search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bengaluru blast"

    • நான் வழக்கமாக ராமேஸ்வரம் கபே ஓட்டலில் மதிய உணவு சாப்பிடுவேன்.
    • நான் வழக்கமாக அமரும் இருக்கையில் இருந்து 10 முதல் 15 மீட்டர் தொலைவில் நின்றபடி போன் பேசிக்கொண்டிருந்தேன்.

    பெங்களூரு:

    பெங்களூரு ராமேஸ்வரம் கபே ஓட்டலில் நடந்த வெடிகுண்டு சம்பவம் பற்றி அங்கு தினமும் உணவு சாப்பிட செல்லும் குமார் அலங்கிரித் என்ற சாப்ட்வேர் என்ஜினீயர் தனது எக்ஸ் தள பதிவில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் வழக்கமாக ராமேஸ்வரம் கபே ஓட்டலில் மதிய உணவு சாப்பிடுவேன். அதுபோல் குண்டு வெடிப்பு நடந்த சமயத்திலும் உணவு சாப்பிட ராமேஸ்வரம் கபே ஓட்டலுக்கு சென்றிருந்தேன். நான் எப்போதும் உணவை வாங்கிக்கொண்டு கைகழுவும் இடத்தின் அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்து சாப்பிடுவேன். வழக்கம்போல் நான் சாப்பிட்டு கொண்டிருந்தபோது எனது அம்மா எனக்கு திடீரென்று போன் செய்தார். உள்ளே வாடிக்கையாளர்கள் அதிகமாக இருந்ததால் போன் பேச வெளியே வந்தேன்.

    நான் வழக்கமாக அமரும் இருக்கையில் இருந்து 10 முதல் 15 மீட்டர் தொலைவில் நின்றபடி போன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது தான் முதல் குண்டு வெடித்தது. குண்டு வெடித்து கரும்புகை வெளியேறியது.

    காதை பிளக்கும் அளவுக்கு டமார் என குண்டு வெடித்த சத்தம் இருந்தது. காயம் அடைந்த பலரது காது, கை, கால்களில் ரத்த காயம் ஏற்பட்டது. ரத்தம் சொட்ட சொட்ட அவர்கள் வேதனையில் துடித்தனர். இதுபோன்ற பயங்கர சம்பவத்தை இதுவரை நேரில் பார்த்ததில்லை.

    எனது அம்மா போன் செய்ததால் தான் நான் உயிர் தப்பினேன். அவர் போனில் அழைக்கவில்லை என்றால், குண்டு வெடித்து சிதறிய பகுதியில் தான் நான் அமர்ந்து உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்திருப்பேன். எனது அம்மாவால் நான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ராமேஸ்வரம் கபே ஓட்டலில் வெடித்த குண்டுகளிலும் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
    • இதுவரை ஓட்டல் குண்டுவெடிப்புக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

    பெங்களூரு:

    பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளி, ஐ.டி.பி.எல். ரோட்டில் உள்ள ராமேஸ்வரம் கபே என்ற ஓட்டலில் நேற்று முன்தினம் மதியம் 12.55 மணியளவில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்து சிதறின. ஓட்டலில் கை கழுவும் இடத்திற்கு அருகே ஒரு பையில் இந்த குண்டு மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

    இந்த சம்பவத்தில் பெண்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தார்கள். அவர்கள் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் 2 பேர் நேற்று முன்தினம் இரவு சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்கள். 8 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் பெங்களூரு நகரில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து எச்.ஏ.எல். போலீஸ் நிலையத்தில் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    தற்போது அந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றி போலீஸ் கமிஷனர் தயானந்த் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீசார், ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகளும், பயங்கரவாத செயல்களை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு படையினர், மத்திய உளவுத்துறை அதிகாரிகளும் மற்றொரு புறம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வெடித்தது எந்த வகையான வெடிகுண்டு?, என்னென்ன பொருட்களை பயன்படுத்தி இந்த குண்டு தயாரிக்கப்பட்டது?, இந்த குண்டு எந்த பயங்கரவாத அமைப்பினர் தயாரித்தது? என்பது தொடர்பாக தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். நிபுணர்கள் நடத்திய முதல்கட்ட விசாரணையில், ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்புக்கும், மங்களூருவில் கடந்த 2022-ம் ஆண்டு ஆட்டோவில் நடந்த குக்கர் குண்டுவெடிப்புக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கி இருப்பதாக தெரிகிறது. அதுபோன்று, பெங்களூரு சர்ச்தெருவில் நடந்த குண்டுவெடிப்பில் சிக்கிய வெடிப்பொருட்களே, ராமேஸ்வரம் கபே ஓட்டலில் வெடித்த குண்டுகளிலும் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    எல்லாவற்றுக்கும் மேலாக சிவமொக்கா மாவட்ட ஆற்றுப்பகுதியில் பயங்கரவாதி ஷாரிக் மற்றும் அவரது கூட்டாளிகள் வெடிகுண்டை வெடிக்க செய்து பயிற்சி பெற்றிருந்தனர். இந்த சம்பவத்திற்கும், தற்போது ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்புக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இந்த ஆதாரங்கள் மூலமாக ராமேஸ்வரம் கபே ஓட்டலில் நடைபெற்ற வெடிகுண்டு சம்பவத்திற்கு சிரியா நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என்ற முடிவுக்கு போலீசார் வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதுவரை ஓட்டல் குண்டுவெடிப்புக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. இருப்பினும் ஓட்டல் குண்டுவெடிப்பில் சிக்கிய டெட்டனேட்டர்கள், பேட்டரி, நட்டு, போல்ட்டுகள் ஆகியவையும், மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட பொருட்களும் ஒன்று போல் இருப்பதை தடய அறிவியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். மங்களூருவில் குக்கர் வெடிகுண்டை வெடிக்க செய்யும் முன்பாகவே வெடித்திருந்தது.

    ராமேஸ்வரம் கபே ஓட்டலில் குக்கர் வெடிகுண்டு, டிபன் பாக்ஸ் வெடிகுண்டுக்கு பதிலாக பிளாஸ்டிக் கவரை பயன்படுத்தி வெடிகுண்டை தயாரித்து, டைமர் மூலம் வெடிக்க செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் கவரில் 2 குண்டுகளை வைத்து, அதற்கு டைம் செட் செய்து வெடிக்க வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த வகையான வெடிகுண்டுகளை தயாரிப்பதில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் நிபுணத்துவம் பெற்றதும், அவர்கள் தான் ஓட்டலில் குண்டுகளை வைத்து நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டிருக்கலாம் எனவும் போலீசார் கருதுகிறார்கள்.

    ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதால், என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் மத்திய உளவுப்பிரிவினரும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பஸ், ரெயில் நிலையங்கள், மக்கள் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    • முதல் குண்டு வெடித்த அடுத்த 10 நிமிடங்களில் மீண்டும் 2-வது குண்டும் வெடித்தது.
    • ஓட்டலில் குண்டு வைத்த வாலிபரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு ஒயிட் பீல்டு அருகே உள்ள குந்தலஹள்ளியில் இயங்கிவரும் பிரபல ஓட்டல் ராமேஸ்வரம் கபேவில் நேற்று மதியம் 1 மணி அளவில் 250-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் ஓட்டலுக்குள்ளும், வெளியேயும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வெடிகுண்டு வெடித்தது. சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர். முதல் குண்டு வெடித்த அடுத்த 10 நிமிடங்களில் மீண்டும் 2-வது குண்டும் வெடித்தது. இதில் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

    சம்பவம் பற்றி தெரியவந்ததும் போலீசார், மத்திய குற்றப்பிரிவு போலீசார், தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் குண்டுவெடிப்பில் காயமடைந்த 10 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் வேறு குண்டுகள் ஏதாவது இருக்கிறதா? என்றும் சோதனை நடத்தினர். ஓட்டலில் வெடித்த குண்டு ஐ.இ.டி வகை வெடிகுண்டு என்றும் வீரியம் குறைவான வெடிகுண்டு என்றும் தெரியவந்தது.

    குண்டு வெடித்த இடத்திலிருந்து ஒரு டைமர் கருவி, நட்டுகள், போல்டுகள், டிபன் பாக்ஸின் உடைந்த துண்டுகள் மற்றும் ஒரு பை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் தொழில் போட்டி காரணமாக யாராவது குண்டு வைத்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். ஆனால் அந்த ஓட்டலின் நிர்வாக இயக்குனர் திவ்யா கூறும்போது:-

    தொழில்போட்டியில் வாடிக்கையாளர்களை குறிவைத்து குண்டு வைக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தார். எனவே பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தீவிரவாத அமைப்புகள் யாராவது குண்டு வைத்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் இதுவரை இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு எந்த தீவிரவாத அமைப்புகளும் பொறுப்பு ஏற்கவில்லை.

    எனவே ஓட்டலில் குண்டு வைத்தது யார் என்று போலீசார் துப்பு துலக்கினர். அப்போது ஓட்டலில் பொருத்தப்பட்டிருந்து கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தலையில் தொப்பி அணிந்துகொண்டு முககவசம் அணிந்தபடி குண்டுவெடிப்பு நடந்த ஓட்டல் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சில் இருந்து இறங்கி காலை 11.30 மணியளவில் ஓட்டலுக்கு நடந்து வரும் காட்சிகளும், பின்னர் அந்த நபர் கேஷ் கவுண்டரில் பணம் செலுத்தி ஒரு தட்டில் ரவா இட்லியை வாங்கி கொண்டு காலை 11.45 மணியளவில் அவர் குப்பை தொட்டி அருகே ஒரு பையை வைத்துவிட்டு மீண்டும் பஸ்சில் புறப்பட்ட காட்சிகளும் பதிவாகி இருந்தது. அவர் சென்ற பின்புதான் அந்த பையில் இருந்த 2 வெடிகுண்டுகள் வெடித்தது இந்த காட்சிகளும் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது. எனவே இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு அவர்தான் காரணம் என்பது உறுதியானது. கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் எப்படியும் கேமரா மூலம் சிக்கிவிடுவோம் என்று தெரிந்தும் அந்த நபர் மிகவும் தைரியமாக வெடிகுண்டுகளை வைத்து வெடிக்க செய்துள்ளார்.

    இதற்கிடையே சி.சி.டி.வி. கேமராவில் பதிவான வாலிபரை ஏ.ஐ. தொழில் நுட்பம் (ஆர்டிபிசியல் இன்டிலிஜன்ட்) மூலம் கண்டு பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவரது முக அம்சங்கள் சிசிடிவி மூலம் கைப்பற்றப்பட்டு அவரது முகத்தை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது என்று கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கூறினார். மேலும் ஓட்டலில் குண்டு வைத்த வாலிபரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் ஓரிரு நாட்களில் அவரை கைது செய்து விடுவோம் என்றும் தெரிவித்தார்.

    குண்டு வெடிப்பில் காயம் அடைந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி, கர்நாடக கவர்னர் தாவர்சந்த கெலாட் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர். மேலும் குண்டு வெடித்த இடத்தையும் பார்வையிட்டனர். மேலும் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கூறும்போது, விதான் சவுதாவில் பாகிஸ்தான் ஆதரவு கோஷமிட்ட சம்பவத்தை மாநில அரசு முன்னரே தீவிரமாக எடுத்துக்கொண்டிருந்தால் இதுபோன்ற சம்பவத்தை தவிர்த்து இருக்கலாம் என்று தெரிவித்தார். மேலும் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.      

    • லாட்ஜூகள் மற்றும் தங்கும் விடுதிகளிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
    • தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள போலீசார் நடவடிக்கைகள் மேற்கொண்டு உள்ளனர்.

    சென்னை:

    பெங்களூருவில் ராமேசுவரம் கபே ஓட்டலில் நேற்று நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதை தொடர்ந்து தென் மாநிலங்களில் உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    தமிழகத்திலும் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்கள் அனைத்திலும் போலீஸ் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

    குறிப்பாக சென்னை மாநகரில் நேற்று மாலையில் இருந்து இரவு முழுவதும் விடிய விடிய வாகன சோதனை தீவிரமாக நடத்தப்பட்டது.

    லாட்ஜூகள் மற்றும் தங்கும் விடுதிகளிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சந்தேகத்திற்கிடமாக யாராவது தங்கி இருக்கிறார்களா? சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக யாரேனும் ஊடுருவி இருக்கிறார்களா? என்பது பற்றி கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை மாநகர பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் தங்கியுள்ள வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் யாரேனும் சந்தேகப்படும்படியான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களா? என்பதை கண்டறிய அந்தந்த பகுதிகளை சேர்ந்த போலீசார் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் எழும்பூர், திருவல்லிக்கேணி மற்றும் கிழக்கு கடற்கரை சாலையையொட்டிய பகுதிகளில் உள்ள லாட்ஜூகளில் நடத்தப்பட்ட சோதனையின்போது அங்கு தங்கி இருந்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களிடம் விசாரணையும் நடத்தப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் பெங்களூருவில் நடந்துள்ள குண்டு வெடிப்பு சம்பவத்தை போன்று தென் மாநிலங்களில் வேறு எங்கும் நடந்துவிடக்கூடாது என்பதில் மாநில போலீசார் முழுமையான கவனத்தோடு செயல்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    இதன்படி தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள போலீசார் நடவடிக்கைகள் மேற்கொண்டு உள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தமிழக சட்டம்-ஒழுங்கு போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 30 முதல் 35 வயது இருக்கும் என தகவல்.

    பெங்களூருவில் பிரபல ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் இன்று மதியம் வெடிகுண்டு வெடித்தது.

    இந்த சம்பவத்தில், 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ஓட்டலுக்கு வந்த மர்ம நபர் ஒருவர் வைத்து சென்ற பையில் இருந்த வெடிகுண்டு வெடித்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இந்நிலையில், குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக உபா மற்றும் வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் பெங்களூருவின் எச்ஏஎல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 30 முதல் 35 வயது இருக்கும் என அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

    ரவை இட்லி வாங்கிக் கொண்டு அதை சாப்பிடாமால் பையை மட்டும் விட்டுச் சென்றுள்ளதாகவும் கூறினார்.

    ×