search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sugar card"

    சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு 1,000 ரூபாய் வழங்குவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. #PongalCashGift #HighCourt
    சென்னை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரே‌சன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000த்துடன் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பரிசு தொகுப்பை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து கோவையை சேர்ந்த ஜேசுதாஸ் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அனைவருக்கும் ரூ.1,000 ரொக்கப்பரிசு வழங்க தடை விதித்தது. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே ரொக்கப்பரிசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை மாற்றி அமைக்க கோரி தமிழக அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘ஐகோர்ட்டு விதித்த தடை உத்தரவினால், சர்க்கரை மட்டும் வாங்கும் ரே‌சன் அட்டைதாரர்களுக்கும், எந்த பொருளும் வாங்காத ரே‌சன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கம் பரிசு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சர்க்கரை மட்டும் வாங்கும் ரே‌சன் அட்டைதாரர்கள் மொத்தம் 10 லட்சத்து 11 ஆயிரத்து 330 உள்ளனர்.

    இவர்களில் கடந்த 9-ந்தேதி வரை 4 லட்சத்து 12 ஆயிரத்து 558 ரே‌சன் அட்டைதாரர்கள் பொங்கல் பரிசான ரூ.1,000த்தை வாங்கி சென்று விட்டனர். இதனால், பொங்கல் ரொக்கப்பரிசு வாங்காத மீதமுள்ளவர்கள், மிகுந்த மனவருத்தத்தில் உள்ளனர். அவர்களும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என்பதால், பொங்கல் பரிசான ரூ.1,000அவர்களுக்கும் வழங்க அனுமதிக்க வேண்டும்.

    இதற்கு ஏற்ப, கடந்த 9-ந்தேதி இந்த ஐகோர்ட்டு பிறப்பித்த தடை உத்தரவை மாற்றி அமைக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விசாரணை பட்டியலில் இந்த வழக்கு இடம் பெறவில்லை.

    இதையடுத்து நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ‘சர்க்கரை வாங்கும் ரே‌சன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் ரொக்கப்பரிசு வழங்க அனுமதி கேட்டு தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக இன்று விசாரணைக்கு ஏற்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சுமார் 1 மணியளவில் வழக்கை விசாரணைக்கு ஏற்பதாக உத்தரவிட்டனர்.


    அதன்படி இவ்வழக்கு இன்று மதியம் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசுத் தொகையை வழங்க அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இலவசத் திட்டங்கள் தொடர்பாக தமிழக அரசுக்கு அறிவுறுத்தல்களையும் வழங்கினர்.

    “இலவச திட்டங்கள் தொடர்பாக தெளிவான வரையறையுடன் முடிவெடுக்க வேண்டும். இலவச திட்டங்களை வழங்கும்போது, பயனாளிகளை வரையறை செய்ய வேண்டும். அனைவருக்கும் வங்கி கணக்கு உள்ள நிலையில், அதில் ரொக்கப் பணத்தை செலுத்தலாம். அதனை விடுத்து மக்களை காக்க வைப்பது ஏன்? 1,000 ரூபாய் கொடுக்காவிட்டால் வாக்களிக்க மாட்டோம் என மக்கள் கூறும் அளவுக்கு நிலைமையை உருவாக்கியது ஏன்?” என்றும் நீதிபதிகள் கடிந்துகொண்டனர்.

    பொங்கல் பரிசு தொடர்பாக உயர்நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியதால், மேலும் 10 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு கிடைக்கும். #PongalCashGift #HighCourt
    ×