என் மலர்
தலைப்புச்செய்திகள்
- உலகளவில் தெலுங்கு, கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிகள் ஒளிர்வதை அனைவரும் அறிவீர்கள்.
- ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் சர்வதேச மொழிகள் உட்பட 10 மொழிகளை ஊக்குவிக்க உள்ளேன்.
டெல்லி:
தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும் என்றும் மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை ஏற்க இயலாது என்றும், மத்திய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கை, இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சி என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மும்மொழிக் கொள்கை விவகாரம் குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில்,
"மொழி என்பது தகவல் தொடர்புக்கு மட்டுமே... உலகளவில் தெலுங்கு, கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிகள் ஒளிர்வதை அனைவரும் அறிவீர்கள்...
அறிவு வேறு, மொழி வேறு. ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் சர்வதேச மொழிகள் உட்பட 10 மொழிகளை ஊக்குவிக்க உள்ளேன். மாணவர்கள் அங்கு சென்று படிக்கலாம், வேலை செய்யலாம். அவர்களுக்கு உங்கள் சேவை தேவை. நான் 3 மொழிகள் அல்ல பல மொழிகளை ஊக்குவிப்பேன்.
தெலுங்கை ஊக்குவிக்க வேண்டும். வாழ்வாதாரத்திற்கான சர்வதேச மொழி என்பதால் ஆங்கிலத்தையும் ஊக்குவிக்க வேண்டும். இந்தி கற்றுக்கொள்வது நல்லது, அதனால் நாம் மக்களுடன் எளிதாக பழக முடியும் என்று கூறினார்.
- ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
- மத்திய அரசிடம் சண்டை போடுவதற்காக மக்கள் உங்களுக்கு ஆட்சியை கொடுத்தது போன்று செயல்படுவது எந்த வகையிலும் சரியில்லை.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை சசிகலா சாமி தரிசனம் செய்தார். கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் வழிபாடு செய்து விட்டு சாமி மற்றும் அம்பாள் சன்னதியில் நடைபெற்ற அபிஷேகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்
பின்னர் கோவிலில் இருந்து வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும். தி.மு.க. அரசாங்கம் சரிவர செயல்படவில்லை என்பது ஒட்டுமொத்த மக்களும் அறிந்த ஒன்று. இதனை யாராலும் மறுக்க முடியாது. மீதம் உள்ள ஆட்சி காலத்தை நடத்துவதற்காக தி.மு.க. தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை கூட்டணி கட்சிக்காரர்களை வைத்துக்கொண்டு அனைத்து கட்சிக் கூட்டத்தை நடத்தி உள்ளது. மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்த இதனை பிரசார யுக்தியாக தி.மு.க.செய்து வருகிறது.
ஜெயலலிதா ஆட்சி காலத்தில் வெளிமாநிலங்களுக்கு மின்சாரம் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்பொழுது தி.மு.க.வினர் மின்சாரத்தை வெளிமாநிலத்தில் இருந்து விலைக்கு வாங்குகின்றனர். இதில் ஏதோ தவறு உள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
மேலும் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்ட டாக்டர்கள் மட்டும் தான் உள்ளனர். இவர்கள் ஆட்சிக்கு வந்தபின் 43 மாதங்களுக்கு பின்னர் தற்போது தான் 2 ஆயிரத்து 500 டாக்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். டாக்டர்களை மட்டும் நியமித்தால் போதாது. அங்கு செவிலியர்களையும் நியமிக்க வேண்டும். மத்திய அரசை எதிர்ப்பதையே தமிழக முதலமைச்சர் நோக்கமாக கொண்டுள்ளதால் தமிழக மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
மத்திய அரசிடம் சண்டை போடுவதற்காக மக்கள் உங்களுக்கு ஆட்சியை கொடுத்தது போன்று செயல்படுவது எந்த வகையிலும் சரியில்லை. வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கு முன் அ.தி.மு.க.வை ஒருங்கிணைப்போம், கட்சியை ஒருங்கிணைக்க நான் இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இன்றைய முக்கியச் செய்திகள்.
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..
- இந்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமார் பா.ஜனதா கூட்டணியில் சேர்ந்து போட்டியிடுவார்.
- எந்த கூட்டணியில் சேர்ந்தாலும், முதல்-மந்திரி பதவி கிடைக்கும் அளவுக்கு அவருக்கு தொகுதிகள் கிடைக்காது.
பாட்னா:
பீகார் மாநிலம் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், உடல் அளவில் களைத்துப்போய் விட்டார். மனதளவில் ஓய்வு பெற்று விட்டார். அவரது மந்திரிகளின் பெயர்களைக் கூட அவரால் சொந்தமாக சொல்ல முடியாது. நிதிஷ்குமார் மீது மக்களுக்கு அதிருப்தி நிலவுகிறது. அதனால் அவரை முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்க பா.ஜனதா தயங்குகிறது. அவரை முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்க முடியுமா என்று பிரதமருக்கும், அமித்ஷாவுக்கும் சவால் விடுக்கிறேன்.
இந்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமார் பா.ஜனதா கூட்டணியில் சேர்ந்து போட்டியிடுவார். ஆனால், தேர்தலுக்கு பிறகு முதல்-மந்திரி பதவியை எதிர்பார்த்து அணி மாறிவிடுவார். ஆனால், எந்த கூட்டணியில் சேர்ந்தாலும், முதல்-மந்திரி பதவி கிடைக்கும் அளவுக்கு அவருக்கு தொகுதிகள் கிடைக்காது. நிதிஷ்குமாரை தவிர, யார் வேண்டுமானாலும் முதல்-மந்திரி ஆவார்கள் என்பதை எழுதியே தருகிறேன். நான் சொல்வது நடக்காவிட்டால், பிரசாரம் செய்வதையே விட்டு விடுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
- வருகிற 10-ந்தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வருகிற 10-ந்தேதி விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கோவில் திருவிழாவை முன்னிட்டு வருகிற 10-ந்தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.
- தேர்வர்கள், https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
- வருகிற ஏப்ரல் மாதம் 26-ந் தேதியும், தேர்வுக்கான ஹால்டிக்கெட் வருகிற மே மாதம் 1-ந் தேதியும் வெளியிடப்படும்.
சென்னை:
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, நாடு முழுவதும் நீட் நுழைவுத்தேர்வின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வை, தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்தி வருகிறது.
அந்த வகையில் 2025-26-ம் கல்வியாண்டு மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை நீட் நுழைவுத்தேர்வு, வருகிற மே மாதம் 4-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மாதம் (பிப்ரவரி) 7-ந் தேதி தொடங்கியது. இந்த நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 11.50 மணியுடன் நிறைவடைகிறது. தேர்வர்கள், https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், அதில் திருத்தங்கள் மேற்கொள்ள வருகிற 9, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் வாய்ப்பு வழங்கப்படும். மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள், வருகிற ஏப்ரல் மாதம் 26-ந் தேதியும், தேர்வுக்கான ஹால்டிக்கெட் வருகிற மே மாதம் 1-ந் தேதியும் வெளியிடப்படும்.
- நம் தாய்மொழி போலவே மற்றவர்களின் தாய்மொழியையும் மதிக்கிறோம்.
- இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும் நம் சகோதர சகோதரிகள்தான்.
சென்னை:
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கழக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
சோவியத் யூனியன் என்ற மாபெரும் ஒன்றியம் பல்வேறு மொழிகளைப் பேசும் தேசிய இனங்களைக் கொண்டிருந்தது. எனினும், பெரும்பான்மை மொழியான ரஷ்ய மொழி ஆதிக்கம் செலுத்தியது. சோவியத் யூனியன் சிதைவடைந்து பிரிந்ததில் மொழி ஆதிக்கமும் ஒரு காரணமாக அமைந்தது.
தாய்மொழி என்பது ஒரு தேன்கூடு. அதில் கைவைப்பது ஆபத்து. கட்டாயமாக ஒரு மொழியைத் திணித்தால் அது பகையுணர்ச்சிக்கே இடம் கொடுக்கும், நாட்டின் ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மொழித்திணிப்பினால் பிளவுபட்ட தேசங்களின் வரலாறு நம் பக்கத்திலேயே இருக்கிறது.
கிழக்கு வங்காளத்தினர் தங்கள் தாய்மொழியான வங்காளத்தையும் தேசிய மொழியாக அறிவிக்கக் கோரி, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தனர். போராட்டங்களை நடத்தினர்.
1971-இல் கிழக்கு வங்காள மக்களின் விடுதலைப் போராட்டம் உச்சத்தை எட்டியது. இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் ஆதரவுடன் விடுதலைப் போராட்டம் வென்றது.
வங்கதேச விடுதலைக்காக இந்திய இராணுவம் பங்கேற்ற போரின்போது, இந்தியாவிலேயே மிக அதிக நிதியை அளித்த மாநிலம் என்ற பெருமையைப் பெற்றது தலைவர் கலைஞரின் ஆட்சி நடைபெற்ற தமிழ்நாடு.
பிரதமர் நேரு ஆட்சிக்காலத்தில் சீனா படையெடுத்தபோதும், இந்தியா பாகிஸ்தான் போரின்போதும் இந்திய மாநிலங்கள் அனைத்திற்கும் முன்னோடியாகப் போர் நிதி திரட்டித்தந்த தி.மு.க.வையும் அதன் அரசையும் பார்த்து தேசவிரோதிகள் என்கிறார்கள், தேசத் தந்தையைப் படுகொலை செய்த கோட்சேயின் கொள்கையை ஆதரிப்பவர்கள்.
நம் தாய்மொழி போலவே மற்றவர்களின் தாய்மொழியையும் மதிக்கிறோம். இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும் நம் சகோதர சகோதரிகள்தான்.
இந்திய அரசியல் சட்டம் 351-ஆவது பிரிவைச் சுட்டிக்காட்டி, இந்தி மொழியை வளர்க்கும் பொறுப்பை ஒன்றிய அரசு தீவிரமாக மேற்கொள்கிறது.
செப்டம்பர் 14-ஆம் நாளை 'இந்தி திவஸ்' என்ற பெயரில் கொண்டாடுகிறது. அந்த நாளில், இந்தித் திணிப்பு முழக்கங்களை ஒன்றிய ஆட்சியாளர்கள் முன்வைக்கிறார்கள்.
'கன்னடத்தைப் புறக்கணித்து, இந்தியைத் திணிப்பவர்களை ஏற்க மாட்டோம்' என்று கூறிக் கர்நாடகாவில் இந்தி எழுத்துகளை அழிப்பது பற்றிய காணொலி சமூக வலைத்தளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.
ரூபாய் நோட்டில் அச்சிடப்பட்டுள்ள மொழிகள் அனைத்தையும் இந்தியாவின் ஆட்சிமொழியாக அறிவிக்கத் தயக்கம் ஏன்?
எங்கள் அண்ணா அன்று மாநிலங்களவையில் கேட்டதைத்தான் அவரது தம்பிகளான நாங்களும் கேட்கிறோம். அவரால் பெயர் சூட்டப்பட்ட எங்கள் தமிழ்நாடு கேட்கிறது. இலட்சியம் நிறைவேறும் வரை கேட்டுக்கொண்டே இருப்போம் என்று கூறியுள்ளார்.
- காவல் துறை இயக்குநர் அமிதாப் யாஷ் தெரிவித்தார்.
- ஐ.எஸ்.ஐ. செயல்பாட்டாளர்களுடன் நேரடி தொடர்பில் உள்ளார்.
பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதியை உத்தர பிரதேச சிறப்பு படை மற்றும் பஞ்சாப் காவல் துறையினர் மேற்கொண்ட கூட்ட நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள ராம்தாஸ் பகுதியை அடுத்த குர்லியன் கிராமத்தில் வசிக்கும் சந்தேகத்திற்குரிய பயங்கரவாதியான லாஜர் மாசி இன்று அதிகாலை 3.20 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார். கௌசாம்பியின் கோக்ராஜ் காவல் நிலைய பகுதியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனை காவல் துறை இயக்குநர் அமிதாப் யாஷ் தெரிவித்தார்.
"கிடைத்துள்ள தகவல்களின்படி, கைது செய்யப்பட்ட பயங்கரவாதி ஜெர்மனியை சார்ந்த பாபர் கல்சா இன்டர்நேஷனல் (பி.கே.ஐ.) தலைவரான ஸ்வர்ன் சிங் என்கிற ஜீவன் ஃபௌஜிக்காக வேலை செய்கிறார். மேலும் இவர் பாகிஸ்தானை சார்ந்த ஐ.எஸ்.ஐ. செயல்பாட்டாளர்களுடன் நேரடி தொடர்பில் உள்ளார்" என்று யாஷ் கூறினார்.
கைது செய்யப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து வெடிபொருட்கள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். இதில் மூன்று கை குண்டுகள், இரண்டு செயலில் உள்ள டெட்டனேட்டர்கள், ஒரு வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கை துப்பாக்கி மற்றும் 13 வெளிநாட்டு தோட்டாக்கள் ஆகியவை அடங்கும் என்று அந்த அதிகாரி கூறினார்.
- தற்போது சோன்மார்க்கில் இருந்து கேதார்நாத் வரை உள்ள தூரத்தை கடக்க 8 முதல் 9 மணி நேரம் ஆகிறது.
- கேபிள் கார் அமைந்தால் பயண நேரம் 36 நிமிடங்களாக குறையும்.
புதுடெல்லி:
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:-
விவசாயிகளுக்கு உயர்தர மற்றும் மலிவு விலையில் பொதுவான கால்நடை மருந்துகளை வினியோகிக்கும் வகையில் ரூ.3,880 கோடி மதிப்புள்ள கால்நடை சுகாதாரம் மற்றும் நோய் கட்டுப்பாட்டு திட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. நல்ல தரமான மற்றும் மலிவு விலையில் பொது கால்நடை மருத்துவத்தை வழங்குவதற்கும், பசு ஆஷாதி திட்டத்தின் கீழ் மருந்துகளை விற்பனை செய்வதற்கான ஊக்கத்தொகையை வழங்குவதற்கும் ரூ.75 கோடி ஒதுக்க மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
மேலும் பஞ்சாப், அரியானா, உத்தரகாண்ட், கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய 9 மாநிலங்கள் பொது நோய் தொற்று இல்லாத மண்டலங்களாக அறிவிக்கப்படும்.
இதையடுத்து பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபை கூட்டத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் கோவிந்த்காட்டில் இருந்து ஹேம்குண்ட் சாஹிப் வரை 12.4 கிலோமீட்டர் தொலைவு 'ரோப் கார்' அமைக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டம் ரூ.2,730.13 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
இதுபோல் உத்தரகாண்ட் மாநிலம் சோன்மார்க் முதல் கேதார்நாத் வரை 12.9 கி.மீட்டர் நீளத்துக்கு ரூ.4 ஆயிரத்து 81 கோடி செலவில் 'ரோப் கார்' திட்டத்தைச் செயல்படுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
தற்போது சோன்மார்க்கில் இருந்து கேதார்நாத் வரை உள்ள தூரத்தை கடக்க 8 முதல் 9 மணி நேரம் ஆகிறது. இந்த கேபிள் கார் அமைந்தால் பயண நேரம் 36 நிமிடங்களாக குறையும்.
இவ்வாறு மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
- இன்று வாஸ்து நாள் (நாளை காலை 10.32-க்கு மேல் 11.08-க்குள் வாஸ்து பூஜை செய்ய நன்று).
- தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மாசி-22 (வியாழக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சப்தமி பிற்பகல் 3.55 மணி வரை பிறகு அஷ்டமி
நட்சத்திரம்: ரோகிணி மறுநாள் விடியற்காலை 4.37 மணி வரை பிறகு மிருகசீர்ஷம்.
யோகம்: மரணயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று வாஸ்து நாள் (நாளை காலை 10.32-க்கு மேல் 11.08-க்குள் வாஸ்து பூஜை செய்ய நன்று). மதுரை ஸ்ரீ கூடலழகர் கஜேந்திரமோட்சம், விருத்தாசலம், திருவெண்காடு, திருவொற்றியூர் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் பவனி. கோவை ஸ்ரீ கோணியம்மன் பாரிவேட்டைக்கு எழுந்தருளல். காரமடை ஸ்ரீ அரங்கநாதர் உற்சவம் ஆரம்பம். சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ குருபகவானுக்கு அபிஷேகம். ஆலங்குடி ஸ்ரீ குருபக வான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக் கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சனம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். குறுக்குத் துறை முருகப் பெருமான் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மேன்மை
ரிஷபம்-விவேகம்
மிதுனம்-உற்சாகம்
கடகம்-பெருமை
சிம்மம்-அன்பு
கன்னி-இன்சொல்
துலாம்- வெற்றி
விருச்சிகம்-செலவு
தனுசு- புகழ்
மகரம்-வரவு
கும்பம்-ஆர்வம்
மீனம்-பக்தி
- இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது.
- இஸ்ரேல் பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது.
பணயக்கைதிகள் விவகாரம் தொடர்பாக ஹமாஸ் அமைப்பினருடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. முன்னதாக போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையில், காசாவில் ராணுவ நடவடிக்கையை தொடங்குவதாக இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்து வரும் சூழலில் அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
"இந்த விஷயத்தில் இஸ்ரேலுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. பாருங்கள், அமெரிக்க மக்களின் நலனுக்காக உலகெங்கிலும் உள்ள மக்களுடன் உரையாடலும் பேச்சு வார்த்தையும் சரியானது என்று ஜனாதிபதி நம்பும் ஒன்று," என்று வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஹமாஸ் அதிகாரிகள் குழு நேற்று (மார்ச் 5) அமெரிக்க தூதருடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறினர்.
"ஹமாஸுக்கும் பல்வேறு அமெரிக்க தரப்பு அதிகாரிகள் இடையே பலமுறை பேச்சுவார்த்தைகள் நடந்தன. சமீபத்திய பேச்சுவார்த்தையின் போது அமெரிக்க தூதருடன், அமெரிக்க குடியுரிமை பெற்ற இஸ்ரேலிய கைதிகள், உயிருள்ளவர்கள் மற்றும் இறந்தவர்கள் பற்றிய பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது" என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஹமாஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
- துபாய் மைதானம் எங்களுக்கே அதிக அனுகூலம் என விவாதிக்கப்படுகிறது.
- ஒரு நாள் கூட நாங்கள் இந்த மைதானத்தில் பயிற்சி எடுத்தது கிடையாது.
துபாய்
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் முதலாவது அரைஇறுதியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 5-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். இந்திய அணி ஒரே மைதானத்தில் ஆடுவது கூடுதல் சாதகமாக இருப்பதாக முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்துள்ளனர். துபாய் ஆடுகளத்தன்மையை அறிந்து தான் இந்திய அணிக்கு 5 சுழற்பந்து வீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டார்களா? என்ற கேள்விக்கு கம்பீர் கூறுகையில்,
சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் எங்களுக்கும், மற்ற அணிகளுக்கும் இது பொதுவான மைதானம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதாவது இது எங்களுக்குரிய உள்ளூர் மைதானம் அல்ல. கடைசியாக இங்கு எப்போது விளையாடினோம் என்பது கூட ஞாபகம் இல்லை.
பாகிஸ்தானில் மட்டுமல்ல இந்திய துணை கண்டத்தில் எங்கு விளையாடினாலும் அணியில் இரண்டு முழுமையான சுழற்பந்து வீச்சாளர்களைத் தான் தேர்வு செய்து இருப்போம். மற்ற 3 பேரும் சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர்கள். நாங்கள் விளையாடிய முதல் இரு ஆட்டங்களை பார்த்தால் ஒரு பிரதான சுழற்பந்து வீச்சாளருடன் தான் களம் கண்டோம். கடைசி லீக்கிலும், அரைஇறுதியில் பிரதான சுழற்பந்து வீச்சாளர்கள் இருவர் (மற்ற இருவர் சுழல் ஆல்-ரவுண்டர்) இடம் பெற்றனர்.
துபாய் மைதானம் எங்களுக்கே அதிக அனுகூலம் என விவாதிக்கப்படுகிறது. அப்படி என்ன சாதகமான அம்சத்தை பார்த்தீர்கள். ஒரு நாள் கூட நாங்கள் இந்த மைதானத்தில் பயிற்சி எடுத்தது கிடையாது. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஐ.சி.சி. அகாடமியில் பயிற்சி மேற்கொள்கிறோம். இவ்விரு இடங்களுக்கு இடையே உள்ள சீதோஷ்ண நிலை முற்றிலும் வித்தியாசமானது. மேலும் பயிற்சி ஆடுகளத்துக்கும், துபாய் ஆடுகளத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. எனவே மற்றவர்கள் சொல்வது போல் துபாயில் ஆடுவதால் எந்த விதமான சாதகமும் இல்லை.
விமர்சனங்களை பற்றி நான் கவலைப்படுவதில்லை. 140 கோடி இந்தியர்களுக்கும், இந்திய அணிக்கும் நேர்மையாக இருக்க வேண்டியது எனது பணி. அதைத் தான் நான் செய்கிறேன். மற்றவர்கள் என்ன பேசினாலும் அது குறித்து கவலைப்படமாட்டேன்.
சர்வதேச கிரிக்கெட்டை பொறுத்தவரை தொடர்ந்து முன்னேற்றம் காண வேண்டும். நாங்கள் எல்லா வகையிலும் அற்புதமான ஒரு ஆட்டத்தை இன்னும் வெளிப்படுத்தவில்லை. அணியின் செயல்பாட்டில் ஒரு போதும் திருப்தி அடைய மாட்டேன். இன்னும் ஒரு ஆட்டம் எஞ்சி இருக்கிறது. 9-ந்தேதி அன்று நேர்த்தியான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று நம்புகிறோம்' என்றார்.






