search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூந்தல்"

    • ஹேர் ஜெல் பொருட்கள் உங்கள் கூந்தலை அழகுபடுத்தலாம்.
    • அளவுக்கு அதிகமாக ஹேர் ஜெல்லை பயன்படுத்தக் கூடாது.

    முடிக்கு ஹேர் ஜெல் பயன்படுத்துவதை பலரும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். நீண்ட நேரம் கூந்தல் அலங்காரம் அப்படியே இருக்க வேண்டும் என்பதற்காக ஹேர் ஜெல் பயன்படுத்துகிறார்கள். உண்மையில் இது முடிக்கு நன்மை செய்யுமா என்பதை இதில் பார்ப்போம்.

    ஹேர் ஜெல் பொருட்கள் உங்கள் கூந்தலை அழகுபடுத்தலாம், ஹேர் ஸ்டைல் கலையாமல் வைத்திருக்க உதவலாம். ஆனால் இதில் ஏராளமான கெமிக்கல்கள் உள்ளன என்பதை பற்றியும் அதனால் வரக்கூடிய பாதிப்புகள் பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

    ஹேர் ஜெல்களில் ஆல்கஹால் உள்ளிட்ட நச்சு இரசாயனங்கள் இருக்கிறது. இந்த ஆல்கஹால் உங்கள் கூந்தலில் உள்ள ஈரப்பதத்தை ஆவியாக்கி கூந்தலை வறண்டு போகச் செய்து விடும். இதனால் முடிகள் உடைந்து போக வாய்ப்பு உள்ளது.

    இந்த ஹேர் ஜெல்கள் தலைமுடியின் இயற்கையான எண்ணெய் உற்பத்தியை தடுக்கிறது. இதனால் கூந்தல் வறண்டு போய் முடி உதிர்தல் பிரச்சினை ஏற்படுகிறது.

    ஹேர் ஜெல்களில் இருக்கும் இராசயனங்கள் காரணமாக உச்சந்தலையில் அரிப்பு, பொடுகு, எரிச்சல் போன்ற தொந்தரவுகளை உருவாக்குகிறது.

    ஹேர் ஜெல்லில் இருக்கும் நச்சு இராசயனங்களால் உங்களின் கூந்தல் பொலிவிழந்து கூந்தல் நிறமாற்றம் அடைய வாய்ப்பு உள்ளது. இதன் விளைவாக சீக்கிரமே நரைமுடி பிரச்சினைக்கு தள்ளப்படுகின்றனர்.

    அளவுக்கு அதிகமாக ஹேர் ஜெல்லை பயன்படுத்தக் கூடாது. அது உங்கள் கூந்தலை பாதிக்க வாய்ப்புள்ளது. முடிகளில் மட்டுமே ஹேர் ஜெல்லை பயன்படுத்த வேண்டும். வேர்க்கால்களில் படும் படி எப்போதும் அப்ளை செய்யக் கூடாது. உங்கள் கூந்தலுக்கு தகுந்த ஹேர் ஜெல்லை தேர்ந்தெடுப்பது அவசியம்.

    • தலைமுடியை தினமும் சீவுவது முடியை பளபளப்பாக வைக்க உதவும்.
    • தலைமுடி ஆரோக்கியமாக இருக்க உதவும்.

    தினமும் பல் துவக்குவது, குளிப்பது போன்று தலைமுடியையும் தவறாமல் சீவுவது அவசியம் மற்றும் முக்கியம் என்பது தெரியுமா?

    காலை ஒருமுறை, இரவு தூங்கும் முன் ஒருமுறை என சராசரியாக நாளொன்றுக்கு 2 முறை தலைமுடியை முறையாக சீவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

    தினம் சீப்பை வைத்து தலைமுடியை சீவினால் அது உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை ஊக்குவித்து முடி வேர்களை பலமாக்கும்.

    உச்சந்தலையில் காணப்படும் செபாசியஸ் சுரப்பிகள் sebum-த்தை உற்பத்தி செய்கின்றன. இயற்கையாகவே முடியை நிலைநிறுத்தி பாதுகாக்க இந்த sebum உதவுகிறது. தினமும் 2 முறை அல்லது அதற்கு மேல் தலை சீவும் போது செபாசியஸ் சுரப்பிகள் தூண்டப்பட்டு சருமத்தில் இருந்து முடியின் வேர் வரை இயற்கை எண்ணெய்கள் சரியாக செல்வது உறுதி செய்யப்படுகிறது.

    தலைமுடியை தினமும் சீவுவது முடியை பளபளப்பாக வைக்க உதவும்.

    தினமும் தவறாமல் தலை சீவி வருவது பழைய முடி, இறந்த சரும செல்கள், ஹேர் ப்ராடக்டின் மிச்சங்கள், அழுக்கு, முடி மற்றும் உச்சந்தலையில் உள்ள மற்ற படிந்துள்ள தேவையற்றவற்றை சுத்தம் செய்ய உதவுகிறது.

    அவ்வப்போது தலைமுடியை சீவினால் அது முடியின் அளவை அதிகரிக்கவும், தலைமுடி ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்க உதவி புரிகின்றது. 

    • கூந்தல் நன்கு வளர்ந்து இளநரை உள்ளிட்ட பிரச்சனைகள் நீங்கும்.
    • இந்த எண்ணெய் கூந்தல் உதிர்வு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை தரும்.

    தேவையான பொருட்கள்

    தேங்காய் எண்ணெய் - 500 மி

    நல்லெண்ணெய் - 100 மி

    கரிசலாங்கண்ணி இலைகள் - 2 கைப்பிடி

    அரைக்க வேண்டியவை

    சின்ன வெங்காயம் - 20

    செம்பருத்தி இலை - 2 கைப்பிடி

    கறிவேப்பிலை - 2 கைப்பிடி

    கருஞ்சீரகம் - 2 ஸ்பூன்

    மருதாணி - 1 கைப்பிடி

    நெல்லிக்காய் - 10

    வெந்தயம் - 2 ஸ்பூன்

    கற்றாழை - 2 இதழ்.

    செய்முறை

    அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து 3 எண்ணெயை ஊற்றி மிதமாக சூடானதும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்கு கலக்கவும். அடிபிடிக்காமல் இருக்க பொறுமையாக சிறிது நேர இடைவெளியில் கிளறிக் கொண்டே இருக்கவும். நுரை அடங்கும் வரை காய வைத்து இறக்கி ஆற விடவும்.

    இப்போது எண்ணெய் நன்கு கரும்பச்சை நிறத்தில் இருக்கும். இதனை பாட்டிலில் சேகரித்து தினமும் பயன்படுத்தி வர கூந்தல் நன்கு வளர்ந்து இளநரை உள்ளிட்ட பிரச்சனைகள் நீங்கும்.

    குறிப்பு: சளி பிடிக்கும் பிரச்சனை இருப்பவர்கள் கற்றாழை பயன்படுத்துவதை தவிர்த்து விடவும்.

    • கறிவேப்பிலை எண்ணெயின் மகத்துவம் கொஞ்சம் அல்ல.
    • இதெல்லாம் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த வழி முறைகள் தான்.

    கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தயாரிக்கப்படும் எண்ணெயின் மகத்துவம் கொஞ்சம் அல்ல. இந்த எண்ணெயானது இளம் வயதினரை தாக்கும் நரை முடியை மீண்டும் கருமையாக்க உதவி புரிகிறது. இதெல்லாம் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த வழி முறைகள் தான்.

    இப்போது இருக்கும் இளைய தலைமுறை கண்ட கண்ட உணவுகளை சாப்பிடுவது, கெமிக்கல் கலந்த ஷாம்பூக்களை பயன்படுத்துவது, போதுமான அளவு தூங்காமல் விழித்திருப்பது போன்ற காரணங்களால் இளம் வயதிலேயே தலைமுடி நரைத்து முதிர்ந்த தோற்றத்தை கொடுக்கிறது. இது அவர்களது மன தைரியத்தை குறைக்கிறது.

    இந்த பெரும் பிரச்சனையில் இருந்து விடுபட கறிவேப்பிலை எண்ணெய் பயன்படுத்தலாம். இப்போது கறிவேப்பிலை எண்ணெய் தயாரிக்கும் முறையை பார்க்கலாம்…

    தேவையான பொருட்கள்:

    கறிவேப்பிலை எண்ணெய் செய்ய இரண்டே பொருட்கள் போதும். ஒன்று செக்கில் கொடுத்து அரைக்கப்பட்ட சுத்தமான தேங்காய் எண்ணெய் வேண்டும். இரண்டாவது நிழலில் உலர்த்தப்பட்ட கறிவேப்பிலை இலைகள். கறிவேப்பிலையில் ஈரப்பதம் இல்லாதவாறு நிழலில் உலர்த்த வேண்டும்.

    செய்முறை:

    முதலில் தேவையான அளவு கறிவேப்பிலையை உருவி ஒரு தட்டில் அல்லது துணியில் போட்டு நிழலில் உலர்த்தி வையுங்கள். கறிவேப்பிலையில் ஈரப்பதம் இல்லாதவாறு பார்த்து கொள்ளவும். கடாய் ஒன்றில் ஒரு கப் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதனை சூடு செய்யுங்கள்.

    தீயை குறைவாக வைத்து சூடு செய்யுங்கள். அதே சமயம் புகை வரும் அளவிற்கு சூடு செய்ய வேண்டாம். எண்ணெய் சூடேறிய பிறகு உலர்த்தி வைக்கப்பட்ட கறிவேப்பிலையை சேர்த்து விட்டு அடுப்பை அணைத்து விடலாம். இந்த எண்ணெய் நன்றாக ஆறி வரட்டும். கறிவேப்பிலை நிறம் மாறி வரும்.

    எண்ணெய் முழுவதுமாக ஆறியதும் ஒரு கண்ணாடி பாட்டிலில் இதனை ஊற்றி வைத்து பயன்படுத்தலாம். கறிவேப்பிலையோடு சேர்த்தே ஊற்றிக் கொள்ளலாம். கறிவேப்பிலை எண்ணெயில் மிதக்காமல் நன்றாக மூழ்கி இருக்க வேண்டும். எப்போதும் பயன்படுத்தும் எண்ணெய்க்கு பதிலாக இதனை பயன்படுத்தலாம். இளநரை உள்ளவர்கள் மட்டுமல்லாமல் அனைவருமே இந்த எண்ணெயை உபயோகிக்கலாம்.

    • தோல் சார்ந்த நோய்கள் ஏற்பட முதல் காரணம் நம்முடைய பழக்கவழக்கங்கள்தான்.
    • முடி உதிர்தல், சரும நோய்களுக்கு மனஅழுத்தமும் காரணம்.

    பெண்களுக்கு பளபளப்பான, அடர்த்தியான கூந்தல் வேண்டுமென்றால் முதலில் உடலை நன்றாக பராமரிக்க வேண்டும். கூந்தல், உடல் ஆரோக்கியத்தை வெளிக்காட்டும் கண்ணாடி.

    ஒற்றை முடியின் நீளத்தையும் அடர்த்தியையும் வைத்தே நம் உடலின் புரதச்சத்து, நீர்ச்சத்து ஆகியவற்றின் அளவை கணக்கிட முடியுமாம்.

    சமீபகாலமாக பெண்கள் அதிக எண்ணிக்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் கூந்தல் நுனியில் வெடிப்பு, பொடுகுத் தொல்லை, வறண்ட சருமம் போன்றவைதான். ஏ.சி அறையில் பல மணி நேரம் இருப்பதுதான் இதற்கு முக்கிய காரணம்.

    பூசணிக்காய், கேரட், முள்ளங்கி, கீரை வகை, தர்பூசணி, கிர்ணி பழம் போன்ற நீர்ச்சத்து அதிகமுள்ள காய், கனிகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமும், நிறைய தண்ணீர் பருகுவதன் மூலமும் இயற்கை வழியிலேயே இந்தச் சிக்கல்களை எளிமையாக சரிசெய்ய முடியும்.

    முடி உதிர்தல், சரும நோய்கள் என பல உடல் உபாதைகளுக்கு மனஅழுத்தமும் காரணம் என்கிறார்கள். புற உலகம் உருவாக்கும் பதற்றம், மனஅழுத்தம் கூந்தலையும் சருமத்தையும் எப்படி பாதிக்க முடியும்? என கேட்கலாம்.

    பொதுவாகவே சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியம் நமது உணவு முறையோடும் வாழ்க்கை முறையோடும் நேரடி தொடர்புடையவை. தோல் சார்ந்த நோய்கள் ஏற்பட முதல் காரணம் நம்முடைய பழக்கவழக்கங்கள்தான்.

    உடல் பராமரிப்பின் மீதான அக்கறையும் விழிப்புணர்வும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. தெளிவான புரிதலுடன் சருமத்தையும் கூந்தலையும் பராமரிக்கும்போது அழகையும் ஆரோக்கியத்தையும் ஒரு சேரப் பெற முடியும் என்கிறார்கள், டாக்டர்கள்.

    • பெண்களுக்கு 'முடி உதிர்வு' பிரச்சினை தொடர்கதையாக இருக்கிறது.
    • இதற்கான காரணம் மற்றும் தீர்வுகள் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

    புரதச்சத்து நிறைந்த பால், முட்டை, இறைச்சி, மீன் மற்றும் கீரை வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 'அடர்த்தியான கூந்தல்' என்பது பல பெண்களின் ஆசைகளில் ஒன்று. ஆனால் சுற்றுச்சூழல் மாசுபாடு, ஊட்டச்சத்து குறைவு போன்ற பல்வேறு காரணங்களால், பெரும்பாலான பெண்களுக்கு 'முடி உதிர்வு' பிரச்சினை தொடர்கதையாக இருக்கிறது. இதற்கான காரணம் மற்றும் தீர்வுகள் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

    முடி உதிர்வு, இயற்கையான நிகழ்வின் ஒரு பகுதியாகும். புதிய முடிகள் வளரும்போது அந்தப் பகுதியில் ஏற்கனவே இருக்கும் முடிகள் உதிர ஆரம்பிக்கும். இவ்வாறு அன்றாடம் 50 முதல் 80 முடிகள் வரை உதிர்வது இயல்பானது. இவற்றைவிட அதிகமாக முடி உதிர்ந்தால், அது கவனிக்க வேண்டிய விஷயம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    உடல் நலக்குறைவு, மரபு ரீதியிலான பிரச்சினைகள், தூக்கமின்மை, மன அழுத்தம், சத்தான உணவு உட்கொள்ளாதது, ஹார்மோன் கோளாறுகள் போன்ற பல காரணங்களால் முடி உதிர்வு ஏற்படுகிறது. இதுமட்டுமில்லாமல், 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், புதிதாக பிரசவித்த பெண்கள், குறிப்பிட்ட நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள், தலை முடிக்கு அழுத்தம், இறுக்கம் தரும் வகையில் சிகை அலங்காரம் செய்துகொள்ளும் பெண்களுக்கும் அதிகமான முடி உதிர்வு ஏற்படும்.

    அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு வழிகள்:

     புரதச்சத்து நிறைந்த பால், முட்டை, இறைச்சி, மீன் மற்றும் கீரை வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

     இயற்கையாகவே முடியின் வேர்க்கால்களில் இருக்கும் சுரப்பிகள் எண்ணெய்யை சுரக்கும். இருந்தாலும் வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு எண்ணெய் பூசுவது நல்லது.

     அடிக்கடி தலை வாரினால் முடிகள் உடைவதுடன் அடர்த்தியும் குறையும். நீங்கள் உபயோகிக்கும் சீப்பு, துண்டு, தலையணை உறை போன்றவை சுத்தமாக இருக்க வேண்டும். ஈரமான தலைமுடியை சீப்பு கொண்டு வாருவது கூடாது.

     வாரத்திற்கு இரண்டு முறையாவது தலைக்கு குளிக்க வேண்டும். சருமத்தைப் போலவே தலைமுடியும் புறஊதாக் கதிர்கள் மற்றும் வாகன மாசுக்களால் பாதிக்கப்படும். எனவே அதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.

     மன அழுத்தம் அல்லது கர்ப்பம் போன்றவற்றால் நிகழும் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் முடி உதிர்வு, குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பிறகு தானாகவே நின்றுவிடும்.

     இறுக்கமான ஜடை, போனிடெயில் அல்லது ரசாயனங்கள் பயன்படுத்தும் சிகை அலங்கார முறைகளை தவிர்த்தால், முடி உதிர்வைத் தடுத்து அடர்த்தியான கூந்தலைப் பெறலாம்.

    • சரும நிபுணர்கள் ஹேர் கலரிங் செய்வது ஆபத்தில் முடியும் என்று எச்சரிக்கிறார்கள்.
    • அவ்வப்போது மாறும் கூந்தல் கலர்கள் தான் அழகு என்று உலாவருகிறார்கள்.

    கூந்தலுக்கு மணம் இருக்கா இல்லையா என்பதெல்லாம் பழைய காலச்சாரம். கூந்தலுக்கு என்ன கலர் அடிக்கலாம் என்பதே லேட்டஸ்ட் ஃபேஷனாக இருக்கிறது. அடர்ந்த கருங்கூந்தல் தான் பெண்களுக்கு அழகு என்று சொல்வார்கள். ஆனால் இப்போது அப்படி அல்ல. அவ்வப்போது மாறும் கூந்தல் கலர்கள் தான் அழகு என்று உலாவருகிறார்கள்.

    இயற்கையில் அழகு நிறைந்த கறுப்பு கூந்தல் தான் வயது ஆகும் போது வெள்ளி மின்னல் கீற்றுகளாய் வெள்ளை நிறமாய் மாறுகிறது. இயற்கையை இயற்கையாக ஏற்றுக்கொள்ளும் வரை உடலுக்கு எவ்வித பிரச்னைகளும் இல்லை. ஆனால் அழகுபடுத்துகிறேன் என்று ஆரஞ்சு, பிர வுன் கலர்களைப் பூசிக்கொள்ளும் போது கூந்தலின் அழகும் ஆரோக்யமும் கெட்டுவிடுகிறது என்பது தான் சரியாக இருக்கும்.

    சரும நிபுணர்கள் ஹேர் கலரிங் செய்வது ஆபத்தில் முடியும் என்று எச்சரிக்கிறார்கள். அழகில் ஆபத்து நிறைந்திருந்தாலும் அழகு தேவை என்பதே பல பெண்களின் விருப்பமாக இருக்கிறது. பொதுவாக இளநரை, அல்லது குறைந்த வயதில் முடி நரைத்துப் போனவர்கள் ஹேர் டை உப யோகிப்பார்கள். அவர்களும் தரமற்ற டைகளை உபயோகிப்பதன் மூலம் நரை மேலும் அதிகமாகவே செய்யும். இது ஒரு புறம் இருக்க இன்றைய இளம் தலைமுறையினர் இருபாலரும் கலரிங் செய்து கொள்வதை ஹாபியாக வைத்திருக்கிறார்கள்.

    ஒரு வாரம், ஒரு மாதம் அல்லது நீண்ட நாட்கள் என்று அவர்களது விருப்பத்துக்கேற்றவாறு அழகு நிலையங்கள் செல்கிறார்கள். இந்தக் கலர்களை உண்டாக்கும் சாயங்கள் உடலுக்குள் பல்வேறு கேடுகளை உண்டாக்கும் என்று எச்சரிக்கிறார்கள் சரும நிபுணர்கள். ஹேர் கலரிங் செய்யலாம். ஆனால் கூந்தலின் நிறத்திலிருந்து அதிக வேறுபாடு இல்லாமல் இலேசான மாற்றம் செய்யலாம் என்றும் அறிவுறுத்துகிறார்கள்.

    வித்தியாசமான கலரிங் செய்யும் போது கூந்தல் வறட்சி, முடி உதிர்தல் போன்ற பிரச்னைகள் அதிகரிக்கும். கூந்தலின் வளர்ச்சி தடுக்கப்படும். சிலருக்கு சாயங்களின் ஒவ்வாமை நாளடைவில் கண்களிலும் பிரச்னைகளை உண்டாக்கிவிடும். சருமம் சம்பந்தமான உபாதைகளும் உண்டா கும் என்கிறார்கள் சரும மருத்துவர்கள்.

    • ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங்கில் பல பக்க விளைவுகளும் உள்ளன.
    • அதிகப்படியான வெப்பம் முடியின் மீது செலுத்தப்படுகிறது.

    ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்வது பெண்களுக்கு அழகான தோற்றத்தைத் தருகிறது. இருப்பினும் இது முடியின் ஆரோக்கியத்துக்கு எந்த அளவுக்கு நல்லது என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங்கில் பல பக்க விளைவுகளும் உள்ளன. எல்லோருக்கும் இந்த பின் விளைவுகள் வரும் என்று இல்லை. இருப்பினும், ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்துகொள்ளும் பெண்கள் ஒவ்வொருவரும் இதைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பது மிகவும் முக்கியம்.

    முடி நீட்டமாக இருப்பதற்காக முடியில் ரசாயன கிரீம் தடவப்படுகிறது. மேலும், அதிகப்படியான வெப்பம் முடியின் மீது செலுத்தப்படுகிறது. இதனால் முடியின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். இந்த ரசாயன கிரீம் நம்முடைய கூந்தலுக்கு சரியாக இருக்குமா என்பதை எல்லாம் முதலில் சோதனை செய்துகொண்ட பிறகே முடிவு செய்ய வேண்டும்.

    ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங்கை வீட்டில், பார்லரில் செய்து கொள்ளலாம். வீட்டில் செய்வதாக இருந்தால் அடிக்கடி செய்ய வேண்டியதாக இருக்கும். பார்லரில் செய்யப்படும் ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் எட்டு மாதம் முதல் ஒரு வருடம் வரை இருக்கும். அதன் பிறகு மீண்டும் ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்ய வேண்டியிருக்கும்.

    ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்வதன் மூலம் சிலருக்கு நிரந்தரமாக முடி இழப்பு ஏற்படலாம். ஸ்ட்ரெய்ட்டனிங் செய்ய பயன்படுத்தப்படும் ரசாயனம் மற்றும் அதிக வெப்பம் முடியின் வேர்க்காலைப் பாதித்து, முடி உதிர்வை ஏற்படுத்தலாம்.

    சிலருக்கு ரசாயனம் மற்றும் வெப்பம் காரணமாக தற்காலிக முடி உதிர்வு பிரச்சனை ஏற்படலாம்.

    முடி நேராக இருக்க அயர்ன் செய்யப்படுகிறது. இந்த வெப்பம் முடிக்கு வறண்ட தன்மையை கொடுக்கும். சிலருக்கு முடி ஜீவனின்றி இருப்பது போல பொலிவிழந்து காணப்படும்.

    முடியில் உறுதியாக இருக்க அதில் ஹைட்ரஜன் இணைப்பு உள்ளது. அதை சிதைத்துத்தான் முடியை நேராக்குகிறோம். இதனால் முடியின் உறுதித்தன்மை பாதிக்கப்படுகிறது. இதனால் ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்த சில நாட்களிலேயே சிலருக்கு முடி உடைந்து கீழே விழுவதைக் காணலாம்.

    வெயிலில் நடந்தாலே, குளிர்ந்த நீரில் குளித்தாலே, மழையில் நனைந்தாலோ கூட இவர்களுக்கு முடி உடைந்துவிடும்.

    ரசாயனம் மற்றும் வெப்பம் காரணமாக தலையின் வேர்ப் பகுதியில் எண்ணெய் சுரப்பு நின்றுவிடலாம். இதனால் தலையின் வேர் பரப்பு உலர்ந்து, அரிப்பு, பொடுகு போன்ற பிரச்னை ஏற்படலாம்.

    • மழையில் நனைந்து உடல் நல பாதிப்புகளை எதிர்கொள்பவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள்.
    • மழைநீரில் அமிலத்தன்மை, அழுக்கு சேர்ந்திருக்கவும் வாய்ப்புள்ளது.

    மழை காலம் வந்துவிட்டது. மழையின் அழகை ரசிப்பதோடு நின்றுவிடாமல் அதில் நனைந்து ஆனந்த குளியல் போடுபவர்களும் இருக்கிறார்கள். அப்படி மழையில் குளிப்பது சருமத்திற்கும், கூந்தலுக்கும் நல்லதா? என்ற கேள்வி எழாமல் இல்லை. ஏனெனில் மழையில் நனைந்து உடல் நல பாதிப்புகளை எதிர்கொள்பவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். மழையில் குளிப்பது நல்லதா? என்ற கேள்விக்கு டெல்லியை சேர்ந்த தோல் மற்றும் முடி மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜாங்கிட் விளக்கம் அளிக்கிறார்.

    ''கோடை காலம் முடிவடைந்து தொடங்கும் முதல் மழை வெப்பத்தில் இருந்து ஆறுதல் அளிக்க உதவும். மழை பெய்யும் போது நனைவது, உளவியல் ரீதியாக நிம்மதியாக இருப்பது போன்ற உணர்வை தரும். இருப்பினும் காற்று மாசுபாடு மற்றும் ஹைட்ரஜன் சல்பைடு போன்ற நச்சு ரசாயனங்கள், வாகன உமிழ்வுகள், தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மழை குளியல் உகந்ததல்ல. ஏனெனில் மழைத்துளிகள் காற்றில் கலந்திருக்கும் ரசாயனங்கள், நச்சுக்களுடன் கலந்து சருமத்தை சேதப்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளது. மழைநீரில் அமிலத்தன்மை, அழுக்கு சேர்ந்திருக்கவும் வாய்ப்புள்ளது.

    உணர்திறன் வாய்ந்த சருமம் கொண்டவர்கள் அமில மழையில் குளித்தால் சருமம் சேதமடையக்கூடும். எனவே மழைக்காலத்தில் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முதல் மழையில் குளிப்பது பொடுகு, முகப்பருவை போக்க உதவும் என்று பலரும் நம்புகிறார்கள். உண்மையில் மழை நீரில் அதிக மாசுக்கள் கலந்திருந்தால் முகப்பரு, சரும தொற்றுகள், சரும வெடிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்'' என்கிறார் டாக்டர் ஜாங்கிட்.

    மழையில் நனைந்த பிறகு சில சமயங்களில் சருமத்தில் அரிப்பு ஏற்படுவதை கவனித்திருக்கலாம். தலை முடியும் கடினமானதாக மாறும். மழை நீரில் பி.எச் அளவும் அதிகமாக இருப்பதால் சருமம் கடினத்தன்மை கொண்டதாக மாறக்கூடும். கூந்தலும் உலர்வடையக்கூடும். மழை நீரால் தக்கவைக்கப்படும் அதிக ஈரப்பதம் காரணமாக தலைமுடியில் பேன்கள் வளர்ச்சியும் அதிகரித்துவிடும்.

    மழைக்காலத்தில் பெண்கள் பின்பற்றவேண்டிய சில அழகு குறிப்புகள் பற்றி டாக்டர் ஜாங்கிட் விவரிக்கிறார்.

    "இந்தபருவமழையில், நீங்கள் எதிர்பாராதவிதமாக நனைந்தாலோ அல்லது மழையில் குளித்து மகிழ நினைத்தாலோ, வீட்டிற்கு வந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் குளிக்க மறக்காதீர்கள். பேஸ் வாஷை பயன்படுத்தி சருமத்தில் படிந்திருக்கும் அசுத்தங்களை நீக்கிவிடுங்கள். சருமத்தின் மேற்பரப்புக்கு சோப்பையும், தலைமுடிக்கு ஷாம்பூவையும் பயன்படுத்துங்கள்.

    குளித்து முடித்ததும் கண்டிஷனரை பயன்படுத்த மறக்காதீர்கள். இது கூந்தலில் ஈரப்பதத்தை பாதுகாப்பதோடு மிருதுவாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும். ஆடை அணிவதற்கு முன்பாக டவல் கொண்டு உடலை நன்கு உலர்த்துவது மழைக்கால நோய்த்தொற்றுகளை தவிர்க்க உதவும்'' என்கிறார்.

    • தலைக்கு குளித்தபின்பு தலைமுடிக்கு கண்டிஷனர் உபயோகிப்பது அவசியம்.
    • நீண்ட கூந்தலை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்த சில தகவல்களைப் பார்க்கலாம்.

    நீண்ட, பளபளப்பான கூந்தல் பல பெண்களின் விருப்பமாகும். இத்தகைய கூந்தலைக்கொண்ட பெண்கள், அதை முறையாக பராமரிப்பது முக்கியம். அதற்காக பயன்படுத்தும் ஷாம்பு முதல் சீப்பு வரை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். நீண்ட கூந்தலை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்த சில தகவல்களைப் பார்க்கலாம்.

    * நீண்ட கூந்தலைக் கொண்டவர்கள் குறுகிய பற்கள் கொண்ட சீப்பை பயன்படுத்தும்போது முடி உடையக்கூடும். அதற்கு பதிலாக 'பிரஷ்' போன்ற அமைப்புடைய சீப்பை உபயோகித்து முடி உடையாமல், சேதம் அடையாமல் காக்கலாம்.

    * இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு கூந்தலை நன்றாக வாரி பின்னிக்கொண்டு தூங்குவது நல்லது. தலைமுடியை விரித்தவாறு தூங்கும்போது தலையணை மற்றும் மெத்தைகளில் முடி உராய்ந்து சேதம் அடைய வாய்ப்பு உள்ளது.

    * நீளமான கூந்தலை சுத்தமாக பராமரிப்பது அவசியம். வாரத்திற்கு இரண்டு முறை ரசாயனங்கள் கலக்காத ஷாம்புவை பயன்படுத்தி தலையை சுத்தம் செய்யலாம். இதன்மூலம் முடி உதிர்தல் மற்றும் சேதம் அடைதலைத் தடுக்கலாம்.

    * நீளமான தலைமுடி மென்மையாக இருக்கும். அது கடினமான துணிகளுடன் உராயும் பொழுது சேதமடையும். இதைத் தவிர்க்க 'சாட்டின்' போன்ற மென்மையான துணியால் ஆன தலையணை உறையை உபயோகிப்பது நன்று.

    * முடியின் வேர்கால்களுக்கு சீரான ரத்த ஓட்டம் இருந்தால், தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும். தலையில் அவ்வப்போது எண்ணெய் பூசி மென்மையாக மசாஜ் செய்வது முக்கியம். குறைந்தது பதினைந்து நிமிடங்கள் மசாஜ் செய்வது நல்ல பலன் தரும்.

    * அனைத்து வகையான தலைமுடியிலும் வெடிப்பு ஏற்படுவது இயல்பானது. ஆகையால், அவ்வப்போது கூந்தலின் நுனிப்பகுதியை வெட்டி விட வேண்டும். இதனால் முடி சேதமடைவதைத் தடுக்க முடியும்.

    * தலைக்கு குளித்தபின்பு தலைமுடிக்கு கண்டிஷனர் உபயோகிப்பது அவசியம். இயற்கையான பொருட்களால் தயாரிக்கப்பட்ட கண்டிஷனர் பயன்படுத்துங்கள். கூந்தலை உலர வைப்பதற்கு டிரையர் உபயோகிப்பதை முடிந்தவரை தவிர்த்திடுங்கள்.

    * நீளமான முடியை சிக்கலின்றி வைத்திருப்பது பராமரிப்பு முறைகளில் முதன்மையானது. சிக்கெடுக்கும்போது முனைகளில் இருந்து தொடங்கி, படிப்படியாகவும், மெதுவாகவும் மேல்நோக்கிச் செல்லுங்கள். ஈரமான கூந்தலை சீப்பு கொண்டு வாரி சிக்கெடுப்பதைத் தவிர்க்க வேண்டும். தலைமுடி நன்றாக உலர்ந்த பின்னர், கைகளால் மெதுவாக நீவிவிட்டபடி சிக்கல்களை பிரிப்பது நல்லது. மேலும், தலைமுடியில் உள்ள ஈரத்தை உறிஞ்சுவதற்கு ஏற்ற 'மைக்ரோ பைபர்' டவல்களை உபயோகிக்கலாம்.

    • கருப்பு மிளகு எண்ணெய் பொடுகுக்கு எதிராக திறம்பட செயல்படுகிறது.
    • கருப்பு மிளகு எண்ணெய்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.

    இப்போது இருக்கும் மன அழுத்தம் மிகுந்த வாழ்க்கை முறையில் இள வயதிலேயே முடி உதிர்கிறது. இதை தடுக்க பலர் ஹேர் ட்ரான்ஸ்பிளான்ட் போன்ற சிகிச்சைகளை லட்சக்கணக்கில் செலவு செய்து எடுத்து கொள்கின்றனர். ஆனால் இதற்கு நம் ஆயுர்வேதத்தில் செலவில்லாமல் சிகிச்சை உள்ளது, அது பற்றி பார்க்கலாம்.

    கருப்பு மிளகு எண்ணெய்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. கருப்பு மிளகு போன்ற மசாலாப் பொருட்களில் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளன.

    உச்சந்தலையில் வீக்கம் ஏற்பட்டால், முடி வேரில் வலுவிழந்து விழ ஆரம்பிக்கும். அத்தகைய சூழ்நிலையில், கருப்பு மிளகு எண்ணெயை தடவுவதன் மூலம் உங்கள் தலைமுடியை வலுவாக மாற்றலாம். சொட்டை தலையில் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

    கருப்பு மிளகு எண்ணெய் பொடுகுக்கு எதிராக திறம்பட செயல்படுகிறது. இதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்பு உச்சந்தலையை சுத்தம் செய்கிறது. மேலும், இதன் இந்த பண்பு பொடுகை சுத்தப்படுத்தி, அது பரவாமல் தடுக்கிறது. ஆக கருப்பு மிளகு எண்ணெய் பொடுகுக்கு சிறந்த மருந்து என்றால் அது மிகையாகாது.

    கருப்பு மிளகு எண்ணெய் உச்சந்தலையில் தொற்று ஏதேனும் ஏற்பட்டால் அதற்கு மிகவும் நல்லது. பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ள கரு மிளகு எண்ணெய், உச்சந்தலையில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகளைக் குறைக்க உதவுகிறது.

    • சில பழக்கவழக்கங்களை மாற்றினால் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.
    • முடி உதிர்வு பிரச்சினையை எதிர்கொள்பவர்கள் இதை கடைபிடிக்கலாம்.

    வயது, மரபணு மற்றும் உணவு முறை ஆகியவற்றை பொறுத்து மனிதர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஆறு அங்குலம் வரை முடி வளரும். அதனால் முடி உதிர்வு பிரச்சினையை எதிர்கொள்பவர்கள் ஒரு சில பழக்கவழக்கங்களை தவறாமல் பின்பற்றுவதன் மூலம் இயற்கையாகவே முடி வளர்ச்சியை அதிகரிக்கச் செய்துவிடலாம்.

    அதற்கு பயன்படுத்த வேண்டிய பொருட்கள்:

    ஆளி விதைகள்: இதில் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளது. அவை உடலுக்கு மட்டுமல்ல, தலைமுடிக்கும் நன்மை பயக்கும். இரண்டு டேபிள் ஸ்பூன் ஆளி விதைகளில் 6,400 மில்லி கிராம் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளடங்கி இருப்பது ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது முடியை வலுப்படுத்தவும், நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர வழிவகை செய்யும்.

    நெல்லிக்காய்: இது பல்வேறு விதமான மருத்துவ குணங்களை கொண்டது. முடி வளர்ச்சிக்கும் துணை புரியக்கூடியது. இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. மேலும் இதில் உள்ள கொலோஜன் அடர்த்தியாகவும் நீளமாகவும் முடி வளர்வதற்கு உதவும்.

    கறிவேப்பிலை: சமையலில் தவறாமல் இடம் பெறும் இதனை முடி வளர்ச்சிக்கும் தவறாமல் பயன்படுத்தி வரலாம். இதில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஈ போன்றவை தலைமுடி நீளமாக வளர உதவும். கூந்தல் பளபளப்பாக காட்சி தருவதற்கும் வழிவகுக்கும். ஒரு டம்ளர் காய்கறி சாற்றில் 10-15 கறிவேப்பிலைகளையும் சேர்த்து பருகி வரலாம். அதன் மூலம் முடி வளர்ச்சி அதிகரிக்கலாம்.

    ×