search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fatima (RA)"

    • இஸ்லாமியர்கள் ஐந்துவேளைத் தொழுவது கட்டாயமாகும்.
    • எந்த சந்தர்ப்பத்திலும் தொழுகையை தவறவிட்டுவிடக்கூடாது.

    தொழுகைக்கான முதல் அழைப்பு

    இஸ்லாமியர்கள் ஒவ்வொரு நாளும் 'ஐந்துவேளைத் தொழுவது கட்டாயமாகும். பருவ வயதை அடைந்ததில் இருந்து மரணமாகும் வரைக்கும் நீங்காத ஒரே கடமை தொழுகை தான். நின்று தொழ முடியாத பட்சத்தில் அமர்ந்தும், அமர்ந்து தொழ முடியாத பட்சத்தில் படுத்துக்கொண்டும் தொழ வேண்டும். இதுவும் முடியாதபட்சத்தில் தொழுகையின் முறைகளை சமிஞ்கை செய்து, எண்ணவடிவங்களை மனக் கண்முன்னே கொண்டு வந்து நிறைவேற்றிட வேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும் தொழுகையை தவறவிட்டுவிடக்கூடாது. 'உமக்கு மரணம் வரும் வரை உமது இறை வனை வணங்குவீராக!' (திருக்குர்ஆன் 15:99)

    ஐந்து வேளை தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன்னால், அந்தந்தத் தொழுகையின் நேரம் வந்தவுடன் தொழுகைக்காக அழைப்பு விடுக்கப்படும். இதற்கு பாங்கு என்று பார்ஸி மொழியில் சொல்லப்படும். இஸ்லாத்தின் ஆரம்பக்காலத்தில் ஒரு சில வார்த்தைகள் கூறி தொழுகைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முஸ்லிம்கள் மதீனாவிற்கு வந்த சமயம் தொழுகைக்கு அழைப்புக் கொடுக்கப் படுவதில்லை. அவர்கள் ஒன்று கூடி நேரத்தை முடிவு செய்து கொள்வார்கள். ஒருநாள் இதுபற்றி அனைவரும் கலந்தாலோசித்தனர். அப்போது உமர் (ரலி) 'தொழுகைக்காக அழைக்கின்ற ஒருவரை ஏற்படுத்தக்கூடாதா?' என்றார்.

    உடனே பிலால் (ரலி) அவர்களிடம் 'பிலாலே! எழுந்து தொழுகைக்காக அழையும்' என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்:புகாரி)

    அப்துல்லாஹ் பின் ஜைத் பின் அப்துரப் (ரலி) கூறுவதாவது: 'நான் இரவில் தூங்கிக் கொண்டிருந்தேன். கையில் மணியை வைத்துள்ள ஒரு வானவர் என்னைக் கடந்து சென்றார். உடனே நான் அவரிடம் 'மணியை விற்கப் போகிறீரா?' என்று கேட்டேன். அதற்கு அவர், 'அதை வைத்து நீர் என்ன செய்யப் போகிறீர்?' என்று கேட்டார். 'அதை வைத்து நான் மக்களுக்கு தொழுகை அழைப்பு விடுப்பேன்' என்றேன். அதற்கு வானவர், இதை விடச் சிறந்த ஒரு அழைப்பை நான் உமக்கு அறிவித்துத் தரட்டுமா?' எனக் கேட்டதும் நான் ஆம்,என்றேன்.

    'அல்லாஹூ அக்பர், அல்லாஹூ அக்பர், அல்லாஹூ அக்பர்,

    அல்லாஹூ அக்பர்,

    அஷ்ஹது அன்லாயிலாஹா இல்லல்லாஹ்,

    அஷ்ஹது அன்லாயிலாஹா இல்லல்லாஹ்,

    அஷ்ஹது அன்னமுஹம்மதர் ரசூலுல் லாஹ்,

    அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல் லாஹ்,

    ஹய்ய அலஸ்ஸலாத்,

    ஹய்ய அலஸ் ஸலாத், ஹய்ய அலல் பலாஹ்,

    ஹய்ய அலல் பலாஹ், அல்லாஹூ அக்பர்.

    அல்லாஹூ அக்பர், லாயிலாஹா இல்லல்லாஹ்.

    இவ்வாறு நீர் கூறவேண்டும் என்றார்.

    அதிகாலையில் நான் கண்ட கனவை நபி யிடம் கூறினேன். அதற்கு நபி (ஸல்) 'இது உண்மையான கனவு. நீர் எழுந்து பிலாலிடம் (ரலி) கூறும். அவர் பாங்கு சொல்லட்டும். ஏனெனில் உம்மை விட அவர் குரல் வளமிக்க வர்' என்றார்கள்.

    இதை கேள்விப்பட்டு நபியிடம் வந்த உமர் (ரலி) சத்தியத்தை கொண்டு தங்களை அனுப்பிய இறைவன் மேல் ஆணை! அவர் கண்ட கனவைப்போன்று நானும் கண்டேன்' என்றார். 'எல்லாப்புகழும் இறைவனுக்கே!' என நபி கூறினார்கள்'. (நூல்: அஹ்மது, இப்னுமாஜா, அபூதாவூத்)

    இன்று உலகளாவிய அளவில் இவ்வாறு சொல்லப்படும் பாங்கு முறை, ஹிஜ்ரி முதலா மாண்டு ரமலான் மாதம் நடைமுறைப் படுத்தப்பட்டதாகும். பாங்கோசை கேட்டதும் தொழு கைக்கு விரைவோம். நன்மைகள் பெறுவோம்.

    • புனித ரமலானில் திறக்கப்படும் சொர்க்கவாசல்.
    • நம்மால் இயன்ற தான தர்மங்கள் செய்வோம்.

    புனித ரமலானில் திறக்கப்படும் சொர்க்கவாசல்

    ரமலான் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன என நபி (ஸல்) கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்:புகாரி)

    'புனித ரமலான் மாதத்தின் முதல் இரவு உதயமாகி விட்டால் சொர்க்க வாசல்கள் திறக்கப்படுகின்றன. அவற்றிலிருந்து எந்த ஒன்றும் மூடப்படாது. ஒரு அறிவிப்பாளர் நன்மை தேடுபவரே! நன்மை செய்வதின் பக்கம் முன்னோக்கிச் செல்லும்.' 'தீமை நாடுபவரே! தீமையை குறைத்துக் கொள்ளும்' இவ்வாறு அறிவிப்பு செய்வார் என நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: அபூஹு ரைரா (ரலி), நூல்: இப்னுமாஜா)

    திருக்குர்ஆனில் சொர்க்கத்தை பற்றி பலவிதமான பெயர்களில் வர்ணிக்கப்படுகிறது.

    1) 'ஜன்னத்' (சொர்க்கம்),

    2) 'ஜன்னத்துல் குல்த்' (அழியாத சொர்க்கம்),

    3) 'ஜன்னத்துல் மஃவா', (தங்குமிடம் சொர்க்கம்),

    4) 'ஜன்னத்துல் பிர்தவ்ஸ்' (சொர்க்கச்சோலை),

    5) 'ஜன்னத் அத்ன்' (நிலையான இன்பம் கொண்ட சொர்க்கம்),

    6) 'தாருஸ்ஸ லாம்' (அமைதி இல்லம்),

    7) ஜன்னத்துன் நயீம்' (இன்பமயமான சொர்க்கம்),

    8) 'தாருல் ஹயவான்' (நித்திய வாழ்வுடைய வீடு),

    9) 'தாருல் முகாமா' (நிரந்தரமான வீடு),

    10) 'அல்மகாமுல் அமீன் (அபயம் தரும் இடம்),

    11) மக்அத் சித்க்' (உண்மையான இருக்கை),

    12) 'தாருல் முத்தகீன்' (இறையச்சமுள் ளவர்களின் வீடு),

    13) 'அல்குர்பா' (மாளிகை),

    14) தாருல் கரார்' (நிலையான வீடு),

    15) அல் ஹூஸ்னா (அழகிய சொர்க்கம்).

    இப்படிப்பட்ட சொர்க்கங்களில் நூற்றுக் கணக்கான படித்தரங்கள் உண்டு! சொர்க்கத்தில் எட்டு வாசல்கள் உள்ளன என நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி), நூல்:புகாரி) அவை:

    1) பாபுஸ் ஸலாத் (தொழுகைவாசல்),

    2)பாபுல் ஜிஹாத் (அறப்போர் வாசல்),

    3) பாபுர் ரய்யான் (நோன்பு வாசல்),

    4) பாபுஸ் ஸதக்கா (தர்ம வாசல்),

    5) பாபுல் ஹஜ் (ஹஜ் வாசல்),

    6) பாபுல் வாலித் (தந்தை வாசல்),

    7) பாபுல் அய்மன் (வலதுபுற வாசல்),

    8) பாபுத் தவ்பா (மன்னிப்பின் வாசல்).

    ஒருவர் இறைவழியில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களில் இருந்து, 'அல்லாஹ்வின் அடியாரே! இது நன்மையாகும்! இதன் வழியாக நுழையுங்கள்' என்று அழைக்கப்படுவார்.

    தொழுகையாளி தொழுகையின் வாசல் வழியாகவும், நோன்பாளி ரய்யான்' வாசல் வழியாகவும், தர்மம் செய்தவர் தர்ம வாசல் வழியாகவும், அறப்போர் புரிந்தவர் அறப்போர் வாசல் வழியாகவும் அழைக்கப்படுவார்' என நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்:புகாரி)

    சொர்க்கத்தின் 8 வாசல்களும் புனித ரமலான் மாதம் முழுவதும் திறந்தே இருக்கின்றன. நோன்பாளிக்கென்று ரய்யான் வாசல் உள்ளது. அதன் வழியாக நோன்பாளிகள் மட்டுமே நுழைவார்கள். சொர்க்கத்தில் ரய்யான்' எனும் ஒரு வாசல் உண்டு. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். 'நோன்பாளிகள் எங்கே?" என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுந்து, அதன் வழியாக நுழைந்ததும் அந்த வாசல் அடைக்கப்பட்டு விடும். வேறு எவரும் அதன் வழியாக நுழைய முடியாது என நபி (ஸல்) கூறினார்கள். (ஸஹ்ல் (ரலி), நூல்:புகாரி)

    சொர்க்கவாசல்கள் திறந்திருக்கும் புனித ரமலானில் சொர்க்கவாசிகளின் செயலை செய்து சொர்க் கத்தில் இடம்பிடிக்க நாம் முனைப்புடன் செயல்படுவோம். இறை சிந்தனையிலும், இறை வழிபாட்டிலும் புனித ரமலானில் அதிகம் ஈடுபடுவோம். நம்மால் இயன்ற தான தர்மங்கள் செய்வோம்.

    • ரமலானில் அருளப்பட்ட இறைச்செய்தி.
    • வானவர் மணியோசை போன்று வருவார். அவர் நபியை தம்முடன் இணைத்துக் கொள்வார்.

    ரமலானில் அருளப்பட்ட இறைச்செய்தி

    இறைச்செய்தியின் ஆரம்ப வெளிப்பாடும், இந்த பிரபஞ்சத்தில் உலகப்பொதுமறையாம் திருமறை திருக்குர்ஆன் இறங்கிய துவக்கமும், இறை அழைப்பின் அழகிய ஆரம்பக்கட்டமும் புனித ரமலானில்தான் அரங்கேறியது.

    'ரமலான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக்கொண்டதாகவும் (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான திருக்குர்ஆன் இறக்கியருளப்பெற்றது.' (திருக்குர்ஆன் 2:185)

    நபி (ஸல்) அவர்களுக்கு நாற்பது வயதை நெருங்குவதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்பே அவர்களின் மனம் தனிமையை விரும்பியது. மக்காவில் இருந்து சுமார் இரண்டு மைல்கள் தொலைவில் உள்ள நூர் மலையில் அமைந்துள்ள ஹிரா குகைக்குச் சென்று அங்கே இறைவனுக்காக தவம் மேற்கொண்டார்கள். பரிபூரணத்தின் தொடக்கமாகிய 40 வயதை நிறைவு செய்தபோது அவர்களுக்கு நபித்துவ பட்டம் கிடைத்தது.

    ஹிரா குகையில் அவர்கள் தனித்திருந்த மூன்றாம் ஆண்டு ரமலான் மாதம் பிறை 21. திங்கட்கிழமை கி.பி.610 ஆகஸ்டு 10-ம் தேதி முதன்முதலாக இறைச்செய்தி இறங்கியது.

    'ஆயிஷா (ரலி) கூறினார்: 'நபி (ஸல்) அவர்களுக்குத் தொடக்கத்தில் இறைச்செய்தி தூக்கத்தில் தோன்றும் நல்ல கனவுகளிலேயே வந்தது. அப்போது அவர்கள் எந்த கனவு கண்டாலும் அது அதிகாலைப்பொழுதின் விடியலைப் போன்று தெளிவாக இருக்கும். பின்னர், தனிமையில் இருப்பது அவர்களின் விருப்பமாயிற்று. ஹிரா குகையில் அவர்கள் பல இரவுகள் அங்கே தங்கி வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டார்கள். அந்த நாள்களுக்கான உணவை தம்முடன் கொண்டு செல்வார்கள். உணவு தீர்ந்ததும் மனைவி கதீஜாவிடம் திரும்புவார்கள்.

    இந்த நிலை ஹிரா குகையில் இறைச்செய்திவரும் வரை நீடித்தது. ஒருநாள் வானவர் தோன்றி, ஓதும் என்றார். அதற்கு நபியவர்கள் நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றார்கள்.

    'அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு, என்னை விட்டுவிட்டு மீண்டும் 'ஒதும்' என்றார். 'நான் ஓதத் தெரிந்தவனில்லையே!' என்றேன். இவ்வாறு மூன்று தடவை நடந்தது. மூன்றாவது முறை கட்டியணைத்து விட்டு 'படைத்தவனாகிய உமது இரட்சகனின் திருப் பெயரால் ஒதும்! அவனே மனிதனை கரு வளர்ச்சியின் ஆரம்ப நிலையில் இருந்து படைத்தான். ஒதும் உம் இரட்சகன் கண்ணியமிக் கவன்' என்றார். (திருக்குர்ஆன் 96:1,2,3, நூல்:புகாரி)

    இதுதான் உலகில் முதலில் இறங்கியதிருக்குர்ஆனின் இறைச்செய்தியாகும். இறைச்செய்தியின் வகைகள்:

    1) உண்மையான கனவு. இதுதான் இறைச் செய்தியின் தொடக்கம்.

    2) வானவர், நபி (ஸல்) அவர்களின் கண் முன் தோன்றாமல் உள்ளத்தில் இறைச்செய்தியை போடுவது.

    3) வானவர் ஓர் ஆடவரின் உருவில் தோன்றி நபி (ஸல்) அவர்களிடம் பேசுவார். அதை நபி (ஸல்) மனதில் நிலை நிறுத்திக்கொள்வார்கள்.

    4) வானவர் மணியோசை போன்று வருவார். அவர் நபியை தம்முடன் இணைத்துக் கொள்வார்.

    5) வானவர் இறைவன் படைத்த உண்மை தோற்றத்தில் நபி (ஸல்) முன் தோன்று வார்.

    6) நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் ஏழு வானங்களுக்கு மேல் அழைத்து பேசுவது. இது நபியவர்களின் விண்ணுலகப் பயணத்தில் தொழுகை கடமையாக்கப்பட்ட போது நடந்தது.

    7) வானவரின்றி நேரடியாக அல் லாஹ்வே பேசுவது. இது மூஸா (அலை) அவர்களுக்கு இந்த உலகத்திலேயே கிடைத்தது. நபி (ஸல்) அவர்களுக்கு விண்ணுலகப் பயணத்தின் மூலம் ஏற்பட்டது.

    • ரமலான் மாதம் வந்துவிட்டால் வானத்தில் வாசல்கள் திறக்கப்படுகின்றன.
    • ரமலானில் நோன்பு மற்றும் பிரார்த்தனைகளால் பலன்கள் பெறுவோம்.

    ரமலானில் திறக்கப்படும் வானின் கதவுகள்

    'ரமலான் மாதம் வந்துவிட்டால் வானத்தில் வாசல்கள் திறக்கப்படுகின்றன என நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்:புகாரி)

    புனித ரமலானில் நோன்பாளிகளுக்காக வானத்தின் கதவுகள் திறந்தே இருக்கின்றன. அவர்களின் நோன்பும், மாண்பும், வணக்கமும், வழிபாடும், வானம் வரைக்கும் கடந்து, பிறகு இறைவனிடம் சென்றடைந்து விடுகிறது.

    ரமலான் அல்லாத மாதங்களிலும், நோன்பு அல்லாத வணக்கங்களுக்காகவும் வானங்களின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. இப்னு உமர் (ரலி) கூறியதாவது:-

    நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம். அப்போது மக்களில் ஒருவர் 'அல் லாஹூ அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கஸீரா, வசுப்ஹானல்லாஹி புக்ரத்தன் வஅஸீலா (இறைவன் மிகப்பெரியவன் என்று பெருமைப்படுத்துகின்றேன்.

    எல்லாப்புகழும் இறைவனுக்கே உரியது என்று அதிகமாகப் போற்றுகின்றேன். அல்லாஹ் பரிசுத்தமானவன் என்று காலையிலும் மாலையிலும் அவனைத் துதிக்கின்றேன்)' என்று கூறினார்.

    நபி (ஸல்) அவர்கள் 'இந்த வார்த்தைகளை மொழிந்தவர் யார்?" என்று கேட்டார்கள். அப்போது மக்களில் ஒருவர், 'நான் தான்' என்றார். நபி (ஸல்) அவர்கள், நான் இதைக்கேட்டு வியப்புற்றேன். இதற்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்பட்டன' என்று கூறினார்கள். இவ்வாறு கூறக் கேட்டதில் இருந்து நான் அதைக் கூறாமல் இருந்ததில்லை.' (நூல்: முஸ்லிம்)

    மேலும், ஒவ்வொரு நாளும் மனிதர்களின் செயல்களை கண்காணிக்கும் பொறுப்புவானவர்களுக்கு சாட்டப்பட்டிருக்கிறது. அவர்கள் இரு பிரிவினராக செயல்படுகின்றனர். மனிதனின் பகல் நேர செயல்களை கண்காணிக்கும் வானவர்கள் அதிகாலை நேரத்தில் வருகை புரிவர். இரவு நேர செயல்களை கண்காணிக்கும் வானவர்கள் மாலை நேரம் வருகை புரிவர். அப்போது இந்த இரண்டு நேரங்களிலும் வானங்கள் திறக்கப்படுகின்றன.

    மனித செயல்கள் இறைவனிடம் சமர்ப்பிக்கப்படுகின்றன . 'ஐந்து இரவுகளில் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிறது. அப்போது வானத்தின் கதவுகள் திறக்கப்படுகிறது. அவை: வெள்ளி இரவு, நோன்புப் பெருநாள் இரவு, ஹஜ்ஜுப் பெருநாள் இரவு, ரஜப் மாதத்தில் முதல் இரவு, ஷஃபான் மாதத்தின் 15-ம் இரவு ஆகும் என இமாம் ஷாபி (ரஹ்) கூறுகிறார்.

    'ஒருவர் மனத்தூய்மையுடன் 'லாயிலாஹா இல்லல்லாஹ் (வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று கூறினால், அவருக்காக வானத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. அவர் பெரும்பாவம் புரிவதை தவிர்த்திருந்தால்' என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப் பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி)

    'ஒருவர் தொழுகையின் மூலம் பாவமீட்சி பெற்றாலும் வானத்தின் கதவுகள் திறக்கப் படுகின்றன. மேலும் அவரின் பிரார்த்தனையும் அங்கீகரிக்கப்படுகின்றன' என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்:அஹ்மது)

    'இரவின் மூன்றாம் பகுதியின் நிறைவான நேரத்தில் இறைவன் முதல் வானத்தின் பக்கம் இறங்கி வருவான். அப்போது வானத்தின் வாசல்களை திறப்பான். பிறகு இறைவன் தமது திருக்கரத்தை விரித்து வைத்து என்னிடம் கேட்பவர் எவரும் உண்டா? அவருக்கு கேட்டது வழங்கப்படும்' என்று கூறுவான். இது அதிகாலை உதயமாகும் வரை நீடிக்கும் என நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: அஹ்மது).

    வானத்தின் வாசல்கள் திறந்திருக்கும் இந்த ரமலானில் நோன்பு மற்றும் பிரார்த்தனைகளால் பலன்கள் பெறுவோம்.

    • மூன்றாம் பிறையில் அன்னை பாத்திமா (ரலி) நினைவு கூரப்படுகிறார்கள்.
    • ரமலான் பிறை 3-வது தினத்தில் அன்னை இறைவனடி சேர்ந்தார்கள்.

    பாத்திமா (ரலி) அவர்களின் தியாகம்

    புனித ரமலான் மாதம் பிறந்துவிட்டால், அதன் மூன்றாம் பிறையில் அன்னை பாத்திமா (ரலி) அவர்கள் நினைவு கூரப்படுகிறார்கள். ஹிஜ்ரி 11-ம் ஆண்டில் ரமலான் பிறை 3-வது தினத்தில் புதன்கிழமை அன்று அன்னை அவர்கள் தமது 25-ம் வயதில் (கி.பி. 632 நவம்பர் 21) பூமியின் மடியிலிருந்து இறைவனடி சேர்ந்தார்கள்.

    அன்னை பாத்திமா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்கும் அன்னை கதீஜா (ரலி) அவர் களுக்கும் பிறந்த கடைக்குட்டி செல்லக் குழந்தை ஆவார். நபி (ஸல்) அவர்களுக்கு நபி பட்டம் கிடைத்த ஓராண்டிற்குப் பின் நபி (ஸல்) அவர்களின் 41-ம் வயதினிலே அன்னை பாத்திமா (ரலி) அவர்கள் பிறந்தார்கள்.

    இவர்கள் சிறுவயதிலேயே தமது தந்தையின் மார்க்கக் கொள்கையை, ஓரிறைக் கொள்கையாக ஏற்றுக்கொண்டு முஸ்லிம் பெண்மணியாக நடந்து கொண்டார்கள்.

    எல்லா சூழ்நிலைகளிலும் தந்தைக்கு துணையாக, தந்தையின் சொல்படி வாழ்ந்து வந்தார்கள். தந்தையின் சொல்லும், செயலுமே நல்வழி காட்டும் என்பதை உணர்ந்து அதன்படி நடந்தார்கள்.

    தமது தாயின் மரணத்திற்கு பிறகு நபி (ஸல்) அவர்களின் சோதனையான காலகட்டங்களில் தாய்க்கு நிகராக இருந்து ஆறுதல் அளித்து வந்தார்கள். நிழலாக இருந்து தந்தையை கவனித்துக்கொண்டார்கள்.

    உஹதுப் போரின் போது நபி (ஸல்) அவர்களின் முகம் காயப்படுத்தப்பட்டது. அவர்களின் நடுப்பல் உடைக்கப்பட்டது. அவரது தலைக்கவசம் தலையின் மீது வைத்து நொறுக்கப்பட்டது. பாத்திமா (ரலி) தமது தந்தை நபி (ஸல்) அவர்களின் மேனியிலிருந்து வழிந்த ரத்தத்தை கழுவிக்கொண்டிருந்தார்கள். பாத்திமாவின் கணவர் அலி (ரலி) ரத்தத்தை தடுத்து நிறுத்த முயற்சித்தும் இன்னும் அது அதிகமாகிக் கொண்டே போனது. இதைப்பார்த்த பாத்திமா (ரலி) ஒரு பாயை எடுத்து, எரித்து சாம்பலாக்கி அதை நபியின் காயத்தில் வைத்து அழுத்தினார்கள். உடனே, ரத்தப் போக்கு நின்று விட்டது. (அறிவிப்பாளர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி), நூல்: புகாரி)

    'ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் கஅபாவினருகில் தொழுது கொண்டிருந்தார்கள். குரைஷிகளில் மோசமான ஒருவன், நபி (ஸல்) அவர்கள் சிரசை தாழ்த்தியபோது ஒட்டகத்தின் சாணத்தையும், ரத்தத்தையும், கருப்பையையும் எடுத்து வந்து அன்னாரின் இரு தோள் புஜத்தில் போட்டுவிட்டான். நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாவிலேயே கிடந்தார்கள். இதைப்பார்த்து, குரைஷிகள் ஒருவர் மீது ஒரு வர்

    சாய்ந்துவிடும் அளவுக்கு சிரித்தார்கள். சிறுமியாக இருந்த பாத்திமா (ரலி) அவர் தான் அவற்றை அப்புறப்படுத்தினார். அப்புறம்தான் நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். பாத்திமா (ரலி) குரைஷிகளை ஏச ஆரம்பித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் 'இறைவா! குரைஷிகளை நீ பார்த்துக் கொள்!' என்று மூன்று தடவை கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: இப்னுமஸ்ஊத் (ரலி), நூல்:புகாரி)

    அலி (ரலி) அவர்களுக்கும், பாத்திமா (ரலி) அவர்களுக்கும், ஹிஜ்ரி 2-ம் ஆண்டு ரமலான் மாதம் திருமணம் நடந்தது. அப்போது பாத்திமா(ரலி) அவர்களுக்கு 15 வயது 5 மாதங்கள் ஆகும். அலி (ரலி) அவர்களுக்கு 21 வயது 5 மாதங்கள் ஆகும்.

    பாத்திமா (ரலி) நபியின் மகள் என்பதனால் அவர்களுக்கென்று தனி சலுகைகளை நபி (ஸல்) அவர்கள் வழங்கவில்லை. 'முஹம்மதின் மகள் பாத்திமாவே! என் செல்வத்திலிருந்து நீ விரும்பியதைக் கேள்! தருகிறேன். ஆனாலும், இறைவனின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் உன்னைக் காப்பாற்ற முடியாது' என நபி (ஸல்) அவர்கள் தன் மகளிடம் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

    நபி (ஸல்) அவர்கள் தன் மகளிடம் கனிவு, பாசம் காட்டினாலும், நீதி, நேர்மையுடன் நடந்து கொண்டார்கள்.

    ×