என் மலர்
தலைப்புச்செய்திகள்
- 9-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவும்.
- 5 மாவட்டங்களில் வருகிற 11-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்காலில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். மேலும் 9-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவும்.
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை உயரும்.
சென்னையில் 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலையாக 100 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகி வெயில் கொளுத்தும்.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூடத்துடன் இருக்கும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் இருக்கும்.
இதனிடையே, நெல்லை, தென்காசி, குமரி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வருகிற 11-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- ஆவணப்படுத்தப்பட்ட வழக்குகளில் படிதார் ஒருவராக இடம்பெற்றுள்ளார்.
- முடியை தவிர்த்து என்னை பார்க்கத் தொடங்கினர்.
உலகிலேயே முகத்தில் அதிக முடி கொண்டவராக இந்தியாவை சேர்ந்த 18 வயது இளைஞர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். லலித் படிதார் என்ற இளைஞர் ஒரு சதுர சென்டிமீட்டருக்கு 201.72 முடியுடன் வியக்கத்தக்க சாதனை படைத்துள்ளார்.
ஹைப்பர் டிரிகோசிஸ் என்று அழைக்கப்படும் அரிய மருத்துவ நிலை காரணமாக லலித் படிதார் முகத்தில் 95 சதவீதத்திற்கும் அதிகமான முடி உள்ளது. கின்னஸ் உலக சாதனை தரவுகளின் படி, உலகளவில் பதிவான சுமார் 50 ஆவணப்படுத்தப்பட்ட வழக்குகளில் படிதார் ஒருவராக இடம்பெற்றுள்ளார்.
முகம் முழுக்க அதிக முடி கொண்ட படிதார் தனது ஆரம்ப பள்ளி நாட்களில் அவர் எதிர்கொண்ட சவால்களை விவரித்தார். அப்போது, "முதலில் சில நாட்கள் நன்றாக இல்லை. எனது வகுப்பை சேர்ந்த சக தோழர்கள் என் தோற்றத்தைக் கண்டு பயந்தனர். காலப்போக்கில், அவர்கள் அவரது முகத்தில் உள்ள முடியை தவிர்த்து என்னை பார்க்கத் தொடங்கினர்," என்று கூறினார்.
"அவர்கள் என்னை பற்றி அறிந்து கொள்ள தொடங்கியபோது, என்னுடன் பேசிய பிறகு, நான் அவர்களை விட வித்தியாசமாக இல்லை என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். வெளிப்புற தோற்றத்தில் நான் வித்தியாசமாகத் தெரிந்தேன், ஆனால் நான் உள்ளே எந்த வித்தியாசமும் இல்லை," என்று அவர் மேலும் கூறினார்.
சிலர் தன்னை நன்றாக நடத்தவில்லை என்றாலும், இதுபோன்ற சம்பவங்கள் அரிதானவை தான் என்று படிதர் கூறினார். பெரும்பாலானவர்கள் தன்னிடம் கருணை காட்டுகிறார்கள். ஆனால் அது நபருக்கு நபர் வேறுபடும் என்றும் அவர் தெரிவித்தார்.
- சுமார் 2000 பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, வெஜ் சமோசா, நோன்பு கஞ்சி தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- நிகழ்ச்சி மாலை 6.20 மணிக்கு தொடங்கி ஒரு மணி நேரம் நீடிக்கும் என்று சொல்லப்படுகிறது.
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்க உள்ளார். நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் மாவட்டத்திற்கு 5 இஸ்லாமிய நிர்வாகிகள் உட்பட மொத்தம் 1,500 பேர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாலை நோன்பு திறந்த பிறகு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 2000 பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, வெஜ் சமோசா, நோன்பு கஞ்சி தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனன் ஆகியோர் பார்வையிட்டனர்.
இதனிடையே, இந்த நிகழ்ச்சி மாலை 6.20 மணிக்கு தொடங்கி ஒரு மணி நேரம் நீடிக்கும் என்று சொல்லப்படுகிறது. இஸ்லாமியர்களின் வழிமுறைப்படி விஜய்யும் இன்று ஒரு நாள் முழுமையாக நோன்பு இருந்து தொழுகை செய்து இப்தார் விருந்தை எடுத்துக் கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் முகமது சமி போட்டியின் போது குளிர்பானம் அருந்தினார்.
- சமி விரதத்தை கடைபிடிக்ககாமல் பாவம் செய்துவிட்டார் என அகில இந்திய முஸ்லிம் ஜமாஅத்தின் தேசியத் தலைவர் கூறினார்.
இந்தியா முழுவதும் உள்ள முஸ்லிம் மக்கள் ரமலான் மாதத்தை முன்னிட்டு விரதம் இருக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி சுற்றுப்பயணத்தின் போது முகமது சமி ரமலான் நோன்பு கடைபிடிக்காதது குறித்து விமர்சனங்கள் எழுந்தன.
இது தொடர்பாக அகில இந்திய முஸ்லிம் ஜமாஅத்தின் தேசியத் தலைவர் மவுலானா ஷஹாபுதீன் ரஸ்வி கூறுகையில், ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் விரதம் இருக்க வேண்டியது கட்டாய கடமை. ஆரோக்கியமான ஆணோ பெண்ணோ விரதத்தை கடைப்பிடிக்கவில்லை என்றால், அவர்கள் பெரிய பாவிகளாகி விடுவார்கள்
முகமது சமி போட்டியின் போது குளிர்பானம் அருந்தினார். மக்கள் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர் கிரிக்கெட் விளையாடுகிறார் என்றால், அவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று அர்த்தம். அத்தகைய நிலையில், அவர் விரதத்தை கடைபிடிக்ககாமல் பாவம் செய்துவிட்டார். ஷரியத்தின் பார்வையில், அவர் ஒரு பாவி. அவர் கடவுளுக்குப் பதில் சொல்ல வேண்டும்" என்று தெரிவித்தார்.
இவரது கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் ஷமா முகமது எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதில், ரம்ஜான் மாதத்தில் ஒரு மிக முக்கியமான விஷயம் உள்ளது. நாம் பயணம் செய்யும்போது, நோன்பு இருக்க வேண்டிய அவசியமில்லை. முகமது சமி பயணம் செய்கிறார், அவர் தனது சொந்த இடத்தில் இல்லை. நீங்கள் ஒரு விளையாட்டை விளையாடும்போது, நோன்பு இருக்க வேண்டும் என்று யாரும் வற்புறுத்துவதில்லை. உங்கள் செயல்கள்தான் மிகவும் முக்கியம். அது (இஸ்லாம்) மிகவும் அறிவியல் பூர்வமான மதம் என்று ஷமா முகமது கூறினார்.
இதனையடுத்து, முகமது சமி மீதான விமர்சனங்களுக்கு பதில் அளித்த அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் நிர்வாக உறுப்பினர் மவுலானா காலித் ரஷீத் ஃபராங்கி மஹ்லி, "ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தாலோ அல்லது நோய்வாய்ப்பட்டிருந்தாலோ, விரதம் கடைபிடிக்காமல் இருக்க அவர்களுக்கு விருப்பம் உள்ளது என்று அல்லா குர்ஆனில் குறிப்பிட்டுள்ளார். ஆகவே சமி விரதம் இருக்காமல் இருக்க விருப்பம் உள்ளது: அவர் மீது விரல் நீட்ட யாருக்கும் உரிமை இல்லை.
என்று தெரிவித்தார்.
மேலும் சுற்றுப் பயணத்தில் இருப்பவர்கள் நோன்பைத் தவிர்க்க குர்ஆன் அனுமதிக்கிறது என சமியின் உறவினர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் மத குருமார்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
- வாடிவாசல் திரைப்படத்தை தானு தயாரிக்கிறார்.
- வாடிவாசல் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
நடிகர் சூர்யா, இயக்குநர் வெற்றி மாறன் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் வாடிவாசல். இந்தப் படத்தை கலைப்புலி எஸ் தானுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு முந்தைய பணிகள் நடைபெற்று வருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தன. இது குறித்து இயக்குநர் வெற்றி மாறன் கூறும் போது, படத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில், வாடிவாசல் படத்தின் பாடல்களுக்கு இசையமைக்கும் பணிகள் துவங்கிவிட்டதாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், வாடிவாசல் பாடல் இசையமைக்கும் பணிகள் தொடங்கின என்று குறிப்பிட்டுள்ளார். இத்துடன் வி கிரியேஷன்ஸ் மற்றும் நடிகர் சூர்யாவை டேக் செய்துள்ளார். மேலும், இயக்குநர் வெற்றி மாறனுடன் அவர் அமர்ந்து இருக்கும் புகைப்படத்தையும் இணைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி இருப்பதை அடுத்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஆபத்து நேரிட்டால் இந்த க்யூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு SOS தகவல் அனுப்ப முடியும்.
- சாத்தாங்காடு இரும்பு சந்தை வளாகத்தில் மேம்பாட்டு பணிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், சென்னை பெருநகர காவல் துறையின் முன்முயற்சியாக, சென்னை மாநகரில் பொதுமக்கள் ஆட்டோ மற்றும் வாடகை கார்களில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளும் வகையில் காவல் உதவி கியூ.ஆர். குறியீடுகளை வழங்கிடும் விதமாக ஆட்டோ ஓட்டுநர்களிடம் கியூ.ஆர்.குறியீடுகளை வழங்கினார்.
சென்னை மாநகரில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள மாவட் டங்கள், மாநகராட்சிகளில் இருந்து வரும் வாகனங்கள் உட்பட 89,641 ஆட்டோக்கள் இயங்குகின்றன. இவற்றில், 78,000 ஆட்டோக்கள் ஊபர், ரேபிடோ மற்றும் ஓலா போன்ற வாகன சேவைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
பயணிகள் மற்றும் ஓட்டுநர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில், சென்னை பெருநகர காவல்துறை முதல் கட்டமாக, ஒவ்வொரு ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களுக்கும் 88,859 தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் பிரத்யேக தனித்துவமான கியூ.ஆர். குறியீட்டை உருவாக்கியுள்ளது.
இந்த கியூ.ஆர்.குறியீடு ஆட்டோ வாடகை கார்களின் ஓட்டுநர் இருக்கைக்குப் பின்னால் ஒட்டப்படும். இதை பயணிகள் எளிதாக ஸ்கேன் செய்து கொள்ளலாம். அவசரநிலை ஏற்பட்டால், எஸ்.ஒ.எஸ். பட்டனை அழுத்தினால், சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பப்படும், இது ஆட்டோவின் சரியான இடம் மற்றும் அதன் விவரங்கள், உரிமையாளரின் விவரங்கள் போன்றவை கட்டுப்பாட்டு அறைக்கு தெரியவரும். கூடுதலாக, பயணிகள் 112 என்ற அவசர கட்டுப்பாட்டு அறை எண்ணிற்கு அழைத்து உடனடி உதவியை உறுதி செய்யும் வசதியும் இதில் உள்ளது.
இப்புதிய கியூ.ஆர்.குறியீட்டின் முக்கிய நன்மை என்னவென்றால், எஸ்.ஒ.எஸ். எச்சரிக்கை அழுத்தும்போது, பயணிகளின் சரியான இடம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாகத் தெரிய வருவதால், குறிப்பாக இரவு நேரங்கள் அல்லது தனி சவாரிகளின் போது காவல்துறையினரின் ரோந்து வாகனங்களின் மூலம் துல்லியமாக சம்பவ இடத்திற்கு சென்று உதவியை அணுகும் வசதியும் உள்ளது.
அவசரநிலை ஏற்பட்டால், போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை காவலர்களால் வாகனத்தின் நிகழ்நேரத்தை கண்காணித்து, அதற்கேற்ப ரோந்து வாகனங்களின் மூலம் உதவிட முடியும்.
பெண்கள், குழந்தைகள் மற்றும் பெருநகரத்திற்கு பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பான பயணத்தை இப்புதிய கியூ.ஆர். குறியீடு உறுதி செய்கிறது. இதன் மூலம், சென்னை முழுவதும் ஒரு விரிவான பாதுகாப்பு வலையமைப்பு உருவாக்கப்படும்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பொன்முடி, பி.கே.சேகர் பாபு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், சென்னை காவல் ஆணையர் அருண், கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர் கலந்து கொண்டனர்.
- குழந்தைகளிடம் கையெழுத்து வாங்கக்கூடாது.
- ஏற்கனவே மிஸ்டுகால் கொடுத்து 1 கோடி பேரை சேர்த்தார்கள்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசு துறை அலுவலர்களுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. பின்னர், உதயநிதி ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டத்திற்கு இதுவரை 3 முறை அரசு முறை பயணமாக வந்துள்ளேன். அரசு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் திருப்திகரமாக உள்ளது.
திருத்துறைப்பூண்டி நகரில் சுமார் 3.5 ஏக்கர் பரப்பளவில் முதல்வர் விளையாட்டு அரங்கம் அமைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், திருவாரூரில் ரூ.18 கோடி மதிப்பில் 12 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 3 நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
திருத்துறைப்பூண்டி வீரன் நகர் பகுதியில் உள்ள நரிக்குறவர் இன மக்கள் வீட்டு மனை கேட்டு கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்ற முதலமைச்சர் 77 குடும்பத்தினருக்கு பட்டா வழங்குவது மட்டுமல்லாமல் ரூ.5 லட்சம் மதிப்பில் அவர்களுக்கு வீடும் கட்டித்தர உத்தரவிட்டு உள்ளார்.
ஒன்றிய அரசின் மும்மொழி கொள்கை, இந்தி திணிப்பு ஆகியவற்றை தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருவதால் அமலாக்கத்துறை மூலம் சோதனை நடத்தி வருகிறது.
குழந்தைகளிடம் கையெழுத்து வாங்கக்கூடாது. நாங்கள் நீட் தேர்வுக்கு கிட்டத்தட்ட 1 கோடி கையெழுத்து வாங்கினோம். அப்போது பள்ளி மாணவர்களை தவிர்த்துவிட்டு தான் கையெழுத்து வாங்கினோம்.
ஏற்கனவே மிஸ்டுகால் கொடுத்து 1 கோடி பேரை சேர்த்தார்கள். அதனுடைய தொடர்ச்சியாக இதை பார்க்கிறேன் என்று கூறினார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திராவிடம் டெல்லியில் இருந்து கட்டளைகளை எடுப்பதில்லை.
- இந்தி காலனித்துவத்தை தமிழ்நாடு பொறுத்துக் கொள்ளாது.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலை தள பதிவில் கூறி இருப்பதாவது:-
"மரம் அமைதியை விரும்பலாம். ஆனால் காற்று ஓய்ந்து போகாது." நாங்கள் எங்கள் வேலையைச் செய்து கொண்டிருந்தபோது, இந்த தொடர் கடிதங்களை எழுத எங்களைத் தூண்டியது மத்திய கல்வி அமைச்சர்தான்.
அவர் தனது இடத்தை மறந்து, ஒரு முழு மாநிலத்தையும் இந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ளும்படி மிரட்டத் துணிந்தார், இப்போது அவர் ஒருபோதும் வெல்ல முடியாத போராட்டத்தை மீண்டும் உயிர்ப்பிப்பதன் விளைவுகளை எதிர்கொள்கிறார். தமிழ்நாடு சரணடையும்படி மிரட்டப்படாது.
மிகப்பெரிய முரண்பாடு என்னவென்றால், தேசிய கல்வி கொள்கையை நிராகரிக்கும் தமிழ்நாடு, அதன் பல இலக்குகளை ஏற்கனவே அடைந்துவிட்டது, இந்த கொள்கை 2030-க்குள் மட்டுமே அடைய வேண்டும். இது ஒரு எல்.கே.ஜி. மாண வர் பி.எச்.டி. பட்டதாரிக்கு விரிவுரை வழங்குவது போன்றது.
திராவிடம் டெல்லியில் இருந்து கட்டளைகளை எடுப்பதில்லை. அதற்கு பதிலாக, அது தேசம் பின்பற்ற வேண்டிய பாதையை அமைக்கிறது.
இப்போது பா.ஜ.க.வின் மூன்று மொழி சூத்திரத்திற்கான சர்க்கஸ் போன்ற கையெழுத்து பிரச்சாரம் தமிழ்நாட்டில் ஒரு சிரிப்புப் பொருளாக மாறிவிட்டது. 2026 சட்ட மன்றத் தேர்தலில் இதை அவர்களின் முக்கிய நிகழ்ச்சி நிரலாக ஆக்கிக் கொள்ளவும், இந்தி திணிப்பு குறித்த பொது வாக்கெடுப்பாக இதை மாற்றவும் நான் அவர்களுக்கு சவால் விடுகிறேன்.
வரலாறு தெளிவாக உள்ளது. தமிழ்நாட்டின் மீது இந்தியைத் திணிக்க முயன்றவர்கள் தோற்கடிக்கப்பட்டனர் அல்லது பின்னர் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டனர் மற்றும் தி.மு.க.வுடன் இணைந்தனர். பிரிட்டிஷ் காலனித்துவத்திற்குப் பதிலாக இந்தி காலனித்துவத்தை தமிழ்நாடு பொறுத்துக் கொள்ளாது.
திட்டங்களின் பெயர்கள் முதல் விருதுகள் வரை மத்திய அரசு நிறுவனங்கள் வரை, இந்தி பேசாதவர்களை மூச்சுத் திணறடிக்கும் அளவுக்கு இந்தி திணிக்கப்பட்டுள்ளது, இந்தியாவில் பெரும்பான்மையாக இருப்பவர்கள் குமட்டல்.
இந்தியாவில் இந்தியின் ஆதிக்கம் தகர்க்கப்பட்ட பிறகும், பாதுகாப்பு அரணாக நின்றது தி.மு.க.தான் என்பதை வரலாறு நினைவில் கொள்ளும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- முதல்-மந்திரி சித்தராமையா இன்று தாக்கல் செய்த 16-வது பட்ஜெட் ஆகும்.
- 2025-2026-ம் ஆண்டுக்கு ரூ.4.09 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி 1-ந் தேதி தாக்கல் செய்தது. இந்த நிலையில் கர்நாடக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) 7-ந்தேதி (இன்று) தாக்கல் செய்யப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதன்படி கர்நாடக பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
நிதித்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்-மந்திரி சித்தராமையா சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்த 16-வது பட்ஜெட் ஆகும்.
2025-2026-ம் ஆண்டுக்கு ரூ.4.09 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் வெளியான சில அறிவிப்புகள் சில...
* தமிழகத்தில் உள்ள அம்மா உணவகத்தை போல் கர்நாடகா முழுவதும் அக்கா உணவகம், அக்கா கூட்டுறவு சங்கங்கள் நிறுவப்படும்.
* சிறுபான்மை பெண்களுக்காக 2024-25 ஆம் ஆண்டில் காலியாக உள்ள வக்ஃப் நிலத்தில் 15 மகளிர் கல்லூரிகளையும், 2025-26 ஆம் ஆண்டில் மேலும் 16 கல்லூரிகளையும் கட்ட அரசு திட்டமிட்டுள்ளது.
* அனைத்து மாவட்ட பஞ்சாயத்து, தாலுகா, பஞ்சாயத்து அலுவலகங்களிலும் அக்கா உணவகங்கள் திறக்கப்படும்.
* கர்நாடகா முழுவதும் மல்டிபிளெக்ஸ் திரையரங்குகள் அதிகபட்சமாக ரூ.200 டிக்கெட் விலையை வசூலிக்கலாம்.
* பெங்களூரு மெட்ரோ கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அருகிலுள்ள தேவனஹள்ளி வரை விரிவுபடுத்தப்படும்.
* பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஹெப்பல் எஸ்டீம் மாலை சில்க் போர்டு சந்திப்பிலிருந்து ரூ.15,000 கோடி மதிப்பீட்டில் இணைக்க 18.5 கி.மீ நீளமுள்ள வடக்கு-தெற்கு சுரங்கப்பாதையை அரசு திட்டமிட்டுள்ளது.
* பெங்களூரு பல்கலைக்கழகத்தின் பெயரை டாக்டர். மன்மோகன் சிங் பல்கலைக்கழகம் என மாற்றம்.
* கன்னட மொழி திட்டங்களை ஊக்குவிப்பதற்காக அரசுக்கு சொந்தமாக OTT தளத்தை தொடங்குவதாக முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்தார்.
- மத்திய அமைச்சர் அமித் ஷா ராணிப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
- வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு அமித் ஷா உரையாற்றினார்.
ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் உள்ள மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் (CISF) ஆட்சேர்ப்பு பயிற்சி மையம் (RTC) செயல்பட்டு வருகிறது. மத்திய தொழில்துறை பாதுகாப்பு படைக்காக தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடித்த பின் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று (மார்ச்07) CISF-ன் 56வது ஆண்டு எழுச்சி தினக் கொண்டாட்டம் நடைபெற்றது. இவ்விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். மத்திய அமைச்சர் வருகையை ஒட்டி ராணிப்பேட்டை மாவட்ட பா.ஜ.க.வினர் சார்பில் அமித் ஷாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
வரவேற்பு போஸ்டர்களில் மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு பதிலாக தமிழ் திரையுலகில் பிரபல நடிகரும், இயக்குநருமான சந்தான பாரதியின் புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது. ஏற்கனவே சிலமுறை பா.ஜ.க. போஸ்டர்களில் அமித் ஷாவுக்கு பதிலாக சந்தான பாரதி புகைப்படம் இடம்பெற்று இருந்தது.
இந்த நிலையில், தற்போது ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் மீண்டும் அமித் ஷாவுக்கு பதிலாக நடிகர் சந்தான பாரதியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வீரர்களின் எழுச்சி தின கொண்டாட்டத்தில் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட மத்திய அமைச்சர் அமித் ஷா வீரர்கள் மத்தியில் உரையாற்றினார்.
- கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
- கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது.
அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. விஜயகுமாரை கட்சியில் இருந்து நீக்கம் செய்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. விஜயகுமார், (மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர், எல்லாபுரம் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 350 பெண் ஊழியர்கள் பங்கேற்ற கொண்டாட்ட விழாவில் எல்&டி நிறுவன தலைவர் சுப்ரமணியன் கலந்து கொண்டார்.
- மாதவிடாய் விடுப்பு கொள்கையை செயல்படுத்துவது தொடர்பான விவரங்கள் மற்றும் அதன் தொடக்க தேதி, உட்பட எந்த விவரமும் குறிப்பிடப்படவில்லை.
எல்&டி நிறுவனத்தின் தலைவர் சுப்ரமணியன் சமீபத்தில் 90 மணி நேரம் ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், சுப்ரமணியன் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பொறியில் துறையில் பிரபலமான எல்&டி நிறுவனத்தின் சார்பில் மும்பையில் மகளிர் தின கொண்டாட்டம் நடைபெற்றது. 350 பெண் ஊழியர்கள் பங்கேற்ற கொண்டாட்ட விழாவில் எல்&டி நிறுவன தலைவர் சுப்ரமணியன் கலந்து கொண்டார். அப்போது உரையாற்றிய அவர், பெண் ஊழியர்களுக்கு ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இருப்பினும், இந்த அறிவிப்பானது நிதி மற்றும் தொழில்நுட்ப சேவைகள் பிரிவுகளைத் தவிர்த்து, நிறுவனத்தின் முக்கிய பொறியியல் மற்றும் கட்டுமானப் பிரிவுகளுக்கு மட்டுமே பொருந்தும் என கூறப்படுகிறது.
மேலும், மாதவிடாய் விடுப்பு கொள்கையை செயல்படுத்துவது தொடர்பான விவரங்கள் மற்றும் அதன் தொடக்க தேதி, உட்பட எந்த விவரமும் குறிப்பிடப்படவில்லை. இருந்தாலும், எல்&டி-யின் இந்த நடவடிக்கை இந்திய நிறுவனங்களிடையே வளர்ந்து வரும் போக்குடன் ஒத்துப்போகிறது.
ஜொமாடோ, ஸ்விக்கி மற்றும் ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி போன்ற நிறுவனங்களும், பீகார், கேரளா மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களும் ஏற்கனவே பெண்களின் ஆரோக்கியத்தை ஆதரிக்க இதே போன்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.
மாதவிடாய் விடுப்பு குறித்து இந்தியாவில் தற்போது தேசிய சட்டம் இல்லை என்றாலும், இந்த விஷயத்தில் ஒரு கொள்கையை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு பரிந்துரைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.






