search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jallikattu Competition"

    • மாவட்ட சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
    • அனுமதி அளிக்கப்பட்டால் ரேஷன் கார்டுகளை ஒப்படைத்து விட்டு வீட்டை காலை செய்துவிட்டு செல்வதாக தெரிவித்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே அலகுமலையில் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கத்தின் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வந்தது. அந்த வகையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக நடைபெறாமல் இருந்த ஜல்லிக்கட்டு போட்டியை இந்த ஆண்டு நடத்த ஏற்பாடுகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் ஜனவரி 29-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது என முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் கடந்த 18-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான வாடிவாசல் மற்றும் பார்வையாளர்கள் அமரும் கேலரி அமைப்பதற்கு கால்கோள் விழா நடைபெற்றது. இந்த கால்கோள் விழாவில் தமிழக ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

    இதனைத் தொடர்ந்து வாடிவாசல் மற்றும் பார்வையாளர் கேலரிகள் அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வந்தது. இதில் பல்வேறு முக்கியபிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் அலகுமலை ஊராட்சி மன்ற தலைவர் தூயமணி அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதன் அடிப்படையில் நீதிமன்றம் திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவு ஒன்று பிறப்பித்தது. அதில் மனுதாரரின் கோரிக்கைக்கு மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு 6 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

    அதனைத் தொடர்ந்து நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள இடத்தில் மாவட்ட சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், இங்கே ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், அனுமதி அளிக்கப்பட்டால் ரேஷன் கார்டுகளை ஒப்படைத்து விட்டு வீட்டை காலை செய்துவிட்டு செல்வதாக தெரிவித்தனர்.மேலும் அங்கு வந்தவர்களில் சிலர் தேர்த்திருவிழா நடைபெற உள்ளதால் அதற்கும் பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்தனர். இதனை கேட்டுக் கொண்ட சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், மறு உத்தரவு வரும் வரை ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான வேலைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு வாய்மொழியாக உத்தரவிட்டதாகவும், இதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்குபெறும் காளை மாடுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்குபெறும் காளை மாடுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் நாளை(14-ந் தேதி) நடைபெறும் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்வதற்காக தஞ்சை ஆடக்காரதெருவில் கார்த்தி மற்றும் கிருபாகரன் ஆகியோருக்கு சொந்தமான வெள்ளையன், கரிகாலன் என்ற 2 மாடுகளுக்கு இன்று பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் மாட்டை அடக்க வருபவர்களிடம் இருந்து எப்படி பிடிபடாமல் தப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் இந்த 2 மாடுகளுக்கும் அளிக்கப்பட்டது. இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

    இது குறித்து மாட்டின் உரிமையாளர் கார்த்தி கூறியதாவது:-

    நாங்கள் பரம்பரை பரம்பரையாக காளை மாடுகள் வளர்த்து வருகிறோம். மாடு தான் எங்களது முதல் குழந்தை. அதனை நாங்கள் தெய்வமாக நினைத்து வழிபடுகிறோம். மாடுகளுக்கு வீரியம் குறையாமல் இருப்பதற்காக தினமும் நடைபயிற்சி உள்ளிட்ட ஏராளமான பயிற்சி அளித்து வருகிறோம்.

    பருத்திகொட்டை, சோளத்தட்டை, பச்சையரிசி, உளுந்து, பேரீச்சம்பழம் உள்ளிட்டவைகளை உணவுகளாக காளை மாடுகளுக்கு அளித்து வருகிறோம். மாடு பிடித்து செல்லும்போது காலில் செருப்பு அணிய மாட்டோம். திரும்ப அழைத்து வரும் வரை உணவு கூட சாப்பிட மாட்டோம். எங்களது மாட்டை இதுவரை யாரும் அடக்கவில்லை. புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு பிரிட்ஜ், பேன், பீரோ உள்ளிட்ட ஏராளமான பரிசுகளை வாங்கியுள்ளது. எனது காலத்துக்கு பிறகும் எங்களது குழந்தைகள் தொடர்ந்து மாடுகளை வளர்ப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு நாளை முதல் உடல்தகுதி சோதனை செய்யப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. #Jallikattu

    அலங்காநல்லூர்:

    தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்படும்.

    காளைகள் துன்புறுத்தப்படுவதை காரணம் காட்டி 2016-ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் நடைபெற்ற எழுச்சி போராட்டம் காரணமாக ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஜல்லிக்கட்டுகள் நடத்தப்படுகின்றன.

    இருப்பினும் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய 3 இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலக பிரசித்தி பெற்றது.

    இங்கு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காளைகள் பங்கேற்கும். ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த உச்சநீதிமன்றம் கடுமையான விதிகளை பிறப்பித்துள்ளது. அதனை பின்பற்றி அரசின் மேற்பார்வையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    அதன்படி இந்த ஆண்டு வருகிற 15-ந்தேதி பொங்கல் பண்டிகை அன்று அவனியாபுரத்திலும், 16-ந்தேதி பாலமேட்டிலும், 17-ந்தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கின்றன. இதற்கான அரசாணைகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மேற்கண்ட இடங்களில் நடைபெறும் போட்டிகளில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு போட்டிகளில் தங்களது காளைகளை பங்கேற்க செய்வோர் அதற்கான உரிய சான்றிதழை கால்நடைத்துறையிடம் இருந்து பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி 3 இடங்களில் உள்ள கால்நடை மருத்துவ மனைகளில் நாளை (2-ந் தேதி) முதல் வருகிற 12-ந்தேதி வரை காளைகளுக்கு உடல் தகுதி சோதனைகள் ஆய்வு செய்யப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும்.

    காளைகளின் உயரம் 120 செ.மீட்டராக இருக்க வேண்டும். காளையின் வயது குறைந்தபட்சம் 8 வயதுக்குள்ளாக இருக்க வேண்டும்.

    கொம்பின் கூர்மைத் தன்மை உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டு போட்டிகளில் பங்கேற்க தகுதி உள்ளதா? என்பது குறித்து கால்நடை மருத்துவர்கள் சான்றிதழ் வழங்குவார்கள்.

    பின்னர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க காளைகளுக்கு வரிசை எண் கொடுக்கப்பட்டு பதிவு செய்யப்படும். பதிவின் போது காளையின் உரிமையாளர்கள் 2 பாஸ்போர்ட் சைஸ்போட்டே, ஆதார், ரேசன் கார்டு நகல் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

    3 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்க இன்னும் 2 வாரங்களே உள்ளதால் அதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாலமேடு, அலங்காநல்லூரில் வாடிவாசல்கள் சுத்தம் செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டுள்ளன. கேலரிகளும், தடுப்பு வேலிகளும் அமைக்க சவுக்கு மரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு ஊட்டச்சத்து தீவனம், நீச்சல் பழகுதல், மண்ணை குத்தி கிளறுதல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் மாடுபிடி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். #Jallikattu

    தமிழகத்தில் 2019-ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நாளை மறுநாள் நடக்கிறது. #Jallikattu
    கந்தர்வக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே தச்சங்குறிச்சி கிராமத்தில் உள்ள புனித அடைக்கல மாதா ஆலய திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் ஜனவரி 1-ந்தேதி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.

    சுப்ரீம் கோர்ட்டு தடை காரணமாக சில ஆண்டாக போட்டி நடத்தப்படாததால் வாடிவாசல் பகுதி களையிழந்து காணப்பட்டது.

    இந்தநிலையில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் நடத்திய போராட்டத்துக்கு பின்னர் தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்றியதால் நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த கோர்ட்டு அனுமதி அளித்தது. இதையடுத்து தச்சங்குறிச்சியில் கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது.

    ஆண்டுதோறும் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சி கிராமத்தில்தான் நடத்தப்படும். அதன்படி 2019-ம் ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் நாளை மறுநாள் 2-ந்தேதி நடத்தப்படுகிறது. இதற்காக ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் வாடிவாசலை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    ஜல்லிக்கட்டு போட்டிக்காக தச்சங்குறிச்சியில் கேலரி அமைக்கப்பட்டு வரும் காட்சி.

    மேலும் முக்கிய பிரமுகர்களுக்கான விழா மேடை மற்றும் பார்வையாளர்கள் பாதுகாப்புடன் அமர்ந்திருப்பதற்கான கேலரி, போட்டி நடத்தப்படும் திடலில் அமைக்க வேண்டிய அம்சங்கள் அனைத்தும் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் தயார் செய்யப்பட்டு வருகிறது.

    முதல் போட்டியில் தங்கள் காளை வெற்றி வாகை சூடவேண்டும் என்பதற்காக காளை மாடுகளுக்கு சிறப்பு பயிற்சிகளை காளையின் உரிமையாளர்கள் அளித்து வருகின்றனர். அதே போல் மாடுபிடி வீரர்களும் காளைகளை அடக்க தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். போட்டிக்கான அனுமதி டோக்கன் கடந்த 2 நாட்களாக கொடுக்கப்பட்டு வருகிறது. போட்டியில் கலந்து கொள்ள இதுவரை 850 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர். இதனால் தச்சங்குறிச்சி கிராமமே களை கட்டியுள்ளது. #Jallikattu


    ×