search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "double-decker train"

    கோவையில் இருந்து பெங்களூருவுக்கு முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் கூடிய இரட்டை அடுக்கு ரெயிலை மத்திய மந்திரி தொடங்கிவைத்தார்.
    கோவை:

    கோவையில் இருந்து பெங்களூருக்கு உதய் எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் இரட்டை அடுக்கு ரெயில் (டபுள் டக்கர்) இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த ரெயில் தொடக்க விழா கோவை ரெயில் நிலைய வளாகத்தில் நேற்று காலையில் நடந்தது. மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

    மத்திய ரெயில்வே இணை மந்திரி ராஜன் கோஹெயின் கலந்துகொண்டு கொடியசைத்து இரட்டை அடுக்கு ரெயிலை கொடியசைத்து தொடங்கிவைத்தார். தொடக்க நாளான நேற்று மட்டும் இந்த ரெயில் காலை 11.30 மணிக்கு புறப்பட்டது.

    முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட இந்த ரெயிலில் வை-பை வசதி, ஜி.பி.எஸ்.கருவி, பயோடாய்லெட் வசதி, சூரிய ஒளியை திருப்பி அனுப்பக்கூடிய மேற்கூரை, பயணிகள் குறித்த தகவலை தெரிவிக்கும் எல்.இ.டி. திரைகள் உள்பட பல்வேறு வசதிகள் உள்ளன.

    மொத்தம் 10 பெட்டிகள் கொண்ட இந்த ரெயிலில் 8 பெட்டிகளில் பொதுமக்கள் பயணம் செய்ய முடியும். இதில் 3 பெட்டிகளில் உணவு சாப்பிடும் வகையில் இடவசதி செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 912 பேர் பயணம் செய்யலாம். வாரந்தோறும் திங்கட்கிழமையை தவிர மற்ற அனைத்து நாட்களும் இந்த ரெயில் இயக்கப்படுகிறது.

    தினமும் காலை 5.45 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு (வண்டி எண் 22666) பிற்பகல் 12.40 மணிக்கு பெங்களூரு சென்றடையும். பின்னர் அங்கிருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு (வண்டி எண் 22665) இரவு 9 மணிக்கு கோவை வந்து சேரும். பயண கட்டணம் ரூ.610 ஆகும்.

    தொடக்க நாளான நேற்று இந்த ரெயிலில் 150 பயணிகள் மட்டுமே பயணம் செய்தனர். பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருந்தன. முதல் நாள் என்பதால் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்ததாகவும், நாட்கள் செல்ல செல்ல பயணிகள் கூட்டம் அதிகரித்து விடும் என்றும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். #tamilnews
    பெங்களூரு - கோவை இடையே இரட்டை அடுக்குமாடி ஏர்கண்டிசன் ரெயில் (உதய் எக்ஸ்பிரஸ்)வருகிற 10-ந்தேதி முதல் இயக்க ரெயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. #SouthernRailway

    தருமபுரி:

    சென்னை - பெங்களூரு இடையே ஏற்கனவே இரட்டை அடுக்குமாடி ஏர்கண்டிசன் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் காட்பாடி வழியாக பெங்களூரு செல்கிறது.

    இதேபோல பெங்களூரு - கோவை இடையே இரட்டை அடுக்குமாடி ஏர்கண்டிசன் ரெயில் (உதய் எக்ஸ்பிரஸ்)வருகிற 10-ந்தேதி முதல் இயக்க ரெயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

    ஏற்கனவே இரட்டை அடுக்குமாடி ரெயில் வெள்ளோட்டம் கோவையில் இருந்து ஜோலார்பேட்டை வரை நடத்தப்பட்டது. இந்த ரெயில் நிற்பதற்காக நடை மேடைகளும் சரிசெய்யப்பட்டது. கர்நாடக சட்டசபை தேர்தல் நடந்ததால் இந்த ரெயில் இயக்குவதில் தாமதம் ஏற்பட்டது.

    அடுத்த மாதம் 10-ந்தேதி முதல் இந்த ரெயிலை இயக்க ரெயில்வேதுறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


    கோவை ஜங்சன் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 5.45 மணிக்கு இந்த ரெயில் (எண்: 22666) புறப்படும். திருப்பூர் ரெயில் நிலையத்துக்கு 6.28 மணிக்கு வரும். இந்த ரெயில் 7.10 மணிக்கு ஈரோடு ரெயில் நிலையத்திற்கும், 8.12 மணிக்கு சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தையும் வந்தடையும்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மொரப்பூர், பொம்மிடி, ஜோலார்பேட்டை வழியாக 10.34 மணிக்கு குப்பம் ரெயில் நிலையம் வந்தடையும். பங்காருபேட்டைக்கு 11.03 மணிக்கும், ஒய்ட்பீல்டு ரெயில் நிலையத்துக்கு 11.39 மணிக்கும், கிருஷ்ணராஜபுரம் ரெயில் நிலையத்துக்கு 11.59 மணிக்கும் வந்து சேரும். பகல் 12.18 மணிக்கு பெங்களூரு கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்துக்கு வரும். 12.40 மணிக்கு பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்துக்கு சென்றடையும்.

    பெங்களூருவில் இருந்து பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் (எண்:22665)கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்துக்கு 2.27 மணிக்கும், கிருஷ்ணராஜபுரம் ரெயில் நிலையத்துக்கு 2.35 மணிக்கும், ஒய்ட்பீல்டு ரெயில் நிலையத்துக்கு 2.44 மணிக்கும், மாலூர் ரெயில் நிலையத்துக்கு 3 மணிக்கும், பங்காருபேட்டை ரெயில் நிலையத்துக்கு 3.19 மணிக்கு சென்று சேரும்.

    குப்பம் ரெயில் நிலையத்துக்கு 3.44 மணிக்கு வரும் இந்த ரெயில் சேலத்துக்கு மாலை 5.47 மணிக்கு வந்து சேரும். ஈரோட்டுக்கு இரவு 5.50 மணிக்கு போய் சேருகிறது. திருப்பூர் ரெயில் நிலையத்துக்கு இரவு 7.38 மணிக்கும், கோவை வடக்கு ரெயில் நிலையத்துக்கு இரவு 8.28 மணிக்கும் செல்லும். கோவை ஜங்சன் ரெயில் நிலையத்துக்கு இரவு 9 மணிக்கு போய் சேரும்.

    இந்த ரெயிலுக்கான முன்பதிவு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த ரெயிலை ஜோலார்பேட்டை, மொரப்பூர், பொம்மிடி ரெயில் நிலையங்களில் நின்று செல்ல ரெயில்வேதுறை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த ரெயிலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் தெற்கு ரெயில்வே வெளியிடவில்லை என்றாலும் ரெயில் அட்டவணை ரெயில்வே வெப்சைட்டில் வெளியாகி உள்ளது.

    கோவை - பெங்களூரு இடையே 419 கிலோ மீட்டர் தூரத்தை 6 மணி நேரம் 45 நிமிடத்தில் இந்த ரெயில் கடக்கும். மணிக்கு 62 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த ரெயில் செல்லும். மொத்தம் 10 ரெயில் நிலையங்களில் இந்த ரெயில் நின்று செல்லும். #SouthernRailway

    ×