப்பிடும்படியான ஒருவர் - ஏசாயா என்னும் இறைவாக்கினர்.

    உசியா என்னும் யூதாவின் அரசன் மரித்த ஆண்டில் நடைபெற்றதாக ஏசாயா - 6-ம் அதிகாரத்தில் விவரிக்கப்படும் இச்சம்பவம், பரலோகத்தில் வீற்றிருக்கும் இறைவனின் சிறப்புகளை, குணாதிசயங்களை மிக அழகாக படம்பிடித்துக் காட்டுகிறது எனலாம்.

    தன்னுடைய பதினாறாம் வயதில் யூதாவின் அரசனாக முடிசூட்டப்பட்டு ஐம்பத்திரண்டு ஆண்டுகள் அரசாண்ட உசியா மன்னன் - யூதாவின் சிறந்த மன்னர்களில் ஒருவர். தன்னுடைய இளவயதில் கடவுளுக்குக் கீழ்படிந்து வாழ்ந்த உசியா மன்னன், கடவுளின் துணையுடன் எதிரிகளை வீழ்த்தினார்.

    யூதாவின் தலைநகரமாகிய எருசலேமை சுற்றியிருந்த மதில்களை பலப்படுத்தி, அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்தினார். மக்களுக்காக குளங்களை வெட்டினார். இப்படி சிறப்புடன் வாழ்ந்த உசியா மன்னன் வலிமை மிக்கவன் ஆனபோது, தான் அழிவுறும் அளவுக்கு ஆணவம் கொண்டான்.

    கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட ஆசாரியர்கள் மட்டுமே செல்லலாம் என்னும் பரிசுத்த தலத்திற்குள் சென்று தூபம் காட்ட முற்பட்டான். ஆசாரியர்கள் அவரைத் தடுக்க முயன்றனர். ஆனால் உசியாவோ, அவர்கள் மேல் கோபங்கொண்டார். அப்படி அவர் ஆசாரியர்களிடம் கோபமாய்ப் பேசுகிறபோது, ஆசாரியர்களுக்கு முன்பாகவே குஷ்டரோகியானார். கடவுளின் தண்டனையாக குஷ்டரோகியாகவே மரித்தார் உசியா.

    இனி இந்த நாட்டை ஆளப்போவது யார்? மன்னரையே குஷ்டரோகியாக்கும் வல்லமை படைத்த கடவுள் யார்? என்னும் கேள்விகளோடு இறைவாக்கினர் ஏசாயா ஆலயத்திற்கு வந்தபோது `ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தில் வீற்றிருக்கிறதையும், அவரது வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருக்கிறதையும், சேராபீன்கள் என்னும் தூதர்கள் பறந்த வண்ணம் `சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது' என்று ஒருவரையொருவர் கூப்பிட்டுச் சொல்லிக்கொண்டிருக்கிறதையும். கூப்பிடுகிறவர்களின் சத்தத்தால் வாசல்களின் நிலைகள் அசைந்து ஆலயம் புகையினால் நிறைந்திருக்கிறதையும் (ஏசாயா 6: 1-4) காண்கிறார்'.

    இங்கே கடவுளின் குணாதிசயங்களாக நாம் காண்பது, கடவுளின் மாட்சிமை, கடவுளின் பரிசுத்தம், கடவுளின் மகிமை. இதைப் பார்த்த அடுத்த கணமே, தன் உள்ளத்தில் குத்தப்பட்டவராய், இத்தகைய கடவுள் முன் நிற்பதற்கு கூட தனக்கு தகுதியில்லை என்றுணர்ந்து 'ஐயோ, நான் அதமானேன், நான் அசுத்த உதடுகள் உள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன். சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே' என்றார்.

    உடனே சேராபீன்களில் ஒருவன் ஒரு நெருப்புத்தழலை எடுத்து, ஏசாய விடத்தில் பறந்து வந்து, அதினால் அவர் வாயைத் தொட்டு: `இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவர்த்தியானது' என்றான்.

    இப்படியாக தன்னுடைய பாவங்களிலிருந்து விடுதலை பெற்ற ஏசாயா தான், இந்த உலகத்திலுள்ள மக்களின் பாவங்களை மன்னிப்பதற்காக இம்மானுவேல் பிறப்பார் என்றும் (ஏசாயா 7:14), அவர் பாடனுபவிப்பவராய், மனிதரால் புறக்கணிக்கப்பட்டவராய், அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, மரிப்பாரென்றும் முன்னறிவித்தார் (ஏசாயா 53).

    அந்தபடியே, கடவுளுக்கு சமமாயிருந்த இறைமகன் இயேசு (பிலிப்பியர் 2:6), உலகத்தாரின் பாவங்களை மன்னிப்பதற்காக மனிதனாய், இம்மானுவேலாய் (மத்தேயு 1:22,23) இந்த உலகில் பிறந்தார். ஒடுக்கப்பட்டோர், கை விடப்பட்டோர் மற்றும் பாவி களின் நண்பனாய் இந்த உலகில் சுற்றித்திரிந்தார். கடவுளின் சித்தப்படியே சிலுவையில் மரிக்கவும் தன்னை ஒப்புக்கொடுத்தார்.

    இன்று இறைமகனார் இயேசு நம் பாவங்களுக்காக சிலுவையில் மரித்ததை நினைவுகூரும் புனித வெள்ளி சிலுவைக் காட்சியை நம் மனக்கண்முன் கொண்டுவருவோம்.

    உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தில் கடவுளின் அருகிலிருந்த இயேசு, இப்பொழுது உயரமான மலையில், சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கிறார். அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிரம்பிற்று என்றிருந்தவர், இப்பொழுது, வஸ்திரமில்லாமல், அவருடைய அங்கியையும் போர்வீரர்கள் சீட்டுப் போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தவண்ணமிருக்கிறார்.

    தூதர்களால் சூழப்பட்டிருந்தவர், இப்பொழுது கள்வர்கள் நடுவில் அறையப்பட்டிருக்கிறார். பரிசுத்தர், பரிசுத்தர் என்று போற்றப்பெற்றவர், சுற்றி நின்ற மக்களின் கேலிப் பேச்சுகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

    ஆம், 'தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்' (யோவான் 3:16) என்று சொல்லியிருக்கிறபடி, பாவிகளான நம்மேல் கடவுள் கொண்ட அன்பைக் காட்டும்படியாக, தன்னுடைய மாட்சிமை, தன்னுடைய பரிசுத்தம், தன்னுடைய மகிமை அனைத்தையும் துறந்தார்.

    இந்த சிலுவைக் காட்சியை பார்க்கும் நாம், அன்று ஏசாயா தன்னுடைய பிழைகளை உணர்ந்து, அதை அறிக்கை செய்து, சுத்தமானது போல், நம்முடைய பாவங்களை உணருவோம், அவர் தரும் மன்னிப்பைப் பெற்றுக்கொள்வோம், அவரின் அன்பை இந்த உலகிற்கு பறைசாற்றுவோம்.

    • எல்லாவற்றிலும் இயேசு நமக்கு ஆறுதல் அளிக்க வல்லவராய் இருக்கிறார்.
    • இஸ்ரவேலின் மிகப்பெரிய ராஜாவான தாவீது ராஜா பிறந்தார்.

    அன்பானவர்களே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நம்பி கீழ்ப்படிந்து அவரிடம் நாம் சரணடையும் போது நமக்கு ஆறுதல் தரும் தேவனாக அவர் இருக்கிறார்.

    சிலநேரங்களில் நாம் பயணிக்கும் சூழ்நிலைகளில் போராட்டம் இருக்கும், வேதனைகள், கண்ணீர், கஷ்டங்கள் இருக்கும். ஆனாலும் இயேசுவை நம்பி பயணத்தை தொடரும் பொழுது, நிச்சயமாக நாம் கண்ணீர் விடும் காரியங்களில், வேதனைப்படும் காரியங்களில், பயப்படும் காரியங்களில் எல்லாவற்றிலும் இயேசு நமக்கு ஆறுதல் அளிக்க வல்லவராய் இருக்கிறார்.

    வேதாகமத்தில் ரூத் என்ற குணசாலியான பெண்மணி பற்றி கூறப்பட்டுள்ளது. இவள் மோவாப் என்ற தேசத்தில் தன் கணவன் மற்றும் மாமியாருடன் நன்றாக வாழ்ந்து வருகிறாள். இவளுடைய கணவர் திடீரென மரித்துப்போனார். இவளுடைய மாமியார் பெயர் நகோமி ஆகும். இந்த நகோமிக்கும் கணவர் இல்லை.

    நகோமி தன்னுடைய மகன் இறந்ததும் தன் மருமகளை பார்த்து 'நீ உன் தாய் வீட்டுக்கு சென்று விடு, அங்கு கர்த்தர் உனக்குத் தரும் புருஷனுடன் சுகமாய் வாழ்ந்திரு' என்று சொல்லி மருமகளை வாழ்த்தி முத்தமிட்டாள்.

    அப்பொழுது ரூத் சத்தமிட்டு அழுது அவளைப்பார்த்து 'உன் கூடவே நானும் வருவேன்' என்றாள். `நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன், நீர் தங்குமிடத்திலே நானும் தங்குவேன், உம்முடைய தேவன் என்னுடைய தேவன், மரணமே அல்லாமல் வேறொன்றும் உம்மைவிட்டு என்னை பிரிக்காது', என்று கூறி மாமியாருடன் செல்வதில் மன உறுதியாய் இருந்தாள்.

    பின்னர் இருவரும் இஸ்ரவேல் தேசத்தில் உள்ள நகோமியின் சொந்த ஊரான பெத்லகேமுக்கு வந்தார்கள். நகோமியைப் பார்த்த பெத்லேகம் ஊர் மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியுடன் பேசினார்கள். நகோமி அவர்களிடம், `நான் நிறைவுள்ளவளாக இங்கிருந்து போனேன். கர்த்தர் என்னை வெறுமையாய் திரும்பி வரப்பண்ணினார். சர்வ வல்லவர் எனக்கு மிகுந்த கசப்பை கட்டளையிட்டார். கர்த்தர் என்னை சிறுமைப்படுத்தினார்', என்று மிகுந்த வேதனையுடன் அவர்களிடம் தனக்கு நடந்ததை எல்லாம் கூறினாள்.

    அதன்பின்னர் ரூத் பிழைப்பிற்காக தோட்டத்தில் வேலை செய்வதற்கு சென்றாள். அவள் வேலை செய்யச் சென்ற வயல்வெளி போவாஸ் என்பவருடையது. இவர் நகோமியின் உறவுக்காரர். போவாஸ் ரூத்தைப் பார்த்து தன் தோட்ட மேலாளரிடம் 'இந்தபெண் எந்த இடத்தைச் சார்ந்தவள்' என்று கேட்டான்? அதற்கு அவன்' இவள் மோவாப் தேசத்தில் இருந்து நகோமி கூட வந்த மோவாபிய தேசத்துப்பெண்' என்று கூறி அவளுடைய எல்லா விவரத்தையும் தெரிவித்தான்.

    போவாஸ் ரூத்தைப் பார்த்து, `மகளே நீ வேறு வயலில் வேலைக்குப் போகாமலும், இந்த இடத்தை விட்டு போகாமலும், இங்கேயே என் ஊழியக்கார பெண்களோடு இருந்து வேலை செய். ஒருவரும் உனக்கு தீங்கிழைக்காதபடி வேலைக்காரருக்கு கட்டளையிட்டு இருக்கிறேன்' என்றார்.

    அப்பொழுது ரூத் தரையிலே முகம் குப்புற விழுந்து வணங்கி 'நான் அந்நிய தேசத்தவளாயிருக்க நீர் என்னை விசாரிக்கும்படி, எனக்கு எதனால் உம்முடைய கண்களில் தயை கிடைத்தது' என்றாள்.

    அதற்கு போவாஸ் `உன் புருஷன் மரணம் அடைந்தபின்பு நீ உன் மாமியாருக்காக செய்ததும், நீ உன் தகப்பனையும், உன் தாயையும், உன் சொந்த தேசத்தையும் விட்டு முன்பின் அறியாத ஜனங்கள் இடத்தில் வந்தது எல்லாம் எனக்கு விவரமாய் தெரிவிக்கப்பட்டது. உன் செய்கைக்கு தக்க பலனை கர்த்தர் உனக்கு கட்டளை இடுவார். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின் கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக' என்றார்.

    பின்னர், போவாஸ் தன்னுடைய வாழ்க்கைத்துணையாக இந்த குணசாலியான ரூத்தைத் தெரிந்து கொண்டார். இவர்களுடைய வம்சத்தில் தான் இஸ்ரவேலின் மிகப்பெரிய ராஜாவான தாவீது ராஜா பிறந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக இந்த வம்சத்தில் தான் இயேசு கிறிஸ்துவும் இந்த உலகத்தில் பிறந்தார். என்ன ஒரு ஆனந்தம் பாருங்கள்.

    பிரியமானவர்களே, இந்த வேதாகம சம்பவத்தில் ஏராளமான காரியங்களை நாம் பார்க்கிறோம். மாமியாரிடம் உண்மையான அன்பு வைத்துள்ள மருமகள், மருமகளிடம் உண்மையான அன்பு வைத்துள்ள மாமியார். இவர்கள் இருவருடைய வாழ்க்கையிலும் நடந்துள்ள கசப்பான, கண்ணீர் சிந்தும் அனுபவங்கள். இவை எல்லாவற்றிலும் இருந்து கர்த்தர் இவர்களுடைய வாழ்க்கையை மீண்டும் கட்டி, மகிழ்ச்சியடைய பண்ணுகிறார்.

    இது போலத்தான் நம்முடைய வாழ்விலும் நமக்கு வருகின்ற வேதனைகள், கண்ணீர்கள், இழப்புகள் எல்லாவற்றிற்கும் பதிலாக நித்திய பேரின்ப மகிழ்ச்சி அளிக்க இயேசு வல்லவராய் இருக்கிறார். நம்முடைய துன்பத்துக்கும், அலைச்சல்களுக்கும், கண்ணீர்களுக்கும், சிறுமைப்பட்ட நாட்களுக்கும் சரியாய் நம்மை மகிழ்ச்சியாக இருக்கச்செய்வார், ஆமென்.

    • கர்த்தருடைய வல்லமையான தீர்க்கதரிசி ஒருவர் இருந்தார்.
    • உலர்ந்த எலும்புகள் உயிர் பெறும் தரிசனம் காட்டப்பட்டது.

    அன்பானவர்களே, வேதாகமத்தில் எசேக்கியேல் என்ற கர்த்தருடைய வல்லமையான தீர்க்கதரிசி ஒருவர் இருந்தார். கர்த்தர் ஒருநாள் தரிசனத்தில் எசேக்கியேலை ஒரு சமவெளி நிலத்தில் கொண்டுபோய் விட்டார். அந்த சமவெளி முழுவதும் எலும்புகளாகக் கிடந்தன.

    அந்த தரிசனத்தின் அர்த்தத்தை முழுமையாகப் புரிந்து கொள்வதற்காக, சிதறிக்கிடந்த `அந்த எலும்புகளைச் சுற்றி நடக்கும்படி' எசேக்கியேலிடம் கர்த்தர் சொன்னார்.

    அவர் அப்படி நடந்தபோது, இரண்டு விஷயங்கள் அவருக்குப் பளிச்சென்று தெரிந்தன. ஒன்று, அந்த எலும்புகளின் எண்ணிக்கை; மற்றொன்று, அவற்றின் நிலைமை. அவை, "ஏராளமாக" இருப்பதையும் 'மிகவும் காய்ந்து போய்' கிடப்பதையும் அவர் பார்த்தார்.

    பிறகு, அந்த எலும்புகளைப் படிப்படியாக உயிர் பெற வைக்கும் இரண்டு கட்டளைகளை எசேக்கியேலுக்கு கர்த்தர் கொடுத்தார். இந்த எலும்புகள் யாவும் யுத்தத்தில் கொல்லப்பட்ட வீரர்களின் எலும்புகள். அந்த திரளான எலும்புகளைப் பார்த்து `உயிர் அடையுங்கள்' என்று சொல், என்பதுதான் முதல் கட்டளை.

    எசேக்கியேல் தீர்க்க தரிசனம் சொன்னதுமே, "எலும்புகள் ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்ளும் சத்தம் கேட்டது. அவை ஒன்றோடு ஒன்று இணைந்தன. அதன் பிறகு தசை நாண்களும், சதைகளும் அவற்றை மூடின. வெளிப்புறமாக தோல் அவற்றைப் போர்த்தியது, அந்த உடல்கள் மேல் வீசும்படி, ஆவியைப் பார்த்துத் தீர்க்க தரிசனம் சொல்" என்பது தான் இரண்டாவது கட்டளை.

    எசேக்கியேல் அப்படிச் சொன்னதும், காற்று நான்கு திசைகளில் இருந்து வந்து, மாண்ட இவர்கள் மீண்டும் உயிரடையும் படிக்கு, இவர்கள் உடம்பில் பிரவேசித்தது. அப்பொழுது ஆவி அவர்களுக்குள் பிரவேசிக்க, அவர்கள் உயிரடைந்து, காலூன்றி, மகா பெரிய சேனையாய் நின்றார்கள்.

    இந்த தரிசனம் நடக்கும் போது இஸ்ரேல் மக்கள் சிறைப்பிடிக்கப்பட்டு பாபிலோனில் இருந்தார்கள். `எருசலேம் அழிக்கப்பட்டு விட்டது' என்ற செய்தியை கேட்ட போது அவர்கள் நம்பிக்கையற்று, பெலனிழந்து, கடுமையான சோர்வுடன் காணப்பட்டார்கள். "எங்களுடைய எலும்புகள் காய்ந்து உலர்ந்து விட்டன, எங்களுக்கு நம்பிக்கையற்று விட்டது' என்று புலம்பினார்கள்.

    ஆனால், அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதற்காக கர்த்தர் ஒரு செய்தியைச் சொன்னார். காய்ந்து போன எலும்புகள் பற்றிய இந்த தரிசனத்தில் அந்த நம்பிக்கையூட்டும் செய்தி அடங்கியிருந்தது. சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரவேலர்களுக்கு மீண்டும் பெலன், நம்பிக்கை கொடுப்பதாக கர்த்தர் உறுதி அளித்தார்.

    அவர்களைத் திரும்பவும் எருசலேமுக்கு கொண்டுவந்து, அங்கே வாழ வைப்பதாக அவர் வாக்களித்தார். சோர்ந்து போயிருந்த மக்களுக்கு அந்த வார்த்தைகள் எவ்வளவு பெரிய தெம்பளித்திருக்கும்!

    "என் ஆவியை உங்களுக்குள் வைப்பேன், நீங்கள் உயிரடைவீர்கள். நான் உங்களை உங்கள் தேசத்தில் வைப்பேன், அப்பொழுது நான் கர்த்தர் என்று நீங்கள் அறிந்து கொள்வீர்கள். இதைச் சொன்னேன், இதைச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று இஸ்ரவேல் மக்களிடம் சொல்" என்றார். "கர்த்தராகிய நானே இதைச் சொன்னேன், நானே இதை நிறைவேற்றுவேன்" என்று சொன்னார்.

    அந்த காலத்தில், சிறையிருப்பில் இருந்த எல்லோருமே, தரிசனத்தில் எசேக்கியேல் பார்த்த எலும்புகளைப் போலவே மன ரீதியாக இறந்த நிலையிலே இருந்தார்கள். அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்காகவே எசேக்கியேலுக்கு உலர்ந்த எலும்புகள் உயிர் பெறும் தரிசனம் காட்டப்பட்டது.

    அன்பானவர்களே, இன்றைக்கு நாமும் நம்முடைய வாழ்க்கையில் ஏதோ ஒரு காரியத்தில் நம்பிக்கையற்று, பெலனற்று, தனிமையில் சோர்ந்து போய் இருக்கிறோமா? நமக்கு வர வேண்டிய பூர்வீக சொத்துக்கள் அல்லது கடனாகக் கொடுத்த ரூபாய் வராமல் வேதனைப்படுகிறோமா? அல்லது குறிப்பிட்ட நோய் நிலையில் மரணத்துக்கு நாள் குறிக்கப்பட்டு வேதனையோடு நாட்களைக் கடத்திக் கொண்டு இருக்கிறோமா? அல்லது தொடர்ச்சியாக தேர்வுகள் எழுதி தொடர் தோல்வியால் துவண்டு போய் இருக்கிறோமா? அல்லது கடன் பிரச்சினைகளால் கண்ணீர் வடித்துக் கொண்டு இருக்கிறோமா? வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்று தொடர்ந்து முயற்சி செய்தும் வாய்க்காமல் காலம் கடந்து கொண்டு இருப்பதால் வேதனைப்படுகிறோமா? திருமணம், வாரிசுக்காக நெடுநாட்களாக காத்திருக்கிறோமா?

    கவலைப்படாதீர்கள், வேதம் சொல்கிறது: "நெடுநாட்களாக காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப் பண்ணும், விரும்பினது வரும் போதோ ஜீவ விருட்சம் போலிருக்கும்".

    ஆம் பிரியமானவர்களே, நாம் ஒன்றிற்காக காத்திருக்கும் போது தான் அதன் வலி என்னவென்று புரியும். ஆகவே நாம் கவலைப்படும் விஷயங்களை, காத்திருக்கும் காரியங்களை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடத்தில் துதியோடும், புகழ்ச்சியோடும், நம் ஜெப வேளையில் தெரிவித்து, வேண்டுதல் செய்தால், நாம் வேண்டிக் கொள்ளும் காரியங்களில் தெய்வீக சமாதானத்தை தந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

    இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர், ஜீவனுள்ள தேவன், ஆகவே அவரை நோக்கிப் பார்த்து ஜெபிப்போம், ஜெயம் பெறுவோம். ஆமேன்.

    • உங்களைப் பாதுகாக்கும் இயேசு உங்களோடே இருக்கிறார்.
    • இயேசு உங்களுக்கு பாதுகாப்பைத் தருகிறார்.

    அன்பானவர்களே, `உங்களைப் பாதுகாக்கும் இயேசு உங்களோடே இருக்கிறார்' என்று நம்பிக்கை கொள்ளவேண்டும். நீங்கள் இருக்கும் இடத்தில், உங்களது பயணங்களில், எனக்கென்று யாருமே இல்லை என்று நினைக்கும் நேரத்திலும் இயேசு உங்களுக்கு பாதுகாப்பைத்தருகிறார். உங்கள் வாழ்க்கையில் உங்களைக் குறித்து தேவன் வைத்துள்ள திட்டங்கள் நிறைவேறும் வரை இயேசு உங்களோடு இருக்கிறார் என்பதை மறக்க வேண்டாம்.

    பவுல் என்பவரைப் பற்றி பைபிளில் கூறியுள்ளதைப் பார்க்கலாம். இவர் ஆரம்பத்தில் இயேசுவைப் பின்பற்று பவர்களை அடித்து துன்புறுத்தி கொலை செய்வதில் இன்பம் கண்டு வந்தார். ஒருநாள் இயேசு இவருக்கு தரிசனமாகி, `என்னை ஏன் துன்புறுத்துகிறாய்? நீ துன்பப்படுத்துகிற இயேசு நான் தான்' என்று கூறினார்.

    இயேசுவின் அன்பினால் கவரப்பட்ட பவுல், எருசலேம் மற்றும் நகரங்கள் தோறும் சென்று இயேசுவின் மகிமை பற்றி கூறினார். இவர் மூலம் ஏராளமானவர்கள் இயேசுவை நம்பினார்கள். இதனால் கோபமடைந்தவர்கள் இவர் மீது பொய் குற்றம் சாட்டியதால், இவர் சிறைபிடிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.

    அப்போது ஒரு நாள் இரவு கர்த்தர், பவுலின் அருகே நின்று, `பவுலே, திடன்கொள். நீ என்னைக் குறித்து எருசலேமிலே சாட்சி கொடுத்ததுபோல ரோமாபுரியிலும் சாட்சி கொடுக்க வேண்டும்" என்றார்.

    இந்த நிலையில், சிறையில் இருந்த பவுல் மற்றும் பிற கைதிகளிடம் விசாரணை செய்து தீர்ப்பு வழங்க கப்பல் மூலம் ரோம் நகருக்கு கொண்டு செல்லப்பட்டனர். அப்போது கப்பல் புயல் மழையில் சிக்கிக்கொண்டது. பவுலின் எச்சரிக்கையை மீறிச்சென்ற கப்பல் பெருமழையில் சிக்கித்தடுமாறியது.

    அப்போது பவுல் அவர்கள் நடுவிலே நின்று, `மனுஷரே, இந்த வருத்தமும் சேதமும் வராமல் இருக்கத்தான் இப்போதைக்கு கப்பல் பிரயாணம் செய்ய வேண்டாம் என்று கூறினேன். ஆனாலும், மாலுமிகளின் பேச்சைக்கேட்டு வந்து விட்டோம். இனி பயப்படாமல் திடமனதாக இருங்கள் என்று உங்களுக்குத் தைரியம் சொல்லுகிறேன்.

    நான் நம்புகிற இயேசு என்னைப் பார்த்து, 'பவுலே நீ பயப்படாதே, நீ ரோம சக்கரவர்த்திக்கு முன்பாக நின்று என்னைப்பற்றி சாட்சி கூறவேண்டும்' என்று கூறியுள்ளார். ஆகவே என்னுடன் உள்ள உங்கள் அனைவருக்கும் தேவன் என் நிமித்தம் தயவு பண்ணியுள்ளார். ஆகையால் சகல மனுஷரே, திடமனதாயிருங்கள், பயப்படாதீர்கள். ஆனாலும் இப்போது நாம் ஒரு தீவிலே விழ வேண்டியதாயிருக்கும்' என்றார்.

    கப்பலில் இருந்த அனைவரும் கலக்கத்துடனே இருந்தார்கள். பொழுது விடிந்ததும் எல்லாரும் உணவு உண்ணும்படி பவுல் அவர்களுக்குத் தைரியஞ்சொல்லி; "நீங்கள் நெடுநாட்களாய் ஒன்றும் சாப்பிடாமல் பட்டினியாய்இருக்கிறீர்கள். ஆகையால் உணவு உண்ணும்படி உங்களை வேண்டிக் கொள்கிறேன். நீங்கள் நீந்தித் தப்பிப் பிழைப்பதற்கு அது உங்களுக்கு உதவியாயிருக்கும்" என்றார்.

    இப்படி அனைவரையும் ஆறுதல்படுத்தி, அப்பத்தை எடுத்து, எல்லோருக்கு முன்பாகவும் தேவனை ஸ்தோத்திரித்து, அதைப் பங்கிட்டு வழங்கினார். அனைவரும் சாப்பிட்டார்கள். பொழுது விடிந்தபின்பு, இன்ன இடமென்று அறியாமல் சமமான கரையுள்ள ஒரு துறைமுகம் அவர்களுக்குத் தென்பட்டது. கரை நெருங்கியபோது கப்பல் உடைந்ததால் அனை வரும் நீந்தி பத்திரமாக கரைசேர்ந்தார்கள்.

    கரையிலே குளிருக்காக நெருப்பு மூட்டினார்கள். பவுல் சில விறகுகளை வாரி அந்த நெருப்பின்மேல் போடும் போது, ஒரு விரியன்பாம்பு அவருடைய கையைக் கடித்துவிட்டது. பவுல் அந்தப் பாம்பை தீயிலே உதறிப்போட்டு, ஒரு தீங்கும் அடையாதிருந்தார். தீவு மக்கள் இதைக்கண்டு ஆச்சரியம் அடைந்தனர்.

    அந்தத் தீவின் தலைவனின் தந்தை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தான். பவுல் அவனிடத்திற்குப் போய் ஜெபம் பண்ணி, அவன் மேல் கைகளை வைத்து, அவனைக் குணமாக்கினார். இது நடந்தபின்பு, தீவில் இருந்த மற்ற வியாதிக்காரர்களும் வந்து, குணமாக்கப்பட்டார்கள். இதையடுத்து தீவு மக்களின் உதவியுடன் ரோம் நகருக்கு செல்லும் கப்பலைக் கண்டு, அதில் ஏறி ரோமாபுரிக்குச் சென்றடைந்தார்கள்.

    பிரியமானவர்களே, இங்கு கப்பல் பயணத்தில் புயல் காற்று, அடைமழை, உயிருக்கு ஆபத்து, கொல்ல நினைக்கும் சதித்திட்டங்கள், விரியன் பாம்பினால் வந்த ஆபத்து, இவை எல்லாவற்றையும் தாண்டி பவுல் ரோமாபுரிக்கு சென்று ரோம சக்கரவர்த்திக்கு முன்பாக நின்றார்.

    அதுபோலவே அன்பானவர்களே! நம்மை குறித்து தேவன் முன் குறித்த காரியங்கள் நிறைவேறும் வரை கர்த்தர் சமூகம் உங்களுக்கு முன்பாக சென்று கொண்டே இருக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை.

    ஆகவே சூழ்நிலைகள் எதிராக இருந்தாலும் சரி, சூழ்ச்சிகள். பொறாமைகள், எரிச்சல்கள், கோபங்கள், மந்திர-தந்திரங்கள் என எது நமக்கு எதிராக இருந்தாலும் சரி, கர்த்தர் நமக்கு கூறியவைகளை எதுவும் ஒன்றும் செய்ய முடியாது. உங்கள் வாழ்வில் எல்லாம் ஜெயமாக மாறும், நாம் நம்பும் இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர். நிச்சயமாகவே உங்கள் காரியங்கள் ஜெயமாக மாறும், ஆமேன்.

    • ஏதோ ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் இருக்கின்றீர்களா?
    • தொடர் தோல்வியால் துவண்டுபோய் இருக்கின்றீர்களா?

    அன்பானவர்களே, நீங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் இருக்கின்றீர்களா?, உயர் கல்விக்காக, வேலைக்காக, திருமணத்திற்காக, பதவி உயர்வுக்காக, நெடுங்காலமாக காத்திருக்கின்றீர்களா?. தொடர் தோல்வியால் துவண்டுபோய் இருக்கின்றீர்களா?,

    உங்களுக்குரிய வாய்ப்புகள் இன்னொருவரால் தடைப்படுகிறதா?, பிறருக்கு உங்களாலான உதவிகளை செய்தும், நன்றி மறந்து அவர்களால் உங்களுக்கு ஏற்பட்ட துரோகத்தினால் துயரப்படுகிறீர்களா? உங்களால் நன்மை பெற்றவர்கள் உங்களுக்கு எதிராக செயல்படுகிறார்களா?, உங்களுக்கு வரவேண்டிய வாய்ப்புகளை பிறர் தட்டிப்பறித்து விட்டார்களா? கவலைப்படாதீர்கள்.

    உங்கள் வேதனைகள், சோதனைகள், தோல்விகள் விரைவில் மாறும். குறித்த காலத்தில் உங்களுக்குரிய, வாய்ப்புகள், உயர்வுகள், தேவைகள் அனைத்தும் உங்களைத்தேடி வரும்.

    பிரியமானவர்களே! வேதாகமத்தில், `அகாஸ்வேரு' என்றொரு ராஜாவைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. ராஜாவைக் கொல்ல அவரது தளபதிகளில் இருவர் ரகசிய சதித்திட்டம் தீட்டுகிறார்கள். இதை அரண்மனையின் வாசலில் இருந்த மொர்தெகாய் என்ற ராஜ ஊழியன் அறிந்து தடுத்தான். ராஜாவைக் கொல்ல திட்டமிட்டவர்கள் தூக்கில் போடப்பட்டனர்.

    இந்த தகவல்கள் அனைத்தும் ராஜ சமூகத்தின் முக்கிய குறிப்புகளை எழுதும் நாளாகமப் புத்தகத்திலே எழுதப்பட்டது. இதன் பின்னர் மொர்தெகாய் மறக்கப்பட்டுப் போனான்.

    இந்த நிலையில் மன்னர் அகாஸ்வேரு தனது பிரதான மந்திரியாக ஆமான் என்பவனை நியமித்து அவனுக்கு அதிகாரமும், அங்கீகாரமும் அளித்தான். அரண்மனையில் உள்ளவர்களும், மக்களும் ஆமானை வணங்க வேண்டும் என்றும் ராஜா கட்டளையிட்டிருந்தார். ஆனாலும் அரண்மனை வாசலில் இருந்த மொர்தெகாய் அவனை வணங்கவில்லை.

    இதை அறிந்த ஆமான் மொர்தெகாய் மீது மிகுந்த கோபம் கொண்டான். அவனுக்கு தண்டனை அளிக்க திட்டமிட்டு, அதற்காக 50 முழ உயரமான தூக்குமரத்தை தன் வீட்டருகில் நாட்டி விட்டு, ராஜாவிடம் இதைப்பற்றி பேச வேண்டும் என்று தகுந்த சமயத்திற்காக காத்திருந்தான்.

    இந்த நிலையில் ஒரு நாள் இரவு ராஜா தூக்கம் வராத நிலையில் அன்றாட நிகழ்வுகளை குறித்து வைத்துள்ள நாளாகம புத்தகத்தை கொண்டுவரச்சொல்லி நடந்த நிகழ்வுகளை வாசிக்கச்சொன்னார். அப்போது ராஜாவை கொல்ல முயன்றதும், அது மொர்தெகாய் மூலம் தடுக்கப்பட்டதும் ராஜாவுக்கு தெரியவருகிறது.

    உடனே ராஜா, இந்த நல்ல செயலுக்காக மொர்தெகாய்க்கு உரிய மரியாதை செய்யப்பட்டதா என்று கேட்டார். அதற்கு ஊழியர்கள் `அவனுக்கு ஒன்றும் செய்யப்படவில்லை' என்று சொன்னார்கள்.

    அந்த நேரத்தில், மொர்தெகாயைத் தூக்கில் போட மன்னரிடம் அனுமதி கேட்க ஆமோன் வந்திருந்தான். ராஜா அவனை நோக்கி: 'ராஜா கனம் பண்ண விரும்புகிற மனுஷனுக்கு என்ன செய்யப்படவேண்டும்' என்று கேட்டார்.

    அதற்கு ஆமான், `என்னையன்றி யாரை ராஜா கனம்பண்ண விரும்புவார்' என்று தன் மனதிலே நினைத்து, ராஜாவை நோக்கி: `ராஜா கனம் பண்ண விரும்புகிற மனுஷனுக்குச் செய்யவேண்டியது என்னவென்றால், ராஜா உடுத்திக்கொள்ளுகிற ராஜவஸ்திரமும், ராஜா ஏறுகிற குதிரையும், அவர் சிரசிலே தரிப்பிக்கப்படும் ராஜ முடியும் கொண்டுவரப்படவேண்டும்.

    அந்த வஸ்திரமும் குதிரையும் ராஜாவுடைய பிரதான பிரபுக்களில் ஒருவனுடைய கையிலே கொடுக்கப்படவேண்டும். அந்த வஸ்திரத்தால் ராஜா கனம் பண்ண விரும்புகிற மனுஷனை அலங்கரித்தபின், அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவும்படி செய்து, எல்லா மக்களாலும் மரியாதை செய்யப்பட வேண்டும்' என்று சொன்னான்.

    அப்பொழுது ராஜா ஆமானை நோக்கி: `சீக்கிரமாய் நீ சொன்னபடி வஸ்திரத்தையும் குதிரையையும் கொண்டுபோய், அரண்மனையின் வாசலிலே உட்கார்ந்திருக்கிற மொர்தெகாய்க்கு அந்தப்பிரகாரமே செய் என்றான்.

    அப்படியே ஆமான் வஸ்திரத்தையும் குதிரையையும் கொண்டுபோய், மொர்தெகாயை அலங்கரித்து, அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவும்படி செய்து கவுரவப்படுத்தினான்.

    இதற்கிடையில் ராஜாவிடம் ஆமான், மொர்கதாய்க்கு எதிராக செய்யப்பட்ட அனைத்து காரியங்களும் கூறப்பட்டது. ராஜாவின் நன்மைக்காக பேசிய மொர்தெகாய்க்கு ஆமான் செய்துள்ள ஐம்பது முழ தூக்குமரம் ஆமானின் வீட்டருகில் நாட்டப்பட்டதையும் கூறினார்கள்.

    அப்பொழுது ராஜா கோபமடைந்து `ஆமானைத் தூக்கி அந்த தூக்குமரத்திலேயே போடுங்கள்' என்றார். அப்படியே ஆமானைத் தூக்கில் போட்டார்கள்.

    ராஜாவுக்கு அடுத்த இடத்தில் மொர்தெகாய் உயர்த்தப்பட்டார்.

    இன்றைக்கு நீங்களும் ஒரு கடினமான சூழ்நிலையில் சஞ்சலத்தோடு, வேதனையோடு இருக்கின்றீர்களா, மன விருப்பங்கள் நிறைவேறாமல் கவலையோடு இருக்கின்றீர்களா, கவலைப்படாதிருங்கள், நம்பிக்கையோடு இயேசுவை நோக்கி பார்ப்போம்.

    அரண்மனை வாசலில் இருந்த மொர்தெகாயை பிரதான அமைச்சராக மாற்றிய இயேசு இன்றைக்கும் உங்கள் மன வாஞ்சைகளை நிச்சயமாக நிறைவேற்றுவார். நீங்கள் உயர்த்தப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்.

    ×