என் மலர்
பாராளுமன்ற தேர்தல் 2024
- சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என ராமதாஸ் கூறி வருகிறார்.
- பி.எம்.கேர் பண்டில் பெறபட்ட 34 ஆயிரம் கோடி பணம் குறித்து தகவல் அறிக்கையில் கேள்வி கேட்டால் பதில் தர மறுக்கிறார்கள்.
தருமபுரி:
இந்தியா கூட்டணி கட்சி சார்பில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க வேட்பாளர் ஆ.மணி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே வாக்கு சேகரித்தார் அப்போது அவர் பேசியதாவது:
தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டுள்ள தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து லட்சகணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டும். உதய சூரியன் சின்னத்தில் ஓட்டுக்களை போட்டு.. மோடிக்கு வைக்க வேண்டும்.
தருமபுரி தொகுதியில் அரசு சார்பில் சிப்காட் தொழிற்பேட்டையில் 11 கோடி ரூபாய் மதிப்பிட்டில் சாலை அமைக்கப்பட்டது உள்ளி்ட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்பட்டிருக்கிறது.
தற்போது புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளேன். இதில் தொப்பூரில் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பது, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட இரண்டாம் கட்ட பணிகள், தருமபுரி-மொரப்பூர் ரெயில்வே திட்டம், ஒகே னக்கல்லில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் காவிரி உபரிநீர் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்பு காவிரி உபரிநீர் திட்டம், விவசாயிகளுக்கான நீர் பாசன திட்டங்கள் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படு்ம். தேர்தலுக்கு தேர்தல் தான் மோடி வந்து செல்வார். இந்தியாவிேலயே முதன் முறையாக முதலமைச்சரின் காலை உணவு திட்டம், இந்த திட்டத்தை வெளி மாநிலத தவரும், வெளிநாட்டவரும் பின்பற்றக்கூடிய திட்டமாக இருக்கிறது. இது திராவிட மாடல் அரசு.
இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன், கியாஸ் சிலிண்டர் விலை 500 ரூபாய் வழங்கப்படும்,.பெட்ரோல் 75 ரூபாயும், டீசல் 65 ரூபாயுக்கு வழங்கப்படும். இந்தியா முழுக்க உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும். வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு தந்தவர் கருணாநிதி, சமூகநீதிக்காக எதிராக உள்ள பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி வைத்திருக்கிறார்கள். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என ராமதாஸ் கூறி வருகிறார். ஆனால் இதனை மறுத்தும் வரும் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி வைத்திருக்கிறார்.
டிவி ஒன்றிற்கு பேட்டியளித்த ராமதாஸ் பா.ஜ.க.வி்ன் ஆட்சிக்கு பூஜ்ஜியத்திற்கு கீழே ஏதாவது மதிப்பெண் இருந்தால் தான் கொடுக்கலாம் என்றார். ஆனால் ராமதாஸ், தற்போது பா.ம.க அதே பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்துள்ளது.
தேர்தல் நேரத்தில் வந்து செல்வார் பிரதமர் மோடி, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி செல்வதாக செங்கல்லை நட்டு அடிக்கல் நாட்டி சென்றார், அந்த ஒற்றை கல்லயும் நான் எடுத்து வந்துவிட்டேன்.
மோடிக்கு நான் ஒரு பெயர் வைத்திருக்கிறேன், 29 பைசா, அதாவது செல்லாக்காசு, அப்படியே நீங்களும் அப்படியே அழைக்கலாம். மற்ற மாநிலங்களுக்கு கூடுதலாக ஜி .எஸ்.டி. திருப்பி தருகிறீர்கள், ஆனால் தமிழகத்திறகு 29 பைசா தான் ஒன்றிய அரசு திருப்பி தருகிறார்கள்.
மாநில உரிமைகளை அடகு வைத்தது அ.தி.மு.க.தான். உங்கள் பிரதமர் வேட்பாளர் யார் என்று அ.தி.மு.க. கூற முடியுமா?, சசிகலாவின் காலை பிடித்து ஆட்சிக்கு வந்தவர், கடைசியில் அவர்கள் காலை வாரிவிட்டவர் எடப்பாடி பழனிசாமி. சசிகலாவுக்கு மட்டும் இல்லை. ஒட்டு மொத்த தமிழகத்திற்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. இந்த 2 கூட்டணி கட்சிகளையும் விரட்டியடிக்க வேண்டும்.
கடந்த 10 வருடத்தில் பா.ஜ.க. அரசு செய்த அனைத்து ஊழல்களும் சி.ஏ.ஜி அறிக்கையில் கிடையாது. கடந்த 9 ஆண்டுகளில் பா.ஜ.க. அரசு செய்திருக்க கூடிய செலவுகளில் 7½ லட்சம் கோடி ரூபாய் பணத்தை காணவில்லை. ஆயுஷ்மான்பவன் திட்டத்தின் இறந்து போன 88 ஆயிரம் பேருக்கு ஒரே செல்போனிலிருந்து பணம் அனுப்பி இருக்கின்றனர். பி.எம்.கேர் பண்டில் பெறபட்ட 34 ஆயிரம் கோடி பணம் குறித்து தகவல் அறிக்கையில் கேள்வி கேட்டால் பதில் தர மறுக்கிறார்கள். இது தான் மோடி அரசு.
எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் யாரை கைகாட்டுகிறாரோ அவரே பிரதமர். இந்தியா கூட்டணியில் தருமபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டுள்ள தி.மு.க. வேட்பாளரை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டும், மோடியை விரட்டியடிக்க வேண்டும், இந்தியாவிக்கே ஒரு விடியல் ஆட்சியை தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தமிழக போலீஸ் மற்றும் துணை நிலை ராணுவத்துடன் ஆங்காங்கே சோதனைகளையும் வருமான வரித்துறையினர் நடத்தி வருகிறார்கள்.
- கடந்த 3 நாட்களாக நடந்த வேட்டையில் கோடிக்கணக்கில் பணம், நகைகள் மற்றும் ஆவணங்கள் சிக்கி உள்ளன.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் அதிக அளவுக்கு பணப்பட்டுவாடா நடப்பதாக தேர்தல் ஆணையம் கருதுகிறது. பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வேட்டை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் வருமான வரித்துறையையும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் களத்தில் இறக்கி விட்டுள்ளனர்.
வருமான வரித்துறையுடன் ஆலோசித்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் 39 தொகுதிகளிலும் தீவிரமாக சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து வெளிமாநிலங்களில் இருந்து 58 சிறப்பு அதிகாரிகள் தமிழகத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தொகுதி வாரியாக கட்சிகளின் வேட்பாளர்களை தினமும் கண்காணித்து வருகிறார்கள்.
தமிழக போலீஸ் மற்றும் துணை நிலை ராணுவத்துடன் ஆங்காங்கே சோதனைகளையும் வருமான வரித்துறையினர் நடத்தி வருகிறார்கள். கடந்த 3 நாட்களாக நடந்த வேட்டையில் கோடிக்கணக்கில் பணம், நகைகள் மற்றும் ஆவணங்கள் சிக்கி உள்ளன.
இந்த நிலையில் வருமான வரித்துறை, பறக்கும் படை மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பையும் மீறி முக்கிய கட்சிகள் 39 தொகுதிகளிலும் பணப்பட்டுவாடா செய்ய ரகசிய ஏற்பாடுகள் செய்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. பெரும்பாலான தொகுதிகளில் கோடிக்கணக்கான பணம் கொண்டு செல்லப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது.
கட்சிகளுடன் தொடர்பு இல்லாத பொதுவான நபர்களின் வீடுகளில் அந்த பணம் இருப்பதாக தெரியவந்துள்ளது. சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பணம் 39 தொகுதிகளிலும் பதுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
தங்களுக்கு சாதகம் இல்லாத தொகுதிகளில் அதிக அளவில் பணம் வினியோகிக்க சில கட்சிகள் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அந்த வகையில் 780 சூட்கேஸ்களில் கத்தை கத்தையாக 500 ரூபாய் நோட்டு கட்டுகள் அடுக்கிக் கொண்டு செல்லப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. எந்த கட்சி சார்பில் அந்த பணம் சென்றது என்று தெரியவில்லை.
இதையடுத்து அமலாக்கத்துறையினர், வருமான வரித்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் சில தினங்களில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா தொடங்கி விடும் என்பதால் அதற்கு முன்னதாக அந்த 2 ஆயிரம் கோடி ரூபாயையும் கைப்பற்ற தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே வரும் நாட்களில் வருமான வரித்துறையினர் நடத்தும் சோதனை மேலும் தீவிரமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- தமிழகத்தில் பிரதமர் செல்லாத புதிய இடங்களுக்கு அழைத்து செல்வது பற்றி 12-ந்தேதிக்கு பிறகு தெரிவிக்கப்படும்.
- பிரதமர் தமிழகத்திற்கு வருவதில் தி.மு.க.வுக்கு என்ன பயம் என்று தெரியவில்லை.
கோவை:
கோவை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை இன்று கோவை சரவணம்பட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார். நாளை மாலை தென்சென்னை, மத்திய சென்னை வேட்பாளர்களை ஆதரித்து நடக்கும் ரோடு ஷோ நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்று ஆதரவு திரட்ட உள்ளார்.
அதன்பிறகு மறுநாள் காலை வேலூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர், மதியம் கோவை மேட்டுப்பாளையத்தில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
தமிழகத்தில் பிரதமர் செல்லாத புதிய இடங்களுக்கு அழைத்து செல்வது பற்றி 12-ந்தேதிக்கு பிறகு தெரிவிக்கப்படும்.
பிரதமர் தமிழகத்திற்கு வருவதில் தி.மு.க.வுக்கு என்ன பயம் என்று தெரியவில்லை.
தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சரான பிறகு கடந்த 33 மாதங்களில் எத்தனை கிராமங்களுக்கு சென்று இருக்கிறார் என்று தி.மு.கவினரால் சொல்ல முடியுமா?. அவர் வெளிநாடுகளுக்கு செல்வார். தமிழகத்தில் நகரங்களுக்கு சென்று கை காட்டி விட்டு சென்று விடுவார்.
தி.மு.க.வினர் தாங்கள் தான் ஏதோ காலை உணவு திட்டத்தை கொண்டு வந்ததாக கூறி வருகிறார்கள். ஆனால் இந்த திட்டமானது மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி கொள்கை திட்டத்திலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை இன்னும் 2 தினங்களில் வெளியிடப்படும். கோவைக்கு என்று தனியாகவும் தேர்தல் அறிக்கை வெளியிட உள்ளோம்.
ஜெயிலில் இருந்து கொண்டு ஒருவர் கதை, திரைக்கதை வசனம் எழுதுகிறார். அவர் எழுதிய கதையை தான் இங்கு வந்திருக்க கூடிய அமைச்சர்கள் பேசி வருகிறார்.
ஜெயிலில் இருந்து கொண்டு, தங்கம், பணம் கொடுத்து மக்களின் வாக்குகளை பெற்று விடலாம் என நினைக்கின்றனர். ஆனால் அது இந்த முறை நடக்காது. எவ்வளவு தங்க சுரங்கத்தையே தோண்டி வந்து கொடுத்தாலும் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். யார் வெற்றி பெறுவார்கள் என்பது ஜூன் 4-ந்தேதி சாமானியனின் குரல் மூலம் தெரிய வரும். எங்களுக்கு 60 சதவீத வாக்குகள் கிடைக்கும். நான் வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நான் ஒரு சாதாரண விவசாயி.
- விவசாய கிராமங்களின் அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்துவேன்.
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பா.ஜெயபெருமாள் முதுகுளத்தூர் பகுதியில் வளநாடு, தேரிருவேலி, காக் கூர், கொளுந்துரை சாம்பகுளம், கீழத்தூவல், சேரி, வெண்ணீர வாய்க்கால், செல்வநாயகபுரம். உடையநாதபுரம், அச்சங்குளம், நல்லுக்குறிச்சி அபிராமம் பல்வேறு கிராமங்களில் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்து பேசியதாவது:-
தமிழ்நட்டில் நடப்பது நாடக ஆட்சி. மக்களை ஏமாற்றி பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த திமுகவின் மோசடி அரசியலை மக்கள் உணர்ந்து விட்டனர். 5 ஆண்டுகளாக தொகுதி பக்கமே தலைகாட்டாமல் மீண்டும் ஓட்டுகேட்டுவரும் எம்.பி.க்கு பாடம் புகட்டுங்கள்.
ஜெயலலிதாவின் ஆட்சியில் கிராம மக்களை வலுப்படுத்த ஆடு, மாடு, கோழி மற்றும் பெண்களுக்கு தாலிக்கு தங்கமும் கொடுத்தார். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தையும் நிறுத்திவிட்டன. கிராமங்களில் கூட போதை அதிகரித்துள்ளதால் இளைஞர்கள் வாழ்வு கேள்விக்குறியாகியுள்ளன.
நான் ஒரு சாதாரண விவசாயி. உங்களுடனே இருப்பேன். விவசாய கிராமங்களின் அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்துவேன். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பேன். எந்த தடை இருந்தாலும் கிராமங்களில் விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன். கிராம மக்களின் தேவைகளை நிறைவேற்ற இரட்டை இலைக்கு வாக்களித்து என்னை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார்.
வேட்பாளருடன் முன்னான் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. மலேசியா எஸ்.பாண்டியன், முன்னாள் எம்.பி. எம்.எஸ். நிறைகுளத்தான், முன்னான் மாவட்ட ஊராட்சி சேர்மன் வக்கீல் எம்.சுந்தரபாண்டியன், ஒன்றிய கழக செயலாளர்கள் கோ.கர்ணன், என்.டி.செந்தில்குமார். கருப்புச்சாமி. ஆனை சேரி முத்துராமலிங்கம், அம்சராஜ உள்பட அ.தி.மு.க கிளைக்கழக நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.
- தமிழ்நாட்டைப் பொறுத்த வரை 2024 பாராளுமன்றத் தேர்தல் மிகவும் முக்கியமானதாகும்.
- பாராளுமன்றத் தேர்தலை ஒரு கட்சி குவித்து வைத்தக் கோடிகளைக் கொட்டி சந்திக்கிறது.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், வெற்றியை ஈட்ட வேண்டும் என்பதற்காக தேர்தல் களத்தில் பாட்டாளி இளஞ்சிங்கங்களாகிய நீங்கள் உழைக்கும் உழைப்பு எனக்கே புதிய உத்வேகத்தை அளிக்கிறது.
தமிழ்நாட்டு அரசியலில் சமூகநீதி நிழல் தரும் ஆலமரமாக பாட்டாளி மக்கள் கட்சி திகழ்கிறது என்றால், அதன் வேர்களும், விழுதுகளும் நீங்கள் தான். நீங்கள் இல்லாவிட்டால் இந்த இயக்கம் இல்லை; இந்த இயக்கத்திற்கு கிடைத்த வெற்றிகளும் இல்லை. தமிழ்நாட்டில் 2024 பாராளுமன்றத் தேர்தலை ஒரு கட்சி குவித்து வைத்தக் கோடிகளைக் கொட்டி சந்திக்கிறது; இன்னொரு கட்சி குவித்துக் கொண்டிருக்கும் கோடிகளை வாரி இறைத்து எதிர்கொள்கிறது. அவர்களுக்கென்று சொல்லிக் கொள்ள சாதனைகளும் இல்லை; களப்பணியாற்ற உன்னைப் போன்ற சிங்கங்களும் இல்லை. அதனால், பணத்தை மட்டுமே முதன்மை ஆயுதமாக நினைத்து அந்தக் கட்சிகள் பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டு வருகின்றன.
உன்னைப் போலவே தான் நான் என்னையும் துடிப்புடன் வைத்துக் கொள்ள முயல்கிறேன். உனக்கிருக்கும் அதே உற்சாகத்துடன் தான் கடந்த மார்ச் 24-ந்தேதி பரப்புரையைத் தொடங்கினேன்.
85 வயது முதுமையால் ஏற்பட்ட தளர்ச்சியும், சுட்டெரிக்கும் வெயிலால் ஏற்பட்ட அயற்சியும், இவற்றால் ஏற்பட்ட குறைந்த ரத்த அழுத்தமும் என்னை ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கியிருக்கின்றன. அதனால், கடந்த சில நாட்களாக பரப்புரைக்கு செல்லாத எனக்கு உன்னைப் போன்ற சிங்கக் குட்டிகளின் உழைப்பு தான் நம்பிக்கையும் உற்சாகமும் அளித்துக் கொண்டிருக்கிறது. அதனால் ஏற்பட்ட புத்தெழுச்சியால் இரு நாள்கள் இடைவெளிக்குப் பிறகு இன்று மாலை திருச்சிற்றம்பலம் கூட்டு சாலையில் நடைபெறவிருக்கும் பரப்புரைக் கூட்டத்தில் விழுப்புரம் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளேன்.
தமிழ்நாட்டைப் பொறுத்த வரை 2024 பாராளுமன்றத் தேர்தல் மிகவும் முக்கியமானதாகும். மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கப்போவது தேசிய ஜனநாயகக் கூட்டணி தான்; மூன்றாவது முறையாக பிரதமராகப் போவது நமது நரேந்திர மோடி தான் என்பது ஏற்கனவே உறுதியாகி விட்டது. ஆனால், மத்தியில் அமைக்கப்படவிருக்கும் ஆட்சிக்கு தமிழ்நாடு மற்றும் புதுவையில் இருந்து நாம் அளிக்க இருக்கும் பங்கு எவ்வளவு? என்பதை தீர்மானிப்பதற்குத் தான் வரும் 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. அத்தேர்தலின் மூலமான நமது பங்களிப்பு நாற்பதுக்கும் நாற்பதாக இருக்க வேண்டும் என்பதே எனது அவா.
2021 தேர்தலில் 500 க்கும் கூடுதலான வாக்குறுதிகளை அளித்த ஒரு கட்சி, அவற்றில் 50 வாக்குறுதிகளைக் கூட நிறை வேற்றவில்லை. மாறாக, இரு ஆண்டுகளில் மட்டும் ரூ.60 ஆயிரம் கோடிக்கு மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு, கிலோவுக்கு ரூ.12 வரை அரிசி விலை உயர்வு, மூன்றாண்டுகளில் 10 முறைக்கும் கூடுதலாக பால் விலை உயர்வு, தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு மளிகைப் பொருட்கள் விலை உயர்வு என ஒவ்வொரு ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தின் செலவுகளை மாதத்திற்கு ரூ.5000 முதல் ரூ.10000 வரை உயர்த்தியது தான் அந்தக் கட்சி அரசின் சாதனை. அதை நினைத்தாலே கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இன்னொரு கட்சிக்கோ சமூக நீதியும் தெரியவில்லை, தன்னாட்சி தத்துவமும் புரியவில்லை. இலக்கும் இல்லாமல், பயணிக்கும் திசையும் தெரியாமல் கால் போகும் போக்கில் பயணித்துக் கொண்டிருக்கிறது. மக்களை ஏமாற்றும் முந்தையக் கட்சி வீழ்த்தப்பட வேண்டியதும், தேச நலனுக்கும், மாநில நலனுக்கும் பங்களிப்பு செய்யாத இரண்டாவது கட்சி வெற்றி பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் காலத்தின் கட்டாயமாகும். அதற்காக இந்த மடலில் நான் குறிப்பிட்டிருக்கும் காரணங்கள் அனைத்தையும் திண்ணைப் பரப்புரை மூலம் மக்களைச் சந்தித்து, அவர்களுக்கு எளிமையாக எடுத்துக் கூறி புரிய வைக்க வேண்டும்.
தேர்தல் களத்தில் இன்று வரை நாம் தான் முதலில் ஓடிக் கொண்டே இருக்கிறோம். இதே நிலை தொடர வேண்டும். தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருக்கின்றன. அந்த வகையில் வெற்றி தொட்டுவிடும் தொலைவில் தான் உள்ளது. இரு மாதங்களில் வெற்றி நம்வசமான பிறகு நாம் அனைவரும் ஒன்று கூடி அதை கொண்டாடி மகிழ்வோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஜிஎஸ்டி வரியை சரிசெய்ய வேண்டுமென்றால் மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி வந்தால் மட்டும் இந்த நிலை மாறும்.
- காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலைத்திட்டத்தின் சம்பளத்தை 400 ரூபாயாக உயர்த்தி அளிக்கிறோம் என்று உறுதி அளிக்கிறேன்.
பாராளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தற்போதைய எம்.பி கார்த்திக் சிதம்பரம் மீண்டும் போட்டியிடுகிறார். தொகுதி முழுவதும் அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் காரைக்குடியில் மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது,
இந்திய கூட்டணி சார்பில் கை சின்னத்தில் போட்டியிடுவதாகவும், தனக்கு கை சின்னத்தில் வாக்களிக்கும்படியும் கூறினார். இந்த தேர்தல் என்பது மிகவும் முக்கித்துவம் ஆனது. மிக சாதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாது. இந்தியா எந்த திசையை நோக்கி பயணிக்க போகிறது என்பதை தேர்ந்தெடுக்கும் நேரம் இது. ஒரு வேட்பாளரை தாண்டிய தேர்தல் இது. இந்தியாவை இப்போது ஆண்டு கொண்டிருப்பது பாஜக, அவர்களின் கொள்கை இந்தி, இந்துத்துவா. அர்த்தம் என்னவென்றால் இந்தி மொழி தான் இந்தியாவின் தேசிய மொழியாக இருக்க வேண்டும், இந்தி மொழி தான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் மற்ற மொழிகளை எல்லாம் மட்டம் தட்ட வேண்டும் என்பது அவர்களின் எண்ணம். நமக்கு அது சரிப்பட்டு வராது. நமக்கு தமிழ் தான் முக்கியம். தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
அவர்கள் இந்துத்துவா கொள்கையை பின்பற்றுகிறார்கள். கிறிஸ்துவர்களையும், இஸ்லாமியர்களையும் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தி அவர்களை மட்டம் தட்டுவதுதான் பாஜகவினரின் வேலையாக உள்ளது.
20 ஆண்டுகளுக்கு முன் கோவில்களில் கிடா வெட்டும் நிகழ்வை ரத்து செய்தனர். இந்த இந்துத்துவா பாஜக ஆட்சி மீண்டும் வந்தால் நமது ஊர்களில் கிடா வெட்டுவதையும், சேவல் நேர்த்திக்கடனாக கொடுப்பதையும் தடை செய்து விடுவார்கள். அவர்களது இந்துத்துவா என்பது முழுக்க முழுக்க வடஇந்திய, சமஸ்கிருத, மேல்தட்டு வெஜிட்டேரியன் இந்துத்துவா. நமது நடைமுறை வாழ்க்கைக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை. நமது கிராமபுற பழக்க வழக்கங்கள் தொடர வேண்டும் என்றால் இந்திய கூட்டணியான கை சின்னத்தில் வாக்களியுங்கள்.
நாம் அனைத்து பொருட்களுக்கும் வரி கட்டுகிறோம். நாம் 1 ரூபாய் வரிக்கட்டினால் நமக்கு திரும்ப வருவது 29 பைசா மட்டும் தான். ஆனால் வட இந்தியாவான உத்திர பிரதேச மாநிலத்தில் 1 ரூபாய் வரிக்கட்டினால் 2.73 பைசா அவர்கள் திரும்ப பெறுகிறார்கள்.

எல்லா பொருட்களுக்கும் விலைவாசி அதிகரித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் 55 ரூபாயாக இருந்த கேபிள் டிவியின் சந்தா இப்போது 250 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு முக்கியக்காரணம் இந்தி, இந்துத்துவா அரங்சாங்கமான பாஜக மட்டுமே. விலையேற்றத்தை சரிசெய்ய வேண்டும் என்றால் ஜிஎஸ்டி வரியை சரிசெய்ய வேண்டுமென்றால் மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி வந்தால் மட்டும் இந்த நிலை மாறும்.
முதலமைச்சரின் நலத்திட்டங்கள் உங்களுக்கு நல்லப்படியாக வந்து கொண்டிருக்கிறது. மகளிர் உரிமை தொகை, காலை உணவு திட்டம், கல்லூரி பெண்களுக்கு ஊக்கத்தொகை, இலவச பேருந்து இவை அனைத்தும் தொடர வேண்டுமென்றால் கை சின்னத்தில் வாக்களியுங்கள்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலைத்திட்டத்தின் சம்பளத்தை 400 ரூபாயாக உயர்த்தி அளிக்கிறோம் என்று உறுதி அளிக்கிறேன். கல்விக்கடன் யாராவது வாங்கியிருந்தால் முழுமையாக ரத்து செய்யப்படும். இனிமேல் இரண்டு வாரங்களுக்கு யாரிடம் இருந்து உங்களுக்கு போன் வந்தால் ஹாலோ என்று கூறாமல் கைசின்னம் என்று தான் கூற வேண்டும்.
நான் கூறிய அனைத்தும் நிறைவேற வேண்டும் என்றால் இந்திய கூட்டணியான கைசின்னத்தில் வாக்களியுங்கள் என்று கூறினார்.
- ரோடு ஷோ நாமக்கல்-சேலம் ரோட்டில் உள்ள எம்.ஜி.எம். தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே தொடங்கியது.
- திறந்த வாகனத்தில் வேட்பாளருடன் சென்று ஆதரவு திரட்டினார்.
நாமக்கல்:
மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி இன்று மதியம் 12 மணி அளவில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வந்தார். இதையடுத்து அங்கிருந்து ஹெலிகாப்டரில் பரமத்தியில் உள்ள பி.ஜி.பி.கல்லூரிக்கு சென்றார். அவருக்கு பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் நாமக்கல்லுக்கு சென்று நாமக்கல் பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் வகையில் "ரோடு ஷோ"வில் பங்கேற்றார். இந்த ரோடு ஷோ நாமக்கல்-சேலம் ரோட்டில் உள்ள எம்.ஜி.எம். தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே தொடங்கியது. திறந்த வாகனத்தில் வேட்பாளருடன் சென்று ஆதரவு திரட்டினார்.
இதில் பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். ரோடு ஷோவின் போது சாலையோரம் திரண்டு இருந்த மக்களை சந்தித்து தாமரை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டார். மத்திய மந்திரி வருகையையொட்டி அவர் செல்லும் வழிநெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் நாமக்கல்லில் டிரோன் பறக்க தடை விதித்து கலெக்டர் உமா உத்தரவிட்டு இருந்தார்.
#WATCH | Defence Minister and BJP leader Rajnath Singh holds roadshow in Namakkal, Tamil Nadu#LokSabhaElections2024 pic.twitter.com/UQM0BPIjvm
— ANI (@ANI) April 8, 2024
- எப்படி இந்தியாவின் தலைநகரை நாக்பூருக்கு மாற்ற முடியும்.
- கமல்ஹாசன் சுய நினைவுடன், ஆரோக்கியமான கருத்துக்களை தான் பேசுகிறாரா?
சரவணம்பட்டி:
ஸ்ரீபெரும்புத்தூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து அம்பத்தூரில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், "பாஜகவின் கற்பனைப்படி நாக்பூர் தலைநகர் ஆக வேண்டும். இந்தியா மத சார்புள்ள, ஒரே மதம் உள்ள நாடாக வேண்டும். இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக வேண்டும். பாடத்திட்டத்திலும், புராணமே சரித்திரமாக மாற வேண்டும். அனைத்து தொழிலும் ஒரு சிறு குழுவுக்கே போய் சேர வேண்டும். இதெல்லாம் நடந்தா இப்ப மட்டும் இல்ல, எப்பொழுதுமே நாம் எல்லோருமே தெருவில் நிற்க வேண்டும். அதை நடக்கவிடக் கூடாது என்று பேசினார்.
இதுகுறித்து கோவை சரவணம்பட்டியில் செய்தியாளர்கள் கேட்டதற்கு பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை கூறியதாவது:-

மெண்டல் ஹாஸ்பிடல் போய் மூளையை பரிசோதனை செய்ய வேண்டும். யார் சொன்னாலும் கூட மூளையை சோதனை செய்ய வேண்டும். உண்மையாலுமே நல்லா இருக்காங்களா? இரண்டு மூளையும் வேலை செய்கிறதா? சுயநினைவுடன் தான் இருக்காங்களா? சரியா சாப்பிடறாங்களா? என்று கமல்ஹாசனுக்கு மருத்துவ ஆலோசனை தரவேண்டும்.
எப்படி இந்தியாவின் தலைநகரை நாக்பூருக்கு மாற்ற முடியும். கமல்ஹாசன் சுய நினைவுடன், ஆரோக்கியமான கருத்துக்களை தான் பேசுகிறாரா? இல்லை தி.மு.க.வுக்கு தன்னுடைய கட்சியை ஒரு ராஜ்ய சபா சீட்டுக்காக விற்கறதுக்காக இப்படி கூவ வேண்டும் என்று கமல்ஹாசன் நினைக்கிறாரா? என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
- பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தமிழகத்திற்கு குறைந்தபட்சம் 4 சர்வதேச விளையாட்டு மைதானம் தேவை.
சரவணம்பட்டி:
கோவை சரவணம்பட்டியில் பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* கைப்பற்றப்பட்ட பணத்திற்கும், தனக்கும் தொடர்பு இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
* பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* தமிழகத்திற்கு குறைந்தபட்சம் 4 சர்வதேச விளையாட்டு மைதானம் தேவை.
* விளையாட்டு மைதானம் தேவை தான். ஆனால் முதலில் சாலையை சீரமைக்க வேண்டும்.
* கவர்ச்சிக்கரமான திட்டங்களை கொடுத்தால் மக்கள் ஓட்டு போட்டு விடுவார்கள் என்று முதலமைச்சரே களத்தில் இறங்கி இருக்கிறார். அதுவும் பாராளுமன்ற தேர்தலின்போது. அவர்கள் 511 தேர்தல் வாக்குறுதி கொடுத்து வெறும் 20 வாக்குறுதி கூட நிறைவேற்றவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே, பா.ஜ.க.வில் மாநில தலைவர் பதவிக்கு ஆள் இல்லை. ரெடிமேட் அரசியல்வாதி என்று ஆர்.பி. உதயகுமார் சொல்கிறார் என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு அண்ணாமலை, ஜூன் 4-ந்தேதி வரை பொறுத்து இருக்க சொல்லுங்க. அந்த கட்சி எங்க இருக்கு, அவர் எங்க இருக்காரு, எத்தனை இடத்துல எத்தனை ஓட்டு வாங்குறாங்க. என்ன இன்னும் 40 நாட்கள் தான் இருக்கு. ஒரு விளக்கு அணையும்போது பிரகாசமாக எரியும். அதுபோலதான் இன்றைய தலைவர்களின் கருத்துக்களையும் பார்க்கிறேன் என்றார்.
- பல்வேறு வியூகங்களை வகுத்து பாரதிய ஜனதா கட்சி செயல்பட்டு வருகிறது.
- தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே தமிழகம் மற்றும் கேரளாவுக்கு வந்து தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டார்.
திருவனந்தபுரம்:
மத்தியில் பாரதிய ஜனதா அரசின் ஐந்து ஆண்டுகால ஆட்சிக்காலம் வருகிற மே மாதத்துடன் முடிவடையும் நிலையில், 18-வது மக்களவைக்கான பொதுத்தேர்தல் இந்த மாதம் தொடங்குகிறது. மக்களவை தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது.
பல்வேறு மாநிலங்களில் கால் பதித்துள்ள பாரதிய ஜனதா கட்சி இந்த மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் கேரளாவில் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றி, அந்த மாநிலங்களில் கால் பதிக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி பல்வேறு வியூகங்களை வகுத்து பாரதிய ஜனதா கட்சி செயல்பட்டு வருகிறது.
இந்த விஷயத்தில் பிரதமர் மோடியும் தனிக்கவனம் செலுத்தி வருகிறார். இதனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே கேரளா மற்றும் தமிழகத்திற்கு பலமுறை சுற்றுப்பயணம் வந்தார். மேலும் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே தமிழகம் மற்றும் கேரளாவுக்கு வந்து தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டார்.
தற்போது ஒவ்வொரு மாநிலத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். அதுமட்டுமின்றி பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் தொலைபேசியில் பேசி அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் அவர் கேரள மாநிலம் ஆலத்தூர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் பேராசிரியை சரசுவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அப்போது பேராசிரியையிடம் உங்களது எதிர்கால திட்டம் என்ன? என்று கேட்டார். மேலும் கேரளாவில் நிலவும் பிரச்சனை குறித்து பேராசிரியை கூறிய விஷயத்தை கவனமாக கேட்டு பதில் அளித்தார்.

ஒரு வேட்பாளராக மக்கள் பிரச்சனையை நீங்கள் எடுத்துக் கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்து பேராசிரியையை ஊக்கப்படுத்தினார். மேலும் பிரதமர் பேச தொடங்கியபோது, ''சரசு ஜி... நமஸ்காரம்... சுகம் தானே...'' என்று மலையாளத்தில் கேட்டார். அதற்கு, ''சுகம் தான்...'' என்று பேராசிரியை மகிழ்ச்சி பொங்க அவரிடம் தெரிவித்தார்.
மேலும் பிரதமர் மோடி பேச தொடங்கியதில் இருந்து, பேசி முடிக்கும் வரை பேராசிரியையிடம், ''பேராசிரியை சரசு ஜி... என்று அடிக்கடி குறிப்பிட்டு பணிவுடன் பேசினார். பிரதமர் மோடி, பேராசிரியை சரசுவிடம் பேசிய உரையாடல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அவர்களுக்கிடையே நடந்த உரையாடல் விவரம் வருமாறு:-
பிரதமர் மோடி: பேராசிரியை சரஸ்வதி ஜி... நமஸ்காரம்... சுகம் தானே...
பேராசிரியை சரஸ்வதி: சுகம் தான்...
பிரதமர்: உங்களுடைய தேர்தல் வேலை எப்படி சென்று கொண்டிருக்கிறது?
பேராசிரியை: நன்றாக செல்கிறது. பிரதமர் மோடியின் அனைவரையும் உள்ளடக்கிய அனைவருக்குமான வளர்ச்சிக்காக நான் உழைக்கிறேன் என்று ஆலத்தூர் மக்களிடம் நான் கூறினேன். மேலும் என்னிடம் மோடி ஜி-யின் உத்திரவாதம் உள்ளது. எனவே இந்த ஆலத்தூர் தொகுதிக்காக என்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்வேன் என்று அவர்களிடம் கூறினேன். ஐயா உங்களிடம் ஒரு கோரிக்கை வைக்கலாமா...?
பேராசிரியை: கேரளாவில் ஒரு பிரச்சனை உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர்களால் ஆளப்படும் அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் தான் அந்த பிரச்சனை. ஏழை மக்கள் வங்கியில் டெபாசிட் செய்த பணத்தை எல்லாம் கொள்ளையடித்து விடுகிறார்கள். மக்கள் தங்கள் பணத்தை திரும்ப பெறுவதில்லை. அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் சிலர் இறந்துவிட்டனர். தயவு செய்து அதற்கு ஏதாவது செய்ய முடியுமா...?
பிரதமர்: பேராசிரியை சரசு ஜி...
ஒரு வேட்பாளராக மக்கள் பிரச்சனையையும், சாமானியரின் பிரச்சினையையும் நீங்கள் எடுத்துக் கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆம்... நான் அதைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அதனைப் பற்றிய விவரம் என்னிடம் உள்ளது. எங்கள் அரசு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும். ஏழைகளுக்கு நீதி கிடைக்க உறுதி செய்வோம்.
மேலும் ஒரு விஷயம் சரசு ஜி... நான் சட்ட ஆலோசனை பெறுகிறேன் என்பதை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். எந்த சொத்தை அமலாக்க துறையுடன் இணைத்தாலும், அந்த பணம் சாமானியர்களின் பணத்தில் சம்பந்தப்பட்டிருந்தால், ஒவ்வொரு பைசாவும் சம்பந்தப்பட்ட நபருக்கு திரும்ப வேண்டும் என்று பார்ப்பேன். எனவே என் சார்பாக அமலாக்க துறையில் எந்த சொத்தை இணைத்தாலும், அந்த பணம் வங்கியில் முதலீடு செய்தவர்களுக்கு திருப்பி தரப்படும் என்று நீங்கள் அவர்களுக்கு உறுதி அளிக்கலாம். பேராசிரியை சரசு ஜி... கல்லூரியில் உங்கள் முயற்சி மற்றும் போராட்டம் பற்றி என்னிடம் கூறுங்கள்.
பேராசிரியை: கல்லூரியில் எனது கடமையை செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தேன். எனது கல்லூரியில் இடதுசாரி ஆசிரியர்கள் உள்ளனர். எஸ்.எப்.ஐ.யும் உள்ளது. அவர்கள் விருப்பப்படி கல்லூரி முதல்வர் செயல்பட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் அப்படி செய்ய நான் தயாராக இல்லை.
நான் அங்கு 25 ஆண்டுகள் ஆசிரியராக இருந்தேன். மேலும் ஒரு வருடம் முதல்வராக இருந்தேன். அதில் என்னால் முடிந்ததை செய்தேன். நான் அந்த இடதுசாரி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் எந்த முக்கியத்துவமும் கொடுத்ததில்லை.
பிரதமர்: பேராசிரியை சரசு ஜி... நீங்கள் அனைவருக்கும் ஒரு உத்வேகம். உங்கள் நெறிமுறைகள் மற்றும் மதிப்புகளுக்காக நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டு இருக்கிறீர்கள். உங்களை நினைத்து கேரள மாநிலமே பெருமை கொள்கிறது.
பிரதமர்: ஆலத்தூர் மக்கள் உங்களை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப் படுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன். எனது வாழ்த்துக்கள் உங்களுக்கு உள்ளது. பேசியதற்கு நன்றி...
இவ்வாராக பிரதமர் மோடி மற்றும் பேராசிரியை சரசுக்கு இடையே உரையாடல் நடந்துள்ளது. பிரதமர் மோடி போனில் தொடர்புகொண்டு கனிவுடன் பேசியது பேராசிரியைக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. அவர் அது பற்றி தனது உறவினர்கள் மற்றும் கட்சியினரிடம் தெரிவித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் பிரதமர் மோடி என்னிடம் பேசியது தனக்கு உற்சாகத்தை தந்துள்ளதாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
பேராசிரியை சரசு, பல்லக்காட்டில் உள்ள அரசு விக்டோரியா கல்லூரியில் முதல்வராக பணியாற்றியபோது, எஸ்.எப்.ஐ. நிர்வாகிகளிடம் இருந்து பல மிரட்டல்களை பெற்றார். தனக்கு எதிராக பல போராட்டங்களை சந்தித்தபடி தனது கல்லூரி பணியை தொடர்ந்தபடி இருந்தார்.
இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் சரசு இணைந்தார். தற்போது ஆலத்தூர் மக்களவை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.
அவர் அந்த தொகுதியில் தற்போது எம்.பி.யாக உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரம்யா ஹரிதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவரும், கேரள மாநில தேவசம்போர்டு மந்திரியுமான ராதா கிருஷ்ணன் ஆகியோரை எதிர்த்து போட்டியிடுகிறார்.
- சூரக்குடி அரசு மருத்துவமனை செல்லும் சாலை வழியாக பரப்புரை நடைபெறும் திடலுக்கு வருமாறு வேண்டுகிறேன்.
- மாவட்ட பாசறை செயலாளர் பிரபு உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
காரைக்குடி:
தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிடுகிறது. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரசாரம் மேற் கொண்டு ஆதரவு திரட்டி வருகிறார்.
அந்த வகையில், இன்று மாலை 4 மணியளவில் ராமநாதபுரம் அரண்மனை முன்பு நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பா.ஜெயபெருமாளை ஆதரித்து பிரசாரம் மேற் கொள்கிறார்.
இதையடுத்து மாலை 7 மணியளவில் காரைக்குடி ஹவுசிங் போர்டு வி.ஏ.ஓ. காலனி திடலில் சிவகங்கை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அ.சேவியர்தாஸை ஆதரித்து தேர்தல் பரப்புரையாற்றுகிறார்.
இதுகுறித்து மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. கூறுகையில், பாராளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக காரைக்குடிக்கு கழக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ராமநாதபுரம் பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு மாலை 7 மணியளவில் வருகை தருகிறார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் கழக அமைப்புச்செயலாளரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளருமான டாக்டர்.சி.விஜயபாஸ்கர், அம்மா பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகுமார்,

சிவகங்கை பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள், கழக அமைப்புச் செயலாளர் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா, முன்னாள் அமைச்சர் ஜி.பாஸ்கரன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர், முன்னாள் அமைச்சர், எம்.ராதாகிருஷ்ணன், சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம்.
திடலில் பிரம்மாண்டமாக மேடை அமைத்துள்ளோம். இதில் சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சிவகங்கை, மானாமதுரை, காரைக்குடி, திருப்பத்தூர், ஆலங்குடி. திருமயம் ஆகிய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கழக மாநில நிர்வாகிகள், முன்னாள் பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், வார்டு மற்றும் கிளை கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டணி கட்சிகளான தே.மு.தி.க, புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ., மருது சேனை, மனிதநேய ஜனநாயக கட்சி, ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம், லெனின் கம்யூனிஸ்ட் இன்னும் ஏனைய கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகளை செய்துள்ளோம்.
சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூர், ஆலங்குடி, திருமயம் ஆகிய சட்டமன்ற தொகுதியிலிருந்தும் தேவகோட்டை பகுதியிலிருந்தும் வருபவர்கள் காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளி வழியாக வந்து கழனி வாசல், சூரக்குடி அரசு மருத்துவமனை செல்லும் சாலை வழியாக பரப்புரை நடைபெறும் திடலுக்கு வருமாறு வேண்டுகிறேன்.
மேலும் வாகனங்களை அதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் நிறுத்துமாறும், காவல்துறைக்கு முழு ஒத்துழுழைப்பு தருமாறும், பொதுமக்கள் இக்கூட்டத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறேன் என்றார். அப்போது வேட்பாளர் சேவியர்தாஸ், சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன், காரைக்குடி நகர செயலாளர் மெய்யப்பன், மாவட்ட பாசறை செயலாளர் பிரபு உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- 3 மண்டலங்களிலும் துணை கமிஷனராக செயல்பட்டு வருகிற அதிகாரிகள் இந்த பொறுப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
- தபால் ஓட்டுகள் பற்றிய விவரங்களை சேகரித்து வழங்கும் பணியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை:
சென்னை மாவட்டத்தில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக ஏற்கனவே 3 பேர் நியமிக்கப்பட்டனர். 3 மண்டலங்களிலும் துணை கமிஷனராக செயல்பட்டு வருகிற அதிகாரிகள் இந்த பொறுப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் 16 சட்டமன்ற தொகுதிகள் அடிப்படையில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
16 உதவி தேர்தல் அதிகாரிகள் பெயர் விவரம் மற்றும் தொடர்பு கொள்ளும் எண்களுடன் தொகுதி வாரியாக விவரம் வருமாறு:-
ஆர்.கே.நகர் தொகுதி
எஸ்.வாசுகி, இணை இயக்குனர் ஆதி திராவிட நலத்துறை. செல்-73388 01243
அனுஷ்யாதேவி, மாவட்ட வருவாய் அதிகாரி, சென்னை. செல்-94450 00901.
வி.முத்துசாமி, இணை கமிஷனர், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, செல்-90951 54565
மகாலட்சுமி, பொது மேலாளர், தமிழ்நாடு சர்க்கரை கழகம், செல்-80155 02885.
எஸ்.தனலிங்கம், பொது மேலாளர், டான்சிட்கோ, செல்-94450 06554.
எம்.கலைச்செல்வி, பொது மேலாளர், மாநில தொழில்கள் முன்னேற்ற கழகம், செல்-96778 51335.
குழந்தைசாமி, செட்டில் மெண்ட் அதிகாரி, சர்வே மற்றும் செட்டில்மெண்ட், செல்-99449 14120.
பி.மணிவண்ணன், கூடுதல் இயக்குநர், ஊரக சுகா தார மருத்துவ சேவை, செல்-73581 44619.
வி.சங்கர நாராயணன், பொது மேலாளர், தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன், செல்-94865 91402.
என்.ராகவேந்திரன், பொது மேலாளர், டாம்கால், செல்-90477 99947.
செந்தில்குமார், பொது மேலாளர், அரசு கேபிள் நிறுவனம், செல்-82704 89470.
ஆர்.பன்னீர்செல்வம், சீனியர் மண்டல மேலாளர், டாஸ்மாக், செல்-96293 28933.
துர்காதேவி, செயலாளர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், செல்-94450 74956.
சரவணமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர், சென்னை மாநகராட்சி, செல்-94451 90740.
விஜயலட்சுமி, பொது மேலாளர், தமிழ்நாடு பெண்கள் வளர்ச்சி கழகம். செல்-70100 34495.
கவிதா, பொது மேலாளர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், செல்-99629 55626.
85 வயதுக்கு மேற்பட்ட வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், தபால் ஓட்டுகள் பற்றிய விவரங்களை சேகரித்து வழங்கும் பணியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.






