search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kantha Sasti Festival"

    • சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம் செய்யப்பட்டது.
    • கந்தசஷ்டி விழாவின் சிறப்பு குறித்து விளக்கி கூறப்பட்டது.

    உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா, கடந்த மாதம் 25-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் உச்சிகால பூஜையில் சுவாமிக்கு கல்பபூஜை நடைபெற்றது. இதேபோல் தங்க சப்பரம், வெள்ளி சப்பரத்தில் சின்னக்குமாரர் புறப்பாடும் நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் இரவு அடிவாரம் கிரிவீதிகளில் நடைபெற்றது. அப்போது பராசக்திவேல் கொண்டு முருகப்பெருமான் சூரர்களை வதம் செய்தார்.

    இந்தநிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை மலைக்கோவிலில் சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக காலை 8 மணிக்கு மேல் மலைக்கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து திருமண சடங்குகள் தொடங்கின. மணமேடைக்கு முன்பு பிரதான கலசம் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது.

    பின்னர் சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து காலை 9.30 மணிக்கு மேல் தனுர் லக்னத்தில் சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், திருமாங்கல்யத்தை தெய்வானை மற்றும் வள்ளிக்கு அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார்.

    அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா...! முருகனுக்கு அரோகரா...! என சரண கோஷம் எழுப்பினர். கோவில் குருக்கள் செல்வசுப்பிரமணியம் மற்றும் குருக்கள்கள் திருமண மந்திரங்களை ஓதினர். முன்னதாக கந்தசஷ்டி விழாவின் சிறப்பு குறித்து விளக்கி கூறப்பட்டது.

    இதைத்தொடர்ந்து சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதையடுத்து சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு 16 வகை தீபாராதனை, மகாதீபாராதனை காட்டப்பட்டது. முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    பின்னர் திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து சப்பரத்தில் சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் மலைக்கோவில் பிரகாரத்தை வலம் வந்து சண்முகருக்கான சன்னதியில் எழுந்தருளினார். திருக்கல்யாண நிகழ்ச்சியையொட்டி கோவில் அன்னதான கூடத்தில் நேற்று திருமண விருந்து நடைபெற்றது. இந்த விருந்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    திருக்கல்யாண நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், உறுப்பினர்கள் ராஜசேகரன், மணிமாறன், சத்யா, கோவில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ் மற்றும் கோவில் அலுவலர்கள், பழனி நகர் முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதேபோல் கந்தசஷ்டி விழாவையொட்டி பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் நேற்று இரவு 7 மணிக்கு மேல் ரிஷப லக்னத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இரவு 9 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

    • திருக்கல்யாணத்தை முன்னிட்டு மண்டபம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
    • பக்தர்களுக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

    கோவையை அடுத்த மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் முருகனின் 7-வது படை வீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 26-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம் ஹார நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.

    நேற்று காலை 6 மணிக்கு கோ பூஜை நடைபெற்றது. பின்னர் கோவில் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து மூலவருக்கு யாகசாலை கலசங்கள் மூலம் அபிஷேகம் நடைபெற்றது. விநாயகர் பூஜை, புண் யாகம் கலசங்கள், ஆவாகனம், கணபதி வேள்வி நடந்தது. காலை 9 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, வள்ளி தெய்வானையுடன் ஆதி மூலஸ்தானத்தின் முன்புறம் உள்ள திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளினார்.

    திருக்கல்யாணத்தை முன்னிட்டு மண்டபம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அதில் சுப்பிரமணிய சுவாமி வெண் பட்டு உடுத்தியும், வள்ளி பச்சை பட்டு உடுத்தியும் தெய்வானை அம்மன் சிவப்பு பட்டு உடுத்தியும் எழுந்தருளினர். இதையடுத்து சுவாமிக்கும் வள்ளி தெய்வானைக்கும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து கணபதி வேள்வி பூஜை, தாரை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.

    சரியாக 10.25 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் மருதமலை முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா, என பக்தி முழக்கமிட்டனர். பக்தர்களுக்கு மாங்கல்ய பிரசாதம் குங்குமம், மஞ்சள் மாங்கல்ய கயிறு ஆகியவை வழங்கப்பட்டது. அதை பெண்கள் அணிந்து கொண்டனர். பக்தர்கள் சுவாமிக்கு மொய்ப்பணம் எழுதினர். இதில், மொத்தம் ரூ.57ஆயிரத்து 910 வசூல் ஆனது.

    அதைத்தொடர்ந்து பொற்சுன்ன பாடல் பாடி சுவாமிக்கும் வள்ளி, தெய்வானைக்கும் மஞ்சள் அணிவிக்கப்பட்டது. பாத காணிக்கை செலுத்துதல், பூஜை, மகா தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் புஷ்ப பல்லக்கில் கோவிலை சுற்றி வீதி உலா வந்தார். கந்த சஷ்டி விரதம் இருந்த பக்தர்களுக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. அதை சாப்பிட்டு அவர்கள் விரதத்தை முடித்துக் கொண்டனர்.

    திருக்கல்யாணத்தையொட்டி மலைப்பாதையில் செல்ல 2 சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட வில்லை. கோவில் சார்பில் மினி பஸ்கள் இயக்கப் பட்டன. விழா ஏற்பாடுக ளை மருதமலை சுப்பிரமணியசாமி கோவில் துணை ஆணையர் ஹர்ஷினி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.

    • விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • இன்று இரவில் பட்டினபிரவேச நிகழ்ச்சி நடக்கிறது.

    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந்தேதி தொடங்கியது. 6-ம் நாளான நேற்று முன்தினம் மாலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடந்தது.

    7-ம் நாளான நேற்று இரவில் சுவாமி குமரவிடங்க பெருமான்- தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. அதிகாலை 5 மணியளவில் தெய்வானை அம்பாள் தெப்பக்குளம் அருகில் உள்ள நட்டாத்தி பண்ணையார் தபசு காட்சி மண்டபத்தில் எழுந்தருளினார்.

    மாலையில் சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்தில் கோவிலில் இருந்து புறப்பட்டு சன்னதி தெரு, புளியடி சந்தனமாரியம்மன் கோவில் தெரு, சபாபதிபுரம் தெரு, தெற்கு ரதவீதி வழியாக நட்டாத்தி பண்ணையார் தபசு காட்சி மண்டபத்துக்கு வந்தார். அங்கு தெய்வானை அம்பாளுக்கு காட்சி கொடுத்த பின்னர் தீபாராதனை நடைபெற்றது.

    அதன்பிறகு தெற்கு ரதவீதி, மேல ரதவீதி சந்திப்பு பகுதியில் சுவாமி குமரவிடங்க பெருமானும், தெய்வானை அம்பாளும் எழுந்தருளினர். தெற்கு ரதவீதியில் நின்ற சுவாமி குமரவிடங்க பெருமானை, தெய்வானை அம்பாள் மூன்று முறை சுற்றி வந்தார். தொடர்ந்து சுவாமி-அம்பாள் தோள்மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் பட்டாடைகள், மாலைகள் மாற்றப்பட்டது. சுவாமிக்கு தீபாராதனையான பின்னர் அம்பாளுக்கும் தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் சுவாமியும், அம்பாளும் மேல ரதவீதி, வடக்கு ரதவீதி, கீழ ரதவீதி மற்றும் 4 உள்மாட வீதிகளில் உலா வந்து, சன்னதி தெரு வழியாக கோவிலுக்கு சென்றனர். இரவில் ராஜகோபுர திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடந்தது.

    விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாணத்தில் மொய் எழுதிய பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, சுவாமி படம் அடங்கிய பிரசாதம் வழங்கப்பட்டது.

    இன்று (செவ்வாய்க்கிழமை) இரவில் சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள் பூம்பல்லக்கிலும் எழுந்தருளி பட்டினபிரவேசம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    • வடக்கு தெருவில் இருந்து சீர்வரிசை கொண்டு வந்தனர்.
    • சுவாமி உள்புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்றழைக்கப்படும் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் ஒன்று உள்ளது.கோவிலுக்கு 19 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி ரூ.ஒரு கோடியே 25 லட்சம் செலவில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதன் பின்னர்,தொடர்ந்து 48 நாட்கள் மண்டலபிஷேகம் நடைபெற்றது.கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த கந்த சஷ்டி விழா இக்கோவிலில் கடந்த 25-ம் தேதி துவங்கியது.எனவே,அன்று காலை கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.

    இந்நிலையில்,நேற்று முன் தினம் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.நேற்று இரவு திருக்கல்யாண நிகழ்ச்சி கொட்டும் மழையிலும் நடைபெற்றது. இதை முன்னிட்டு வடக்கு தெருவில் இருந்து சீர்வரிசை கொண்டு வந்தனர்.இதன் பின்னர், திருக்கல்யாணம் உற்சவ நிகழ்ச்சியும், மாலை மாற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதன் பின்னர், சுவாமி உள்புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார் மற்றும் பணியாளர்கள் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    • சூரபத்மனை சம்ஹாரம் செய்ய அவதரித்தவர் முருகப்பெருமான்.
    • சூரனை சம்ஹாரம் செய்த போது முருகப்பெருமான் செய்த திருவிளையாடலை இங்கு காண்போம்...

    ஆணவம், அகங்காரம் கொண்டு தேவர்களை சிறை பிடித்து துன்புறுத்திய சூரபத்மனை சம்ஹாரம் செய்ய அவதரித்தவர் முருகப்பெருமான்.

    சூரனை வேல் கொண்டு முருகப்பெருமான் சம்ஹாரம் செய்ததை கந்த சஷ்டி விழாவாக கோவில்களில் பக்தர்கள் கொண்டாடுகின்றனர்.

    இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோவில்களில் நடக்கிறது. சூரனை சம்ஹாரம் செய்த போது முருகப்பெருமான் செய்த திருவிளையாடலை இங்கு காண்போம்...

    முருகப்பெருமானுக்கு பார்வதி தேவியார் தன் சக்தி மிகுந்த வேலை கொடுக்க சூரபத்மனுக்கு எதிரான போருக்கு முருக பெருமான் புறப்பட்டார். திருச்செந்தூரில் தன் படை பாசறையை அமைத்தார். பார்வதி தேவியின் பாத சிலம்பில் இருந்து தோன்றிய நவ சக்தியர்களிடம் இருந்து நவ வீரர்களான வீரபாகு தேவர், வீரகேசரி, வீர மகேந்திரா, வீர மகேசுவரர், வீர புரந்தரர், வீராக்கதர், வீர மார்த்தாண்டர், வீராந்தகர், வீர தீரர் மற்றும் லட்சம் வீரர்களும் தோன்றி முருகனின் படை தளபதிகளாக விளங்கினர். சூரபத்மனையும், அவனுடன் சேர்ந்த அசுரர்களையும் அழித்து, தேவேந்திரனுக்கு பட்டாபிஷேகம் செய்து தர்மத்தை நிலை நாட்ட புறப்படுவாயாக என்று கந்தனுக்கு சிவபெருமான் அன்பு கட்டளையிட்டார்.

    செம்பொன் பதக்கம்

    வெற்றி சங்கு முழங்கியது. மலர் மாரிபொழிந்தது. தேவசேனாபதியின் பெரும் படை செல்லும் வழியில் கிரவுஞ்சமலை எதிர் பட்டது. அந்த மலைக்கு அதிபதியான சூரபத்மனின் தம்பியாகிய தாரகா சூரனை சம்ஹாரம் செய்து, அவன் மார்பில் அணிந்திருந்த திருமாலின் சக்ராயுதமாகிய செம்பொன் பதக்கத்தை முருகன் பெற்றார்.

    முருக பெருமானின் படைகள் ஏழு கடல்களையும் கலக்கி ஆரவாரத்துடன் புறப்பட்டன. சூரபத்மன் மகன் பானுகோபன் புறப்பட்டு வந்து முருக பெருமான் படையோடு போரிட்டு படு தோல்வி அடைந்து புற முதுகுகாட்டி ஓடினான். 3-ம் நாள் போரில் பானு கோபன் கொல்லப்பட்டான். அடுத்து சிங்க முக சூரன் சிங்கமென சீறிப்பாய்ந்து போர்க்களம் வந்தான். ஆனால் முருக பெருமானின் வேல், சிங்கமுக சூரனை சம்ஹாரம் செய்து, அவனும் கொல்லப்பட்டான். அடுத்து சூரபத்மன், தலைமை அமைச்சர் தருமகோபன், சூரபத்மனின் மக்கள் மூவாயிரம் பேரும் கொல்லப்பட்டனர்.

    மாயப்போர்

    முடிவில் எஞ்சி நின்றது சூரபத்மன் மட்டுமே. பெரும் படையுடன் சூரபத்மன் போருக்கு வந்தான். மிக அற்புதமாக மாயப்போர் புரிந்தான். முருகனது வேலில் இருந்து தப்பிக்க மிருகங்கள், பறவைகள், மரங்கள் என மாறி, மாறி மாயத்தால் தப்பினான். இறுதியில் முருகப்பெருமானின் வேல் படை சூரபத்மனை தேடி சென்று செந்தூர் அருகே உள்ள மரப்பாடு என்ற மாந்தோப்பில் மறைந்த மாமரத்தை இரு கூறாக பிரித்தது. சூரபத்மன் ஆணவம், அகங்காரம் ஒழிந்தது. இரண்டும் சேவலாகவும், மயிலாகவும் மாறியது.

    பின்னர் முருகனது வேல் கங்கைக்கு சென்று நீரில் மூழ்கி, தோஷம் நீங்கி மீண்டும் முருகன் கைக்கு வந்தது. அதை கடற்கரை ஓரத்தில் பூமியில் குத்த உள்ளே இருந்து நீர் பீறிட்டு வெளியே வந்தது. அந்த நீர்தான் நாழிக்கிணறு ஆனது. அந்த நீரையும், மணலையும் சேர்த்து சிவலிங்கம் செய்து முருகன் சிவபூஜை செய்தார். விண்ணும், மண்ணும் குளிர்ந்தது. தேவர்கள், முனிவர்கள் மலர் மாரி பொழிந்தனர். தேவாதி தேவர்கள் புடைசூழ திருப்பரங்குன்றம் தலத்துக்கு முருகப்பெருமான் வந்தார். குன்றத்தில் தவம் செய்து வந்த 6 முனிவர்களுக்கு திருவருள் புரிந்தார். 6 முனிவர்களும் முருகப்பெருமானை தேவதச்சனால் நிர்மாணிக்கப்பட்ட பொன் வண்ண கோவிலினுள் எழுந்தருள செய்தனர்.

    திருமணம்

    தேவேந்திரன் தன் மகளாகிய தெய்வானையை முருகப்பெருமானுக்கு திருமணம் செய்ய எண்ணி பிரம்மனிடம் தெரிவிக்க, பிரம்மன் முருகனின் உளப்பாங்கு அறிந்து அவரிடம் தனது விண்ணப்பத்தை வைத்தார். முருக பெருமானும் மகிழ்ந்து சம்மதம் சொன்னார். திருப்பரங்குன்றத்திலே மங்கள மண நாள் அன்று ஈரேழு பதினான்கு லோகங்களும் வியக்கும் வண்ணம் இந்திரனும், அவர் மனைவி இந்திராணியும் தெய்வானையின் கையை பிடித்து முருகனிடம் ஒப்படைத்தனர். திருமணம் அதி அற்புதமாக நடந்தேறியது.

    சிவபெருமான்-பார்வதி தேவியை முருகன்-தெய்வானை ஆகியோர் மூன்று முறை சுற்றி வந்து வழிபட்டனர். பின் நால்வரும் திருமணத்துக்கு வந்த அனைவரையும் ஆசீர்வதித்தனர். பின்னர் முருக பெருமான் நீல மயில் மீது ஏறி குன்றிலே தேவசேனா தேவியுடன் எழுந்தருளி அருள் புரிந்தார். முருகப்பெருமானது வரலாறுகளையும் சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண வைபவங்களையும் உணர்ந்து கந்த சஷ்டியன்று அவரது தரிசனம் பெற்ற அனைவருக்கும் ஆறுமுக பெருமான் ஆனந்த வாழ்வு தருவார்.

    • இன்று (ஞாயிற்றுக்கிழமை) சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
    • திருஆவினன்குடி கோவிலில் பராசக்தி வேல் வைத்து சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

    பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான கந்தசஷ்டி விழா கடந்த 25-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. பின்னர் ஒவ்வொரு நாளும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். அதன்படி நேற்று சின்னக்குமாரர் பொன்னூஞ்சலில் எழுந்தருளினார்.

    இந்தநிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு, 4.30 மணிக்கு விளாபூஜை, படையல் நைவேத்தியம், 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, மதியம் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறுகிறது. பின்னர் சூரர்களை வதம் செய்வதற்காக மலைக்கோவிலில் சின்னக்குமாரர், மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து கோவில் நடை சாத்தப்படுகிறது.

    பின்னர் வில், அம்பு, கேடயம், குத்தீட்டி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சின்னக்குமாரர் சூரசம்ஹாரத்துக்காக மலைக்கோவிலில் இருந்து புறப்பட்டு அடிவாரம் வருகிறார். திருஆவினன்குடி கோவிலில் பராசக்தி வேல் வைத்து சிறப்பு பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து 6 மணிக்கு மேல் கிரிவீதிகளில் தாரகாசூரன், பானுகோபன், சிங்கமுகன், சூரபத்மன் ஆகியோரை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் இரவு 9 மணிக்கு மேல் ஆரியர் மண்டபத்தில் வெற்றிவிழா நடக்கிறது. தொடர்ந்து பராசக்தி வேல் மலைக்கோவிலுக்கு சென்று சம்ரோட்சன பூஜை, ராக்கால பூஜை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமையில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (திங்கட்கிழமை) திருக்கல்யாணம் நடைபெறுகிறது. நாளை காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் பழனி மலை கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் சண்முகர் மற்றும் வள்ளி தெய்வானைக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து மாலை பெரிய நாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசாமி, வள்ளி தெய்வானைக்கு மாலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    • வருகிற 2-ந்தேதி சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது.
    • இன்று மாலை 4 மணியளவில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த குடவரை கோவிலான கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந்தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    5-ம் நாளான நேற்று காலை 11.30 மணியளவில் வீரபாகு மூன்றுமுறை தூது சென்ற பின்னரும் பணியாத சூரபத்மனின் தம்பி தாரகாசூரனை முருக பெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் சிகர நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணியளவில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் இரவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெறும்.

    வருகிற 2-ந்தேதி (புதன்கிழமை) சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் கார்த்தீஸ்வரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • பூச்சப்பரத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • திருவிழா நாளை(திங்கட்கிழமை) வரை நடக்கிறது.

    முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் முதற் படைவீடு கொண்ட திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 5-ம் நாளான நேற்று "வேல்வாங்கும்" நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி உற்சவர் சன்னதியில் இருந்து மேளதாளங்கள் முழங்க சர்வ அலங்காரத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமானும், சத்திய கிரீஸ்வரரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    இந்தநிலையில் முருகப்பெருமான் தன் தாயார் கோவர்த்தனாம்பிகையிடம் இருந்து "சக்திவேல்" பெறும் நிகழ்ச்சி நடந்தது. இதில் முருகப்பெருமானின் பிரதிநிதியான சிவாச்சாரியார் தன் கையில் வேல் வாங்கி சகல பரிவாரங்களுடன் கோவர்த்தனாம்பிகை சன்னதியில் இருந்து புறப்பட்டு கம்பத்தடி மண்டபத்தில் உள்ள நந்தியை வலம் வந்து சத்தியகிரீஸ்வரர் முன்னிலையில் முருகப்பெருமான் திருக்கரத்தில் சக்திவேல் சமர்ப்பிக்கப்பட்டது. அப்போது திரளாக கூடி இருந்த பக்தர்கள், வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா என்று பக்தி கோஷங்கள் எழுப்பினர்.

    இதைதொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. பின்னர் பூச்சப்பரத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி 6 முறை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழா நாளை(திங்கட்கிழமை) வரை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் துணை கமிஷனர் சுரேஷ் தலைமையில் சிவாச்சாரியர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    கந்த சஷ்டி திருவிழாவையொட்டி கோவிலுக்குள் உள்ள மண்டபங்கள் மற்றும் சஷ்டி மண்டப வளாக பகுதியில் ஏராளமான பக்தர்கள் தங்கி விரதமிருந்து வருகிறார்கள். இவர்களுக்காக பக்தி சினிமா, ஆன்மிக சொற்பொழிவு மற்றும் இன்னிசை நிகழ்ச்சி நடந்து வருகிறது.

    • அனைத்து செல்வங்களையும் தர வல்லது சஷ்டி விரதம்.
    • பகைமையை மாற்றி ஞானம் பெறுவதே இந்த விரதத்தின் சிறப்பு.

    கந்த சஷ்டி விரதத்தை முறைப்படி கடைப்பிடிப்பவர்கள் மற்ற எல்லா விரதங்களையும் கடைபிடித்த பலனை பெறுகின்றனர். கந்தசஷ்டி விரதத்தின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் நடைபெறுகிறது. 'சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்' என்ற பழமொழிக்கு உண்மையான பொருளானது, சஷ்டி திதியில் விரதம் இருந்து முருகனை வேண்டினால் அகப்பையான கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும்.

    'மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்தருளும் எந்தநாளும் ஈரெட்டாய் வாழ்வர்' என்ற கந்தசஷ்டி கவச வரிகள் மூலம் குழந்தை செல்வம் உள்பட அனைத்து செல்வங்களையும் தர வல்லது சஷ்டி விரதம் என அறியலாம். கந்தசஷ்டி விரதம் ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி வளர்பிறையில் 6 நாட்கள் விழாவாக கொண்டாடப்படுகிறது. சஷ்டி திதியில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

    ஆணவம் மிகுந்த சூரனை முருகபெருமான் 6 நாள் போருக்குப்பின் சம்ஹாரம் செய்தார். சூரனை வதம் செய்த இடம் என்பதால், திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சூரபத்மனுடன் முருகன் 6 நாட்கள் போர் புரிந்தபோது, அவரது பக்தர்கள் திருச்செந்தூரில் விரதம் இருந்து தியானித்தனர். அதன்படி, தற்போதும் கந்தசஷ்டியின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் மேற்கொள்கிறார்கள்.

    சூரசம்ஹாரத்தின்போது சூரபத்மன் மீது முருகபெருமானின் வேல் பாய்ந்ததும், அவனிடம் இருந்த அஞ்ஞானம் மறைந்து மெய்ஞானம் வரப்பெற்றான். உடனே அவனை அழிக்காமல் சேவலாகவும், மயிலாகவும் முருகபெருமான் ஆட்கொண்டார். சேவலை தனது கொடியாகவும் மயிலை வாகனமாகவும் மாற்றினார்.

    பகைவனை கொல்வது சஷ்டி விரதம் அல்ல. பகைமையை மாற்றி ஞானம் பெறுவதே இந்த விரதத்தின் சிறப்பு. யானைமுக சூரனை வெல்வது மாயையை ஒழிப்பதாகவும், சிங்கமுக சூரனை வெல்வது கன்மத்தை ஒழிப்பதாகவும், சூரபத்மனை வெல்வது ஆணவத்தை அழிப்பதாகவும் கருதப்படுகிறது. உண்ணா நோன்பு இருந்தால் ஆணவம் அடங்கும். ஆன்மா இறைவனோடு ஒன்றுபடும் இந்த உயரிய தத்துவத்தை விளக்குவதே கந்த சஷ்டி ஆகும்.

    இந்த நிகழ்வினை அனைவரும் அறியும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா 6 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலால் திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் பக்தர்களின்றி எளிமையாக நடத்தப்பட்டது.

    இந்த ஆண்டு வழக்கமான உற்சாகத்துடன் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணியளவில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதனை தரிசிக்க தலையா? கடல் அலையா? என்று பிரமித்து கூறும் வகையில் பல லட்சக்கணக்கான மக்கள் கடற்கரையில் கூடுகின்றனர்.

    சூரசம்ஹாரம் முடிந்ததும் 6 நாட்களாக விரதம் மேற்கொண்ட பக்தர்கள் கடலில் புனித நீராடி விரதத்தை நிறைவு செய்கின்றனர். 7-ம் நாளான நாளை (திங்கட்கிழமை) இரவில் கோவில் ராஜகோபுரம் முன்பாக சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

    கோவையை அடுத்த மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 3 மணிக்கு மூலவரிடம் இருந்து வேல் வாங்கி அன்னையிடம் வைத்து பூஜை செய்து சுப்ரமணியசாமி வேலை பெற்று கொண்டு சூரசம்காரத்திற்கு ஆட்டுக்கிடாய் வாகனத்திலும், வீரபாகு தேவர் குதிரை வாகனத்திலும் எழுந்தருளி முதலா வதாக தாராகசூரன் வதம், 2-தாக பானு கோபம் வதம், 3-வதாக சிங்கமுக சூரன் வதம், 4-வதாக சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    சென்னிமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இரவு 7 மணிக்கு மேல் நடைபெறுகிறது.

    ஊட்டி லோயர் பஜார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாலை 6.05 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது.

    குமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் நாகராஜா கோவிலில் உள்ள பாலமுருகன் சன்னதி, வேளிமலை குமாரகோவில், வெள்ளிமலை பாலசுப்பிரமணிய சாமி கோவில், முருகன்குன்றம் கோவில், மருங்கூர் சுப்பிரமணியசாமி கோவில், தோவாளை செக்கர்கிரி முருகன் கோவில் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களிலும் கந்த சஷ்டி திருவிழா தொடங்கி நடந்து வருகிறது.

    6-ம் நாள் விழாவான இன்று பிற்பகல் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. நாகர்கோவில் நாகராஜா கோவிலில் உள்ள முருகன் சன்னதியில் இன்று மாலை 4 மணிக்கு சூரசம்ஹாரத்திற்கு வாகனத்தில் சாமி எழுந்தருளல், 6.30 மணிக்கு சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது.

    பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் இன்று மாலை 3 மணிக்கு மேல் கோவில் வளாகத்தில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த குடவரை கோவிலான கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணியளவில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் இரவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெறும்.

    அதே போல் சென்னையில் உள்ள கந்தசாமி கோவில், வடபழனி முருகன் கோவில் உள்ளிட்ட முருகன் தலங்களில் இன்று சூரசம்ஹாரம் நடக்கிறது.

    • கந்தசஷ்டி விரதத்தின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடக்கிறது.
    • நாளை குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.

    கந்த சஷ்டி விரதத்தை முறைப்படி கடைப்பிடிப்பவர்கள் மற்ற எல்லா விரதங்களையும் கடைபிடித்த பலனை பெறுகின்றனர். கந்தசஷ்டி விரதத்தின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் நடைபெறுகிறது. 'சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்' என்ற பழமொழிக்கு உண்மையான பொருளானது, சஷ்டி திதியில் விரதம் இருந்து முருகனை வேண்டினால் அகப்பையான கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும்.

    'மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்தருளும் எந்தநாளும் ஈரெட்டாய் வாழ்வர்' என்ற கந்தசஷ்டி கவச வரிகள் மூலம் குழந்தை செல்வம் உள்பட அனைத்து செல்வங்களையும் தர வல்லது சஷ்டி விரதம் என அறியலாம். கந்தசஷ்டி விரதம் ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி வளர்பிறையில் 6 நாட்கள் விழாவாக கொண்டாடப்படுகிறது. சஷ்டி திதியில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

    முருகன் அவதாரம்

    சூரபத்மன் என்ற அசுரன் கடும் தவம் செய்து சிவபெருமானிடம் சில வரங்களை பெற்றான். அதன்படி, இந்த உலகில் தன்னை எவரும் வெல்லக்கூடாது, ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறந்த பிள்ளையால் எனக்கு மரணம் நேரிடக்கூடாது என்ற வரங்களை பெற்றிருந்தான்.

    வரங்களை பெற்ற சூரபத்மன் ஆணவம் கொண்டு தேவர்களை கொடுமைப்படுத்தினான். இதனை பொறுக்க முடியாத தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். தேவர்களின் வேண்டுதலை கேட்ட ஈசன், சூரபத்மனை வதம் செய்ய தனது ஐந்து முகம் மற்றும் அதோ முகம் என்ற ஆறுமுகத்துடன் தோன்றி தனது நெற்றிக்கண்ணில் இருந்து வந்த தீப்பொறிகளால் 6 குழந்தைகளை உருவாக்கினார்.

    பார்வதி தேவி அந்த குழந்தைகளை கண்டு மகிழ்ந்து தனது திருக்கரங்களால் ஒரு சேர தழுவி ஒரு குழந்தை ஆக்கினார்.

    அந்த குழந்தை அழகாக இருந்ததால் அழகன் முருகன் என்றும், ஆறுமுகத்துடன் இருந்ததால் ஆறுமுகம் என்றும், கார்த்திகை பெண்கள் வளர்த்ததால் கார்த்திகேயன் என்றும் அழைக்கப்படுகிறார். மேலும் தெய்வீகம், இனிமை, இளமை, மணம், மகிழ்ச்சி, அழகு என்ற 6 தன்மைகளுடன் திகழ்கிறார்.

    சூரசம்ஹாரம்

    ஆணவம் மிகுந்த சூரனை முருகபெருமான் 6 நாள் போருக்குப்பின் சம்ஹாரம் செய்தார். சூரனை வதம் செய்த இடம் என்பதால், திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சூரபத்மனுடன் முருகன் 6 நாட்கள் போர் புரிந்தபோது, அவரது பக்தர்கள் திருச்செந்தூரில் விரதம் இருந்து தியானித்தனர். அதன்படி, தற்போதும் கந்தசஷ்டியின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் மேற்கொள்கிறார்கள்.

    சூரசம்ஹாரத்தின்போது சூரபத்மன் மீது முருகபெருமானின் வேல் பாய்ந்ததும், அவனிடம் இருந்த அஞ்ஞானம் மறைந்து மெய்ஞானம் வரப்பெற்றான். உடனே அவனை அழிக்காமல் சேவலாகவும், மயிலாகவும் முருகபெருமான் ஆட்கொண்டார். சேவலை தனது கொடியாகவும் மயிலை வாகனமாகவும் மாற்றினார்.

    பகைவனை கொல்வது சஷ்டி விரதம் அல்ல. பகைமையை மாற்றி ஞானம் பெறுவதே இந்த விரதத்தின் சிறப்பு. யானைமுக சூரனை வெல்வது மாயையை ஒழிப்பதாகவும், சிங்கமுக சூரனை வெல்வது கன்மத்தை ஒழிப்பதாகவும், சூரபத்மனை வெல்வது ஆணவத்தை அழிப்பதாகவும் கருதப்படுகிறது. உண்ணா நோன்பு இருந்தால் ஆணவம் அடங்கும். ஆன்மா இறைவனோடு ஒன்றுபடும் இந்த உயரிய தத்துவத்தை விளக்குவதே கந்த சஷ்டி ஆகும்.

    லட்சக்கணக்கான பக்தர்கள்

    இந்த நிகழ்வினை அனைவரும் அறியும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா 6 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலால் திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் பக்தர்களின்றி எளிமையாக நடத்தப்பட்டது.

    இந்த ஆண்டு வழக்கமான உற்சாகத்துடன் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணியளவில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதனை தரிசிக்க தலையா? கடல் அலையா? என்று பிரமித்து கூறும் வகையில் பல லட்சக்கணக்கான மக்கள் கடற்கரையில் கூடுகின்றனர்.

    நாளை, திருக்கல்யாணம்

    சூரசம்ஹாரம் முடிந்ததும் 6 நாட்களாக விரதம் மேற்கொண்ட பக்தர்கள் கடலில் புனித நீராடி விரதத்தை நிறைவு செய்கின்றனர். 7-ம் நாளான நாளை (திங்கட்கிழமை) இரவில் கோவில் ராஜகோபுரம் முன்பாக சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    அன்னையிடம் வேல் வாங்கிய முருகபெருமான்

    திருச்செந்தூரில் சூரபத்மனை சம்ஹாரம் செய்வதற்கு முன்பாக முருகபெருமான் தனது அன்னை பார்வதி தேவியிடம் ஆசீர்வாதம் வாங்க சென்றார். அப்போது பார்வதி தேவி முருகபெருமானிடம் வேல் கொடுத்து வாழ்த்தி வழியனுப்பினார். பார்வதிதேவி முருகபெருமானுக்கு வேல் வழங்கிய இடம் சிக்கல் என்ற திருத்தலம் ஆகும். இது நாகப்பட்டினத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கு மூலவர் ஸ்ரீநவநீதீஸ்வரர், வேல்நெடுங்கண்ணி அம்பாள் அருள்பாலிக்கின்றனர்.

    முருகபெருமான் அன்னையிடம் வேல் வாங்க வந்தபோது ஆவேசமாக இருந்ததால் அவரது முகத்தில் வியர்வை துளிகள் அரும்பின. இந்த நிகழ்வு இன்றும் நடைபெற்று வருகிறது. பக்தர்களின் தீமைகளை வியர்வை துளிகள் போன்று முருகபெருமான் துடைத்து எறிவார் என்பதை இது உணர்த்துகிறது.

    • மாலை 4 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளுகிறார்.
    • சுமார் 2,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடந்து வருகிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 6-ம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது.

    மாலை 4 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளுகிறார். கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    சூரசம்ஹாரம் முடிந்ததும் சந்தோஷ மண்டபத்தில் சுவாமி-அம்பாளுக்கு அலங்காரமாகி தீபாராதனை நடைபெறுகிறது. தொடாந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளி, கிரிப்பிரகார உலா வந்து கோவிலை சேர்ந்த பின்னர் சாயாபிஷேகம் (அதாவது கண்ணாடியில் தெரியும் சுவாமியின் பிம்பத்துக்கு அபிஷேகம்) நடைபெறும்.

    விழாவையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள தற்காலிக கூடாரங்களில் திரளான பக்தர்கள் தங்கியிருந்து விரதம் இருந்து வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்துள்ளனர். அவர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்கின்றனர்.

    சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரைக்கு பக்தர்கள் எளிதில் வந்து செல்லும் வகையில், தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. கடற்கரையில் நடைபெறும் சூரசம்ஹாரத்தை பக்தர்கள் எளிதில் காணும் வகையில், பல்வேறு இடங்களில் பிரமாண்ட டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டு உள்ளது. சுமார் 2,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • முருகனை திருமணம் செய்வதற்காக தெய்வானை தவம் இருக்கிறாள்.
    • மூன்று நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில் காட்சி தருகிறார்.

    கந்தசஷ்டி திருவிழாவின் 7-ம் திருநாளான சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அசுரனை எதிர்த்து வெற்றி பெற்றதற்காக இந்திரன், தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து தந்ததோடு தேவமயிலாகவும் மாறி சேவை செய்தார். இவர்களது திருமணம் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் நடந்தது.

    சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் திருச்செந்தூரிலும் கந்தசஷ்டிக்கு மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று காலையில் தெய்வானை தவம் செய்வதற்கு தபசு மண்டபத்திற்கு செல்கிறாள். முருகனை திருமணம் செய்வதற்காக தவம் இருக்கிறாள். மாலையில் குமரவிடங்கர், சண்முகப்பெருமானின் பிரதிநிதியாக தபசு மண்டபத்திற்கு மயில் வாகனத்தில் சென்று தெய்வானைக்கு அருள்பாலித்து, மாலை சூட்டி நிச்சயதார்த்தம் செய்கிறார்.

    நள்ளிரவில் இருவரும் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருள அங்கு திருமணம் நடக்கிறது. மறுநாள் சுவாமி தெய்வானையுடன் வீதி உலா செல்கிறார். அடுத்த மூன்று நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில் காட்சி தருகிறார். 12-ம் நாளன்று மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது. அப்போது சுவாமி, அம்பாள் வீதி உலா செல்லும் போது, பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றி சுவாமியை குளிர்ச்சி படுத்துகின்றனர்.

    ×