search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கந்த சஷ்டி திருவிழா"

    • சூரர் பொம்மைகளுக்கான உடல், கை, தலை போன்றவற்றை தயார் செய்யும் பணிகள் நேற்று தொடங்கியது.
    • சூரசம்ஹாரம் நாளை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா கடந்த 25-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு அடிவாரம் கிரிவீதிகளில் நடைபெறுகிறது. அப்போது சூரர்களான தாரகாசூரன், பானுகோபன், சிங்கமுகன், சூரபத்மன் ஆகியோரை முருகப்பெருமான் குத்தீட்டி, வேல் போன்ற ஆயுதங்களால் வதம் செய்வார்.

    இந்தநிலையில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்காக சூரர்களின் உருவ பொம்மைகள் தயார் செய்யும் பணி பழனியில் மும்முரமாக நடந்து வருகிறது. இதில் பழனியை சேர்ந்த ராமசாமி மகன் செல்வராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் குடும்பத்தினர் 3 தலைமுறையாக கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாக சூரர்களின் உருவ பொம்மைகளை செய்து வருகின்றனர். அதிலும் இவர்கள் உருவாக்கும் பொம்மைகள் கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது போல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    அதன்படி சூரர் பொம்மைகளுக்கான உடல், கை, தலை போன்றவற்றை தயார் செய்யும் பணிகள் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நிறைவு பெற்றவுடன் சூரர்களின் பொம்மைகள் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும்.

    சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கு பயன்படுத்தப்பட்ட பின் சூரர்களின் பொம்மைகள் விஸ்வ பிராமண மகாஜன சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்படும். தொடர்ந்து அவற்றுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பொம்மைகளை செய்தவர்களிடம் அவை மீண்டும் ஒப்படைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. திருவிழா தொடக்கம் முதல் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டகைகளில் ஏராளமான பக்தர்கள் தங்கி விரதம் இருந்து வருகின்றனர். சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

    இந்நிலையில் பக்தர்களுக்கு செய்யப்பட்ட அடிப்படை வசதிகள், ஏற்பாடுகளை நேற்று கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் கனிமொழி எம்.பி. தங்கி விரதம் இருக்கும் ஒவ்வொரு தற்காலிக கொட்டகைகளுக்கு சென்று பக்தர்களிடம் குறைகள் ஏதும் உள்ளதா? என கேட்டு, உங்களுக்கு வேண்டிய வசதிகளை கூறுங்கள் உடனடியாக நிவர்த்தி செய்து கொடுக்கிறோம் எனவும் கூறினார்.

    பின்னர் அன்னதான மண்டபத்திற்கு சென்று பக்தர்களிடம் அன்னதானம் குறித்து கேட்டறிந்தார்கள். கோவில் வளாகத்தில் அமைக்கப்படுள்ள மருத்துவ முகாம், தற்காலிக கழிப்பறைகளை நேரில் பார்த்து ஆய்வு செய்தார். அவர் ஆய்வு செய்த போது ஏராளமான பெண்கள் அவருடன் செல்பி எடுத்தனர். அவருக்கு, விரதம் இருக்கும் கிராமத்து பெண்கள் குலைவையிட்டு தங்களுடைய வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்தனர்.

    • விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
    • திங்கட்கிழமை திருக்கல்யாணம் நடக்கிறது.

    முருகபெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 4-ம் நாளான நேற்று அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலையில் உச்சிகால அபிஷேகம், தீபாராதனையை தொடர்ந்து யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது.

    மதியம் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். மாலையில் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி-அம்பாள்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இரவில் சுவாமி-அம்பாள்களுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது.

    மாலை 4 மணியளவில் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சந்தோஷ மண்டபத்தில் எழுந்தருளும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். பின்னர் சுவாமி-அம்பாள் புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயாபிஷேகம் (அதாவது கண்ணாடியில் தெரியும் சுவாமியின் பிம்பத்திற்கு அபிஷேகம்) நடைபெறுகிறது.

    7-ம் நாளான நாளை மறுநாள் (திங்கட்கிழமை) இரவு 11 மணியளவில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.

    விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் உள்ள தற்காலிக கூடாரங்களில் தங்கியிருந்து விரதமிருந்து வருகின்றனர். பெரும்பாலான பக்தர்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

    மேலும், பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மேற்பார்வையில், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • நிறைவாக தீப ஆராதனை காட்டியபின் இயன்ற நிவேதனம் செய்யுங்கள்.
    • அன்று மாலை, முருகன் கோவிலுக்கு போய் தரிசனம் செய்து விரதத்தினை நிறைவு செய்யுங்கள்.

    சூரசம்ஹார தினத்தன்று அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, அவரவர் வழக்கப்படி நெற்றிக்கு விபூதி, சந்தனம், குங்குமம் இட்டுக் கொள்ளுங்கள். பூஜை அறையில் வழக்கமான இடத்தில் திருவிளக்கினை ஏற்றி, குலதெய்வத்தை மனதார கும்பிடுங்கள். பிறகு, சஷ்டி விரதம் இருந்ததன் பலன் கிட்ட அருள வேண்டும் என்று பிள்ளையாரிடம் மனதார வேண்டுங்கள்.

    அடுத்து, உங்கள் வீட்டில் உள்ள முருகன் படம் அல்லது சிறிய முருகன் விக்ரகத்தினை எடுத்து கைகளில் வைத்துக்கொண்டு ஆறுமுகனை அகம் ஒன்றி கும்பிட்டு அன்போடு எழுந்தருள வேண்டுங்கள். பின் உங்கள் வசதிக்கு ஏற்றபடி சந்தனம், மஞ்சள், குங்குமம், ஜவ்வாது போன்றவற்றால் முருகனின் படம் அல்லது விக்ரகத்திற்கு பொட்டு வைத்து, பூப் போட்டு அலங்கரியுங்கள்.

    பூஜைக்கு உரிய இடத்தில் கோலமிட்டு அதன்மீது விக்ரகம் அல்லது படத்தினை வைத்து, தீபம் ஒன்றினை ஏற்றுங்கள். ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றை புகைய செய்து நறுமணம் கமழ செய்யுங்கள். மனம் முழுவதும் அந்த மயில் வாகனனையே நினைத்தபடி கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி, சுப்ரமண்ய புஜங்கம் போன்ற உங்களுக்கு தெரிந்த துதிகளை சொல்லுங்கள். அல்லது கேளுங்கள்.

    ஏதும் இயலாதவர்கள் கந்தா சரணம், முருகா சரணம், கார்த்திகை பாலா சரணம் என்று உங்களுக்கு தெரிந்தபடி சரணங்களை சொல்லுங்கள். நிறைவாக தீப ஆராதனை காட்டியபின் இயன்ற நிவேதனம் செய்யுங்கள். அன்று மாலை, பக்கத்திலுள்ள முருகன் கோவிலுக்கு போய் தரிசனம் செய்து விரதத்தினை நிறைவு செய்யுங்கள். வேலவன் அருளால் மணப்பேறு, மகப்பேறு, நல்வாழ்வு, ஆரோக்கியம், ஆயுள், புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டியயாவும் நிச்சயம் கைகூடும். நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் வாழ்வில் நிறையும்.

    • மூலவர் சுப்ரமணியசுவாமிக்கு 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது
    • சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    கோவையை அடுத்த மருதமலையில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சாமி கோவில் உள்ளது. இது முருகப்பெருமானின் 7-வது படை வீடு என முருக பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 26-ந்தேதி தொடங்கியது.

    கந்த சஷ்டி விழாவின் 2-வது நாளான நேற்று காலை 6 மணிக்கு கோ பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து கோவில் நடை திறக்கப்பட்டது பின்னர் மூலவர் சுப்ரமணிய சுவாமிக்கு பால், பன்னீர், ஜவ்வாது போன்ற 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது

    அதைத்தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மகா மண்டபத்தில் சுப்பிரமணியசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளினார். அதன்பிறகு மண்டபத்தில் காலையிலும் மாலையிலும் சண்முகார்ச்சனை மற்றும் யாகசாலை பூஜை நடந்தது. கந்த சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் நேற்று சுவாமி தரிசனம் செய்து தங்கள் விரதத்தை தொடர்ந்தனர்.

    • ஞாயிற்றுக்கிழமை சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
    • 31-ந்தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 3-ம் நாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.

    காலையில் உச்சிகால அபிஷேகம், தீபாராதனையை தொடர்ந்து யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி- தெய்வானையுடன் வெள்ளி சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    மாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி- தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமி- அம்பாள்களுக்கு மஞ்சள், பால், இளநீர், தேன், தயிர், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி-அம்பாள்களுக்கு அலங்காரமாகி, தீபாராதனை நடைபெற்றது. அதன்பிறகு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரிவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    6-ம் நாளான நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணியளவில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. 7-ம் நாளான வருகிற 31-ந்தேதி (திங்கட்கிழமை) இரவில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • கந்தன் தனது பிறப்பின் நோக்கமான சூரனை வென்று அவனை ஆட்கொண்ட இடம் இத்தலம் ஆகும்.
    • கந்தசஷ்டி கடைபிடிக்கப்படும் ஆறு நாட்களும் பக்தர்கள் பல்வேறுவிதமான விரதங்களை மேற்கொள்வார்கள்.

    அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் செந்திலாண்டவன் கோவில் ஒரு அற்புதமான நிலையில் அமைந்து உள்ளது. கடலை எல்லையாகக் கொண்ட இக்கோவிலை மக்களின் பாதுகாப்பு அரண் என்றே கூறலாம்.

    மலைகளில் கோவில் கொள்ளும் விளக்கம் கொண்ட முருகன் இத்தலத்தில் சந்தன மலைமீது எழுந்தருளி உள்ளார். மூலவர் இருக்கும் பகுதி குடைவரை கோவிலாக விளங்குகிறது. இந்த மலைப்பகுதியை மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள பெருமாள் சன்னதியில் காணலாம்.

    திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருக்கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்ற போதிலும் கந்த சஷ்டி விழா அனைத்துக்கும் சிகரமாக போற்றப்படுகிறது.

    கந்தன் தனது பிறப்பின் நோக்கமான சூரனை வென்று அவனை ஆட்கொண்ட இடம் இத்தலம் ஆகும். சூரனுக்கும் முருகனுக்கும் யுத்தம் நடந்ததை மெய்ப்பிக்கும் வகையில் கோவில் அருகில் நீண்ட கடற்கரை பகுதி அமைந்துள்ளது.

    கந்தசஷ்டி கடைபிடிக்கப்படும் ஆறு நாட்களும் பக்தர்கள் பல்வேறுவிதமான விரதங்களை மேற்கொள்வார்கள். சிலர் மவுன விரதம் இருப்பார்கள். சிலர் ஒரு வேளை மட்டும் உணவு உண்பார்கள். சிலர் பழங்கள் மற்றும் பழச்சாறு குடித்து விரதம் மேற்கொள்வார்கள். இந்த ஆறு நாட்களும் கோவிலில் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பாலசுப்பிரமணிய சுவாமி முன்பு சிறப்பு ஹோமங்கள் நடைபெறும். பின்னர் சாமி சண்முக மண்டபத்திற்கு எழுந்தருள்வார்.

    கந்தசஷ்டி கவசம் கந்தகுரு கவசம் கோவில் வளாகத்தில் ஒலிக்கும். கந்த சஷ்டி விழா கண்களுக்கும், காதுகளுக்கும் விருந்தாக அமையும். ஆண்டுதோறும் இந்த விரதத்தை மேற்கொள்ளும் பக்தர்கள் ஏராளமாக உள்ளனர். சஷ்டி விரதம் இருப்பதற்காக வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள்.

    திருச்செந்தூர் முருக பக்தர்கள் விரதம் இருக்கும் பக்தர்களுக்கு பானகம் உள்ளிட்ட பானங்களை வழங்கி மகிழ்வார்கள். சிலர் கந்த சஷ்டி கவசம் உள்ளிட்ட முருகன் பாராயண நூல்களை அச்சிட்டு பக்தர்களுக்கு வழங்குவார்கள். 24 மணி நேரமும் பக்தர்கள் முருகனின் நாமத்தை உரைத்தபடி இருப்பார்கள். செந்தூர் கடல்அலையும் ஓம் ஓம் என்று மந்திரம் இசைத்துக் கொண்டே இருக்கும். கடலில் குளித்து வந்தால் கவலைகள் எல்லாம் கரைந்து மறைந்து விடும்.

    ஒருமுறை திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்தவர்கள் மீண்டும் தரிசனம் செய்ய தவறமாட்டார்கள். அந்த அளவுக்கு முருகன் அவர்களை ஆட் கொண்டு விடுவார். மதுரையில் சிவபெருமான் ஏராளமான திருவிளையாடல்களை நிகழ்த்தி உள்ளார். அதே போல திருச்செந்தூரில் முருகனின் திருவிளையாடல் பல நிகழ்ந்துள்ளன. இன்றும் திருவிளையாடல்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அவரது திருவிளையாடல்கள் சில தொகுக்கப்பட்டு நூல்களாகவும் வெளிவந்துள்ளன.

    தமிழ் இலக்கியத்தில் திருச்செந்தூர்

    தமிழ் இலக்கியங்களில் திருச்செந்தூர் அலைவாய், சீரலைவாய் என்கிற பெயர்களில் போற்றப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்கள்

    தொல்காப்பியம்

    முருகன் தீம்புனல் அலைவாய் - தொல்காப்பியம் (களவு சூத்23)

    புறநானூறு

    வெண்டலைப் புனரி யலைக்குஞ் செந்தில்

    நெடுவேல் நிலைஇய காமர் வியன்துறை (பாடல் 55)

    அகநானூறு

    திருமணி விளக்கினலை வாய்ச்செரு மிகுசேஎய் (பாடல் 266)

    திருமுருகாற்றுப்படை

    உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர் அலைவாய்

    சிலப்பதிகாரம்

    சீர் கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்

    அருணகிரிநாதர் பாடல்

    இக்கோயில் குறித்தும், முருகப்பெருமான் குறித்தும் அருணகிரிநாதரின் பாடல் இது.

    அந்தண்மறை வேள்வி காவற் கார செந்தமிழ் சொல் பாவின் மாலைக் கார அண்டரூப கார சேவற் கார முடிமேலே -

    அஞ்சலிசெய் வோர்கள் நேயக் காரகுன்றுருவ ஏவும் வேலைக் காரஅந்தம்வெகு வான ரூபக் கார எழிலான;

    சிந்துரமின் மேவு போகக் காரவிந்தைகுற மாது வேளைக் காரசெஞ்சொலடி யார்கள் வாரக் கார எதிரான -

    செஞ்சமரை மாயு மாயக் காரதுங்கரண சூர சூறைக் கார செந்திநகர் வாழு மாண்மைக் கார பெருமாளே.

    • 30-ந்தேதி சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது.
    • 31-ந்தேதி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.

    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு விழாக்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது கந்தசஷ்டி திருவிழா.

    கோவிலில் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 6.30 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்கியது. காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது. மாலை 6.45 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடந்தது.

    விழாவின் 2-ம் நாளான 26-ந்தேதி முதல் 5-ம் நாளான 29-ந்தேதி வரையிலும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது.

    யாகசாலை பூஜை ஆரம்பமாகியது. யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானைக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி, அம்பாள்களுக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.

    பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க ரதத்தில் கிரி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 6-ம் நாளான வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 6.45 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்குகிறது. மதியம் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடக்கிறது.

    மதியம் 12.45 மணிக்கு யாகசாலையில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முக விலாச மண்டபத்தில் எழுந்தருளுகிறார். பின்னர் சுவாமிக்கு தீபாராதனை நடக்கிறது. மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானைக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி, சூரனை வேல் கொண்டு வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது. இதில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

    7-ம் நாளான 31-ந்தேதி (திங்கட்கிழமை) இரவு 11 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.

    அன்று காலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 3.30 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது.காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், 1 மணிக்கு மற்றகால பூஜைகள் நடக்கிறது. மாலை 5 மணிக்கு அம்பாள் தபசு காட்சிக்கு புறப்படுதல், 6.30 மணிக்கு சுவாமி- அம்பாளுக்கு மாலை மாற்றும் வைபவம் நடைபெற்று அன்று இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.

    • ஆறுமுகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    காஞ்சீபுரம் குமரக்கோட்டத்தில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆறுமுகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து,பாதாம், பிஸ்தா, முந்திரி, ஏலக்காய், கிராம்பு மாலை, மற்றும் சாமந்திப்பூ, மல்லிகைப்பூ, மாலைகள் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    சிறப்பு லட்சார்ச்சனை செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து முருகப்பெருமான் மான் வாகனத்தில் எழுந்தருளி ராஜவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • நாளை காலை 9 மணிக்கு சங்காபிஷேகம் நடக்கிறது.
    • 30-ந்தேதி பக்தர்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வருகிறார்கள்.

    ஈரோடு திண்டலில் பிரசித்தி பெற்ற வேலாயுதசாமி (முருகன்) கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்படும். அதுபோல் இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா நேற்று காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின்னர் வள்ளி-தெய்வானை சமேத முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு யாகபூஜை நடந்தன.

    கோவிலில் முருகனை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வந்தனர். அவர்கள் மலை படிக்கட்டு வழியாக ஏறி கோவிலுக்கு சென்றனர். அங்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த முருகனை நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும், பக்தர்கள் தங்களது வலது கையில் காப்பு கயிறு கட்டிக்கொண்டு கந்தசஷ்டி விரதத்தை தொடங்கினார்கள். கோவிலின் பூசாரிகள் பக்தர்களுக்கு காப்பு கயிறு அணிவித்தனர். விழாவையொட்டி பக்தர்கள் 6 நாட்களுக்கு தொடர்ந்து விரதம் கடைபிடிப்பார்கள்.

    இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு சடாஷர ஹோமமும், நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு சங்காபிஷேகமும் நடைபெறுகிறது. வருகிற 30-ந் தேதி காலை 10 மணிக்கு பக்தர்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வருகிறார்கள். பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பாலில் முருகனுக்கு அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. மாலை 6 மணிக்கு சூரனை முருகன் வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    வருகிற 31-ந் தேதி காலை 9 மணிக்கு வேலாயுதசாமிக்கும், வள்ளி-தெய்வானைக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ளும் பெண்களுக்கு மஞ்சள் கயிறு வழங்கப்படும். மேலும், பக்தர்கள் விரதத்தை முடித்துக்கொள்வார்கள். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

    இதேபோல் அனைத்து முருகன் கோவில்களிலும் நேற்று கந்தசஷ்டி விழா தொடங்கியது.

    • தண்டு விரதம் இருக்கும் பழக்கம் பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மட்டுமே காண முடியும்.
    • 31-ந்தேதி மகாஅபிஷேகம் நடக்கிறது.

    பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சூரசம்ஹார விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான விழா நேற்று கந்தசஷ்டி உற்சவம், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கையில் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். இதை தொடர்ந்து 1-ந்தேதி வரை நான்கு கால அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.

    நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு சிவபெருமானிடம் இருந்து சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 30-ந்தேதி மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. கோவிலில் இருந்து சுப்பிரமணிய சுவாமி புறப்பட்டு எஸ்.எஸ்.கோவில் வீதி வழியாக சென்று, சத்திரம் வீதி, தெப்பக்குளம் வீதி சந்திப்பில் முதல் கஜமுகா சூரனை வதம் செய்கிறார். பின்னர் தெப்பக்குளம் வீதி வழியாக சென்று வெங்கட்ரமணன் வீதி சந்திக்கும் இடத்தில் 2-வதாக சிங்கமுகா சூரனையும், 3-வதாக வெங்கட்ரமணன் வீதி, ராஜாமில் ரோடு சந்திக்கும் இடத்தில் பாலுகோபன் சூரனையும் வதம் செய்கிறார். பின்னர் உடுமலை ரோடு வழியாக சென்று தேர்நிலை திடலில் 4-வதாக சூரபத்மன் சூரனை வதம் செய்து விட்டு, மீண்டும் கோவிலுக்கு வந்தடைகிறார்.

    31-ந்தேதி காலை 10 மணிக்கு மகாஅபிஷேகம் நடக்கிறது. அதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், 1-ந்தேதி மாலை 6 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது. இந்த விழாவையொட்டி நேற்று முதல் 30-ந்தேதி வரை பக்தர்கள் விரதம் இருப்பார்கள். சூரசம்ஹாரம் முடிந்ததும் வாழைத்தண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, சாத்துக்குடி போன்ற பழவகைகள், தயிர், கருவேப்பிலை, கொத்துமல்லிதழை ஆகியவற்றை கொண்டு பிரசாதம் தயார் செய்து சுப்பிரமணிய சுவாமிக்கு படைத்து விரதத்தை முடிப்பார்கள். தண்டு விரதம் இருக்கும் பழக்கம் பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மட்டும் காண முடியும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    • 29-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    • நவம்பர் 1-ந்தேதி வள்ளி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது.

    நாகை மாவட்டம் சிக்கலில் பிரசித்தி பெற்ற சிங்காரவேலவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள வேல்நெடுங்கன்னி அம்மனிடம், முருகன் வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் செய்ததாக கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. முருகன், வேல்நெடுங்கன்னியிடம், வேல் வாங்கும் போது முருகனின் முகம் மற்றும் திருமேனி முழுவதும் வியர்வை சிந்தும் அற்புத காட்சியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருவார்கள்.

    சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 10 நாட்கள் கந்தசஷ்டி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா நேற்று முன்தினம் காப்புகட்டுதலுடன் தொடங்கியது. விழாவில் சிங்காரவேலவர் தங்கமஞ்சத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். இந்த விழா அடுத்த மாதம்( நவம்பர்) 3-ந்தேதி வரை நடக்கிறது, நேற்று இரவு ஆட்டுக்கிடா வாகனத்தில் சாமி வீதி உலா நடந்தது. இன்று (வியாழக்கிழமை) தங்கமயில் வாகனத் திலும், நாளை (வெள்ளிக்கிழமை) ரிஷப வாகனத்திலும் சாமி வீதி உலா நடக்கிறது.

    29-ந்தேதி(சனிக்கிழமை) காலை தேரோட்டமும், இரவு வேல் வாங்கும் நிகழ்ச்சியும், 30-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை9 மாலை சூரசம்ஹார நிகழ்ச்சியும், 31-ந் தேதி(திங்கட்கிழமை) தெய்வ சேனை திருக்கல்யாணமும், நவம்பர் 1-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) வள்ளி திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    ×