search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Srinivasa Mangapuram Kalyana Venkateswara Swamy Temple"

    • இன்று சூரிய, சந்திரபிரபை வாகன வீதிஉலா நடக்கிறது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. விழாவின் 6-வதுநாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 9 மணி வரை அனுமன் வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர், வெங்கடாத்திரி ராமுடுவாக எழுந்தருளி கோவிலின் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.வாகன வீதிஉலாவுக்கு முன்னால் மகா விஷ்ணு, ராமர், அனுமன் வேடமணிந்த பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். பஜனைகள் குழுவினர் பக்தி பாடல்களை பாடினர். பெண்கள், சிறுவர், சிறுமிகள் கோலாட்டம் ஆடினர். கேரள செண்டை மேளம் இசைக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து மதியம் 2 மணியில் இருந்து மாலை 3 மணிவரை வசந்தோற்சவம் நடந்தது. வசந்த காலத்தில் நடத்தப்படும் கைங்கர்யங்களால் சாமிகள் சோர்வடைவார்கள் என்பதால், அதில் இருந்து விடுபடும் நிகழ்ச்சியாக வசந்தோற்சவம் நடத்தப்பட்டது.

    அதைத்தொடர்ந்து மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணிவரை தங்கத்தேரோட்டம் நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    பின்னர் 7 மணியில் இருந்து இரவு 8 மணிவரை யானை வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் கல்யாணவெங்கடேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந் தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேற்கண்ட நிகழ்ச்சிகளில் கோவில் சிறப்புநிலை துணை அதிகாரி வரலட்சுமி, கோவில் துணை அதிகாரி சாந்தி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திரபிரபை வாகன வீதிஉலா நடக்கிறது.

    • கேரள செண்டை மேளம் இசைக்கப்பட்டது.
    • பஜனைகள் குழுவினர் பக்தி பாடல்களை பாடினர்.

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 5-வதுநாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 9 மணி வரை பல்லக்கு உற்சவம் நடந்தது.

    அதில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர், 'ஜெகன்மோகினி' அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அவருடன் திருச்சி வாகனத்தில் கிருஷ்ணர் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    பல்லக்கு முன் கஜராஜர் வேடமணிந்த பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். பஜனைகள் குழுவினர் பக்தி பாடல்களை பாடினர். பெண்கள், சிறுவர், சிறுமிகள் கோலாட்டம் ஆடினர். கேரள செண்டை மேளம் இசைக்கப்பட்டது.

    முன்னதாக சீனிவாசமங்காபுரத்தில் நடந்த கருடசேவையில் எழுந்தருளிய உற்சவா் கல்யாணவெங்கடேஸ்வரருக்கு திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகள் யானை மீது வைத்து ஊர்வலமாகக் கொண்டு வந்து அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

    அந்த மாலைகள் திருப்பதி கோசாலை, தாடிதோப்பு, பெருமாள்பள்ளம் வழியாக சீனிவாசமங்காபுரத்தை அடைந்தன. அந்த மாலையில் ஒன்று மூலவருக்கும், மற்றொரு மாலை கருட வாகனத்தில் எழுந்தருளிய உற்சவருக்கும் அணிவிக்கப்பட்டன.

    மாலை ஊர்வலத்தில் கோவில் சிறப்புநிலை துணை அதிகாரி வரலட்சுமி, கோவில் துணை அதிகாரி சாந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை கருடசேவை நடந்தது. உற்சவர் கல்யாணவெங்கடேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கருடசேவையில் அதிகாரிகள், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    • தீபதூப நெய்வேத்தியம் வழங்கப்பட்டது.
    • சுவாமிக்கும், தாயாருக்கும் ஏழு வகையான மாலைகள் அணிவிக்கப்பட்டது.

    திருமலையில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர சுவாமியின் பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக, கல்யாண மண்டபத்தில் சுவாமி மற்றும் தாயாருக்கு காலை 10.30 மணி முதல் 12 மணி வரை பாலாஜி ரங்காச்சாரியார் தலைமையில் திருமஞ்சனம் நடைபெற்றது.

    முன்னதாக விஷ்வக் சேனர் ஆராதனை, புண்யாஹவச்சனம், நவகலசாபிஷேகம், ராஜோபசாரம் நடந்தது. தொடர்ந்து தீபதூப நெய்வேத்தியம் வழங்கப்பட்டது.

    பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் திருமஞ்சனம் செய்யப்பட்டது. சுவாமிக்கும், தாயாருக்கும் ரோஜா, சம்பங்கி போன்ற ஏழு வகையான மாலைகள் அணிவிக்கப்பட்டது.

    • இன்று இரவு சிறப்பு கருட வாகனசேவை நடைபெறும்.
    • கோவிலில் சிறப்பு மலர் மற்றும் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்டேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 9 மணிவரை உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் கல்ப விருட்ச வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    வாகன வீதி உலாவுக்கு முன்னால் நடன கலைஞர்களின் கோலாட்டம் நடந்தது. பஜனை குழுவினர் பக்தி பாடல்களை பாடினர். அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை சர்வ பூபாலை வாகன வீதிஉலா நடந்தது. வீதிஉலாவில் கோவில் அதிகாரிகள், ஊழியர்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    5-வது நாளான இன்று (புதன்கிழமை) இரவு சிறப்பு கருட வாகனசேவை நடைபெறும். இரவு 7 மணி முதல் 9 மணி வரை சுவாமி கருடவாகனத்தில் பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். இதற்காக கோவிலில் சிறப்பு மலர் மற்றும் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

    மதியம் 2 மணிக்கு திருப்பதியில் உள்ள தேவஸ்தன நிர்வாகக் கட்டிடத்தில் இருந்து திருமலை லட்சுமி ஹாரம் கருடசேவையில் சுவாமியை அலங்கரித்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். காலை 7 மணிக்கு கோவிந்தராஜசுவாமி கோவிலில் இருந்து ஆண்டாள் அம்மனுக்கு மாலை அணிவித்தல் ஊர்வலம் தொடங்குகிறது. பகல் 11 மணிக்கு நகர வீதிகள் வழியாக சீனிவாசமங்காபுரத்தை ஊர்வலம் சென்றடையும்.

    • நடன கலைஞர்களின் கோலாட்டங்கள், பஜனைகள் நடந்தது.
    • இன்று சிம்ம, முத்துப்பந்தல் வாகன வீதி உலா நடக்கிறது.

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 9 மணிவரை உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் கையில் புல்லாங்குழலை வைத்துக் கொண்டு 'முரளி கிருஷ்ணர்' அலங்காரத்தில் சிறிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    வாகனத்துக்கு முன்னால் நடன கலைஞர்களின் கோலாட்டங்கள், பஜனைகள் நடந்தது. மங்கல வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து காலை 11 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை உற்சவர்களான கல்யாண வெங்கடேஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவிக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.பின்னர் இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை கல்யாண வெங்கடேஸ்வரர் ஹம்ச வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதில் கோவில் அதிகாரிகள், பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளான இன்று (திங்கட்கிழமை) காலை சிம்ம வாகன வீதிஉலா, இரவு முத்துப்பந்தல் வாகன வீதி உலா நடக்கிறது.

    • இரவு பெரிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது.
    • இன்று இரவு ஹம்ச வாகன வீதிஉலா நடக்கிறது.

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

    கோவிலில் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓத, மங்கள வாத்தியங்கள் இசைக்க, பக்தர்கள் கோவிந்தா கோஷம் எழுப்ப வைகானச ஆகம விதிப்படி காலை 8.40 மணியில் இருந்து காலை 9 மணிக்குள் மீன லக்னத்தில் பாரம்பரிய கருட கொடியேற்றம், கங்கணப்பட்டர் பாலாஜி ரங்காச்சாரியுலு தலைமையில் நடந்தது.

    முன்னதாக காலை 6.30 மணியில் இருந்து காலை 8.15 மணி வரை திருச்சி உற்சவம் நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து, கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்டு கொடி மரம் அருகே வைக்கப்பட்டனர்.

    பிரதான அர்ச்சகர்கள் விஸ்வக்சேனர் வழிபாடு, வாஸ்து ஹோமம், கருட லிங்க ஹோமம், கருட பிரதிஷ்டை, ரக்ஷா பந்தனம் உள்ளிட்டவை நடத்தினர்.

    கொடியேற்றும் விழாவில் பங்கேற்ற திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் நிருபர்களிடம் கூறுகையில், கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளுக்குப் பிறகு பிரம்மோற்சவ விழா வாகனச் சேவைகள் நடக்கின்றன. எனவே விழாவையொட்டி அனைத்து ஏற்பாடுகளும் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளது. தினமும் காலையில் 8 மணியில் இருந்து காலை 9 மணிவரையிலும், இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணிவரையிலும் வாகனச் சேவைகள் நடக்கின்றன. பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதம் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும், என்றார்.

    கொடியேற்றும் நிகழ்ச்சியில் சிறப்பு நிலை துணை அதிகாரி வரலட்சுமி, வைகானச ஆகம ஆலோசகர் மோகன ரங்காச்சாரியுலு, உதவி அதிகாரி குருமூர்த்தி, கண்காணிப்பாளர் செங்கல்ராயலு, கோவில் ஆய்வாளர் கிரண்குமார் ரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து நேற்று இரவு பெரிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    பிரம்மோற்சவ விழாவின் 2-வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சிறிய சேஷ வாகன வீதிஉலா, இரவு ஹம்ச வாகன வீதிஉலா நடக்கிறது.

    • புண்யாஹவச்சனம், மிருட்சங்கரஹணம், சேனாதிபதி உற்சவம் நடந்தது.
    • புற்று மண் எடுத்து சிறப்பு பூஜை நடந்தது.

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று மாலை கோவில் வளாகத்தில் புற்று மண் எடுத்து சிறப்புப்பூஜைகள் செய்து அங்குரார்ப்பண நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக புண்யாஹவச்சனம், மிருட்சங்கரஹணம், சேனாதிபதி உற்சவம் நடந்தது.

    அங்குரார்ப்பண நிகழ்ச்சியில் சிறப்பு நிலை துணை அதிகாரி வரலட்சுமி, உதவி அதிகாரி குருமூர்த்தி, கண்காணிப்பாளர் செங்கல்ராயலு, கோவில் ஆய்வாளர் கிரண்குமார் ரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) காலை 8.40 மணியில் இருந்து காலை 9 மணி வரை மீன லக்னத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.

    • கோவில் வளாகம் முழுவதும் நீரால் சுத்தம் செய்யப்படுகிறது.
    • கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் 11-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை பிரம்மோற்சவ விழா நடக்கிறது.

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வரும் 11-ந்தேதியில் இருந்து 20-ந்தேதி வரை 10 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதை முன்னிட்டு நாளை (புதன்கிழமை) காலை 11.30 மணியில் இருந்து மதியம் 2.30 மணிவரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது.

    அப்போது கோவில் வளாகம் முழுவதும் நீரால் சுத்தம் செய்யப்படுகிறது. அதேபோல் பூஜை பொருட்களும் சுத்தம் செய்யப்படுகின்றன. அதன்பிறகு கோவில் முழுவதும் வாசனை திரவியங்கள் தெளிக்கப்படுகிறது. எனவே நாளை காலை 8 மணியில் இருந்து காலை 11 மணி வரையிலும், மதியம் 2.30 மணியில் இருந்து இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். எனினும், காலை 11.30 மணியில் இருந்து மதியம் 2.30 மணிவரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    அதேபோல் சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருகிற 11-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6.30 மணியில் இருந்து காலை 11 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது.

    மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ×