search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dress"

    • புடவை மட்டுமல்ல, லெஹங்கா போன்ற நவீன உடைகளுக்கும் பொருத்தமாக இருக்கும்.
    • இதை அணிந்து புடவை கட்டும்போது, உடலும் புடவையும் பிட்டாக காட்சிதரும்.

    நவீனமான உடைகள் எவ்வளவோ வந்தாலும், நம் பாரம்பரிய உடையான புடவைக்கு ஈடு இணையாகாது. பேஷன் டிரெண்டிற்கு ஏற்ப பட்டுப் புடவைகளும், ஜாக்கெட் வகைகளும் நவீனமாகிக் கொண்டே இருக்கிறது. அந்தவகையில், 'ஷேப்வியர்' துணிகள், புடவை பிரியர்களின் சவுகரியத்தை இன்னும் அதிகமாக்கியிருக்கிறது, புடவை அணிபவர்களை கூடுதல் அழகாக்கி இருக்கிறது. அது என்ன ஷேப்வியர், இதன் பயன்கள் என்ன... போன்ற பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார், பேஷன் துறை வல்லுனரான புவனேஸ்வரி.

    கும்பகோணத்தை பூர்வீகமாக கொண்ட இவர், இப்போது சென்னை ஆவடியில் வசிக்கிறார். இவர் பெண்களின் பேஷன் தேவைக்கு ஏற்ப, புதுமையான உடைகளை வடிவமைத்து, தயாரித்து அசத்துகிறார்.

    இவர் 'ஷேப்வியர்' பற்றி பகிர்ந்து கொண்டவை...

    ''மார்டன் உடைகளை அணியும்போது, உடலை கட்டுக்கோப்பாக காட்டவும், உடலுக்கு ஒரு வடிவம் கொடுக்கவும் வெளிநாடுகளில் 'பாடிவியர்' என்ற உள்ளாடை பயன்படுத்தப்படும். இது கச்சிதமான தோற்றத்தையும், சவுகரியமான உணர்வையும் கொடுக்கும். அதே கான்செப்டில்தான், இந்த 'ஸேரி ஷேப்வியர்' உருவாக்கப்பட்டிருக்கிறது.

    இது புடவை அணிபவர்களுக்கு, சிறப்பானதாக இருக்கும். புடவை மட்டுமல்ல, லெஹங்கா போன்ற நவீன உடைகளுக்கும் பொருத்தமாக இருக்கும்'' என்றவர், இதன் பயன்பாட்டை விளக்கினார்.

    ''புடவை அணியும்போது, உள்பாவாடை அணிவது வழக்கம். அப்படி அணியும்போது, உடல் வழக்கத்தைவிட கொஞ்சம் 'புஸ்ஸென' பருமனாக தோன்றும். அந்த அசவுகரியத்தை போக்கும் நோக்கில்தான், இந்த ஷேப்வியர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இதை அணிந்து புடவை கட்டும்போது, உடலும் புடவையும் பிட்டாக காட்சிதரும். நடப்பதற்கும், உட்காருவதற்கும் சவுகரியமாக இருக்கும். குறிப்பாக, இடுப்பில் கச்சிதமாக பொருந்திவிடும்'' என்றவர், இது நவீன கால பெண்களின் விருப்பமான உடையாக மாறியதை பகிர்ந்து கொண்டார்.

    ''முன்பெல்லாம், திருமண பெண்கள் மட்டுமே பட்டு புடவை அணியும்போது, இதை பயன்படுத்தினர். ஆனால் இப்போது அலுவலகத்திற்கு புடவை அணிந்து செல்லும் பெண்களும், இதை வழக்கமாக்கிக் கொண்டனர். இவை, மிக குறைந்த விலையில் இருந்தே ஆரம்பிப்பதால், பெரும்பாலான பெண்களின் விருப்பமான உடையாக மாறிவிட்டது'' என்றவர், இதை தேர்ந்தெடுத்து வாங்குவது குறித்து விளக்கினார்.

    ''ஷேப்வியர், நிறைய துணிகளில் தயாரிக்கப்படுகிறது. காற்றோட்டம் இல்லாத நைலான் கலந்த ஜெர்ஸி துணிகளிலும் இவை தயாரிக்கப்படுவதால், இதன் தேர்வில் கவனமாக இருக்க வேண்டும்.

    முடிந்தவரை, காற்றோட்டமான 'ஸ்பாண்டெக்ஸ்' துணிவகைகளை தேர்வு செய்வது நல்லது. அதேபோல, உங்களது தேவைக்கு ஏற்ப, இதில் சில வடிவ அமைப்புகளும் உண்டு.

    அதில் 'மெர்மைட் கட்' சிறப்பானதாக இருக்கும். மெர்மைட் கட் என்பது, மீன் வடிவத்தை கொண்டது. இடுப்பு பகுதியில் குறுகியும், தொடை பகுதியில் விரிவாகவும், மீண்டும் முட்டிப்பகுதியில் குறுகியும் இருக்கும். இதை பயன்படுத்தும்போது, எந்த அசவுரியமும் இல்லாமல் நடக்கலாம். மேலும் இடுப்பு பகுதியில், பிடிமானத்திற்கு ஏதுவாக நாடா இருக்கிறதா என்பதை பரிசோதித்து வாங்கிப் பயன்படுத்துங்கள்'' என்றவர், இது புடவைக்கு பயனுள்ளதாக இருந்தாலும், ஒருசில நவ-நாகரிக மார்டன் உடைகளுக்கும் பயன்படுத்த முடியும் என்கிறார்.

    ''இந்த ஷேப்வியர் ஆடையில், முட்டி வரையில் மட்டுமே இருக்கக்கூடிய வகைகளும் உண்டு. அதை, மார்டன் உடைகளுக்குள்ளும் பயன்படுத்தலாம். ஆரம்பத்தில் நகர்புறங்களில் மட்டுமே பெரிதாக வரவேற்கப்பட்ட இவை, இப்போது கிராமப்புறங்களிலும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன. ஒருகாலத்தில் லெக்கிங்ஸ் ரக ஆடைகள் பிரபலமானதை போல, இப்போது ஷேப்வியர் ரகங்களும், டீன் ஏஜ் பெண்கள் மத்தியில் படுஜோராக பரவி வருகிறது. உடை மட்டுமல்ல, இந்த உடை சார்பான வர்த்தகமும் பெருகிவிட்டது. கல்லூரி பெண்கள் மற்றும் இல்லத்தரிசிகளும், இதை சமூக வலைத்தளங்கள் வாயிலாக விற்பனை செய்கிறார்கள். தமிழ் நாட்டின் பல பகுதிகளில் பல பெண்கள், தொழில்முனைவோர்களாக மாறி இதுசார்ந்த தயாரிப்பு நிறுவனங்களையும் தொடங்கி இருக்கிறார்கள்.

    தமிழ்நாட்டை போலவே, வெளிநாடுகளில் செட்டிலாகி இருக்கும் தமிழ்பெண்கள், இதை அதிகமாக விரும்புகிறார்கள். அவர்களுக்காக, ஏற்றுமதி தொழில்களும் சூடுபிடித்திருக்கிறது. கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், சுவீடன்... போன்ற உலக நாடுகளிலும், இது சார்ந்த வர்த்தகம் சூடுபிடித்திருக்கிறது'' என்றவர், இனி வருங்காலங்களில் இதன் தேவையும், உற்பத்தியும் அதிகமாக இருக்கும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்.

    • கஸ்டமைஸ்ட் என்பது, உங்களுக்காகவே உருவாக்கப்படும் பிரத்யேக ஆடை.
    • கஸ்டமைஸ் உடைகளை பொறுத்தமட்டில், கட்டுப்பாடுகளே கிடையாது.

    சென்னையை அடுத்த நசரத்பேட்டையை சேர்ந்தவரான தாரணி கணேசன், கைத்தேர்ந்த பேஷன் டிசைனர். சினிமா மற்றும் சீரியல் பிரபலங்களுக்கு, செலிபிரிட்டி டிசைனராக திகழ்வதுடன், அவர்கள் விரும்பும் தனித்துவமான உடைகளை வடிவமைத்துக் கொடுக்கிறார். மேலும் 'கஸ்டமைஸ்ட்' எனப்படும் தனிநபருக்காக வடிவமைக்கப்படும் ஆடை வடிவமைப்பிலும், ஆபரணங்களை உடையோடு ஐக்கியப்படுத்தி தைக்கும் 'மஹம்' கலையிலும் கெட்டிக்காரர். இவரிடம் ''பாட்டி, அம்மா... காலத்து பழைய புடவைகளை வைத்து இப்போது என்ன செய்ய முடியும்..?'' என்ற கேள்வியை முன்வைத்தால், ''அனார்கலி தைக்கலாம், டாப் கவுன் தைக்கலாம். சுடிதார் தைக்கலாம். மேக்ஸி, அம்பர்லா கவுன் தைக்கலாம்'' என பலவிதமான பதில்களை முன்வைக்கிறார்.

    ஆம்...! செலிபிரிட்டி டிசைனரான இவர், பழைய புடவைகளுக்கு மார்டன் டிரெண்டில், புது வடிவம் கொடுப்பதிலும் கில்லாடி. இவர், கஸ்டமைஸ்ட் ஆடை கலாசாரம் பற்றியும், செலிபிரிட்டி டிசைனர் அனுபவம் பற்றியும், பழைய புடவைகளுக்கு புத்துயிர் கொடுப்பது பற்றியும் பகிர்ந்து கொள்கிறார்.

    * பேஷன் துறையில் ஆர்வம் வந்தது எப்படி?

    நான் மைக்ரோ பயாலஜியில் எம்.பில் முடித்திருக்கிறேன். திருமணத்திற்கு பிறகான குடும்ப வாழ்க்கையில், கிடைத்த ஓய்வு நேரங்களை பேஷன் படிப்புகள் மூலம் பயனுள்ள வகையில் பயன்படுத்திக்கொண்டேன். அந்த காலகட்டத்தில்தான், 'கஸ்டமைஸ்ட்' ஆடை வடிவமைப்புகளும் பிரபலமாகின. என்னுடைய ஆர்வமும், சமூகத்தின் தேவையும்... 'பேஷன்' என்ற புள்ளியில் குவியவே, நான் பேஷன் டிசைனராகிவிட்டேன்.

    * கஸ்டமைஸ்ட் ஆடைகள் பற்றி கூறுங்களேன்?

    தீபாவளி, பொங்கல், புத்தாண்டு பண்டிகைகளுக்கு நீங்கள் வாங்கி உடுத்தும் ஆடைகளை போலவே அதே வண்ணம், அதே டிசைனில் மற்றவர்களும் உடுத்தியிருப்பதை பார்த்திருப்பீர்கள். ஏனெனில் ஆடை சந்தையில், அதேபோன்ற உடைகள் நிறைய வந்திருக்கும். ஆனால் கஸ்டமைஸ்ட் என்பது, உங்களுக்காகவே உருவாக்கப்படும் பிரத்யேக ஆடை. அதேபோல மற்றொரு உடையை, வேறு எங்கும் வாங்க முடியாது. பார்க்கவும் முடியாது.

    * என்னென்ன டிசைன்களில் எல்லாம் ஆடைகளை கஸ்டமைஸ் செய்யலாம்?

    கஸ்டமைஸ் உடைகளை பொறுத்தமட்டில், கட்டுப்பாடுகளே கிடையாது. திரைப்பட காட்சிகளை நினைவூட்டும் உடைகளில் தொடங்கி, சிண்டர்லா, புரோஷன், மிக்கி மவுஸ்... இதுபோன்ற கார்ட்டூன் கதாபாத்திரங்களை மையப்படுத்தும் தீம் உடைகள் வரை தைக்கலாம். கூடவே, பெற்றோரின் பழைய கால நினைவுகளை மீட்டெடுக்கும் (ரீ-கிரியேட்டிங்) மாதிரியிலான உடைகளையும் வடிவமைக்கலாம்.

    * பழைய புடவைகள் எப்படி புது வடிவம் பெறுகின்றன?

    புதுமைகள்தான், பேஷன் துறையின் அடிநாதம். அதில் உருவானதுதான், இந்த டெக்னிக். எல்லோர் வீட்டிலும், அம்மா, பாட்டிகளின் நினைவுகளை தாங்கிய பழைய புடவைகள் இருக்கும். அதை இப்போது உடுத்துபவர்களும் உண்டு. பழைய டிசைன் என்ற தயக்கத்தினால், உடுத்த தயங்குபவர்களும் உண்டு. அப்படி தயங்கு பவர்களுக்காகவே, இந்த முயற்சி. பழைய புடவையை புடவையாகத்தான் அணியவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உங்களுக்கு பிடித்த வகையில், சுடிதாராக அணியலாம். இல்லையென்றால் அனார்கலி, கவுன், லாங் பிராக், நீல் ஸ்கர்ட், அம்பர்லா கவுன், குர்த்தி... இதுபோன்ற பேஷன் வடிவங்களுக்கும் மாற்றிக்கொள்ளலாம்.

    சில பெண்கள், அவர்களது அம்மா புடவையில் தங்களுக்கும், மகளுக்கும் ஒரே டிசைனில் உடை தைத்து அணிகிறார்கள். ஏதோ ஒரு வகையில், முன்னோர்களுக்கும், அவர்களுக்குமான பந்தத்தை உடை வடிவில் தொடர விரும்புகிறார்கள்.

    * கிழிந்த புடவைகளையும், பேஷன் உடைகளாக மாற்றமுடியுமா?

    நிச்சயமாக மாற்றலாம். புடவையின் கிழிந்த பகுதிகளை மட்டும் விட்டுவிட்டு, நல்ல நிலையில் இருக்கும் மற்ற புடவை துணிகளிலும், நவ-நாகரிக உடைகளை தைக்கலாம். அவரவர் பட்ஜெட்டிற்கு ஏற்ப, ஆரி வேலைப்பாடுகள் செய்து, புடவை ஆடைகளை அழகாக்கலாம்.

    * நீங்கள் சின்னத்திரை பிரபலங்களுக்கும் காஸ்டியூம் டிசைனராக இருப்பதை பற்றி கூறுங்கள்?

    சினிமா மற்றும் சீரியல்களில் பிசியாக நடிக்கும் ரேஷ்மா பசுபுலெட்டிக்கு நான் செலிபிரிட்டி டிசைனராக இருக்கிறேன். அவரது விஷேச நிகழ்ச்சிக்காக அணுகியபோது ஏற்பட்ட பழக்கம் இப்போது வரையிலும் தொடர்கிறது. அவரை தொடர்ந்து, சில விஜய் டி.வி. பிரபலங்களுக்கும், ஜெயா டி.வி.யின் வாலு பசங்க நிகழ்ச்சிக்கும் உடைகள் வடிவமைத்து கொடுத்திருக்கிறேன். ஆன்லைன் மீடியா நிகழ்ச்சி தொகுப்பாளினி நிக்கி என்பவருக்கும், ஆடை வடிவமைத்து வருகிறேன்.

    * உங்களது ஸ்பெஷல் என்ன?

    ஆடை வடிவமைப்பில், படைப்பாற்றல் மிகவும் அவசியம். அதுவும் டிரெண்டிங்கிற்கு ஏற்ப நமது படைப்பாற்றல் மற்றும் சிந்தனைகளை வளர்த்துக்கொண்டே இருக்கவேண்டும். அந்தவகையில், என்னுடைய கிரியேட்டிவிட்டியை, மேம்படுத்திக்கொண்டே இருப்பது என்னுடைய ஸ்பெஷல் என நினைக்கிறேன்.

    * பேஷன் ஆர்வத்தில், ஆடை வடிவமைப்பாளராக உருமாற நினைக்கும் இளம் பெண்களுக்கு உங்களது அறிவுரை?

    ஆடை வடிவமைப்பில், உங்களுக்கு எல்லா வேலைகளும் தெரிந்திருக்க வேண்டும். எந்த ஒருவேலைக்கு மற்றவர்களை அதிகம் சார்ந்திருக்கக்கூடாது. கட்டிங், ஸ்ட்ரிச்சிங், ஆரி வேலை, எம்ராய்டரி, ஹோக்... இப்படி எல்லா வேலைகளையும் தெரிந்து வைத்திருந்தால், 'சீசன்' இல்லாத காலங்களிலும் 'பொட்டிக்' கடையை சமாளித்து நடத்திவிடலாம்.

    * பேஷன் மற்றும் பொட்டிக்கில் நல்ல எதிர்காலம் இருக்கிறதா?

    நிச்சயமாக. இன்றைய டீன் ஏஜ் வயதினரின் பேஷன் ஆர்வத்திற்கு, வீதிதோறும் பொட்டிக் கடைகள் திறந்தாலும் நிச்சயம் சிறப்பாகவே இயங்கும். இன்றைய கால இளைஞர்களும் இளம்பெண்களும், ஆடைகளுக்கும் செலவு செய்வதில் கணக்கு பார்ப்பதே இல்லை.

    * நீங்கள் முயன்ற புதுமைகளை கூறுங்கள்?

    தையல் கலையில், நிறைய கட்டிங் வேலைகள் இருக்கும். நிறைய துண்டு துணிகள் சேர்ந்து கொண்டே இருக்கும். அதை குப்பைக் கழிவாக தூக்கி எறிபவர்களும் உண்டு. அதில் புதுமை படைப்பவர்களும் உண்டு. அந்தவகையில், கழிவாக சேரும் பிட்டு துணிகளை கலர்கலராக சேர்த்து குழந்தைகளுக்கான ஹேர் பேண்ட், மேஜை அலங்கார விரிப்புகள், காபி மேட்... என நிறைய உபயோகமுள்ள பொருட்களை தயாரிக்கிறோம். இதுவும், மறுசுழற்சி பொருட்கள் பட்டியலில்தான் வரும்.

    * சமீபகாலமாக, 'கஸ்டமைஸ்ட் ஆடைகள்' ரொம்ப பிரபலமாக இருப்பது ஏன்?

    ஆம்...! ஒருகாலத்தில் திருமண வரவேற்புக்கு மட்டுமே 'கஸ்டமைஸ்ட்' ஆடைகளை பயன்படுத்துவார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை. நிச்சயதார்த்தத்தில் தொடங்கி, திருமணத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய போட்டோஷூட்கள், வரவேற்பு நிகழ்ச்சிகள், ஹனிமூன் பயணங்கள், கர்ப்பகால போட்டோஷூட், குழந்தை பிறப்பு, குழந் தையின் முதல் வருட பிறந்த நாள் கொண்டாட்டம்... இப்படி எல்லா விஷேசங்களுக்கும், அவர்களுக்கு பிடித்த மாதிரியில், பிடித்த நிறங்களில், பிடித்த தீம் (கருப்பொருளில்) ஆடைகளை வடிவமைத்து அணிகிறார்கள். இது, இன்றைய டீன்-ஏஜ் வயதினரின் தவிர்க்கமுடியாத பழக்கமாகிவிட்டது.

    • ஆரி ஒர்க் தையல் தான் பெண்களிடம் பிரபலமாக இருக்கிறது.
    • சேலையின் விலை ரூ.5 ஆயிரம், ஜாக்கெட் தையல் கூலி ரூ.15,000.

    அழகை விரும்பாதவர்கள் இருக்க மாட்டார்கள். அதிலும் பெண்கள் கொஞ்சம் அதிகமாகவே அழகை விரும்புவார்கள், ரசிப்பார்கள். இது அவர்களின் இயல்பான குணம்.

    அதனால் தான் ஆடை அலங்காரங்களை பொறுத்தவரை ஆண்களை விட பெண்களுக்கு பல மடங்கு அதிகமாக இருக்கும். விதவிதமான ஆடை வடிவமைப்புகளை டிசைனர்கள் உருவாக்கி கொண்டே வருவார்கள்.

    புதிதாய் கலை நயத்துடன் என்ன வந்தாலும் அதை வாங்கி அணிந்து பயன்படுத்துவதில் பெண்கள் அதிகமான ஆர்வம் காட்டுவார்கள். இதை ஜவுளி கடைகளுக்கு செல்லும்போது எல்லோரும் பார்க்கவும் முடியும், உணரவும் முடியும்.

    எத்தனை சேலைகளை புரட்டிப் புரட்டிப் பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டே இருப்பார்கள்.கல்லிலே கலை வண்ணம் கண்டான்.... என்று தான் முன்பெல்லாம் சொல்ல கேள்விப்பட்டி ருக்கிறோம். ஆனால் இப்போது பெண்களின் சேலை- ஜாக்கெட்டுகளில் தங்கள் கற்பனை களையும், கைவண்ணத்தையும் காட்டி கவருகிறார்கள்.

    இப்போது பெண்களை கவருவதில் பிரபலமாக இருப்பது ஆரி ஒர்க் என்ற கலைநயம் மிக்க தையல்தான். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை வட மாநிலங்களில் பிரபலமாக இருந்த இந்த வேலைப்பாடு கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்திலும் பரவத் தொடங்கியது.

    இப்போது தமிழகம் முழுவதும் இந்த ஆரி ஒர்க் தையல் தான் பெண்களிடம் பிரபலமாக இருக்கிறது. ஒரு பட்டு புடவை குறைந்த பட்சம் ரூ. 5000- க்கு எடுத்து விடுவார்கள். ஆனால் அதற்கான ஜாக்கெட்டை இந்த ஆரி ஒர்க் வேலைப்பாடு மூலம் தயார் செய்வதற்கு குறைந்தபட்சம் ரூ. ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை இருக்கிறது. கேட்டால் அடேங்கப்பா என்று ஆச்சரியப்பட தோன்றும்.

    ஆனால் இதுதான் இன்று பெண்களிடையே மிகப்பெரிய மோகத்தை உருவாக்கி இருக்கிறது. மணப்பெண்ணுக்கு பட்டு சேலையின் மதிப்பு சராசரியாக ரூ.25 ஆயிரம் என்றால் அவர்களுக்கு ஜாக்கெட் தைப்பதற்கான கூலி ரூ. 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை ஆகிறது. குடும்பச் சூழ்நிலையை கருதி ரூ.2000 முதல் 5000 அல்லது 10 ஆயிரத்திற்குள் முடித்து விடுபவர்களும் இருக்கிறார்கள்.

    இந்த வேலைப்பாடு ஜாக்கெட்டில் தங்க நிறத்திலான முத்துக்களை தங்கம் மற்றும் வெள்ளை நிறத்திலான மிகச்சிறிய அளவிலான முத்துக்களை வடிவத்திற்கு ஏற்ப கோர்ப்பது தான். என்ன வடிவத்தை என்ன வேலை பாட்டை விரும்புகிறோமோ அதை அந்த ஜாக்கெட்டில் கொண்டு வர முடியும். விதவிதமான பறவைகள் பூக்கள் செடி கொடிகள் இலைகள் போன்று பல்வேறு விதமான வடிவமைப்பு-களை இந்த ஜாக்கெட்டில் கொண்டு வந்து விடுகிறார்கள்.

    இப்போது அதையும் தாண்டி ஜாக்கெட்டில் இதே வேலைப்பாட்டில் பெயர்களையும் பொறித்துக் கொள்கிறார்கள். இன்னும் சிலர் அதிலும் ஒரு படி மேலே போய் விட்டார்கள். காதலித்து திருமணம் செய்பவர்கள் காதலித்த காலத்தில் சில சுவாரஸ்யமான அனுபவங்களை சந்தித்து இருப்பார்கள். அதைக் கூட கற்பனையில் காட்சியாக்கி தங்கள் பட்டுக்களில் பார்டரில் இந்த ஆரி ஒர்க் மூலம் செதுக்கி விடுகிறார்கள்.

    இந்த தொழிலில் வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பெருமளவில் ஈடுபடுகிறார்கள். நம்மூர் தையல்காரர்களும் இந்த ஆரி ஒர்க் வேலைப்பாடு செய்வதற்காக வடமாநில தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிழைக்க தெரிந்தவன் எப்படி வேண்டுமானாலும் சம்பாதிப்பான் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். இது கலைஞர்களின் கற்பனை திறனை வெளிப்படுத்தி சம்பாதிக்கும் அற்புதமான கலை வேலைப்பாடு.

    • பெரும்பாலும் திருமணமாகாத இளம் பெண்கள்தான் தாவணி அணிகிறார்கள்.
    • டீன் ஏஜ் தோற்றத்தை தக்கவைக்கக்கூடியது.

    அன்றைய காலகட்டத்தில் பருவம் அடைந்த பெண்கள் தாவணி அணியும் வழக்கத்தை பின்பற்றினர். நவ நாகரிக மோகம் மேற்கத்திய ஆடைகளை நாட வைத்ததன் காரணமாக தாவணி அணியும் வழக்கம் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருக்கிறது. சடங்கு, சம்பிரதாயத்திற்காக மட்டும் தாவணி அணியும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது.

    இன்றும் கிராமங்களில் தாவணி அணியும் இளம் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். பாரம்பரிய ஆடையான இதனை சுப நிகழ்வுகளின்போது அணிந்து கொள்வதற்கு சில இளம் பெண்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்கள் சவுகரியமாக உடுத்துவதற்கு ஏற்ப தாவணிகள் தயாரிக்கப்படுகின்றன. இன்றைய பேஷன் உலகில் தாவணி ஏன் அணிய வேண்டும் என்பதற்கான காரணங்கள்:

    இளமை : பெரும்பாலும் திருமணமாகாத இளம் பெண்கள்தான் தாவணி அணிகிறார்கள். அதற்கேற்ப இது இளமை உணர்வை வெளிப்படுத்தக்கூடியது. டீன் ஏஜ் தோற்றத்தை தக்கவைக்கக்கூடியது. சேலையை போல் தாவணி முதிர்ச்சியான தோற்றத்தை கொண்டிருக்காது. நடிகைகள் கூட பல சந்தர்ப்பங்களில் தாவணி அணிய விரும்புகிறார்கள்.

    சவுகரியம் : சேலையை விட தாவணி அணிந்து கொண்டு நடப்பதற்கு சவுகரியமாக இருக்கும். நவ நாகரிக உடையை போல் இறுக்கமாக உடுத்த வேண்டியதிருக்காது. தாவணிக்கு பொருத்தமாக உடுத்தப்படும் பாவாடை தளர்வாக இருக்கும். துப்பட்டாவும் அசவுகரியத்தை கொடுக்காது. நேர்த்தியாக இருக்கும். இப்போது படங்களில் நடிகைகள் தாவணி அணிவது பேஷனாகி இருக்கிறது. சமந்தா, ரகுல் ப்ரீத்சிங் போன்ற நடிகைகள் விருது விழாக்கள், ஆடியோ வெளியீட்டு விழாக்களில் தாவணியில் உலா வந்திருக்கிறார்கள்.

    ஸ்டைல் : தாவணி பாரம்பரியமான பழைய ஆடை என்றாலும், தற்போதைய டிரெண்டுக்கு ஏற்ப உருமாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் தாவணியை ஸ்டைலாக அணியலாம். நேர்த்தியான தோற்றத்தையும் பெற முடியும். பாவாடை, ரவிக்கையின் நிறம், தாவணியின் நிறம் என ஒவ்வொன்றின் தேர்விலும் இன்றைய பேஷன் உலகுக்கு ஈடு கொடுக்கும் அம்சங்கள் உள்ளன. பேஷன் டிசைனர்களும் நடிகைகள் உடுத்துவதற்கு ஏற்ப ஸ்டைலிஷான வடிவமைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

    பாரம்பரியம் :திருமண விழாவிலோ அல்லது கோவில் திருவிழாவிலோ பாரம்பரிய உடை உடுத்த விரும்பும் இளம் பெண்களுக்கு தாவணி பொருத்தமான தேர்வாக இருக்கும். பட்டு துணிகளிலும் தாவணிகள் தயாரிக்கப்படுகின்றன. உடுத்தும் ஆடைக்கு ஏற்ப ஒப்பனை செய்வதன் மூலம் பளிச் தோற்றத்தில் மிளிரலாம். பாரம்பரிய நகைகள் அணிவதும் கூடுதல் பொலிவு சேர்க்கும்.

    தனித்துவம் : சுப நிகழ்வுகளுக்கு சுடிதார், லெஹெங்கா போன்ற ஆடைகளுக்கு மாற்றாக நேர்த்தியாக தாவணி அணிந்து சென்றால் கூட்டத்தில் நீங்கள் தனித்து தெரிவீர்கள். நவ நாகரிக ஆடைகள் பிரமாண்டமாக காட்சி அளித்தாலும் தாவணியுடன் ஒப்பிடும்போது மற்றவர்களின் கவனம் உங்கள் பக்கம் ஈர்க்கப்படும். தங்களை தனித்துவமாக காட்டிக்கொள்ள ஆப் சாரி (Half Saree) என்று அழைக்கப்படும் தாவணி எப்போதுமே சிறந்த தேர்வாக அமையும்.

    • ஸ்வெட்ஷர்ட் இளைஞர்களிடையே பிரபலமாகி வருகின்றது
    • ஸ்வெட்ஷர்ட் நாகரீகமாக அணிய இதோ சில வழிமுறைகள்...

    ஸ்வெட்ஷர்ட்களை உடற்பயிற்சி செய்யும்பொழுது அணியக்கூடிய வசதியான ஆடை என்று குறிப்பிடுவது கடந்த காலத்தின் ஒரு விஷயம் எனலாம். இப்போது, அவை சாதாரண உடைகள் மற்றும் வீதிகளில் நடந்து செல்பவர்களில் பலர் அணியக்கூடிய ஆடை வகையின் ஒரு பகுதியாக இருக்கின்றது. அன்றாடும் உடுத்தக் கூடியஸ்வெட்ஷர்ட்களை எப்படி அணிவது என்று நீங்கள் யோசிக்கிறீர்களா?அவற்றை நாகரீகமாக அணிய இதோ சில வழிமுறைகள் !

    1.வெளியில் தோழிகளுடன் ஹோட்டலுக்குச் செல்லும் பொழுது சிறிய ஸ்கேட்டர் ஸ்கர்ட் மற்றும் மாறுபட்ட ஸ்வெட்ஷர்ட் மற்றும் ஒரு ஜோடி கணுக்கால் பூட்ஸை அணிந்து செல்லலாம். அங்கிருக்கும் அனைவரின் கவனமும் உங்களின் மீது இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    2.ஸ்லிம்-ஃபிட் ஜீன்ஸ் மற்றும் உங்கள் சிறந்த ஜோடி ஸ்னீக்கர்களுடன் ஆண்கள் ஸ்வெட்ஷர்ட்களை இணைத்து அணியும் பொழுது ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லை என்று சொல்லத் தோன்றும்.

    3.ஒரு சட்டையின் மேல் புறம் ஸ்வெட்ஷர்ட்டை அணியும் பொழுது அவை பல அடுக்குகளாகத் தோன்றினாலும் குளிர்காலத்தில் வெளியே செல்லும்போது அணிவதற்கு ஏற்ற ஆடையாக இவை இருக்கும்.

    4.ஸ்வெட்ஷர்ட்டுக்கு மேல் டி-ஷர்ட்டு அணிவதும் இப்பொழுது இளைஞர்களிடையே பிரபலமாகி வருகின்றது. இதனால் மந்தமாக இருக்கும் டி-ஷர்ட்டும் பளிச்சென்ற தோற்றத்தை தருவதாக இருக்கும்.இவ்வாறு அணியும் பொழுது அனைவராலும் நம்முடைய ஆடை அணியும் பாணி பாராட்டப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பதை மறக்காதீர்கள்.

    5.சரியான ஜோடி ஷார்ட்ஸ் அல்லது அழகான சிறிய பாவாடையுடன், நீங்கள் ஒரு ஸ்வெட்ஷர்ட்டை உடுத்தும்போது ஒரு புதிய ஃபேஷனை நீங்கள் அறிமுகப்படுத்துபவராக இருப்பீர்கள்.

    6.ஒரு நல்ல ஜோடி ஸ்னீக்கர்களுடன் ஷார்ட்ஸ் மற்றும் ஸ்வெட்ஷர்ட் அணியும் பொழுது அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒட்டுமொத்த தோற்றத்தையும் மிகவும் அழகானதாக மாற்றிவிடும். லோஃபர்கள் அல்லது ஃபிளிப் ஃப்ளாப்புகளும் ஸ்வெட்ஷர்ட்களுடன் அணிவதற்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.

    கோடையில் ஸ்வெட்ஷர்ட் அணியலாமா?

    கோடையில் ஸ்வெட்ஷர்ட் அணியலாமா அல்லது வேண்டாமா என்பது அவரவர் விருப்பம் மற்றும் வசதியைப் பொறுத்ததாகும்.ஸ்வெட்ஷர்ட்கள் வியர்வையை உறிஞ்சுவதற்கு ஏற்றாற்போல் வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே அவை நம் உடலை கதகதப்பாக வைத்திருக்க உதவுகின்றன.எதுவாக இருந்தாலும், ஸ்வெட்ஷர்ட் அணிவதை விட கோடையில் ஸ்வெட்டர்களை அணிவது நடைமுறைக்கு பொருந்தாது என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் குறிப்பாக உடற்பயிற்சி செய்யும்பொழுது உடல் முழுவதும் வியர்வையால் நனைந்து ஈரமான ஆடைகளை அணிவதிலிருந்து நமக்கு விடுதலை தரக்கூடியவையாக இந்த ஸ்வெட்ஷர்ட்டுகள் செயல்படும் என்று உறுதியாக நம்பலாம்.

    ஸ்வெட்டருக்கும் ஸ்வெட்ஷர்ட்டுக்கும் என்ன வித்தியாசம்?

    ஒரு ஸ்வெட் டருக்கும் ஸ்வெட்ஷர்ட்டுக்கும் உள்ள மிக அடிப்படையான வேறுபாடு, அவை தயாரிக்கப்படும் விதம்.ஸ்வெட்டர் முற்றிலும் பின்னப்பட்டு தயாரிக்கப்படுகின்றது.ஆனால் ஸ்வெட்ஷர்ட் அப்படி தயாரிக்கப்படுவதில்லை. ஸ்வெட்ஷர்ட் கனமான பருத்தியால் தயாராகின்றது. ஸ்வெட்டர்கள் குளிர்காலத்தில் நம் உடலை சூடாக வைத்திருக்க உதவுகின்றன. ஸ்வெட்ஷர்ட்டுகள் நம் உடலை கதகதப்பாக வைத்திருப்பதோடு நம் உடலில் ஏற்படும் வியர்வையையும் உறிஞ்சுகின்றது. இதன் காரணமாகவே உடற்பயிற்சி செய்பவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் ஸ்வெட்ஷர்ட்களை அதிகம் விரும்பி அணிவதைப் பார்க்க முடிகின்றது. ஒரு ஸ்வெட்ஷர்ட்டில் முன்புறம் திறந்து அணிந்துகொள்வது போன்ற வசதி இருக்காது. ஆனால் ஒரு ஸ்வெட்டரின் வடிவமைப்பு அல்லது பாணியைப் பொறுத்து திறந்து மூடக்கூடிய வசதியானது இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்.

    • ஸ்வெட்ஷர்ட்டுகள் உட்புறம் கம்பளியை ஒத்த ஃப்ளீஸ் என்ற துணியால் ஆனது.
    • ஃபேஷன் உலகின் ஆசீர்வாதம் என்று ஸ்வெட்ஷர்ட்டுகளைச் சொன்னால் அது மிகையாகாது.

    சில காலகட்டங்களில் ஒரு குறிப்பிட்ட ஆடைகளின் பெயர்கள் அதிகமாக அனைவராலும் உச்சரிக்கப்பட்டும்,அணியப்பட்டும் மிகவும் பிரபலமடைந்திருப்பதை நாம் அறிந்திருப்போம்.ஷார்ட்ஸ், முக்கால் பேண்ட், கார்கோ பேண்ட் போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம். இப்போது இதுபோன்ற ஆடைகளின் வரிசையில் அனைவராலும் அதிகம் உச்சரிக்கப்படும் ஒரு பெயர் ஸ்வெட்ஷர்ட் என்பதாகும்.

    ஸ்வெட்ஷர்ட் என்றால் என்ன?

    ஃபேஷன் உலகின் ஆசீர்வாதம் என்று ஸ்வெட்ஷர்ட்டுகளைச் சொன்னால் அது மிகையாகாது. சிலர் அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ற புது பாணிகளில் நமக்கு அணிவதற்கு வசதியான ஆடைகளையும், இன்னும் சிலர் உடற்பயிற்சிகளின் போது அணிவதற்கு ஏற்றார் போன்ற ஆடைகளையும் தேர்ந்தெடுத்து அணிவதைப் பார்க்க முடியும். இந்த ஃபேஷன் ஆடையானது நம் வாழ்க்கையை மிகவும் எளிதாக்குகிறது.

    ஸ்வெட்ஷர்ட்டுகள் உட்புறம் கம்பளியை ஒத்த ஃப்ளீஸ் என்ற துணியால் ஆனது. அதேநேரம் அந்த கம்பளியை பிரஷ் செய்து மிகவும் மென்மையாக கொடுக்கிறார்கள். இதில் இருக்கும் ஃபிளீஸ் லைனிங் போன்று கொடுக்கப்பட்டு ஒரு மென்மையான, சூடான உணர்வைத் தந்து அணிபவருக்கு கம்பளியை அணிந்தது போன்ற உணர்வைத் தருகின்றது.இவை ஸ்வெட்டர் போன்று பெரிதாக அல்லது தளர்வாக வந்தாலும் இவை ஸ்வெட்டர் அல்ல ஸ்வெட்ஷர்ட்கள்தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

    உண்மையில் ஸ்வெட்டர் வகைகளின் கீழ் வந்தாலும் இவை ஸ்வெட்டரிலிருந்து மாறுபட்டவை.அதேபோல் ஸ்வெட்ஷர்ட் அணிந்து வேலை செய்யலாம் ஆனால் குளிர்காலம் தவிர மற்ற காலங்களில் ஸ்வெட்டர் அணிய முடியாது.ஸ்வெட்டருக்கும் ஸ்வெட்ஷர்ட்டுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு இதுதான்.கோடைக்காலத்தில் அணியக்கூடிய பல ஆடைகளில் ஸ்வெட்ஷர்ட்டும் கட்டாயம் தனக்கென ஒரு இடத்தை பிடிக்கக் கூடியதாக இருக்கின்றது. சிலர் ஸ்வெட்ஷர்ட்களை ஹூடிகள் என்றும் குறிப்பிடுகிறார்கள். எல்லா ஸ்வெட்ஷர்ட்களும் ஹூடி அமைப்புடன் வருவதில்லை.தடிமனான பருத்தித் துணியில் உட்புறம் ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்கு லைனிங் கொடுக்கப்பட்டு வருவது ஸ்வெட்ஷர்ட்டாகும்.

    அவை உங்கள் உடற்பகுதி மற்றும் கைகளை மறைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன, இதனால் நீங்கள் உடற்பயிற்சி செய்யும்பொழுது இடையூறு செய்யும் அதிகப்படியான வியர்வைக்கு விடை கொடுக்கும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

    • பெண்கள் உடுத்தும் ஆடைகளின் கைப்பகுதிகள், அவர்களின் தோற்றத்தை மேம்படுத்திக் காட்டும்
    • அழகுக்கு அழகு சேர்க்கும் சில 'ஸ்லீவ்' வகைகளை இங்கே காணலாம்:

    பெண்கள் உடுத்தும் ஆடைகளின் கைப்பகுதிகள், அவர்களின் தோற்றத்தை மேம்படுத்திக் காட்டும் தன்மை கொண்டவை. 'ஸ்லீவ்' என்று அழைக்கப்படும் கைப்பகுதியை, அணிபவர்களின் உருவத்திற்கு ஏற்றவாறு பலவிதமாக மாற்றி அமைக்கலாம். ஆடைகளில் கைப்பகுதியின் நிறம், அமைப்பு, வடிவம் மற்றும் அளவு ஆகியவற்றைப் பொறுத்து, பருமனான உடல்வாகு கொண்டவர்களையும் பிட்டாக காட்ட முடியும். அவ்வாறு அழகுக்கு அழகு சேர்க்கும் சில 'ஸ்லீவ்' வகைகளை இங்கே காணலாம்:

    பட்டர்பிளை ஸ்லீவ்: பட்டாம்பூச்சியின் இறகுகள் போல வளைந்து வருவதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. தோள்பட்டையில் இருந்து ஆரம்பிக்கும் பட்டர்பிளை ஸ்லீவ் ¾ பகுதி அளவு கொண்டது. இந்த டிசைனை சுடிதார், குர்த்தி, பிளவுஸ் போன்றவற்றில் பொருத்தி அணிந்து கொள்ளலாம். நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது அணியும் உடைகளுக்கு இது சரியான தேர்வாகும்.

    பெல் ஸ்லீவ்: பெல் ஸ்லீவ் டிசைன், தோள்பட்டையில் இருந்து மணிக்கட்டு வரை அகலமாக விரிவடைந்து, கடைசியில் 'பெல்' போன்று அதாவது 'மணி' போன்ற வடிவத்துடன் இருக்கும். இந்த வகையான கைப்பகுதியை, பல அளவுகளிலும், பலவித ஆடைகளுடன் சேர்த்து அணியலாம்.

    கப் ஸ்லீவ்: பார்ப்பதற்கு சட்டையின் கைப்பகுதியை மேலே சுருட்டி விட்டது போல காட்சி தரும், 'கப் ஸ்லீவ்' பல பெண்களின் தேர்வாகும். உடையை உருவாக்கும் பொழுதே இந்த ஸ்லீவை சுருட்டி தைத்து, அதன் மேலே ஒரு பட்டனைப் பொருத்தி விடுவார்கள். நீண்ட டாப்ஸ், க்ராப் டாப்ஸ் மற்றும் பாரம்பரிய குர்திகளில் இது பொருத்தமாக இருக்கும்.

    லாங் ஸ்லீவ்: தோள்பட்டை முதல் மணிக்கட்டு வரை நீண்டு வரும் லாங் ஸ்லீவ், டாப்ஸ், பிளவுஸ் என அனைத்து ஆடைகளுக்கும் ஏற்றது. பல பெண்களின் முதல் தேர்வாக இருக்கும் இதை கருப்பு, வெள்ளை, பச்சை ஆகிய ஒரே நிறங்களாலான ஆடைகளில், வைத்து அணிந்தால் அழகாக இருக்கும்.

    ஓபன் ஸ்லீவ்: கை உள்ள உடை அணிய விரும்பாதவர்களுக்கு ஓபன் ஸ்லீவ் பரிந்துரைக்கப்படுகிறது. இது தோள்பட்டைக்கு அழகான தோற்றம் கொடுக்கும். பலரும் விரும்பி அணியும் 'போட் நெக்' உள்ள ஆடைகளில் இந்த ஸ்லீவ் பொருத்தமாக இருக்கும்.

    ஸ்பிலிட் ஸ்லீவ்: ஸ்பிலிட் ஸ்லீவ் டிசைன், ¾ அளவு ஸ்லீவாகவும், முழு ஸ்லீவாகவும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு அணிந்து கொள்ளலாம். 'ஸ்பிலிட்' என்றால் 'பிளவு' என்று அர்த்தம். இந்த வகை கைப்பகுதியில் 'பிளவு' போன்ற அமைப்பு இருக்கும். அது முடியும் இடத்தில் துணி அல்லது பட்டன் கொண்டு பொருத்திக்கொள்ளும் அம்சத்துடன் வருகிறது.

    பெட்டல் ஸ்லீவ்: 'பெட்டல்' என்றால் 'பூவின் இதழ்' என்று அர்த்தமாகும். இந்த வகை கைப்பகுதி சிறியதாக இதழ் போன்ற வடிவமைப்புடன் இருக்கும். அதை மேலும் மெருகேற்ற, அதன் பார்டரில் துணியின் நிறத்துக்கு ஏற்றவாறு, உதாரணத்திற்கு மஞ்சள் நிறம் கொண்ட டாப்பிற்கு, கருப்பு நிற பார்டர் வைத்து தைப்பார்கள்.

    • புதுப்புடவைகளின் வரவிற்கு அளவே இல்லை என்று சொல்லலாம்.
    • பெண்களுக்கு விதவிதமான புடவைகள் என்றால் மிகவும் பிடிக்கும்.

    ஒவ்வொரு பண்டிகை காலத்திற்கும் புதுவிதமான துணி வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. அதுவும் தீபாவளி, பொங்கல் சமயம் என்றால் புதுப்புடவைகளின் வரவிற்கு அளவே இல்லை என்று சொல்லலாம். சரி இந்த பொங்களுக்கு என்னென்ன புடவைகள் வந்திருக்கின்றன. என்னுடன் ஷாப்பிங் வரத் தயாரா?

    * சினியா சில்க் புடவைகள் : மிகவும் மென்மையான, குறைந்த எடை கொண்ட இந்தப் புடவைகள் பனாரசி பார்டர்களுடன் வந்திருக்கும் ப்யூர் சில்க் புடவைகள் ஆகும். இந்த புடவைகளில் ஷார்ட் அண்ட் லாங் பார்டர்களுடன் பாரம்பரிய வண்ணங்களில் ப்ரோக்கேட் மற்றும் ஜியாமெட்ரிக் டிசைன்களில் ஏராளமான புதுவரவுகள் வந்திருக்கின்றன. பார்டரும், பல்லுவும் ஒரே நிறத்தில் இருக்க அதற்கு கான்ட்ராஸ்ட் நிறத்தில் உடல் பகுதியானது இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டு இருப்பது மிகவும் அழகாக உள்ளது. உடல் பாகம் சிவப்பு நிறத்திலும் பார்டர் மற்றும் பல்லு பச்சை நிறத்தில் இருப்பது போலவும், உடலுக்கு கிளி பச்சை நிறம் என்றால் பார்டர் மற்றும் பல்லு மஜந்தா நிறத்தில் இருப்பது போலவும்,உடல் பாகம் மஞ்சள் நிறத்தில் இருந்தால் பார்டர் மற்றும் பல்லு பச்சை நிறத்தில் இருப்பது போலவும் ,உடலுக்கு பீச் கிரீன் நிறம் என்றால் பார்டர் மற்றும் பல்லு கத்தரிப்பூ நிறத்தில் இருப்பது போலவும் கான்ட்ராஸ்ட்டாக வண்ணங்களை கொடுத்து இந்தப் புடவைகளை மிகவும் அற்புதமாக வடிவமைத்திருக்கிறார்கள். இந்தப் புடவைகள் அனைத்திற்கும் பிளெயின் வண்ணத்தில் பிளவுஸ் இணைக்கப் பட்டிருப்பது கூடுதல் சிறப்பாக இருக்கின்றது.

    இந்த சினியா சில்க் புடவைகளிலேயே காப்பர் மற்றும் சில்வர் பார்டர்களுடன் வரும் டிஜிட்டல் பிரிண்டிங் புடவைகள் பார்வைக்கு எளிமையாகவும் அதே நேரத்தில் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அணிவதற்கு நேர்த்தியாகவும் இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வந்திருப்பது அனைவரையும் கவரும் விதத்தில் இருக்கின்றது.இந்த புடவைகளின் மேல் மற்றும் கீழ் பகுதியில் மிகவும் சிம்பிளான சரிகை பார்டர்கள் கொடுக்கப்பட்டிருப்பது அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக உள்ளது.

    *செமி பேம்பு புடவைகள் : எடை குறைவாக இருக்கும் இந்தப் புடவைகள் பத்திக் டிசைன்களுடன் எளிமையான கடி சரிகை பார்டர்களுடன் பல்வேறு வண்ணங்களில் வாங்கக் கூடிய விலையில் வந்திருப்பது வரவேற்கும் விதத்தில் இருக்கின்றது. உடல் பகுதி மற்றும் பல்லு ஒரே வண்ணத்திலும் , உடல் பகுதியும் பல்லுவும் காண்ட்ராஸ்ட் வண்ணத்தில் இருப்பது போன்றும் புடவைகள் வந்துள்ளன.

    *செமி ரா சில்க் புடவைகள் : வேறுபட்ட வண்ணங்கள் மற்றும் வித்தியாசமான டிசைன்களில் பார்டர்கள் இல்லாமல் வரும் இந்த செமி ரா சில்க் புடவைகளின் அழகைக் கூற வார்த்தைகளே இல்லை எனலாம்.எம்ப்ராய்டரி செய்யப்பட்ட ஃபிளோரல் டிசைன்கள் உடல் பகுதியிலும் பல்லுவிலும் இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டு கண்கவர் வண்ணங்களில் வந்திருக்கும் இந்த புடவைகளை உடுத்திப் பார்க்கும் பொழுதுதான் அதனுடைய அழகு முற்றிலுமாகத் தெரியும்.சரிகை மற்றும் நூலினால் நெய்யப்பட்டிருக்கும் டிசைன்கள்,பார்ப்பவர்களை வாங்கத் தூண்டும் வண்ணங்களில் வந்திருக்கும் இந்தப் புடவைகளை மிகவும் அட்டகாசம் என்று சொல்லலாம்.

    *பனாரசி ஜார்ஜெட் புடவைகள்: அனைத்து வகையான விழாக்களுக்கும் அணிந்து கொள்ளும் விதத்தில் ரிச் ஆன்டிக் பார்டர்கள் மற்றும் கான்ட்ராஸ்ட் வண்ணங்களில் அசத்தலாக வந்திருக்கும் இந்தப் புடவைகள் நம்மிடம் கட்டாயம் இருக்க வேண்டிய புடவைகளில் ஒன்று என்று உறுதியாகச் சொல்லலாம். ஆரஞ்சு வண்ணத்திற்கு வெளிர் நீலம், க்ரீம் வண்ணத்திற்கு மஜந்தா, மஞ்சள் வண்ணத்திற்கு மஜந்தா,க்ரீம் வண்ணத்திற்கு கருப்பு என ஆன்டிக் பார்டர்களுடன் வரும் இந்தப் புடவைகள் விருந்து உபச்சார நிகழ்ச்சிகள், வரவேற்பு நிகழ்ச்சிகள், திருமண விழாக்கள் என அனைத்திற்கும் உடுத்திச்செல்வதற்கு ஏற்றவை.

    *செமி லினன் புடவைகள் : மென்மையாகவும், உடுத்துவதற்கு எளிதாகவும், எடை குறைவாகவும், சிறு நிகழ்ச்சிகளுக்கு அணிந்து செல்வதற்கு ஏற்றவையாகவும் இருக்கும் இந்த புடவைகளில் பாந்தினி, கலம்காரி மற்றும் அஜ்ராக் என பலவிதமான பிரிண்ட்கள் செய்யப்பட்டு வருகின்றன.கடி ஜரி பார்டர்,மதுபானி பிரிண்டட் பார்டர், பைப்பிங் பார்டர் மற்றும் எளிமையான ஜரி பார்டர்கள் என இந்தப் புடவைகளை அருமையாக வடிவமைத்திருக்கிறார்கள்.அனைவரும் வாங்கக் கூடிய விலையில் இந்தப் புடவைகள் இருப்பது மற்றொரு சிறப்பாகும்.

    *பியூர் ஜூட் சில்க் : ஜரி மற்றும் சில்க் த்ரெட்டில் உடலில் சிறு எம்பிராய்டரியும், பார்டரில் அதைவிட சற்று பெரிய அளவில் எம்பிராய்டரி செய்யப்பட்டு எளிமையான பல்லுவுடன் வந்திருக்கும் இந்த ஜூட் சில்க் புடவைகள் உடுத்துவதற்கு எளிதாகவும் நேர்த்தியான தோற்றத்தைத் தருபவையாகவும் இருக்கின்றன. பல்லுவில் டாசில்ஸ் வைத்து வருவது புடவைக்கு கூடுதல் அழகைத் தருகிறது. ஜூட் சில்கில் ஜகார்ட் மற்றும் பார்டர்களுடன் வரும் புடவைகள் அருமையாக இருக்கின்றன.

    • இந்தப் புடவைகளை மிகவும் அற்புதமாக வடிவமைத்திருக்கிறார்கள்.
    • எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அணிவதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
    மிகவும் மென்மையான, குறைந்த எடை கொண்ட இந்தப் புடவைகள் பனாரசி பார்டர்களுடன் வந்திருக்கும் ப்யூர் சில்க் புடவைகள் ஆகும். இந்த புடவைகளில் ஷார்ட் அண்ட் லாங் பார்டர்களுடன் பாரம்பரிய வண்ணங்களில் ப்ரோக்கேட் மற்றும் ஜியாமெட்ரிக் டிசைன்களில் ஏராளமான புதுவரவுகள் வந்திருக்கின்றன. பார்டரும், பல்லுவும் ஒரே நிறத்தில் இருக்க அதற்கு கான்ட்ராஸ்ட் நிறத்தில் உடல் பகுதியானது இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டு இருப்பது மிகவும் அழகாக உள்ளது.

    உடல் பாகம் சிவப்பு நிறத்திலும் பார்டர் மற்றும் பல்லு பச்சை நிறத்தில் இருப்பது போலவும், உடலுக்கு கிளி பச்சை நிறம் என்றால் பார்டர் மற்றும் பல்லு மஜந்தா நிறத்தில் இருப்பது போலவும், உடல் பாகம் மஞ்சள் நிறத்தில் இருந்தால் பார்டர் மற்றும் பல்லு பச்சை நிறத்தில் இருப்பது போலவும், உடலுக்கு பீச் கிரீன் நிறம் என்றால் பார்டர் மற்றும் பல்லு கத்தரிப்பூ நிறத்தில் இருப்பது போலவும் கான்ட்ராஸ்ட்டாக வண்ணங்களை கொடுத்து இந்தப் புடவைகளை மிகவும் அற்புதமாக வடிவமைத்திருக்கிறார்கள்.

    இந்தப் புடவைகள் அனைத்திற்கும் பிளெயின் வண்ணத்தில் பிளவுஸ் இணைக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பாக இருக்கின்றது. இந்த சினியா சில்க் புடவைகளிலேயே காப்பர் மற்றும் சில்வர் பார்டர்களுடன் வரும் டிஜிட்டல் பிரிண்டிங் புடவைகள் பார்வைக்கு எளிமையாகவும் அதே நேரத்தில் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அணிவதற்கு நேர்த்தியாகவும் இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வந்திருப்பது அனைவரையும் கவரும் விதத்தில் இருக்கின்றது. இந்த புடவைகளின் மேல் மற்றும் கீழ் பகுதியில் மிகவும் சிம்பிளான சரிகை பார்டர்கள் கொடுக்கப்பட்டிருப்பது அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக உள்ளது.

    • கான்ட்ராஸ்டாக சேலைகளை அணிந்து செல்வதே இன்றைய டிரெண்ட் என்று சொல்லலாம்.
    • பிளவுஸ்களுக்கென்று தனிக்கவனத்தை பெண்கள் கொடுத்து வருகிறார்கள்.

    மணப்பெண் பிளவுஸ்களுக்கென்றே பிரத்யேகமான டிசைன்களும், அதைத் தைப்பதற்கென்றே சிறப்பான தையல் கலைஞர்களும் உள்ளனர் என்பதைக் கேட்கும்போதே அதை தெரிந்துக் கொள்ள ஆர்வமாக இருக்கிறதல்லவா?

    கடந்த சில வருடங்களாகவே புடவைக்கு அணியும் ஜாக்கெட் (பிளவுஸ்)களுக்கென்று தனிக்கவனத்தை பெண்கள் கொடுத்து வருகிறார்கள். விதவிதமான வேலைப்பாடுகளுடன் அருமையாகத் தைத்து அதற்கேற்றாற்போல் கான்ட்ராஸ்டாக சேலைகளை அணிந்து செல்வதே இன்றைய டிரெண்ட் என்று சொல்லலாம்.

    இப்படி டிரெண்டான விஷயங்களை, யூ-டியூப் வீடியோவாக மாற்றி, தனக்கென லட்சக்கணக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார், சத்யா பாலசுப்பிரமணியன். சென்னையைச் சேர்ந்தவரான இவர், எம்.எஸ்சி பட்டதாரி. தையல் கலை, இவரது குடும்பத் தொழில் என்பதால், அதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, அதில் நுழையும் நவீனங்களை, யூ-டியூப் மூலமாக குடும்ப தலைவிகளுக்கு விளக்குகிறார். இவரது சமூக வலைத்தளங்களில், தையல் கலை சம்பந்தமான எல்லா நுணுக்கங்களும், அதன் செய்முறைகளும் விளக்கமாக கொடுக்கப்பட்டிருப்பதால், தையல் கலை பயில ஆர்வமாக இருப்பவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது.

    தையல் கலையின் புதுமைகளை, பிளவுஸ் வேலைபாட்டின் நுணுக்கங்களை... யூ-டியூப்பில் விளக்கி வரும் சத்யாவிடம், பிளவுஸ் பற்றிய பல கேள்விகளை எழுப்பினோம். அவர், பதிலளித்தவை இதோ....

    * பிளவுஸ் அன்றும் இன்றும் எப்படி மேம்பட்டிருக்கிறது?

    முன்பு குறிப்பிட்ட சில வகை கழுத்து வகைகள் (நெக்) மட்டுமே பிரபலமாக இருந்தன. பலர், தங்களுக்கு பொருத்தமான நெக் வகைகளை மட்டுமே, எல்லா கொண்டாட்டங்களிலும் தைத்து அணிந்தனர். ஆனால் இப்போது அப்படி இல்லை. புதிது புதிதான நெக் வகைகளையும், பெண்கள் அணிந்து பார்க்க ஆசைப்படுவதால், நிறைய நெக் வகைகள் அறிமுகமாகி இருக்கின்றன. கூடவே சிலீவ் வகைகள் ஏராளமாக வந்துகொண்டே இருக்கின்றன.

    * சமீப காலமாக புடவைக்கு செலவழிப்பது போல, பிளவுஸ் விஷயத்திலும் பாரபட்சமில்லாமல் செலவழிக்கிறார்கள். சிறப்பான வேலைப்பாடுகளுடன் பிளவுஸ் அணிகிறார்கள். அது ஏன்?

    பெண்கள் பொதுவாக தங்களை அழகாக காட்டிக் கொள்வதில் அதிக அக்கறை காட்டுகிறார்கள். இதன் காரணமாக, மற்றவர்களிடத்தில் இருந்து தங்களை வேறுபடுத்தி, சிறப்பாக காட்சிப்படுத்திக் கொள்வதற்காகவே, பிளவுஸ் வகைகளை புதுப்புது வேலைபாடுகளில் அலங்கரிக்கிறார்கள். சிலர் சேலைக்கு நிகரான செலவில், பிளவுஸையும் அலங்கரித்து அணிகிறார்கள்.

    * பிளவுஸை, எப்படியெல்லாம் அழகாக்கலாம்?

    புதுமையான கழுத்து வகைகளை வைத்து, தையல் கலையிலேயே பிளவுஸ் வகைகளை பிரமாண்டமாக தைக்கலாம். இதுபோக, ஆரி வேலைபாடுகள், பிளவுஸை நேர்த்தியாக்கும். திருமணங்கள், விழா கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளும் பெண்கள், ஆரி வேலைப்பாடுகள் கொண்ட பிளவுஸ் வகைகளையே அதிகம் விரும்புகிறார்கள். ஆரி வேலைப்பாடுகளில், மெஷின் வேலைப்பாடு மற்றும் கைகளில் செய்யப்படும் வேலைப்பாடு என மதிப்பும், அதன் தரமும் வேறுபடும். இவை கூடவே, பெயிண்டிங் மற்றும் எம்ப்ராய்டரி வேலைப்பாடுகளும் இப்போது பிளவுஸ்களை அலங்கரிக்கின்றன.

    * பிளவுஸ் மோகம் நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் இடையே வேறுபடுகிறதா?

    நிச்சயமாகவே வேறுபடுகிறது. நகரங்களில் அதிகமாக பயன்படுத்தப்படும் பிரின்சஸ்கட் பிளவுஸ் மற்றும் சிலீவ்லெஸ், பேன்சி பிளவுஸ் வகைகள் கிராமப்புற பெண்களிடையே அதிக வரவேற்பு பெறுவதில்லை. அதேசமயம் நகர பெண்கள், எல்லா வகையான பிளவுஸ் டிசைன்களையும் அணிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள்.

    * என்னென்ன பிளவுஸ் வகைகள் இருக்கின்றன?

    பிளவுஸ் என்பதற்குள் எண்ணிலடங்கா மாடல்கள் இருக்கின்றன. பொதுவாக அதை வகைப்படுத்தி சொல்லும்போது பிளைன் பிளவுஸ், லைனிங் பிளவுஸ், பிரின்சஸ் கட் பிளவுஸ், பிரின்சஸ் கட் வித் கப் பிளவுஸ், சிங்கிள் கட்டோரி பிளவுஸ், டபுள் கட்டோரி பிளவுஸ், டிசைனர் பிளவுஸ், பிரெய்டல் பிளவுஸ், பேன்சி பிளவுஸ், காலர் பிளவுஸ், போட் நெக் பிளவுஸ்... இப்படி நிறைய வகைகள் இருக்கின்றன.

    * விழாக்கள், அலுவலகம், கேஷ்வல் என நிகழ்வுகளுக்கு ஏற்ப அணியும் பிளவுஸ் வகைகள் மாறுபடுமா?

    ஆம். மாறுபடும். வரவேற்பு மற்றும் பார்ட்டி கொண்டாட்டங்களுக்கு டிசைனர் பிளவுஸ் மற்றும் பேன்சி பிளவுஸ் சிறப்பாக இருக்கும். கல்யாணம், திருவிழா மற்றும் தெய்வீக விழாக்களுக்கு பாரம்பரிய முறைப்படி பிளவுஸ் அணிவது உகந்ததாக இருக்கும். இதற்கு கிளாசிக் பிளவுஸ் சிறந்தது. அலுவலகங்களுக்கு காட்டன் சேலையுடன் கூடிய காட்டன் பிளவுஸ் வகைகள் சரியாக இருக்கும்.

    * காட்டன் சேலைகளுக்கு அணியக்கூடிய காட்டன் பிளவுஸ் வகைகள் பற்றி கூறுங்கள்?

    போட் நெக், சைனீஸ் காலர் நெக், ஸ்லீவ்லெஸ் பிளவுஸ், ப்ளோர் டைப் ஸ்லீவ் பிளவுஸ், ஷர்ட் டைப், வெல்வெட் பிளவுஸ், பின்புற நெக் டிசைன்... இப்படி காட்டன் வகைகளில் நிறைய பிளவுஸ் வகைகள் இருக்கின்றன.

    * பிளவுஸ் வகைகளில் சமீபத்திய புது வரவு எது?

    போட் நெக் பிரின்சஸ் கட் பிளவுஸ் மற்றும் ஆரி ஒர்க் பிளவுஸ்தான் சமீபத்திய டிரெண்ட் பிளவுஸ்கள்.

    * டீன் ஏஜ் பெண்கள் மத்தியில் டிரெண்டான பிளவுஸ் வகை எது? ஏன்?

    போட் நெக் வகையில் தயாரான பிரின்சஸ் கட் பிளவுஸ் டீன் ஏஜ் பெண்கள் மத்தியில் ரொம்பவும் பிரபலம். அதேபோல, சிலீவ்லெஸ் பிளவுஸ் வகைகளும், இளம் பெண்களின் பிடித்தமான பட்டியலில் முக்கிய இடம் பிடிக்கிறது. இவை இரண்டும், பார்ப்பதற்கு எப்போதும் டிரெண்டாகவே இருக்கும். அதேபோல இளமையான தோற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதால், டீன் ஏஜ் பெண்கள் இவற்றை விரும்புகிறார்கள்.

    * பிளவுஸ் தையல் கலை எத்தகைய வளர்ச்சியை பெற்றிருக்கிறது?

    உடை நாகரிகத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப பிளவுஸ் தையல் கலையும், தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்கிறது. நவீனமாக அறிமுகமாகும், சேலை வகை களுக்கு ஏற்ப, பிளவுஸ் வகைகளையும் நவீனமாக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்பதால், புதுமையான கலை வடிவங்களை பிளவுஸ் வேலைபாடுகளில் புகுத்தி வருகிறோம்.

    * பெரும்பாலான குடும்ப தலைவிகள் பிளவுஸ் தையல் கலை பயில ஆர்வம் காட்டுவது ஏன்?

    டெய்லரிங் கலை அனைவராலும் எளிதாக கற்றுக்கொள்ளக்கூடிய கலை என்பதாலும், இதற்கு பெரிய உபகரணங்களோ, பெரிய முதலீடோ தேவைப்படாது என்பதாலும், இந்தக் கலையை கற்க, குடும்ப தலைவிகள் ஆர்வம் காட்டுகிறார்கள். மேலும் இதை கற்றுக்கொள்வதால், தங்களுடைய பிளவுஸ் தேவையையும் பூர்த்தி செய்துகொண்டு, வேலைப்பாடுகளுக்கு ஏற்ப கணிசமான வருவாயையும் ஈட்டமுடியும்.

    • மஸ்லின் துணியிலும் பட்டுப்புடவையை சுற்றி வைக்கலாம்.
    • சோப்புகளை பயன்படுத்தக்கூடாது.

    திருமணத்துக்கு எடுக்கப்படும் முகூர்த்தப்பட்டு சேலையை பெண்கள் பல ஆண்டுகள் பத்திரமாக வைத்திருந்து பாதுகாப்பது வழக்கம். ஆனால் அதனை பராமரிப்பதில் கவனம் செலுத்தினால் அதன் ஆயுள் காலத்தை மேலும் கூட்ட முடியும். சிலர் பட்டு சேலையை ஏதாவது விழாவுக்கு கட்டிக்கொண்டு செல்வார்கள். வீட்டிற்கு திரும்பியதும் உடனே மடித்து பெட்டியில் வைத்து விடுவார்கள்.

    வியர்வை ஈரத்துடன் அந்த சேலை மடித்து வைக்கப்படுவதால் அதனை பூச்சிகள் அரித்து பட்டுச்சேலையின் சரிகை கருத்துப்போய் விடுகிறது. இதனால் சேலையின் பளபளப்பு குறைந்து அது கிழிந்து விடும் நிலைக்கு உள்ளாகிறது. அதனை தவிர்க்க சேலையை கழற்றியதும் உடனடியாக மடித்து வைக்காமல் மின்விசிறி காற்றில் சிறிது நேரம் காய வைக்க வேண்டும். பின்னர் அதனை அயர்ன் செய்து பீரோவில் வைத்து அத்துடன் நாப்தலின் உருண்டைகளை போட்டு வைத்தால் சேலைகளை பூச்சி அரிக்காது.

    மாதம் ஒருமுறை எல்லாப் பட்டு புடவைகளையும் வெளியில் எடுத்து நிழல்பட உலர்த்தி அயர்ன் செய்து வைத்தால் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் அந்த சேலைகள் புதியதுபோலவே இருக்கும். மேலும் அதை பாதுகாக்க துணிப்பைகளை தைத்து அதில் சேலையை மடித்து வைத்தால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஜரிகை கருக்காது. அத்துடன் மஸ்லின் துணியிலும் பட்டுப்புடவையை சுற்றி வைக்கலாம்.

    பட்டுப்புடவைகளை பூச்சிகள் தாக்காமல் இருக்க அவற்றை மரபீரோவில் வைத்து பராமரிக்கலாம். பட்டுச்சேலை மற்றும் பட்டு ஜாக்கெட் அணிந்து வெளியே சென்று திரும்பும்போது ஜாக்கெட் வியர்வையில் நனைந்து இருக்கும். அதனை லேசாக ஷாம்பு போட்டு கசக்கி அலசி காய வைக்க வேண்டும். அதற்கு சோப்புகளை பயன்படுத்தக்கூடாது.ஏனெனில் அதிக காரத்தன்மை கொண்ட சோப்பை பயன்படுத்துவதால், ஜாக்கெட் பொலிவிழந்து கிழிந்து விடும். இந்த ஆலோசனைகள் பட்டுச்சேலை, ஜாக்கெட்டுகளுக்கு மட்டும் அல்ல... பாரம்பரிய பட்டு ரகங்கள் அனைத்துக்கும் பொருந்தும்.

    • காக்ரா சோலி- காக்ரா சோலியை லெகங்கா ஜோலி என்றும் அழைக்கப்படும்.
    • தோத்தி குர்தா- தோத்தி என்பது இந்திய ஆண்களின் பாரம்பரிய உடையாகும்.

    இந்திய பெண்கள் ஆடைகள் என்றாலே நினைவுக்கு வருவது புடவை மட்டும் தான். ஆனால் புடவையும் தவிர்த்து மேலும் இந்திய பெண்களுக்கு பல ஆடைகள் உள்ளன. அவற்றில் சில வகைகளையும் தற்காலத்திற்கு ஏற்றார் போல் அவை அடைந்த மாற்றத்தையும் காண்போம்.

    புடவை- இந்திய பாரம்பரிய உடை என்றால் நினைவுக்கு வருவது புடவை. ஆனால் அந்த புடவை வகையில் 80 வகைகள் உள்ளது என்பது தெரியுமா? பெங்காளி, ஓடி, குடகு, மலையாளி, என 80 வகையாக புடவை கட்டும் விதங்கள் உள்ளன. புடவை என்பது ஒரு ரவிக்கை மற்றும் உள்ளாடையை கொண்டது. ரவிக்கை மற்றும் உள்ளாடை மீது புடவையை சுற்றி கட்டுவது பாரம்பரிய முறையாகும். தற்காலங்களில் புடவை தைக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு வசதி என்னவென்றால் நீங்கள் அதை கவுன் போலவே மாட்டிக் கொள்ளலாம். தற்காலத்திற்கு ஏற்றார் போல் புடவை பல மாற்றங்களை அடைந்துள்ளது. புடவையில் பிரில் வைப்பது ரவிக்கைகளில் பப்ஸ் வைப்பது, ஒன்-ஷோல்டர், ஆப் - ஷோல்டர் போன்ற பல வகையான மாற்றங்களை அவை அடைந்துள்ளன. இன்றளவும் இந்திய பெண்களால் பெரிதும் விரும்பப்படும் ஆடையாகும்.

    காக்ரா சோலி- காக்ரா சோலியை லெகங்கா ஜோலி என்றும் அழைக்கப்படும். இது ஒரு துப்பட்டா ஒரு ரவிக்கை மற்றும் இடுப்பில் இருந்து முழங்கால் வரை நீண்ட ஆடை உள்ளடக்கியது. இது முகலாயர் காலத்தில் அறிமுகமானது. புடவைக்கு அடுத்து பெண்களால் பெரிதும் விரும்பப்படும் ஆடையாகும். இதன் வடிவமைப்பில் தற்போதைய காலத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் வந்துள்ளன. துப்பட்டாவிற்கு பதிலாக பௌ வைப்பது, பொத்தான் வைத்த ஷர்ட்களோடு அணிவது, நீண்ட மற்றும் குறுகிய சோலியோடு அணிவது மேலும் இடுப்பில் அணியப்படும் ஆடையின் அளவுகளில் பல வேறுபாடுகள் உள்ளன. இது எல்லாவிதமான விழாக்களிலும் அணியக்கூடியது.

    லஞ்சா - லெகங்கா சோலியின் இன்னொரு வடிவம் தான் லஞ்சா. வேறுபாடு என்னவென்றால் ரவிக்கையின் அமைப்பும், இடுப்பில் அணியும் ஆடையின் அமைப்பும். இடுப்பில் இருந்து அணியும் ஆடையின் நீளம் காக்ரா சோலியை விட அதிகமாக இருக்கும். அதே போல் ரவிக்கை நீளம் இடுப்பை தாண்டி நீளும். இது மிகவும் பாரம்பரியமான ஒரு ஆடை வகையாகும். திருமணங்கள் விழா காலங்கள் போன்றவற்றில் முகலாய அரச வம்சத்தில் இன்றளவும் அணியப்படும் பாரம்பரிய உடையாகும். தற்காலத்திற்கு ஏற்றார் போல் லஞ்சாவில் ரவிக்கைக்கு பதிலாக ஜாக்கெட்டும் இடுப்பில் இருந்து அணியப்படும் ஆடையில் நிறைய பிரில்கள் வைத்து நவீனமாக்கப்பட்டுள்ளது. இதை பெண்கள் பெரும்பாலும் விரும்புகின்றனர். திருமணங்களில் மணப்பெண் ஆடையாகவும் இது உள்ளது.

    தோத்தி குர்தா- தோத்தி என்பது இந்திய ஆண்களின் பாரம்பரிய உடையாகும். ஒரு நீளமான துணி இடுப்பில் சுற்றிக் கொள்வது தோத்தி எனப்படும். பெரும்பாலும் இந்திய ஆண்கள் பகலிலும் இரவிலும் இதை பயன்படுத்துவார்கள். ஆனால் தற்போது பெண்களும் நிறைய பயன்படுத்துகிறார்கள். பருத்தி மற்றும் மஸ்லின் துணிகளை கொண்டு ஆண்கள் பயன்படுத்துகிறார்கள். ஆனால் பெண்கள் சில்க் மற்றும் சாட்டின் துணிகளை கொண்டு தோத்தி குருதா தைத்து கொள்கிறார்கள். இது ரெடிமேடாகவும் கிடைக்கும். அப்படியே வாங்கி அணிந்து கொள்ளும் வகையிலும் விற்கப்படுகிறது. தற்காலத்துக்கு ஏற்றார் போல் இது மாற்றம் அடைந்திருக்கிறது. புடவை கட்டுவது போல இதை வடிவமைத்திருக்கின்றார்கள். இடுப்பில் பெல்ட்டும் அணிந்து கொள்ளலாம்.

    சல்வார் சூட்- புடவை அல்லது காக்ரா ஜோலிக்கு அடுத்ததாக விரும்பப்படும் இந்திய பாரம்பரிய உடைகளில் ஒன்று சல்வார் கமீஸ். இது மிகவும் வசதியான ஒரு ஆடை. இது சல்வார் கமீஸ் மற்றும் துப்பட்டாவும் ஒருங்கிணைப்பாகும். சல்வார் என்பது ஒரு தளர்வான பைஜாமா ஆகும். இடுப்பு பகுதியில் மட்டும் அது இறுக்கமாக இருக்கும் மற்றும் கணுக்கால் பகுதியில் இறுக்கமாக இருக்கும். இடையில் காற்றில் பறப்பது போல் தளர்வாக இருக்கும். கம்மீஸ் என்பது மேலாடை ஆகும். இது சல்வாருக்கு மேல் அணியப்படுவது. முழங்கால் அளவு நீண்டிருக்கும். காலத்துக்கு ஏற்றார் போல் இதில் பல மாற்றங்கள் அடைந்து கொண்டே இருக்கின்றன. தற்காலத்தில் மிகவும் குறுகிய அளவு கொண்டு அரை ட்ரவுசர் போலவும் இருக்கின்றன. சில சமயங்களில் மேலே போடப்படும் துப்பட்டா பல வகைகளில் வடிவமைக்கப் படுகின்றன. இடுப்பில் அணியப்படும் சல்வார் பல ப்ளீட்ஸ் கொண்டதாகவும் வடிவமைப்பில் சில மாற்றங்களோடும் வந்து கொண்டிருக்கின்றன.

    அனார்கலி சூட்- அனார்கலி சூட் என்பது நீண்ட குர்தாமற்றும் இறுக்கமான சுடிதார் பேண்டிகளின் தொகுப்பாகும். குர்தா இடுப்பு வரை இறுக்கமாக இருந்து பின்பு முட்டிக்கு கீழ் வரை தளர்வாக இருக்கும். இது ஒரு அரசு பாரம்பரிய உடையாகும். வசதியான உடையும் ஆகும். தற்போது அனார்கலி சூட்சில் பல நவீனமான அலங்கார வகைகள் வந்துள்ளன. ஜாக்கட் ஸ்டைல், கேப் ஸ்டைல், ஃப்ளோர் லென்த் கவுன் போன்றவை ஆகும். சமீப காலங்களில் இது பெரிதும் விரும்பப் படும் ஆடையாக உள்ளது.

    குர்தா மற்றும் சுடிதார்- இது குர்தி மற்றும் சுடிதார் ஒருங்கிணைக்கப்பட்டதாகும். சுடிதார் கால்களின் அளவைவிட மிக நீண்டு இருக்கும். இதனால் கணுக்கால் பகுதியில் சுருட்டி வைப்பார்கள். இது வளையல் போல் தோற்றம் அளிப்பதால், இதற்கு சுரிதார் என்று பெயர் வந்தது. சூரி என்றால் வளையல் என்று பொருள். இதுவும் முகலாயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. பாகிஸ்தான் பஞ்சாபி பெண்களால் பெரிதும் விரும்பி அணியப்படும் வகையாகும். ஆனால் தற்போது இந்தியாவிலும் பெண்கள் அணிந்து கொள்கின்றார்கள். தற்காலத்தில் குர்தி தரையை தொடும் அளவு நீண்டதாக மேற்கத்திய நாடுகளைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. குர்தியின் நீளமும் குறைக்கப்பட்டு கணுக்கால அளவு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பல வகைகளில் விருப்பத்திற்கு ஏற்றார் போல் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

    பெண்களின் ஷர்வாணி- ஷர்வாணி என்பது ஆண்களுக்கான உடையாகும். இது முகலாயர் காலத்தில் அணியப்பட்டு வந்த உடையாகும். அரசாங்க மற்றும் உயர்ந்த மனிதர்கள் அணியக்கூடிய ஆடையாகும். ஆனால் தற்போது ஷர்வாணி உடையாகிப்போனது. இது காட்டன், காட்டன் சில்க், ஷிபான், பட்டு போன்ற பல வகை துணி வகைகளால் செய்யப்படுவது. இதன் மேலாடை எம்ராய்டரி மற்றும் கலைநயத்தால் வடிவமைக்கப்பட்டு இருக்கும். இது பெண்களுக்கு புது வகையான ஆடை வகையாகும். திருமணம் பண்டிகைகள் மற்றும் பல விழாக்களில் இதை அணிந்து கொள்ளலாம். தற்காலத்தில் ஷர்வாணி மேலாடையில் காலர் வைத்தும் காலர் இல்லாமலும் கட் வைத்தும் பல வடிவங்களில் நவீனமாக வடிவமைக்கப்படுகிறது.

    இண்டோ- வெஸ்டர்ன் சுட்ஸ்- குர்த்தியோடு இணைக்கப்பட்ட தளர்வான டவுசர்களின் தொகுப்பாகும். பல்லாசு சூட் தற்காலத்தில் இது மிகவும் விரும்பப்பட்டு அணியப்படும் ஆடை வகையாகும். இதில் பல வகைகளும் உண்டு. நீண்ட, குறுகிய, ஏ-லைன் போன்ற பல வடிவமைப்புகள் இதில் வருகின்றது. மேற்கத்திய ஆடை வகைகளின் தாக்கம் இதில் இருக்கும். பொதுவாக இது துப்பட்டா இல்லாமல் அணியப்படும். பூட்-பாண்ட், கிராப்டு-பாண்ட், சிகரட்-பாண்ட் போன்றவற்றோடு குர்தி பொருந்தி வரும். பொதுவாக இந்த வகையில் துப்பட்டா அணியப்படுவதில்லை. பல வகையான பாண்டு வகைகளோட இது பொருந்தி வருகிறது.

    இந்திய கவுன்- இந்திய கவுன்கள் பெரும்பாலும் துப்பட்டா சேர்ந்தே வருகின்றது. இது ஒரு மேல் நாட்டு கலாச்சார வகை ஆடையாகும். இதில் பலவகைகள் உண்டு. ஒன்-சோல்டர், பெல்-ஸ்லீவ்டு கவுன்ஸ், சாரி-ஸ்டைல் கவுன் போன்று பல வகைகள் இருக்கின்றன. இதன் மேலாடையில் இந்திய கலாச்சாரப்படி பல அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. எம்பிராய்டிங், மணி வைத்து தைப்பது போன்று பல வகைகளில் அலங்காரம் செய்யப்படுகின்றன. தற்போது இது புடவையைப் போன்ற வடிவமைப்பில் கிடைக்கின்றது. பெரும்பாலான பெண்கள் இதை விரும்பி அடைகின்றனர்.

    சறாரா மற்றும் கறாரா சூட்- சறாரா மற்றும் கறாரா சூட் குர்தி, துப்பட்டா மற்றும் சறாரா/ கறாரா இவற்றின் தொகுப்பாகும். குர்தி நீண்டும் இருக்கும் குறைவாகவும் இருக்கும் நடுத்தர அளவிலும் இருக்கும். இது முட்டிவரை இறுக்கமாக இருந்து அதன் பின் தளர்வாக இருக்கும். இவை தங்க நிற இழை மற்றும் பைப்பிங் போன்றவற்றால் அலங்காரப்படுத்தப்படும். இது முகலாய காலத்தில் அறிமுகப்படுத்தப் பட்டதாகும். இன்றளவும் லக்னோவில் பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் இதை அணிந்து கொள்கிறார்கள். பாகிஸ்தானில் மணப்பெண்கள் இதை திருமண ஆடையாகவே அணிந்து கொள்கின்றார்கள். தற்காலத்தில் உயர்ந்த இடுப்பு சறாரா மற்றும் கறாரா சூட்டும் கிடைக்கின்றன.

    மேலே சொன்ன வகைளில் உங்களின் விருப்பமான ஆடையைகளை வாங்கி மகிழுங்கள்.

    ×