search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Elephant Corridor"

    யானைகள் வழித்தட விவகாரம் தொடர்பாக தனியார் விடுதி உரிமையாளர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. #ElephantCorridor
    புதுடெல்லி:

    நீலகிரி மாவட்டம் முதுமலை சரணாலயத்தை ஒட்டியுள்ள கிராமத்தில் யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்து விடுதி மற்றும் ஓட்டல்கள் கட்டுவதற்கு சென்னை ஐகோர்ட்டு கடந்த 2011-ம் ஆண்டு தடை விதித்தது. இதை எதிர்த்து தனியார் விடுதி உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் என 50-க்கும் மேற்பட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

    இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோரை கொண்ட அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது. அங்கு யானைகள் வழித்தடத்தில் 39 வணிக நிறுவனங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு இருப்பதாக மாவட்ட கலெக்டர் கோர்ட்டுக்கு தெரிவித்தார். இதில் 27 விடுதிகள் சார்பில் யாரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

    எனவே அவர்கள் கலெக்டரின் அறிக்கையை ஒத்துக்கொள்வதாக ஆகிறது எனக்கூறிய நீதிபதிகள், அந்த 27 விடுதிகளும் 48 மணி நேரத்தில் மூடி ‘சீல்’ வைக்கப்பட வேண்டும் என கடந்த 9-ந்தேதி உத்தரவிட்டனர். மீதமுள்ள 12 விடுதிகளும் அனுமதி பெற்று கட்டப்பட்டதா? என்பதை 48 மணி நேரத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினார்கள்.

    இதைத்தொடர்ந்து ‘சீல்’ வைக்க உத்தரவிடப்பட்ட ஒரு விடுதியின் உரிமையாளர் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘தமிழக அரசு குறிப்பிட்டுள்ள யானை வழித்தடத்தில் எங்கள் விடுதி வரவில்லை. வரையறுக்கப்பட்ட எல்லை பகுதிக்கு உள்ளேயும் எங்கள் விடுதி இல்லை. எங்கள் விடுதியின் பெயர் சுப்ரீம் கோர்ட்டில் தவறாக கொடுக்கப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டு உள்ளது.


    சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் இருந்து தங்கள் விடுதியின் பெயரை நீக்கம் செய்து வெளியிட வேண்டும் எனவும், தங்கள் விடுதிக்கு ‘சீல்’ வைக்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டது.

    இந்த மனு மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வந்தது. இதில் விசாரணை தொடங்கியதும், இந்த மனு மீது தமிழக அரசு 2 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் வழக்கின் விசாரணையை இரு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர். #ElephantCorridor
    நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் இடையூறாக அமைந்த 27 தனியார் விடுதிகளுக்கு ‘சீல்’ வைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, வழக்குதாரர் தரப்பில் ஒரு ‘கேவியட்’ மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #NilgirisElephant #SupremeCourt
    புதுடெல்லி:

    தமிழ்நாட்டில், நீலகிரி மாவட்டம், முதுமலை சரணாலயத்தை ஒட்டியுள்ள கிராமத்தில் யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்து விடுதி மற்றும் ஓட்டல்கள் கட்டுவதற்கு சென்னை ஐகோர்ட்டு கடந்த 2011-ம் ஆண்டு தடை விதித்தது.

    அந்த தடையை எதிர்த்து விடுதி உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் என 50-க்கும் மேற்பட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

    இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மதன் பி.லோகுர் தலைமையிலான அமர்வு கடந்த 9-ந் தேதியன்று விசாரித்தது.



    அப்போது, “யானைகள் வழித்தடத்தில் விதிமுறைகளை மீறி 39 வணிக நிறுவனங்கள் இருப்பதாக கலெக்டர் கூறி இருக்கிறார். இவற்றில் 27 விடுதிகள் சார்பாக யாரும் ஆஜர் ஆகவில்லை. எனவே அவர்கள் கலெக்டரின் அறிக்கையை ஒத்துக்கொள்வதாக ஆகிறது. அந்த 27 விடுதிகளும் 48 மணி நேரத்தில் மூடி ‘சீல்‘ வைக்கப்பட வேண்டும். மீதம் உள்ள 12 விடுதிகளும் தங்களுக்கு அனுமதி உள்ளதா என்பதை 48 மணி நேரத்தில் தெரிவிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவை பிறப்பித்தனர்.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் மூல வழக்குதாரரும், வக்கீலுமான யானை ராஜேந்திரன் நேற்று ‘கேவியட்’ மனு தாக்கல் செய்தார்.

    அந்த மனுவில் அவர், “யானைகள் வழித்தட விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த 9-ந் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து யாரேனும் மேல்முறையீட்டு வழக்கு போட்டால், அந்த வழக்கில் என்னையும் ஒரு தரப்பாக ஏற்றுக்கொண்டு என்னுடைய தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது” என கூறி உள்ளார்.  #NilgirisElephant #SupremeCourt
    ஊட்டியில் யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டிருந்த 27 விடுதிகளை அப்புறப்படுத்தியதை கண்டித்து மசினகுடியை சுற்றியுள்ள பொதுமக்கள் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
    காந்தல்:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள மசினகுடி, சோலூர், உல்லத்தி, கடநாடு ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள தனியார் விடுதிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    அப்போது 39 தனியார் விடுதிகள், 390 குடியிருப்புகள், அரசு கட்டிடங்கள் என 821 கட்டிடங்கள் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த அறிக்கையின் அடிப்படையில் நீதிபதிகள் முதல்கட்டமாக யானை வழித்தடத்தில் உள்ள 39 விடுதிகளில் 27 விடுதிகளை 48 மணி நேரத்திற்குள் சீல் வைக்குமாறு உத்தரவிட்டடனர்.

    மீதி உள்ள 12 விடுதிகளின் ஆவணங்களை 48 மணி நேரத்திற்குள் சரி பார்த்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டனர்.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து யானை வழித்தடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 27 விடுதி உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நோட்டீஸ் வழங்கிய 48 மணி நேரத்தில் விடுதியை சீல் வைக்கும் பணி நேற்று நடைபெற்றது.

    ஊட்டி ஆர்.டி.ஒ. சுரேஷ் தலைமையில் மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட உள்ளாட்சி, வருவாய் துறை மற்றும் காவல் துறையினர் அடங்கிய 3 குழுவினர் மசினகுடி, பொக்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 27 விடுதிகளுக்கு சீல் வைத்தனர்.

    பொக்காபுரம் பகுதியில் உள்ள விடுதியை சீல் வைத்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதன் உரிமையாளர் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரை போலீசார் அப்புறப்படுத்தினார்கள். அதன் பின்னர் அதிகாரிகள் விடுதியில் உள்ள அனைத்து அறைகளுக்கும் தனித்தனியாக சீல் வைத்தனர்.

    இதே போல் 27 விடுதிகளுக்கும் அங்குள்ள அறைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. இரவு 7.30 மணி வரை சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

    மசினகுடியில் 27 விடுதிகளுக்கும் சீல் வைக்கப்பட்டு உள்ளதால் சுற்றுலா தொழிலை நம்பி உள்ள தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி மசினகுடி பொதுமக்கள் 3 நாள் கடையடைப்பு போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர்.

    இன்று முதல் (13-தேதி) 15-ந் தேதி வரை கடையடைப்பு போராட்டம் நடக்கிறது. அதே போல் சுற்றுலா வாகனங்களை இயக்காமலும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமலும் போராட்டம் நடத்த போவதாகவும் பொதுமக்கள் அறிவித்து இருந்தனர்.

    அதன்படி இன்று கடையடைப்பு போராட்டம் தொடங்கியது. மசினகுடி, மாவநல்லா, வாழைத்தோட்டம், சொக்க நல்லி, பொக்காபுரம், தொட்டலிங்கி, மாயார் மற்றும் மசினகுடியை சுற்றி உள்ள பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. மேலும் சுற்றுலா வாகனங்களும் இயக்கப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
    நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் உள்ள கட்டிடங்களை இடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
    புதுடெல்லி:

    நீலகிரி மாவட்டம் முதுமலை சரணாலயத்தை ஒட்டியுள்ள பகுதியில் யானைகளின் வழித்தடத்தில் நில ஆக்கிரமிப்பு செய்து ஓய்வு இல்லங்கள் (ரிசார்ட்) மற்றும் ஓட்டல்கள் கட்டுவதற்கு தடை விதிக்குமாறு கோரி சுற்றுச்சூழல் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.



    இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, முன்பு யானை வழித்தடம் என வரையறுக்கப்பட்ட பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விவசாயிகள், ஓய்வு இல்லங்களின் உரிமையாளர்கள், குடியிருப்புவாசிகள் காலி செய்து, நீலகிரி மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கடந்த 2011-ம் ஆண்டு உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை எதிர்த்து பாதிக்கப்பட்ட ஓய்வு இல்லங்களின் உரிமையாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். அவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது வக்கீல் யானை ராஜேந்திரன் நேரில் ஆஜராகி வாதாடினார்.

    அவர் வாதாடுகையில் கூறியதாவது:-

    சென்னை ஐகோர்ட்டு 2011-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்த போது நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் 136 ஓய்வு இல்லங்கள் மட்டுமே இருந்தன.

    ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்ட பிறகு, இதுவரை 430-க்கும் மேற்பட்ட ஓய்வு இல்லங்களும், ஓட்டல்களும் யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்து சட்ட விரோதமாக கட்டப்பட்டு உள்ளன. இந்த கட்டிடங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் மற்றும் தண்ணீரை உடனடியாக துண்டிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்

    இதைத்தொடர்ந்து நீதிபதிகள், நீலகிரி மாவட்டத்தில் யானைகளின் வழித்தடங்களில் எத்தனை கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன? அவற்றின் தன்மை மற்றும் அவற்றால் யானைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பது குறித்து மாவட்ட கலெக்டர் 4 வாரங்களுக்குள் எழுத்துப்பூர்வமாக அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    ஐகோர்ட்டு உத்தரவுக்கு முன்பு கட்டப்பட்டவை எத்தனை? அதற்கு பிறகு கட்டப்பட்ட கட்டிடங்கள் எத்தனை? அவற்றில் ஓட்டல் மற்றும் ஓய்வு இல்லங்கள் மற்றும் குடியிருப்புகள் எத்தனை? இந்த கட்டிடங்களுக்கான அனுமதி பெறப்பட்டுள்ளதா? என்பது பற்றிய விவரங்களும் அந்த அறிக்கையில் இடம் பெற வேண்டும் என்று அப்போது நீதிபதிகள் கூறினார்கள்.

    அத்துடன், யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்து ஏதேனும் கட்டிடங்கள் கட்டப்பட்டு இருந்தால் அவை இடிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினார்கள். 
    ×