search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gotabaya Rajapaksa"

    • கோத்தபய தனது பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
    • மனைவி மற்றும் இரண்டு பாதுகாவலர்களுடன் விமானப்படை விமானத்தில் சென்றார்.

    கொழும்பு:

    இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்திய அவர்கள், கடந்த 3 நாட்களுக்கு முன் இலங்கை அதிபர் மாளிகைக்குள் நுழைந்து அதை ஆக்ரமித்தனர்.

    போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை எடுத்து சென்றனர். சில போராட்டக்காரர்கள் அதிபர் வீட்டிலேயே தங்கி உள்ளனர். போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபயா தனது குடும்பத்துடன் தப்பி கடற்படை முகாமில் தஞ்சம் அடைந்ததாக கூறப்பட்டது. இலங்கை அதிபர் பதவியை கோத்தபயா ராஜபக்சே 13ந்தேதி ராஜினாமா செய்வார் என அந்நாட்டு பாராளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்பா தெரிவித்திருந்தார்.

    அதிபர் கோத்தபயா இலங்கையில் இருந்து வெளியேறியதாக நேற்று முதலில் தகவல் வெளியானது. பின்னர் அது உண்மையில்லை என்றும் கோத்தபய ராஜபக்சே இலங்கையில்தான் இருக்கிறார் என்றும் சபாநாயகர் மகிந்த யாப்பா தெரிவித்தார்.

    இதற்கிடையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளார் என்றும், இன்று அது முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    மேலும் தனது மனைவி மற்றும் இரண்டு பாதுகாவலர்களுடன் கோத்தபய ராஜபக்சே இலங்கை விமானப்படை விமானத்தில் மாலைதீவு தலைநகர் மாலே நகருக்கு புறப்பட்டுச் சென்றதாக இலங்கை குடியுரிமை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இன்று அதிகாலையில் அவர் மாலே நகரை அடைந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • இலங்கையில் பொதுமக்கள் கிளர்ச்சியால் தொடர்ந்து அமைதியற்ற சூழல் தொடர்கிறது.
    • பொதுமக்கள் போராட்டத்தில் 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கொழும்பு:

    கொழும்பு நகரில் அமைந்துள்ள அதிபர் மாளிகை முன் நேற்று முன்தினம் பல்லாயிரக்கணக்கானோர் அணி, அணியாக திரண்டதும், கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக ஆவேசத்துடன் முழங்கியதும், தடுப்பு வேலிகளை தகர்த்தெறிந்து அதிபர் மாளிகைக்குள் நுழைந்து வசப்படுத்தி ஆர்ப்பரித்ததும் சமூக வலைத்தளங்களில் வீடியோ காட்சிகளாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின

    சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனே தலைமையில் அவசரமாக கூடிய அனைத்துக் கட்சி கூட்டம், அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் பதவி விலக வேண்டும், அனைத்துக்கட்சி அரசு பதவி ஏற்கவேண்டும் என முடிவெடுத்தது. பிரதமர் பதவி ஏற்று 2 மாதம் முழுமை அடையாத நிலையில் ரணில் விக்ரமசிங்கே பதவி விலகுகிறார். அவரைத் தொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபக்சேயும் நாளை மறுதினம் ராஜினாமா செய்ய ஒப்புக்கொண்டார். இதை அதிபருடன் தொடர்பில் உள்ள சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனே தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச வெளிநாட்டுக்கு சென்றுள்ளார் எனவும், புதன்கிழமைக்குள் அவர் இலங்கை திரும்பி விடுவார் எனவும் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனே தெரிவித்துள்ளார்.

    ஆனால் சிறிது நேரத்தில் அதிபர் கோத்தபய இலங்கையில் தான் உள்ளார். வெளிநாட்டில் இருக்கிறார் என வெளியான தகவலில் உண்மை இல்லை எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.

    • அரிசி, பெட்ரோல், டீசல் மற்றும் மருந்து பொருட்கள் இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது.
    • கொழும்பு அருகே அவர் ரகசிய இடத்தில் பலத்த ராணுவ பாதுகாப்புடன் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

    கொழும்பு:

    இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் அத்தியாவசிய பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது.

    அரிசி, பெட்ரோல், டீசல் மற்றும் மருந்து பொருட்கள் இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மார்ச் மாதம் முதல் தெருக்களில் இறங்கி போராட தொடங்கினார்கள்.

    மக்கள் போராட்டம் எழுச்சியாக மாறியதால் கடந்த மாதம் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். அவருக்கு பதில் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பு ஏற்றார். என்றாலும் பொருளாதார குழப்பத்தை சீர்படுத்த முடியவில்லை.

    இதனால் கடும் ஆத்திரம் அடைந்த மக்கள் நேற்று முன்தினம் கொழும்பில் லட்சக்கணக்கில் திரண்டனர். அதிபர் மாளிகைக்குள் அதிரடியாக புகுந்து கைப்பற்றினார்கள். ஜனாதிபதி அலுவலகமும் மக்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

    மக்கள் கொலை வெறியுடன் திரண்டு வந்ததால் உயிர் பிழைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே பங்களாவை காலி செய்து விட்டு தப்பி ஓடினார். அவர் வெளிநாட்டுக்கு ஓடி இருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால் கொழும்பு அருகே அவர் ரகசிய இடத்தில் பலத்த ராணுவ பாதுகாப்புடன் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று காலை அதிபர் கோத்தபய ராஜபக்சே கடிதம் ஒன்றை பிரதமர் ரணில் விக்ரம சிங்கேவுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில் அவர், "ஏற்கனவே அறிவித்த படி ஜூலை 13-ந்தேதி பதவியில் இருந்து விலகுவேன்" என்று தெரிவித்து உள்ளார்.

    பதவியை ராஜினாமா செய்வதாக கோத்தபய ராஜபக்சே மீண்டும் மீண்டும் கூறினாலும் கொழும்பில் போராட்டம் நடத்தி வரும் மக்கள் அதை ஏற்க மறுக்கிறார்கள். 13-ந்தேதி வரை நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்காமல் உடனடியாக ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலக வேண்டும் என்று போராட்ட பிரதிநிதிகள் கெடுவிதித்துள்ளனர்.

    கொழும்பு காலி முகதிடலில் இன்று காலை நிருபர்களை சந்தித்தபோது அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டனர். அப்போது போராட்டக்காரர்கள் வேறு சில அறிவிப்புகளையும் வெளியிட்டனர். ஜனாதிபதிக்கு பதில் பிரதமர் ஆட்சி அதிகாரத்தை செய்ய வேண்டும் என்று விதி இருந்தாலும் அதை அனுமதிக்க போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.

    மேலும் ரணில் விக்கிரமசிங்கேவும் உடனடியாக பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலகிய பிறகு அனைத்து கட்சிகளை யும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த புதிய ஆட்சியை உருவாக்க சிலர் நினைக்கிறார்கள். அதற்கு அனுமதிக்க மாட்டோம் என்றும் போராட்டக்காரர்கள் கூறி உள்ளனர்.

    இது தவிர இலங்கையில் அமைய உள்ள இடைக்கால அரசாங்கம் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய அரசாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். இதற்கு மாறாக சர்வ கட்சி அரசாங்கத்தை உருவாக்க எதிர்க்கட்சியும், ஆளும் கட்சியும் முயற்சி செய்தால் அதற்கு இடம் கொடுக்க மாட்டோம் என்று எச்சரித்துள்ளனர்.

    அனைத்து கட்சிகள் கொண்ட ஆட்சி அமைந்தால் அது இன்னொரு ஊழலுக்கு வழிவகுத்து விடும் என்றும் அதற்கு வாய்ப்பு கொடுக்க மாட்டோம் என்றும் போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

    போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையில் இருந்து வெளியேற மறுத்த தோடு புதிய ஆட்சி தொடர்பாகவும் நிபந்தனைகள் விதிப்பதால் இலங்கையில் மாற்று அரசு அமைவதில் சிக்கல் எழுந்துள்ளது. புதிய அரசு எப்போது எப்படி அமையும் என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

    இதற்கிடையே கோத்தபய ராஜபக்சே கொழும்பில் இல்லாததால் அமைச்சர்களும், ஆளும் கட்சியினரும் கடும் தவிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அடுத்து என்ன செய்வது என்பது புரியாமல் தவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று 3-வது நாளாக பொதுமக்கள் அதிபர் மாளிகையில் தங்கியிருந்து பொழுதை போக்கினார்கள்.

    • பொதுமக்கள் போராட்டத்தில் இதுவரை 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • இலங்கையில் பொதுமக்கள் கிளர்ச்சியால் தொடர்ந்து அமைதியற்ற சூழல் தொடர்கிறது.

    கொழும்பு :

    விடுதலைப்புலிகளுடனான உள்நாட்டு போர் வெற்றிக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பம்தான் காரணம் என கொண்டாடிய இலங்கை சிங்கள மக்கள், இப்போது நாட்டின் நிலவுகிற வாழ்வாதார நெருக்கடிக்கு அதே ராஜபக்சே குடும்பம்தான் காரணம் என கூறி போர்க்கொடி உயர்த்தி இருப்பது வரலாற்று திருப்பமாக மாறி இருக்கிறது. பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகினாலும், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகாமல் ஒட்டிக்கொண்டிருந்தது, அவரது குடும்பத்தை நெருப்பாற்றில் தள்ளி விடும், மக்கள் போராட்டம் உச்சம் தொடும் என்று அவர்களே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

    கொழும்பு நகரில் அமைந்துள்ள அதிபர் மாளிகை முன் நேற்று முன்தினம் பல்லாயிரக்கணக்கானோர் அணி, அணியாக திரண்டதும், கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக ஆவேசத்துடன் முழங்கியதும், தடுப்பு வேலிகளை தகர்த்தெறிந்து அதிபர் மாளிகைக்குள் நுழைந்து வசப்படுத்தி ஆர்ப்பரித்ததும் சமூக வலைத்தளங்களில் வீடியோ காட்சிகளாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

    அதிபர் மாளிகைக்குள் மக்கள் நுழைந்தபோது ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலிலும், ராணுவத்தினரின் தடியடி, கண்ணீர்ப்புகை குண்டு வீச்சு, துப்பாக்கிச்சூடு ஆகியவற்றிலும் 102 பேர் படுகாயம் அடைந்து கொழும்பு தேசிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனே தலைமையில் அவசரமாக கூடிய அனைத்துக்கட்சி கூட்டம், அதிபர் கோத்தபய ராஜபக்சேயும், பிரதமர் ரணில் விக்ரம சிங்கேயும் பதவி விலக வேண்டும், அனைத்துக்கட்சி அரசு பதவி ஏற்க வேண்டும் என்று முடிவு எடுத்தது. அதைத் தொடர்ந்து, பிரதமர் பதவி ஏற்று 2 மாதங்கள் கூட முழுமை அடையாத நிலையில் ரணில் விக்ரம சிங்கே பதவி விலகுகிறார். அவரைத் தொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபக்சேயும் நாளை மறுதினம் (13-ந் தேதி) ராஜினாமா செய்ய ஒப்புக்கொண்டுள்ளார். இதை அதிபருடன் தொடர்பில் உள்ள சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனே தெரிவித்துள்ளார்.

    அதிபர் பதவியை கோத்தபய புதன்கிழமை ராஜினாமா செய்யாவிட்டால் நாடு தழுவிய முழு கடையடைப்பில் ஈடுபடப்போவதாக தொழிற்சங்கங்கள், சமூக அமைப்புகள் நேற்று கூட்டாக நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அறிவித்துள்ளன.

    பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயின் மாளிகைக்கு போராட்டக்காரர்களில் சிலர் தீ வைத்ததில் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளதைக் காட்டும் வீடியோ பதிவை தனது டுவிட்டர் பக்கத்தில் உள்ளூர் ஊடகம் ஒன்று வெளியிட்டது. அந்த வீடியோ பதிவு, ரணில் விக்ரம சிங்கேயின் மாளிகை எரிந்த காட்சிகளையும், சேதம் அடைந்த செடான் கார், ஓவியங்கள், கலைப்படைப்புகள் மாளிகை மற்றும் அதன் வளாகத்தில் சிதறிக்கிடந்ததையும் காட்டின.

    பிரதமர் ரணில் விக்ரம சிங்கே மாளிகைக்கு தீ வைத்த சம்பவத்தில் 3 இளைஞர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் போலீஸ் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் மேலும் பலர் கைதாவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. பிரதமர் மாளிகை தீ வைக்கப்பட்டிருந்தபோது அந்த பகுதியில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததாகவும், அதுபற்றி விசாரணை நடப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

    இந்த நிலையில், இலங்கை மக்கள் அன்றாட வாழ்வாதாரத்துக்கு அல்லாடுகின்ற சூழ்நிலையில், அதிபர் மாளிகையின் ரகசிய அறையில் கட்டு, கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போராட்டக்காரர்கள் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். அந்த பணத்தை அவர்கள் கைப்பற்றினர். மொத்தம் ரூ.1 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரம் சிக்கியதாகவும், அந்த பணத்தை உள்ளூர் போலீசாரிடம் அவர்கள் ஒப்படைத்து விட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

    நேற்று 2-வது நாளாக அதிபர் மாளிகைக்கு மக்கள் அலை, அலையாக வந்து, ஆர்ப்பரித்தனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகாதவரையில், அதிபர் மாளிகையில் இருந்து வெளியேறப்போவதில்லை என்பதில் போராடும் மக்கள் உறுதியுடன் உள்ளனர். இதுபற்றி மாணவர் தலைவர் லகிரு வீரசேகர கூறும்போது, "எங்கள் போராட்டம் ஓய்ந்து விடவில்லை. அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகிச்செல்கிறவரையில் எங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம்" என தெரிவித்தார். பொதுமக்கள் போராட்டத்தில் இதுவரை 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே இலங்கையின் முதலீட்டுத்துறை மந்திரி தம்மிகா பெரைரா நேற்று பதவியை ராஜினாமா செய்தார். பதவி ஏற்ற ஒரு மாதத்திற்குள் அவர் பதவி விலகி உள்ளார். இதேபோன்றுஇந்தியா அனுப்பிய யூரியா உரத்தை ஏற்றுக்கொண்ட சிறிது நேரத்தில் விவசாய மந்திரி மகிந்த அமரவீரா பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஏற்கனவே ஹரின் பெர்னாண்டோ, மனுச நாணயக்காரா, பந்துல குணவர்த்தனே ஆகிய 3 மந்திரிகள் நேற்று முன்தினம் பதவி விலகினர்.

    இலங்கையில் பொதுமக்கள் கிளர்ச்சியால் தொடர்ந்து அமைதியற்ற சூழல் தொடர்கிறது. இந்த நிலையில், நாட்டில் அமைதியை நிலைநாட்ட பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று ராணுவம் நேற்று கேட்டுக்கொண்டுள்ளது. இதையொட்டி ராணுவ தளபதி சவேந்திர சில்வா வெளியிட்ட அறிக்கையில், "தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை அமைதியான முறையில் தீர்த்து வைப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் உருவாகி உள்ளது. நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதை உறுதிப்படுத்துவதற்கு அனைத்து இலங்கை மக்களும் ஆயுதப்படைகள் மற்றும் போலீசாருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

    இவ்வளவு களேபரங்களுக்கு மத்தியில் அதிபர் கோத்தபய ராஜபக்சே எங்கே ஓட்டம் பிடித்தார் என்பது இன்னும் மர்மமாக உள்ளது. அவர் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த தனி விமானம் மூலம் வெளிநாட்டுக்கு தப்பியதாக ஒரு தகவல் வெளியானது. மற்றொரு தகவல் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த போர் கப்பல்களில் கடற்படை பாதுகாப்புடன் இருப்பதாக தெரிவித்தது.

    ஆனால் இப்போது அதிபர் மாளிகையில் ஒரு பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலியான கதவுடன், பூமிக்கு அடியில் 'லிப்ட்' மூலம் சென்றடைகிற வகையில் இந்த பதுங்கு குழி அமைக்கப்பட்டுள்ளது. இந்த பதுங்கு குழியை அதிபர் மாளிகை சிறப்பு பாதுகாப்பு படையினர் உறுதி செய்தனர். எனவே இந்த பதுங்கு குழியின் வழியாக அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பினாரா என்ற புதிய கேள்வி எழுந்துள்ளது.

    • ஏப்ரல் 3-ந்தேதி எதிர்ப்புக்கு பயந்து ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்சே ராஜினாமா செய்தார்.
    • மே 9-ந்தேதி மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் விலகினார். தற்போது அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே விலகுகிறார்.

    ஈழத் தமிழர்களை அழித்த ராஜபக்சே குடும்பத்தினர் கடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்ததும், இனி தங்களை யாரும் தட்டி கேட்க முடியாது என்ற ஆணவத்துடன் செயல்படத் தொடங்கினார்கள்.

    அண்ணன் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியிலும், தம்பி கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியிலும் அமர்ந்து கொண்டு ஆட்டம் போட்டனர். அவர்களது குடும்பத்தினர் மந்திரிகளாகவும், அரசின் உயர்துறைகள் அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அதிகார மையங்களாகவும் மாறி இருந்தனர்.

    அவர்கள் செய்த தவறுகளும், சொத்து குவிப்பும் மிக விரைவில் வெட்ட வெளிச்சத்துக்கு வந்து இலங்கை மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் அதிபர் கோத்தபய ராஜபக்சே மிகப்பெரிய தவறு ஒன்றை செய்தார்.

    அன்னிய செலாவணி விஷயத்தில் தவறான முடிவுகளை எடுத்தார். அதோடு அரசின் அனைத்து துறைகளிலும் கொள்கை முடிவுகள் எடுப்பதற்கு தனக்கு நம்பிக்கைக்குரிய ராணுவ அதிகாரிகளை நியமித்தார்.

    ராணுவ அதிகாரிகளை அவர் மலைபோல நம்பி பல அதிகாரங்களை ஒப்படைத்தார். ஆனால் அந்த ராணுவமே அவருக்கு எதிராக திரும்பியதால் தான் ராஜபக்சே குடும்பத்தினர் இன்று நாட்டைவிட்டே ஓடும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

    தவறான பொருளாதார கொள்கை முடிவுகளால் நாட்டில் முதலில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அடுத்து சீனாவை முழுமையாக நம்பி மற்ற நாடுகளை பகைத்துக்கொண்டு செயல்பட்டது. அடுத்து தொலைநோக்கு பார்வையில்லாமல் கோத்தபய ராஜபக்சே எடுத்த முடிவுகள் பொருளாதாரத்தை மீட்க முடியாத நிலைக்கு கொண்டு சென்று விட்டது.

    இந்த ஆண்டு தொடக்கத்திலேயே இலங்கை தள்ளாடித் தொடங்கியது. ஜனவரி, பிப்ரவரி மாதத்தை பொறுத்து பார்த்த மக்கள் மார்ச் மாதம் வீதிக்கு வந்து போராடத்தொடங்கினர். மார்ச் 31-ந்தேதி கொழும்பில் முதலில் போராட்டம் ஆரம்பித்தது.

    ஏப்ரல் 3-ந்தேதி எதிர்ப்புக்கு பயந்து ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்சே ராஜினாமா செய்தார். மே 9-ந்தேதி மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் விலகினார். தற்போது அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே விலகுகிறார்.

    ஈழத் தமிழர்களுக்கு எதிராக இவர்கள் செய்த அட்டூழியம் பாவமாக மாறி இன்று அவர்களை நாட்டை விட்டே துரத்தியுள்ளது. இதனால்தான் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு துரத்தப்பட்டதும், ஈழத் தமிழர்கள் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட தொடங்கிவிட்டனர்.

    • அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ரணில் விலகல்.
    • இலங்கை தற்காலிக அதிபராக சபாநாயகர் அபேவர்தன செயல்படுவார் என தகவல்

    கொழும்பு:

    சுமார் 2 கோடியே 20 லட்சம் மக்கள் தொகையை கொண்ட இலங்கையில் கடந்த 70 ஆண்டுகளாக இல்லாத வகையில், பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

    கடுமையான அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் அத்தியாவசிய உணவு பொருட்கள் விலையேற்றம் மற்றம் பற்றாக்குறை, எரிபொருள் தட்டுப்பாடு உள்பட பல்வேறு சூழல்களால் அந்நாட்டு மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

    இதையடுத்து மக்கள் நடத்தி வரும் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியது. இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் பொருட்களை கைப்பற்றியுள்ளதுடன் அங்கேயே தங்கி வருகின்றனர். 


    இந்நிலையில் இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்து விலகிய ரணில் விக்ரமசிங்கேவின் தனிப்பட்ட இல்லத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். அதற்கு முன்னதாக ரணில் அந்த வீட்டில் இருந்து பாதுகாப்பாக வெளியேறி உள்ளார். போராட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் அங்கு பதற்றம் நீடிக்கிறது.

    முன்னதாக நேற்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில், பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கே விலக வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து ரணில் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதேபோல் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அதிபர் பதவியில் இருந்து விலகுமாறு கோத்தபய ராஜபக்சேவை வலியுறுத்தி சபாநாயகர் அபேவர்தன கடிதம் எழுதினார். 


    அதற்கு பதில் அளித்துள்ள கோத்தபய, வரும் 13ந் தேதி பதவி விலகுவதாக தெரிவித்துள்ளதாக அபேவர்தன குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் தற்காலிக அதிபராக சபாநாயகர் அபேவர்தன செயல்பட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதனிடையே, கொழும்புவில் ரணில் விக்கிரமசிங்கேவின் தனிப்பட்ட இல்லம் அருகில் நடைபெற்ற போராட்டங்கள் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற இலங்கையின் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் போலீஸ் அதிரடிப்படையினரால் தாக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த நான்கு ஊடகவியலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த சம்வம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள ரணில் விக்ரமசிங்கே, இலங்கையின் ஜனநாயகத்திற்கு ஊடக சுதந்திரம் மிகவும் முக்கியமானது. வன்முறையையும் தடுப்பதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், நிதானத்துடன் செயல்படுமாறு பாதுகாப்புப் படையினரையும் எதிர்ப்பாளர்களையும் கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

    • இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா சந்தித்துப் பேசினாா்.
    • கடும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா தாராளமாக உதவி அளித்து வருகிறது.

    கொழும்பு:

    இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் உணவுப் பொருட்கள், எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. கடும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா தாராளமாக உதவி அளித்து வருகிறது.

    இந்நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா சந்தித்துப் பேசினாா்.

    இந்தச் சந்திப்பில் இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்தும், இந்தியாவின் ஆதரவு குறித்தும் ஆக்கபூர்வமான விவாதங்கள் நடந்தன. மேலும், இலங்கையில் முதலீடுகளை ஊக்குவித்தல், பொருளாதார தொடர்பை வலுப்படுத்துதல் போன்றவற்றின் மூலம் விரைவான பொருளாதார மீட்சிக்கு உதவ, இந்தியா தயாராக இருப்பதாக அவா்கள் தொிவித்தனா்.

    இந்தச் சந்திப்பின் மூலம் இருநாட்டு உறவுகளும் மேம்படுத்துவதற்கான உறுதியை இருதரப்பினரும் உறுதிபடுத்தி உள்ளனர் என மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி டுவிட்டாில் தொிவித்துள்ளாா்.

    • இலங்கை மின்சார வாரிய தலைவரின் குற்றச்சாட்டிற்கு அதிபர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
    • இலங்கை மின்சார வாரிய தலைவர் பதவியில் இருந்து பெர்டினாண்டோ ராஜினாமா

    கொழும்பு:

    இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் 500 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்தும் உரிமம் அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டதில் சர்ச்சை வெடித்துள்ளது.

    இது தொடர்பாக இலங்கை மின்சார வாரிய தலைவர் எம்.எம்.சி.பெர்டினாண்டோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். முன்னதாக அவர் சிங்கள மொழியில் பேசிய வீடியோ ஒன்று சமூக வளைதளங்களில் வெளியானது.

    அதில் நவம்பர் 24ந் தேதி அன்று, இலங்கை அதிபர் என்னை வரவழைத்து, மின் உற்பத்தி திட்டத்தை அதானி குழுமத்திடம் ஒப்படைக்குமாறு இந்தியப் பிரதமர் மோடி தனக்கு அழுத்தம் கொடுக்கிறார் என்று தெரிவித்தார்.

    இந்த விஷயம் தனக்கோ இலங்கை மின்சார வாரியத்திற்கோ சம்பந்தமில்லை என்று நான் சொன்னேன். அதை நான் பரிசீலிக்க வேண்டும் என்று அதிபர் வலியுறுத்தினார் என்று பெர்டினாண்டோ அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார்.

    அவரது குற்றச்சாட்டிற்கு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது டுவிட்டர் பதிவில், மன்னாரில் காற்றாலை மின் திட்டத்தை வழங்குவது தொடர்பான மின்சாரவாரிய தலைவர் தெரிவித்த கருத்தை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன்.

    எந்தவொரு குறிப்பிட்ட நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ இந்த திட்டத்தை வழங்குவதற்கான அங்கீகாரத்தை நான் வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் இலங்கை அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை தற்போது கடுமையான மின் பற்றாக்குறையில் உள்ளதாகவும், மெகா மின் திட்டங்களை விரைவாக செயல்படுத்துவதை அதிபர் விரும்புகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும், அந்த திட்டங்களுக்கான நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும், இது இலங்கை அரசால் வெளிப்படையாக மேற்கொள்ளப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இலங்கையில் எரிசக்தி திட்டம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையால், ஏமாற்றம் அடைந்ததாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

    இலங்கையில் முதலீடு செய்வதில் எங்களின் நோக்கம் மதிப்புமிக்க அண்டை நாடுகளின் தேவைகளை நிவர்த்தி செய்வதாகும்.

    ஒரு பொறுப்பான கார்ப்பரேட் என்ற முறையில், நமது இரு நாடுகளும் எப்போதும் பகிர்ந்து கொள்ளும் கூட்டாண்மையின் அவசியமான பகுதியாக இதைப் பார்க்கிறோம். இந்த விவகாரத்தால் ஏற்படும் மனச்சோர்வினால் நாங்கள் தெளிவாக ஏமாற்றமடைந்துள்ளோம்.

    இந்த விவகாரம் ஏற்கனவே இலங்கை அரசால் பேசப்பட்டு தீர்வு காணப்பட்டது என்பதுதான் உண்மை என்றும் அதானி குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


    இங்கிலாந்து முழுவதிலும் இருந்து தமிழர்கள் கிளாஸ்கோ நகருக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். அதுமட்டுமல்லாமல் மற்ற வெளிநாடுகளில் இருக்கும் இலங்கைத் தமிழர்களும் அங்கு வந்து குவிந்துள்ளனர்.

    லண்டன்:

    இங்கிலாந்தின் ஸ்காட்லாந்து பகுதியில் உள்ள கிளாஸ்கோ நகரில் உலக நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் சர்வதேச பருவ நிலைமாற்ற மாநாடு நடந்து வருகிறது.

    இதில் பங்கேற்பதற்காக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கிளாஸ்கோ நகருக்கு சென்றுள்ளார். அவருடைய வருகைக்கு அங்குள்ள தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

    2009-ம் ஆண்டு நடந்த இலங்கைத் தமிழர் படுகொலைக்கு காரணமாக இருந்த கோத்தபய ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரிய அளவில் போராட்டம் நடத்தவும் அவர்கள் முடிவு செய்தனர்.

    இதற்காக இங்கிலாந்து முழுவதிலும் இருந்து தமிழர்கள் கிளாஸ்கோ நகருக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். அதுமட்டுமல்லாமல் மற்ற வெளிநாடுகளில் இருக்கும் இலங்கைத் தமிழர்களும் அங்கு வந்து குவிந்துள்ளனர்.

    கோத்தபய ராஜபக்சே கொலை குற்றவாளி என விமர்சிக்கும் விளம்பர பதாகைகள், லேசர் ஒளி காட்சிகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. இலங்கை தமிழர்கள் ஏராளமானோர் திரண்டுள்ளதால் கிளாஸ்கோ நகரில் பதற்றம் நிலவுகிறது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

    கோத்தபய ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகளிலும் போராட்டங்கள் நடந்தன. கோத்தபய ராஜபக்சே செய்த படுகொலைகள் தொடர்பாக ஸ்காட்லாந்து பத்திரிகைகளிலும் பெரிய அளவில் செய்திகள் வெளியிடப்பட்டு இருந்தன.

    இலங்கையில் அதிபர் தேர்தலில் போட்டியிட இலங்கை முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே போட்டியிட முடிவு செய்துள்ளார்.
    கொழும்பு:

    இலங்கையில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே போட்டியிட முடிவு செய்துள்ளார்.

    இலங்கை மற்றும் அமெரிக்கா என இரட்டை குடியுரிமையை வைத்துக்கொண்டு கோத்தபய ராஜபக்சே அரசியலில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் தன்னுடைய அமெரிக்க குடியுரிமையை விட்டுக்கொடுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இது குறித்து கோத்தபய ராஜபக்சே கூறுகையில், “நான் நீண்டகாலமாக யோசித்து அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவுக்கு செய்துள்ளேன்.

    அதனால் தான் என்னுடைய அமெரிக்க குடியுரிமையையும் விட்டு கொடுத்து விட்டேன். இலங்கையில் சமீபத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை தேர்தலில் எனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள மாட்டேன்.

    தேர்தலுக்கும், அதற்கும் சம்பந்தம் கிடையாது. அந்த சம்பவம் என்னை மிகவும் கவலை அடைய செய்தது” என்றார்.
    ×