என் மலர்
உலகம்
- இந்தோனேசியாவின் ஜாவா தீவில் செமரு எரிமலை அமைந்துள்ளது.
- திடீரென எரிமலை வெடித்துச் சிதறியதால் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு சாம்பல் வெளியேறியது.
ஜகார்த்தா:
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் செமரு எரிமலை அமைந்துள்ளது. 3 ஆயிரத்து 500 அடி உயரமுள்ள இந்த மலை சாகச வீரர்களுக்கு ஏற்ற இடமாகவும் திகழ்கிறது. எனவே சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்நிலையில், சுற்றுலா பயணிகள் உள்பட 170-க்கும் அதிகமானோர் இந்த மலையில் ஏறிக்கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென அந்த எரிமலை வெடித்துச் சிதறியது. இதனால் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு சாம்பல் வெளியேறியதால் அவர்கள் வெளியேற முடியாமல் அங்கு சிக்கிச் கொண்டனர்.
தகவலறிந்து அந்த இடத்துக்கு விரைந்த மீட்புப் படையினர் அவர்களைப் பத்திரமாக மீட்டனர்.
- ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவில் நடைபெறுகிறது.
- ஜி20 மாநாட்டை அமெரிக்கா புறக்கணிக்கும் என அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
வாஷிங்டன்:
ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் ஜி20 மாநாட்டை அமெரிக்கா புறக்கணிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை நிற விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு துன்புறுத்தப்படுவதாக டிரம்ப் குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அதிபர் டிரம்பின் இந்தக் குற்றச்சாட்டை தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இந்நிலையில், ஜி20 உச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் அமெரிக்கா பங்கேற்கும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
ஜி20 மாநாடு அடுத்து ஆண்டு அமெரிக்காவில் நடக்க உள்ளதால் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்காக இந்த மாநாட்டில் பங்கேற்கும் என தெரிவித்துள்ளது
- கோப்புகளை வெளியிடுவதை முதலில் எதிர்த்த டிரம்ப், பின்னர் தனது சொந்தக் கட்சியின் அரசியல் அழுத்தத்தால் மசோதாவில் கையெழுத்திட்டார்.
- இந்த கோப்புகள் வெளியானால், பலரின் இமேஜ் அடியோடு சரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறுமிகளை கடத்தி பெரும் புள்ளிகளுக்கு சப்ளை செய்து வந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கின் கோப்புகளை வெளியிடுவதற்கான மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்
பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கின் கோப்புகளை வெளியிடுவதற்கான மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். கோப்புகளை வெளியிடுவதை முதலில் எதிர்த்த டிரம்ப், பின்னர் தனது சொந்தக் கட்சியின் அரசியல் அழுத்தத்தால் மசோதாவில் கையெழுத்திட்டார்.
இதன் விளைவாக, எப்ஸ்டீன் தொடர்பான அனைத்து கோப்புகள் மற்றும் கடிதப் போக்குவரத்து, 2019 ஆம் ஆண்டு சிறையில் அவர் தற்கொலை செய்தது தொடர்பான விசாரணை தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட உள்ளது.
ஆரம்ப காலங்களில் ஜெஃப்ரி எப்ஸ்டீன் உடன் டிரம்ப் பார்ட்டிகளில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணயத்தில் உலா வருகின்றன. டிரம்ப் பெயரும் எப்ஸ்டீன் கோப்புகளில் இடம்பெற்றுள்ளதாக விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில் "எங்கள் அற்புதமான வெற்றியிலிருந்து மக்களைத் திசைதிருப்ப எப்ஸ்டீன் வழக்கை ஜனநாயகக் கட்சியினர் பயன்படுத்தியுள்ளனர். இது குடியரசுக் கட்சியை விட அவர்களை அதிகம் பாதிக்கும்" என்று மசோதாவில் கையெழுத்திட்டது குறித்து டிரம்ப் கூறினார். இருப்பினும் டிரம்ப் அரசு கோப்புகளை ஏற்கனவே தணிக்கை செய்து வெளியிடுகிறது என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
அதே நேரம் இந்த கோப்புகளில் டிரம்ப் பெயர் இடம்பெற்றுள்ளதாக உலக பணக்காரர் எலான் மஸ்க் ஏற்கனவே எக்ஸ் பக்கத்தில் தெரிவித்து பின்னர் அந்த பதிவை நீக்கியதும் குறிப்பிடத்தக்கது.

யார் இந்த எப்ஸ்டீன்?
ஜெஃப்ரி எப்ஸ்டீன், அமெரிக்காவின் மிகவும் செல்வாக்கு மிக்க ஒரு நிதியாளர். பெரும் நிறுவனங்களுக்கு நிதி திரட்டித் தரும் பணியில் ஈடுபட்டு, பல பணக்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வளர்த்துக் கொண்டார். ஆனால், அவரது ஆடம்பர வாழ்க்கை முறைக்கும், சமூக அந்தஸ்துக்கும் பின்னால், கிரிமினல் உலகமே இருந்தது.
2000-களின் முற்பகுதியிலிருந்து, எப்ஸ்டீன் மீது இளம் சிறுமிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது, கடத்தியது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அவருக்குச் சொந்தமான 'லிட்டில் செயிண்ட் ஜேம்ஸ்' என்ற கரீபியன் தீவில், பல முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் ஆகியோரை அழைத்து வந்து, அங்கு பாலியல் ரீதியான வன்முறைகளில் ஈடுபட்டதாக வழக்குகள் பதிவாகின.
2008-ல் எப்ஸ்டீனுக்கு மிகக் குறுகிய காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், 2019-ல் மேலும் கடுமையான பாலியல் கடத்தல் குற்றச்சாட்டுகளுடன் மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார்.
ஆனால், வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே, அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியூயார்க் சிறையில் மர்மமான முறையில் இறந்துபோனார். அவரது மரணம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது, அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொல்லப்பட்டாரா என்பது இன்று வரை ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது.
'எப்ஸ்டீன் கோப்புகள்'
ஜெஃப்ரி எப்ஸ்டீனின் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்கள், அவருடைய தொலைபேசி அழைப்பு பதிவுகள், விமானப் பயணப் பதிவுகள், நீதிமன்ற ஆவணங்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள், அவருடன் தொடர்பு கொண்ட பிரபலங்களின் பட்டியல் ஆகியவை 'எப்ஸ்டீன் கோப்புகள்' என அழைக்கப்படுகின்றன.
இந்த கோப்புகளில் பல உயர்மட்ட அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பிரபல கலைஞர்கள் மற்றும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக நீண்டகாலமாகவே சந்தேகங்கள் நிலவி வருகின்றன. இந்த கோப்புகள் வெளியானால், பலரின் இமேஜ் அடியோடு சரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- நேபாளத்துக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
- சிமாராவில் பிற்பகல் 1:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நேபாளத்தில் கடந்த செப்டம்பர் மாதம் சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாட்டை எதிர்த்தும் சர்மா ஒலி அரசின் ஊழல் மற்றும் நாட்டின் பொருளாதார பிரச்னைகளை எதிர்த்தும் ஜெனரல் z இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் வன்முறையாக மாறி, பாராளுமன்றம், நீதிமன்றம், அலுவலகங்களுக்கு தீ வைக்கப்பட்டது. வன்முறையில் 76 பேர் கொல்லப்பட்டனர். இதைதொடர்ந்து சர்மா ஒலி மற்றும் அமைச்சர்கள் பதவி விலகினர்.
தொடர்ந்து ஜெனரல் z விருப்பப்படி அந்நாட்டின் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுசீலா கார்க்கி இடைக்கால தலைவராக பதவி ஏற்றார். நேபாளத்துக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த சூழலில் நேபாளத்தின் பாரா மாவட்டத்தின் சிம்பாரா பகுதியில் ஜெனரல் z மற்றும் சர்மா ஒலி ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
அரசாங்க எதிர்ப்பு பேரணியில் உரையாற்ற சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் வருவதை எதிர்த்து ஜெனரல் z எதிர்த்து வீதியில் இறங்கி போராடிய நிலையில் நேற்று, சிமாரா விமான நிலையம் அருகே அவர்களுக்கும் சர்மா ஒழி ஆதரவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மோதலை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
நிலைமை மோசமடைவதை தடுக்க சிமாராவில் இன்று பிற்பகல் 1:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
- சீனா செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி போலி படங்களை உருவாக்கி போலி சமூக ஊடகக் கணக்குகள் மூலம் பரப்பி வருகிறது.
- கடந்த ஆறு மாதங்களில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதட்டங்களை சீனா பயன்படுத்திக் கொள்ள முயன்று வருகிறது.
கடந்த ஏப்ரல் 22 அன்று காஷ்மீரின் பஹ்லகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் 26 பேர் கொல்லப்பட்டனர்.
பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதாக கூறி இந்திய ராணுவம் மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் மூலம் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே நடந்த மோதல் மே 9 அன்று அமைதி ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, சீனா செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி இந்தியாவை குறிவைத்து தவறான தகவல்களைப் பரப்பி வருவதாக அமெரிக்க காங்கிரஸ் நிபுணர் குழு தனது ஆண்டறிகையில் தெரிவித்துள்ளது.
அறிக்கைப்படி, சீனா செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி போலி படங்களை உருவாக்கி போலி சமூக ஊடகக் கணக்குகள் மூலம் தங்கள் ஏவுகணைகள் இந்தியாவிடம் இருக்கும் பிரான்சின் ரஃபேல் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகக் கூறி வருகிறது.
இதற்குப் பின்னால் ஒரு உத்தி இருப்பதாகவும், இந்தப் பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம் உலகளவில் ரஃபேல் போர் விமானங்கள் மீதான நம்பிக்கையை சேதப்படுத்துவதாகவும் அறிக்கை நம்புகிறது.
அதே நேரத்தில், சீனா தனது சொந்த J-35 போர் விமானங்களுக்கான தேவையை அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆறு மாதங்களில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதட்டங்களை சீனா பயன்படுத்திக் கொள்ள முயன்று வருவதாக அறிக்கை தெரிவித்துள்ளது. நேரடி இராணுவ மோதல் இல்லாமல் புவிசார் அரசியல் விவகாரங்களில் செல்வாக்கு செலுத்த சீனா உத்திகளை உருவாக்கி வருவதாகவும் அறிக்கை தெரிவித்துள்ளது.
- ஏவுகணைகளை ஏவும் அமைப்புகளை புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
- 216 பீரங்கிக் குண்டுகள் இந்திய ராணுவத்துக்கு விற்கப்பட உள்ளது.
வரி விதிப்பு விவகாரத்தில் இந்தியா- அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது. தற்போது இரு நாடுகள் இடையே சுமூகமான சூழல் ஏற்பட்டு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தில் உள்ளது.
இந்தநிலையில் இந்தியாவுக்கு 93 மில்லியன் அமெரிக்க டாலர்கள்(இந்திய மதிப்பில் ரூ.823 கோடி) மதிப்புள்ள ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்து உள்ளது.
ராணுவ வீரர்கள் தோளில் வைத்து ஏவும் வகையிலான 100 எப்.ஜி.எம் 148 ஜாவெலின் ஏவுகணைகள், 25 இலகு ரக ஏவுகணை ஏவும் அமைப்புகள், 216 பீரங்கிக் குண்டுகள் இந்திய ராணுவத்துக்கு விற்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்காவின் பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனம் கூறியதாவது:-
ராணுவ உபகரணங்களுடன் பாதுகாப்பு சோதனைகள், ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான பயிற்சி, ஏவுகணைகளை ஏவும் அமைப்புகளை புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த ஆயுத விற்பனை இந்தோ- பசிபிக் மற்றும் தெற்காசிய பிராந்தியங்க ளில் அரசியல் ஸ்திரத் தன்மை, அமைதி மற்றும் பொருளாதார முன்னேற்றத் திற்கு ஒரு முக்கிய சக்தியாகத் தொடர்ந்து இருக்கும் ஒரு முக்கிய பாதுகாப்பு கூட்டாளியான இந்தியா பாதுகாப்பை மேம்படுத்தும்.
இந்த விற்பனை இந்தியாவின் தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல் களைச் சமாளிக்கும் திறனை மேம்படுத்தும். அதன் உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்தும் மற்றும் பிராந்திய அச்சுறுத்தல் களைத் தடுக்கும். இந்த ஆயுதங்களை இந்தியா தனது ஆயுதப் படைகளில் இணைப்பதில் எந்த சிரமமும் இருக்காது என்று தெரிவித்துள்ளது.
எப்.ஜி.எம். 148 ஜாவெலின் ஏவுகணைகள், டாங்கி போன்ற இலக்குகளை நீண்ட தூரத்தில் இருந்து அதிக துல்லியத்துடன் தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
- போர் நிறுத்தம் அளவுக்கு வந்ததற்கு பின் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 280 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
- ஐநா பாதுகாப்பு கவுன்சில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் இஸ்ரேல் காசாவை தாக்கியுள்ளது
காசா மீது நேற்று இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 28 பேர் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மத்யஸ்தத்தில் கடந்த 5 வாரங்களுக்கு முன் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தபோதும் இஸ்ரேல் காசா மீது தாக்குதலை தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் காசா நகர் மற்றும் கான் யூனிஸ் பகுதிகளில் இஸ்ரேலிய விமானப்படை குறிவைத்து வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
ஹமாஸ் பயங்கரவாதிகள் தங்கள் நாட்டைத் தாக்கத் தயாராகி வருவதாக வந்த தகவலின் அடிப்படையில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. போர் நிறுத்தம் அளவுக்கு வந்ததற்கு பின் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 280 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
டிரம்ப்பின் அமைதி திட்டம் மூலம் சர்வதேச படைகளை காசாவுக்கு அனுப்புவது குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் இஸ்ரேல் காசாவை தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஒவியத்திற்கான ஏலம் 20 நிமிடங்களில் முடிந்தது.
- ஓவியத்தில் குஸ்டாவ் கிளிம்ட் தனது முக்கிய வாடிக்கையாளரின் மகளை சித்திரித்திருந்தார்.
ஆஸ்திரியாவை சேர்ந்த பிரபல ஓவிய கலைஞர் குஸ்டாவ் கிளிம்ட் வரைந்த ஓவியத்தை அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த சோதேபிஸ் ஏல நிறுவனம் ஏலம் விட்டது.
இதை ஏலம் எடுக்க 6 பேர் போட்டிபோட்டனர். இதில் அந்த ஓவியம் 236.4 அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி) ஏலம் போனது.
ஏலம் எடுத்தவரின் விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த ஏலம் 20 நிமிடங்களில் முடிந்தது. ஏல வரலாற்றில் 2-வது அதிகபட்ச விலைக்கு விற்பனையான ஓவியம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஓவியம் 1914-1916ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வரைந்ததாகும். இந்த ஓவியம் லிசபெத் லெடரர் என்ற பெண் வெள்ளை அங்கி அணிந்து நீல நிற திரைச்சீலையின் முன் நிற்பதை காட்டும் ஓவியமாகும்.
அந்த ஓவியத்தில் குஸ்டாவ் கிளிம்ட் தனது முக்கிய வாடிக்கையாளரின் மகளை சித்திரித்திருந்தார்.
இந்த ஓவியம் 2-ம் உலக போரின்போது நாஜி படைகளால் கொள்ளையடிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டது. பின்னர் அந்த ஓவியம் 1948-ம் ஆண்டு மீட்கப்பட்டது.

- இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதங்களுடன் போருக்குத் தயாராக இருந்தன.
- அமெரிக்காவில் இருந்து 93 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை இறக்குமதி செய்ய இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.
கடந்த ஏப்ரல் 22 அன்று காஷ்மீரின் பஹ்லகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் 26 பேர் கொல்லப்பட்டனர்.
பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதாக கூறி இந்திய ராணுவம் மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் மூலம் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே நடந்த மோதல் மே 9 அன்று அமைதி ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தத்தை தானே ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.
இந்நிலையில் 60வது முறையாக டிரம்ப், வரி விதிப்பேன் என மிரட்டி இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கலந்து கொண்ட அமெரிக்க-சவுதி முதலீட்டு மாநாட்டில் பேசிய டிரம்ப், "மோதல்களை தீர்ப்பதில் நான் ஒரு நிபுணர். இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதங்களுடன் போருக்குத் தயாராக இருந்தன.
நீங்கள் போருக்குச் செல்லலாம், ஆனால் இரு நாடுகளுக்கும் 350 சதவீத வரிகளை விதிப்பேன் என்று நான் சொன்னேன். உங்களுடன் அமெரிக்கா இனி எந்த வர்த்தகமும் செய்யாது என சொன்னேன்.
நீங்கள் ஒருவருக்கு ஒருவர் அணு ஆயுதத்தால் தாக்கி மில்லியன் கணக்கான மக்களை கொன்று, அந்த அணு ஆயுத தூசு லாஸ் ஏஞ்சல்ஸ் மேல் படிய நான் அனுமதிக்கப்போவதில்லை என்று சொன்னேன்.
350 சதவீத வரி விதிக்க எல்லாம் தயாராக இருந்தது. எந்த அதிபரும் போர்களை நிறுத்த வரிகளை பயன்படுத்தியதில்லை. ஆனால் நான் நிறுத்திய 8 போர்களில் 5 போர்களை இதன்மூலமே நிறுத்தினேன்" என்று கூறினார்.
போரை நிறுத்தியதாக டிரம்ப் கூறிய கருத்தை பாகிஸ்தான் ஆமோதித்த நிலையில் இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது. இதற்கிடையே அமெரிக்காவில் இருந்து 93 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை இறக்குமதி செய்ய இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானி அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கடுமையாக விமர்சித்து வருகிறார்
- அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் மம்தானியை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மேயர் என்ற பெருமையை இதன்மூலம் பெற்றார்.
நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானி அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கொள்கைகளையும், டிரம்பையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதே போல் மம்தானியை டிரம்ப்பும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
குறிப்பாக மம்தானியை கம்யூனிஸ்டு என்று விமர்சித்து வந்த டிரம்ப் அவர் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றால் நியூயார்க் நகரம் மோசமாகிவிடும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், நியூயார்க் மேயர் மம்தானி நாளை வெள்ளை மாளிகையில் என்னை சந்திக்க உள்ளார் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "நியூயார்க் நகர கம்யூனிஸ்ட் மேயர் ஜோஹ்ரான் மம்தானி என்னை சந்திக்க நேரம் கேட்டுள்ளார். இந்த சந்திப்பு நாளை (நவம்பர் 21) ஓவல் அலுவலகத்தில் நடைபெறும் என்று நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம்" என்று பதிவிட்டுள்ளார்.
- விமானப்படை விமானிகள் யந்தர் என்ற ரஷிய கப்பலைக் கண்காணித்து வருகிறாா்கள்.
- ரஷியாவுக்கும் புதினுக்கும் கூறுவது என்னவென்றால் நாங்கள் உங்களைப் பார்க்கிறோம்.
இங்கிலாந்தின் கடல் எல்லைக்குள் ரஷிய உளவுக்கப்பல் அத்துமீறி நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இங்கிலாந்தின் பாதுகாப்பு அமைச்சர் ஜான் ஹீலி கூறியதாவது:-
கடந்த சில வாரங்களாக இங்கிலாந்தின் கடல் எல்லைக்குள் யந்தர் என்ற ரஷிய கப்பல் நுழைந்தது. அந்த கப்பலை எங்களது விமானப்படை விமானிகள் யந்தர் என்ற ரஷிய கப்பலைக் கண்காணித்து வருகிறாா்கள்.
ஏனென்றால் அது நாட்டின் கடலுக்கடியில் உள்கட்டமைப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்தக் கப்பலின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்க கடற்படை போர்க்கப்பலையும் போர் விமானங்களையும் நாங்கள் நிறுத்தினோம்.
அப்போது எங்கள் விமானிகள் மீது ரஷிய கப்பல் லேசர்களை செலுத்தியது. ரஷியாவின் இந்த நடவடிக்கை மிகவும் ஆபத்தானது. நாங்கள் ரஷியாவுக்கும் புதினுக்கும் கூறுவது என்னவென்றால் நாங்கள் உங்களைப் பார்க்கிறோம்.
நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். எதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சீனாவின் மிகப்பெரிய உணவு ஆதாரமாக ஜப்பான் நாட்டின் கடல் உணவுகள் உள்ளன.
- இருநாடுகளிடையே ஆண்டுக்கு பல ஆயிரம் கோடிக்கு கடல் உணவுகள் ஜப்பானில் இருந்து சீனாவில் இறக்குமதியாகிறது.
பீஜிங்:
அண்டை நாடான தைவானை தங்களுடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதியென கூறி போர் விமானங்களை பறக்கவிட்டும், போர் கப்பல்களை களம் இறக்கி சீனா அச்சுறுத்தி வருகிறது.
ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி, தைவானை சீண்டினால் சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்தார். இதனால் வெகுண்டெழுந்த சீனா, ஜப்பானின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்தது. மேலும் அந்த நாட்டிற்கு தங்களுடைய மக்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் மேலும் அறிவுறுத்தியது.
சீனாவின் மிகப்பெரிய உணவு ஆதாரமாக ஜப்பான் நாட்டின் கடல் உணவுகள் உள்ளன. மீன்கள், இறால்கள், கடல் நண்டுகள், ஸ்குவிட்கள், ஆக்டோபஸ்கள் போன்றவை அங்கிருந்து அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. இருநாடுகளிடையே ஆண்டுக்கு பல ஆயிரம் கோடிக்கு கடல் உணவுகள் ஜப்பானில் இருந்து சீனாவில் இறக்குமதியாகிறது.
இந்தநிலையில் ஜப்பான் கடல் உணவுகளுக்கு சீன அரசாங்கம் நிரந்தர தடை விதித்தது. மேலும் அந்த நாட்டின் சினிமாவுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.






