search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆழ்துளை கிணறு"

    • ஆழ்துளை கிணறுகள் அமைத்தாலும் ஆயிரம் அடிக்கு மேலாகத்தான் நீர் கிடைக்கும் நிலை இருந்து வந்தது.
    • நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதை தமிழக அரசு முனைப்புடன் செயல்படுத்த வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் நகரில் இருந்து காங்கயம் செல்லும் சாலையில் முதலிபாளையம் பிரிவு அருகே பெம் ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் எனும் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 2014ம் வருடம் இரு ஆழ்துளை கிணறுகள் 1100 அடி மற்றும் 800 அடி ஆழத்திற்கு நீர் தேவைக்காக அமைக்கப்பட்டது‌.ஆனால் இரண்டு ஆழ்துளை கிணறுகளும் கோடை காலத்தில் வறண்டு போவதும் மழை காலத்தில் மட்டும் தண்ணீர் இருந்ததால், இதனை மூடிவிட பள்ளி நிர்வாகம் முடிவெடுத்தது.

    இப்பள்ளி அமைந்துள்ள சுற்று வட்டாரப் பகுதி மிக மேடான பகுதியாகவும்,ஆழ்துளை கிணறுகள் அமைத்தாலும் ஆயிரம் அடிக்கு மேலாகத்தான் நீர் கிடைக்கும் நிலை இருந்து வந்தது. இந்நிலையில் பள்ளி நிர்வாகத்தின் முடிவு குறித்து அறிந்த தமிழ்நாடு அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன்,இந்த ஆழ்துளை கிணறுகளை மழை நீரை சேமிக்க பயன்படுத்தலாம் என எடுத்துரைத்தார்.

    இதனை அடுத்து மாணவர்களுக்கு மழைநீர் சேகரிப்பின் பயன் குறித்து செய்முறையாக அளிக்கும் வகையில் திட்டம் ஒன்றை அப்பள்ளி செயல் படுத்தியது.அதன்படி பள்ளி வளாகத்தில் உள்ள சுமார் ஆயிரம் அடி ஆளமுள்ள இரு ஆழ்துளை கிணற்றையும் மழை நீர் சேகரிப்பு அமைப்பாக மாற்ற முடிவு செய்தது. இதற்காக பள்ளிக் கட்டிட கூரைகள் மற்றும் விளையாட்டு மைதானத்தில் விழும் மழை நீரை ஆழ்துளை கிணற்றில் சேகரமாகும் வகையில் மாற்றி அமைத்தது.மேலும் மழைநீர் மட்டும் சென்று சேரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர்‌.

    கடந்த 2015 முதல் இரண்டு ஆழ்துளை கிணறுகளிலும் மழைநீர் முழுமையாக சேகரிக்கப்பட்டது‌.இதனால் பள்ளி வளாகத்தில் பெய்யும் ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் ஆழ்துளை கிணற்றில் சேகரிக்கப்பட்டது‌. தொடர்ச்சியாக இவ்வாறு மழை நீர் பல வருடமாக உரிய வழிமுறைகளுடன் சேகரிக்கப்பட்டதால் இன்று அப்பள்ளியை சுற்றி உள்ள சுமார் ஒரு கிலோமீட்டர் சுற்று வட்டார பகுதிகளில் இன்று நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

    இது பள்ளி மாணவர்களால் ஆதாரப்பூர்வமாக ஒவ்வொரு ஆண்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.அருகாமையில் உள்ள சுமார் 60 அடி ஆழமுள்ள விவசாய கிணறு ஒன்றில் கடந்த 2016-ம் ஆண்டு கோடையில் வெறும் 5 அடிக்கு மட்டுமே தண்ணீர் மட்டம் இருந்தது.தற்போது அந்த கிணற்றில் தற்போது 40 அடிக்கு நீர் மட்டம் உயர்ந்து உள்ளது.மேலும் நீர் மாசடையாமல் கண்ணாடி போல் தெளிவாகவும்,உப்புத்தன்மை முற்றிலும் இன்றி உள்ளது.இதேபோல் அருகாமையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள போர்வெல்லிலும் கடந்த 10 ஆண்டுகளை காட்டிலும்,3 ஆண்டாக நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக குடியிருப்பு பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    கடந்த 7 ஆண்டுக்கு மேலாக பல கோடி லிட்டர் மழை நீரை இப்பள்ளியில் கைவிடப்பட இருந்த ஆழ்துளை கிணற்றில் சேகரிக்கப்பட்டதால் இன்று பள்ளியை சுற்றி உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது உறுதி செய்யப்பட்டது.இப்பள்ளியின் மாணவர்கள் இந்த திட்டம் குறித்து மத்திய பள்ளி கல்வி வாரியத்தின் அறிவியல் கண்காட்சியில் இடம்பெறச் செய்து பரிசுகளையும் பெற்றுள்ளனர்.

    இதை பின்பற்றி தமிழகம் முழுவதும் கைவிடப்பட்ட அனைத்து ஆழ்துளை கிணறுகளையும் கண்டறிந்து, நிலத்தடி நீர் சேமிப்பு மையங்களாக மாற்றி,வருடம் ஒரு முறை பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்கும் என்.எஸ்.எஸ் முகாம் மூலம்,இந்த கட்டமைப்புகளை பராமரித்து மழைநீரை சேமித்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதை தமிழக அரசு முனைப்புடன் செயல்படுத்த வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக உள்ளது.

    • சத்தீஸ்கரில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 11 வயது சிறுவனை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • மீட்புப் பணியில் தீயணைப்பு, போலீசார், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.

    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம் ஜாங்கிரி - ஷம்பா மாவட்டம் பிஹ்ரிட் கிராமத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ராகுல் ஷாஹு. இச்சிறுவன் நேற்று முன்தினம் தனது வீட்டிற்கு பின்புறம் பயன்பாடற்ற நிலையில் இருந்த 80 அடி ஆழ ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளான்.

    இதுகுறித்து தீயணைப்பு, போலீசார், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, ஜேசிபி இயந்திரத்தின் மூலம் ஆழ்துளை கிணற்றுக்கு பக்கவாட்டில் பள்ளம் தோண்டும் பணி நடந்தது. ஆழ்துளை கிணற்றுக்குள் குழாய் மூலம் ஆக்சிஜனை அனுப்பி மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர்.

    இந்நிலையில், தொடர்ந்து 3வது நாளாகச் சிறுவனை மீட்கும் பணியில் 500க்கும் மேற்பட்ட மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    தற்போது வரை சிறுவனுக்கு சுயநினைவு உள்ளது. ஆழ்துளை கிணற்றில் சேரும் நீரை அள்ளித் தருகிறான் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், குஜராத்தில் இருந்து மீட்பு ரோபோ வந்துள்ளது. மதியத்துக்கு மேல் சிறுவன் மீட்கப்படலாம் என மீட்புக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

    • ராணுவம், போலீசார், மாவட்ட நிர்வாக ஊழியர்கள் மற்றும் கிராம மக்கள் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
    • ராணுவம், காவல்துறை மற்றும் பிற அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்த பிறகு 40 நிமிடங்களில் மீட்புப் பணி நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

    குஜராத் மாநிலம் சுரேந்திர நகர் மாவட்டம் துடாபூர் கிராமத்தில் உள்ள ஒரு பண்ணையில் சிவம் (2) என்கிற சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். சிறுவனின் பெற்றோர் அப்போது கூலி வேலை செய்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது நேற்று இரவு 8 மணியளவில் சிறுவன் அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்து 20- 25 அடி ஆழத்தில் சிக்கினான். இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து உள்ளூர் பேரிடர் மேலாண்மை பிரிவு மற்றும் அகமதாப்பாத்தில் இருந்து கிட்டத்தட்ட 100 கி.மீ தொலைவில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையின் குழுவிற்கு எச்சரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து ராணுவம், போலீசார், மாவட்ட நிர்வாக ஊழியர்கள் மற்றும் கிராம மக்கள் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றி, இரவு 10.45 மணியளவில் குழந்தையை ஆழ்துளை கிணற்றில் இருந்து வெளியே எடுத்தனர்.

    பின்னர் சிறுவன் திரங்காத்ரா நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டான். குழந்தையின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    ராணுவம், காவல்துறை மற்றும் பிற அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்த பிறகு 40 நிமிடங்களில் மீட்புப் பணி நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

    ×