search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "oil companies"

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புதிதாக 5 ஆயிரத்து 257 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட உள்ளதாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புதிதாக 5 ஆயிரத்து 257 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட உள்ளதாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவன தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான செயல் இயக்குனர் ஆர்.சித்தார்த்தன், தலைமை பொது மேலாளர் வி.கோபாலகிருஷ்ணன், பொது மேலாளர் எஸ்.அண்ணாமலை, இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன பிராந்திய சில்லரை விற்பனை தலைவர் சந்தீப் மகேஸ்வரி மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் மாநில சில்லரை விற்பனை தலைவர் வி.நாகராஜன் ஆகியோர் கூட்டாக, சென்னையில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தனர்.

    அப்போது அவர்கள் கூறியதாவது:-

    பொருளாதார வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. இந்த பொருளாதார வளர்ச்சிக்கு படிம எரிபொருள் சக்தி முக்கிய பங்காற்றி வருகிறது. நாட்டில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கேற்ப பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் தேவையும் அதிகரித்து வருகிறது.

    பெட்ரோல் விற்பனை 8 சதவீதமும், டீசல் விற்பனை 4 சதவீதமும் அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு பெட்ரோல் விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வேலைவாய்ப்பு பெருகும்.

    இதன்படி, தமிழகத்தில் 5,125 மற்றும் புதுச்சேரியில் 132 என மொத்தம் 5 ஆயிரத்து 257 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் புதிதாக திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான டீலர்களை நியமிக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

    பெட்ரோல் விற்பனை நிலையம் தொடங்க விண்ணப்பிக்க புதிய வழிகாட்டி கையேடு வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான எளிதான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

    பெட்ரோல் நிலையம் அமைக்க நிலம் இருப்பவர்களும், நிலம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால் அதிகாரிகள் கேட்கும்போது, பெட்ரோல் நிலையம் அமைக்க நிலம் ஏற்பாடு செய்திருக்க வேண்டும். முதன் முறையாக கம்ப்யூட்டர் மூலம் டீலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த நடைமுறைகள் அனைத்தும் வெளிப்படையாக அமைந்திருக்கும்.

    நகர்ப்புறங்களில் பெட்ரோல் நிலையம் தொடங்க ரூ.65 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரையும், கிராமப்பகுதிகளில் தொடங்க ரூ.35 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரையும் செலவாகும். இந்த புதிய பெட்ரோல் நிலையங்கள் நெடுஞ்சாலை பகுதிகள், வயல்வெளிகள் மற்றும் தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதிகளில் அமைக்கப்படும்.

    இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு www.petrolpumpdealerchayan.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

    பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோலின் அளவு மற்றும் தரம் குறைவாக இருந்தாலோ அல்லது வேறு ஏதேனும் மோசடி நடந்தாலோ அதுகுறித்து எண்ணெய் நிறுவனங்களிடம் புகார் அளிக்கலாம். உடனடியாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட பெட்ரோல் நிலையத்தின் உரிமம் ரத்து செய்யப்படும்.

    அதேபோல் வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படும் சமையல் கியாஸ் சிலிண்டரின் எடை குறைந்தாலோ, கூடுதல் பணம் கேட்டாலோ ஏஜென்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    பேட்டியின்போது இந்தியன் ஆயில் நிறுவன பொதுமேலாளர் (கார்ப்பரேட் கம்யூனிகேஷன்) சபீதா நட்ராஜ் உடனிருந்தார்
    சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் கியாஸ் சப்ளை செய்ய எண்ணை நிறுவனங்கள் ஏற்பாடு செய்து வருகிறது. #CookingGas
    சென்னை:

    சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் கியாஸ் ‘சப்ளை’ செய்ய எண்ணை நிறுவனங்கள் ஏற்பாடு செய்து வருகிறது.

    இதுகுறித்து எண்ணை நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

    தமிழகத்தில் வீட்டு உபயோகத்துக்கும், ஓட்டல்களுக்கும் தனித்தனியாக வெவ்வேறு அளவில் உள்ள சிலிண்டர்களில் சமையல் கியாஸ் ‘டோர்’ டெலிவரி செய்யப்பட்டு வருகிறது.

    நாடு முழுவதும் சமையல் கியாஸ் சிலிண்டர்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 23 கோடி பேர் உள்ளனர். தமிழகத்தில் 1 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

    இந்த சிலிண்டர்களை வினியோகம் செய்வதில் பல்வேறு நடைமுறை சிக்கல்களை எண்ணை நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன.


    வீடுகளுக்கு சிலிண்டர் வினியோகம் செய்யும் ஊழியர்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் புகார்கள் வருகின்றன.

    இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதமாக பூமிக்கடியில் குழாய் பதித்து வீடுகளுக்கு சமையல் கியாஸ் வினியோகம் செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

    தற்போது டெல்லி, மும்பை, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் கியாஸ் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    அதே போல் தமிழகத்தில் முதற் கட்டமாக சென்னையில் உள்ள வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் கியாஸ் வினியோகம் செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது. இதற்காக டெண்டர் விடப்பட்டு உள்ளது.

    எண்ணூரில் இயற்கை எரிவாயு முனையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிந்ததும் சென்னையில் பூமிக்கடியில் வீதி வீதியாக குழாய் பதிக்கும் பணி நடைபெறும்.

    குடிநீர் குழாய் பதிப்பது போன்று சமையல் கியாசை கொண்டு செல்ல குழாய் பதிக்கப்படும். இதில் இருந்து கனெக்‌ஷன் பெறுபவர்களது வீடுகளில் மீட்டர் பொருத்தப்பட்டு கணக்கிடப்படும்.

    வீட்டுக்கு வரும் குழாய்களில் குறைந்த அழுத்தத்தில் கியாஸ் செலுத்தப்படும். சிலிண்டரில் சமையல் கியாஸ் கொண்டு செல்வதை விட இது மிகவும் பாதுகாப்பானதாகும்.

    வழக்கமாக சிலிண்டர்களுக்கு செலவிடப்படும் தொகையை விட இதற்கு செலவு குறைவாக இருக்கும்.

    குறிப்பாக சிலிண்டர்களை வினியோகம் செய்யும் ஊழியர்களுக்கு கூடுதல் தொகை கொடுப்பது மிச்சமாகும். அத்துடன் சிலிண்டர் வாங்க ‘புக்கிங்’ செய்து விட்டு நாள் கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

    சென்னையில் புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒவ்வொரு சமையல் அறைக்கும் குழாய் மூலம் கியாஸ் பெறும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளோம். இதற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #CookingGas
    ×