search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் அலுவலகத்தில் மனு"

    • பீகார் மாநில தொழிலாளர்கள் 11 பேர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.
    • அங்கு பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    சேலம்:

    சேலம் அழகாபுரம் பகுதியில் பணி புரிந்து வரும் பீகார் மாநில தொழிலாளர்கள் 11 பேர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் கூறியதாவது:-

    பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்பவர் எங்களை ஒப்பந்தம் அடிப்படையில் பணி செய்வதற்காக சேலம் அழைத்து வந்தார். அழகாபுரம் பகுதியில் நடைபெற்று வரும் கட்டிட பணிக்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்த்தார். அன்று முதல் இன்று வரை எங்களுக்கு ஊதியம் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

    இது குறித்து சம்பந்தப்பட்ட உரிமையா ளரிடம் கேட்டபோது பணியில் சேர்த்து விட்ட ராஜாவிடம் கேட்குமாறு தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் 3 மாதங்களாக ஊதியம் கிடைக்காமல் உள்ளது. இதனால் சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் தவித்து வருகிறோம்.

    தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல கூட முடியாமல் உள்ளளோம். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு ஊதியத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த நிலையில் போலீசார் ஒப்பந்ததாரரான ராஜாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கலெக்டர் அலுவலகத்திற்கு வரவழைத்தனர். அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் பிறகு ராஜா மற்றும் வட மாநில தொழிலாளர்களை அழகாபுரம் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மாநகராட்சி ஊழியர்கள் கடைகளை காலி செய்ய வேண்டுமென கூறுகிறார்கள்.
    • 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    கிருஷ்ணகிரி,

    ஓசூர் எம்.ஜி.ஆர் மார்கெட் காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் சாதிக் பாஷா தலைமையில், 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர்., மார்கெட் பின்புறம் சந்தைப்பேட்டையில், கடந்த, 2005-ம் ஆண்டு முதல் 250-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கறி, பெரியவெங்காயம் மற்றும் உருளைகிழங்கு வியாபாரம் செய்து வருகிறோம். இந்த நிலையில் மாநகராட்சி ஊழியர்கள் திடீரென வந்து இங்கு வணிக வளாகம் கட்ட இருப்பதால் உடனடியாக நீங்கள் கடைகளை காலி செய்ய வேண்டுமென கூறுகிறார்கள். அதிகாரிகளின் இந்த செயலால் அதிர்ச்சி யடைந்துள்ளோம். இதையே நம்பி வாழந்து வரும் எங்கள் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு எங்களுக்கு வேறு இடமாவது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பிளஸ்-2 தேர்வில் கணக்கு பதிவியல் பாட பிரிவில் 449 மதிப்பெண்கள் பெற்ற மாணவர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.
    • சாதி சான்றிதழ் வழங்க மறுப்பதால் தனக்கு உயர் கல்வி சேர இயலவில்லை என அதில் தெரிவித்துள்ளார்.

    சேலம்:

    சேலம் பஞ்சந்தாங்கி ஏரியை சேர்ந்த சுரேஷ்பாபு மகன் நந்தகுமார்(வயது 19). இவர் கோட்டை அரசு மேல்நிலை பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

    தற்போது நடைபெற்ற பொது தேர்வில் கணக்கு பதிவியல் பாட பிரிவில் 449 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் இன்று தனது தாய் நதியாவுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

    அந்த மனுவில், சாதி சான்றிதழ் விண்ணப்பித்து 15 நாட்கள் ஆகியும் கிடைக்கவில்லை என்றும் இதனால் உயர் கல்வி சேர்வதற்கு பிரச்சினையாக உள்ளது.

    அதேபோல் உயர் கல்வி படிக்க மாவட்ட நிர்வாகம் உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் சாதி சான்றிதழ் கிடைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    • நாங்கள் 40 மாற்றுத்திறனாளிகள் கடந்த 4 ஆண்டுகளாக வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்.
    • மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

    ஈரோடு, 

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடந்தது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த மக்கள் தங்களது குறைகளை குறித்த மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.

    அப்போது தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வுரிமை நலச் சங்கம் கூட்டமைப்பு சார்பில் மாற்றுத்திறனாளிகள் திரண்டு வந்து ஒரு மனு கொடுத்தனர்.

    நாங்கள் 40 மாற்றுத்திறனாளிகள் கடந்த 4 ஆண்டுகளாக வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என மனு வழங்கி காத்து இருக்கிறோம். 7 - 3 - 2019 -ம் ஆண்டு பட்டா வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்.

    பின்னர் 16.10.2019-ம் ஆண்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

    அன்றைய தினம் மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த கவிதா எங்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியதில் விரைவில் விட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார்.

    அப்போது கொரோனா தொற்று காலமாக இருந்ததால் வீட்டு மனை பட்டா வழங்கப்படாமல் இருந்தது.

    தற்போது அரசாணை எண் 24-ன் படி தமிழக முதல்  அமைச்சர் அறிவித்தபடி வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மாற்றுத்திறனாளி களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    • கருப்பண்ணன் சிலை வைத்து வழிபட்டு வந்தனர்.
    • அந்த நிலத்தை சிலர் கையகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு ள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அடுத்த கட்டிகானப்பள்ளி ஊராட்சி ராயக்கோட்டை மேம்பாலம் அருகில், கட்டிகானப்பள்ளி, கீழ்புதூர், சோமார்பேட்டை உள்ளிட்ட 21 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஸ்ரீ பெரியமாரியம்மன் கோவில் அறக்கட்டளை நிர்வாகத்தால் காளியம்மன் மற்றும் கருப்பண்ணன் சிலை வைத்து வழிபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் அந்த இடத்தை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் தனி நபர் வாங்கியுள்ளார். எனவே, அந்த இடத்தில் உள்ள சிலைகளை அகற்றிட வேண்டும் என அந்த இடத்தை வாங்கிய நபர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    இதையடுத்து அந்த இடத்தை வாங்கியவரிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அந்த இடத்தில் இருந்த சாமி சிலைகள் அகற்றப்பட்டது.

    இந்த நிலையில், அந்த ஆலய அறக்கட்டளையினர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: -

    கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ள இடத்தில் ஸ்ரீ பெரிய மாரியம்மன் ஆலய அறக்கட்டளை நிர்வாகத்தால் காளியம்மன் மற்றும் கருப்பண்ணன் சிலை வைத்து, கிருஷ்ணகிரியை சுற்றியுள்ள 21 கிராம மக்கள் வழிபட்டு வந்தோம். இதனை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த வழக்கில் கிராம மக்கள் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த நிலத்தை சிலர் கையகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு ள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், வழக்கு முடியும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என, கிருஷ்ணகிரி உதவி கலெக்டர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர், கிருஷ்ணகிரி தாசில்தார் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    • வீடுகளில் அதிர்வு ஏற்பட்டு, குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    • விவசாயமும் செய்ய முடியவில்லை, ஆடுமாடுகளும் மேய்க்க முடியாத நிலை ஏற்படுகிறது.

    கிருஷ்ணகிரி,

    சூளகிரி அருகே உள்ள மாசிநாயக்கனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடிருப்புகள் உள்ளது. இந்த கிராமத்தின் அருகே உரிய அனுமதியின்றி கல்குவாரி மற்றும் கிரசர் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த குவாரிகளில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள வெடி மருத்துக்களை பயன்படுத்தி பாறைகள் வெடிகள் வைத்து உடைக்கப்படுகிறது. இதனால் எங்கள் வீடுகளில் அதிர்வு ஏற்பட்டு, குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும், கிராம சாலையை விவசாயிகள் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது கிரானைட் கற்கள் மற்றும் எம்.சாண்ட் மணல் ஆகியவை ராட்சத டிப்பர் லாரிகளில் எடுத்து செல்லப்படுவதால் விவசாயமும் செய்ய முடியவில்லை, ஆடுமாடுகளும் மேய்க்க முடியாத நிலை ஏற்படுகிறது, சில நேரங்களில் வேகமாக செல்லும் டிப்பர் லாரிகளால் விபத்துக்கள் ஏற்படுகிறது.

    இது குறித்து கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே, சட்ட விரோதமாக இயங்கும் கல்குவாரிகளால் ஏற்படும் விபத்தினை தடுத்து நிறுத்திடவும், கொலை மிரட்டல் விடுக்கும் குவாரி உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×